search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை தனி மாவட்டமாக உதயமாகி 30-ம் ஆண்டு தொடக்க விழா
    X

    திருவண்ணாமலை தனி மாவட்டமாக உதயமாகி 30-ம் ஆண்டு தொடக்க விழா

    திருவண்ணாமலை தனி மாவட்டமாக உதயமாகி 30-ம் ஆண்டு தொடக்க விழா கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. மேலும் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.
    திருவண்ணாமலை:

    வட ஆற்காடு மாவட்டம் 1989-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டமாகவும், வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டது. பின்னர் 1997-ம் ஆண்டு மாவட்ட பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது.

    திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கே காஞ்சீபுரம் மாவட்டத்தினாலும், வடக்கே வேலூர் மாவட்டத்தினாலும், தெற்கே விழுப்புரம் மாவட்டத்தினாலும், மேற்கே தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களாலும் சூழ்ந்து உள்ளது.

    இந்த மாவட்டம் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு அருணாசலேஸ்வரர் கோவில், ரமண மகரிஷி ஆசிரமம், சாத்தனூர் அணை போன்றவை உள்ளது. இந்த மாவட்டம் தனி மாவட்டமாக உதயமாகி 29-ம் ஆண்டுகள் நிறைவடைந்து, 30-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விழா நடைபெற்றது. மேலும் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.



    தொடக்க விழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டார். இதில் திருவண்ணாமலை மாவட்ட முக்கிய பகுதிகளின் படங்கள், வரலாற்று சின்னங்களின் படங்கள் போன்றவை இடம் பெற்று இருந்தன.

    இதையடுத்து கேழ்வரகு, வெல்லம், நிலக்கடலை ஆகியவற்றினால் செய்யப்பட்ட பாரம்பரிய உணவால் செய்யப்பட்ட கேக்கை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கலெக்டர் வெட்டினார்.

    பின்னர் 30-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் உண்ணாமலை அம்மன் படம் அச்சிடப்பட்ட சிறப்பு தபால் தலையை கலெக்டர் வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்று கொண்டனர்.

    இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி, சிலம்பாட்டம், மலைவாழ் மக்கள் நடனம் போன்றவை நடைபெற்றது.

    முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று சிறப்பு பாடல் நிகழ்ச்சி நடந்தது. மேலும் குழந்தைகள் வளர்ச்சி துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் என்ற தலைப்பில் நாடகம் நடைபெற்றது. பின்னர் அரசு அலுவலர்களுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சான்றிதழ்களை வழங்கினார். விழாவை முன்னிட்டு கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட உயர் அதிகாரிகள் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் வந்து இருந்தனர்.

    இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் உமாமகேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×