search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 பேர் தற்கொலை செய்து கொண்ட வீடு.
    X
    4 பேர் தற்கொலை செய்து கொண்ட வீடு.

    பாபநாசம் அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    பாபநாசம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PapanasamSuicide
    சிங்கை:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 38). இவரது மனைவி ரேவதி (28). ரேவதியின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பாபநாசம் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள சிவந்திபுரம் கஸ்பா பகுதி ஆகும். இவர்களது குழந்தைகள் கதிர்வேல்(7), அஸ்மிதா(3).

    மகேந்திரன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டிசைனராக வேலைபார்த்து வந்தார். இதற்காக அவர் மட்டும் திருப்பூரில் தங்கியிருந்தார். அவரது மனைவி, தனது குழந்தைகளுடன் திருத்தங்கலில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார். விடுப்பு கிடைக்கும் போது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க மகேந்திரன் ஊருக்கு வந்து செல்வார்.

    இந்நிலையில் மகேந்திரன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் திருப்பூரில் தனியாக தங்கியிருந்த மகேந்திரன் கடந்த 15நாட்களுக்கு முன்பு விடுப்பு எடுத்துவிட்டு சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.

    மஞ்சள் காமாலை நோய்க்கு இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை பெற பாபநாசம் பிரபலமான இடம் என்பதால் தனது கணவரை தன்னுடைய தாய் வீடு இருக்கும் வீ.கே.புரம் சிவந்திபுரத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் ரேவதி அழைத்து வந்தார்.

    அங்கு அருகருகே இருந்த இருவீடுகளில், ஒரு வீட்டில் ரேவதியின் தாய் பிச்சம்மாள் இருந்தார். மற்றொரு வீட்டில் மகேந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்து மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.

    மகேந்திரனின் குழந்தைகள் வழக்கமாக காலையிலேயே வீட்டிற்கு வெளியே வந்து விளையாடுவார்கள். ஆனால் இன்று காலை அவர்கள் விளையாடவில்லை. மேலும் அவர்களது வீடு காலை வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த ரேவதியின் தாய் பிச்சம்மாள் வீட்டின் கதவை தட்டினார். ஆனால் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

     தற்கொலை செய்துகொண்ட மகேந்திரன், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பிணமாக கிடக்கும் காட்சி.


    அப்போது அங்கு மகேந்திரன், அவரது மனைவி ரேவதி, குழந்தைகள் கதிர்வேல், அஸ்மிதா ஆகிய 4 பேரும் வாயில் நுரை தள்ளியநிலையில் பிணமாக கிடந்தனர். இதுபற்றி வீ.கே.புரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன், வீ.கே.புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்பு 4பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    4 பேரும் வி‌ஷ மாத்திரைகள் கலந்த பாலை குடித்து தற்கொலை செய்துள்ளனர். மகேந்திரன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தங்களது குழந்தைகளுக்கு முதலில் வி‌ஷம் கலந்த பாலை கொடுத்து கொன்று விட்டு, தாங்களும் குடித்து தற்கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    ஆனால் எதற்காக இந்த பரிதாப முடிவை எடுத்தனர் என்பது உடனடியாக தெரியவில்லை. மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டதால் மகேந்திரன் இந்த முடிவை எடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக குழந்தைகளை கொன்றுவிட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக வீ.கே.புரம் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று வரை தெருவில் ஓடி ஆடி விளையாடிய குழந்தைகள் தங்களது பெற்றோருடன் பிணமாக கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது அங்கு திரண்டு நின்ற அனைவரையும் கண்கலங்க செய்தது.

    ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் சிவந்திபுரம் பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  #PapanasamSuicide
    Next Story
    ×