search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - நீதிபதி தலைமையிலான குழு அடுத்த வாரம் சென்னை வருகை
    X

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - நீதிபதி தலைமையிலான குழு அடுத்த வாரம் சென்னை வருகை

    ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான விசாரணை குழு ஸ்டெர்லைட் ஆய்வுக்காக அடுத்த வாரம் சென்னை வரும் என தெரிய வந்துள்ளது. அவர்கள் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க உள்ளனர். #Sterlite #SterliteCase
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக கூறி அதை மூட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    கடந்த மே மாதம் இது தொடர்பாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 13 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. அதோடு அந்த ஆலையை மீண்டும் திறக்காமல் இருக்க சட்ட ரீதியிலான நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.



    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மீண்டும் ஆலையை திறக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அந்த நிறுவனம் நாடி உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை பற்றி ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. இதற்காக பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி வசீப்தார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் அவர் தலைமை பொறுப்பேற்க மறுத்து விட்டார்.

    இதையடுத்து மேகாலய மாநில ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி தருண்அகர்வாலை ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை விசாரிக்கும் குழுவின் தலைவராக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதுபற்றிய தகவலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசின் தலைமை செயலாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுப்பி உள்ளது.

    இந்த நிலையில் தருண் அகர்வால் தலைமையிலான விசாரணை குழு அடுத்த வாரம் சென்னை வரும் என தெரிய வந்துள்ளது. அவர்கள் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க உள்ளனர். அவர்களுக்கு சென்னை கலஸ் மகாலில் அலுவலகம் வசதி செய்து கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த குழுவினர் தூத்துக்குடிக்கும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களையும் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை பற்றி விசாரிக்க உள்ளனர். அதோடு ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    நேரில் ஆய்வு செய்த பிறகு தருண்அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தயாரித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும். 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ள விசாரணை குழு நடவடிக்கைகளை ஏற்க இயலாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    தமிழக அரசு தொடர்ந்துள்ள இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. தருண்அகர்வால் குழுவுக்கு சுப்ரீம்கோர்ட்டு தடை விதிக்குமா? என்பது அப்போது தெரிய வரும். #Sterlite #SterliteCase
    Next Story
    ×