search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே மூலஸ்தம்மன் கோவிலில் 23ந் தேதி கும்பாபிஷேகம் - ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்
    X

    காஞ்சீபுரம் அருகே மூலஸ்தம்மன் கோவிலில் 23ந் தேதி கும்பாபிஷேகம் - ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்

    காஞ்சீபுரம் அருகே மூலஸ்தம்மன்கோவிலில் 23ந் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் மூலஸ்தம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியில் வசித்து வந்த வாழ்முனி நாயக்கர்- மீனாட்சி அம்மாள் தம்பதியரால் இக்கோவில் சிறிய அளவில் கட்டப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.

    அம்மனை வழிபட்டால் வேலைவாய்ப்பு, திருமண பாக்கியம் மற்றும் புத்திர பாக்கியத்தினை அருளுவதாக நம்பப்படுகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இந்த நிலையில் வாழ்முனி தம்பதியரின் பேரனும், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதியுமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் பெரும் பொருட்செலவில் இந்த கோவிலை தற்போது புதுப்பித்து கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்.

    கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இன்று காலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. காலை 5 மணிக்கு மகா கணபதி பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெற்றன. நாளை மறுதினம் (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்று காலை 10.30 மணி அளவில் கோபுர கும்பாபிஷேகமும், 11 மணியளவில் மூலவருக்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

    இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் பெஞ்சமின், மாபா. பாண்டியராஜன் மற்றும் டாக்டர் மைத்ரேயன் எம்.பி., மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

    கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. முத்தியால்பேட்டை முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளையும் அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்து உள்ளார்.

    Next Story
    ×