search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் நடுக்கடலில் மீன் பிடித்த போது மின்னல் தாக்கி 7 மீனவர்கள் காயம்
    X

    புதுவையில் நடுக்கடலில் மீன் பிடித்த போது மின்னல் தாக்கி 7 மீனவர்கள் காயம்

    புதுவையில் நடுக்கடலில் மீன் பிடித்த போது மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த 7 மீனவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை சோலை நகரை சேர்ந்த 7 மீனவர்கள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 13-ந் தேதி படகில் மீன்பிடிக்க சென்றனர். கடப்பாக்கம் அருகே அவர்கள் நடுக்கடலில் நேற்று மாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது.

    இதில் படகின் முன்புறம் இடி தாக்கியதில் படகை ஓட்டிய சுதாகர் காது கேட்கும் திறனை இழந்தார். அதோடு இடி தாக்கியதில் சுதாகர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

    மேலும் படகில் மீன் பிடித்து கொண்டிருந்த ஜெலந்திரன், அருள், கந்தவேலு, குகன், விஜி, கலியபெருமாள் ஆகியோருக்கு கண் எரிச்சல் மற்றும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடும் போராட்டத்துடன் இவர்கள் தேங்காய்திட்டு துறைமுகத்திற்கு நேற்று இரவு திரும்பினார்கள்.

    அங்கிருந்த மீனவர்கள் பாதிக்கப்பட்ட 7 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    படகில் இருந்த அனைத்து மின்சாதன பொருட்களும் இடி மின்னலால் பழுதாகின. இதன் சேத மதிப்பு ரூ 5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×