search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தின விழா - மதுரை பஸ், ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
    X

    சுதந்திர தின விழா - மதுரை பஸ், ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

    சுதந்திர தினத்தையொட்டி மதுரை பஸ், ரெயில் நிலையங்களில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
    மதுரை:

    இந்திய சுதந்திர தினவிழா, நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் ஜெயந்தி மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர்கள் தலைமையில் 2,500 போலீசார் மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை விமான நிலையத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலையத்தின் உட்புற பகுதியில் மத்திய பாதுகாப்புப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    மதுரை ரெயில் நிலையத்தில் நவீன பாதுகாப்பு நுழைவு வாயில் கருவி (ஸ்கேன்) பொருத்தப்பட்டு உள்ளது. இதன் வழியாக பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    பயணிகளின் உடைமைகள், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மோப்ப நாய்களுடன் ரெயில் நிலைய வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் மாட்டுத் தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். முக்கிய பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

    மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்ச் சோலை, அழகர்கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    நாளை சுதந்திர தினவிழா நடைபெறும் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காலை 9.20 மணிக்கு கலெக்டர் வீரராகவராவ் கொடி ஏற்றுகிறார்.

    மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காலை 9.30 மணிக்கு ஆணையாளர் அனிஷ்சேகர் கொடி ஏற்றுகிறார். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கண்கவர் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    Next Story
    ×