search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன் வீட்டின் அருகே கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 4 பேர் காயம்
    X

    டிடிவி தினகரன் வீட்டின் அருகே கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 4 பேர் காயம்

    சென்னை அடையாற்றில் உள்ள டிடிவி தினகரன் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #TTVDhinakaran
    சென்னை:

    அடையாறு கற்பகம் அவென்யூ பகுதியில் டி.டி.வி. தினகரன் வசித்து வருகிறார். அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கப்பட்ட பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை நடத்தி வரும் இவர் தனது வீட்டிலேயே நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார்.

    தமிழகம் முழுவதும் தனது புதிய கட்சிக்கு பொறுப்பாளர்களையும் தினகரன் நியமித்துள்ளார். அவர்கள் தினகரனை சந்திப்பதற்காக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு தினமும் வருகிறார்கள்.

    இதனால் தினகரன் வீடு இருக்கும் பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

    இந்த நிலையில் இன்று காலை டி.டி.வி.தினகரன் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் திடீரென குண்டு வெடித்தது. இதில் காரின் கண்ணாடிகள் வெடித்து சிதறின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டு முன்பு நின்றிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள்.

    இந்த குண்டு வெடிப்பில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    தினகரன் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகி ஒருவர் சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளார். குண்டு வெடித்த கார் அவருக்கு சொந்தமானதாகும். காரில் வெடித்தது நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எந்த நோக்கத்திற்காக தினகரன் ஆதரவாளர் காரில் வெடி குண்டை எடுத்து வந்தார் என்பது உடனடியாக தெரியவில்லை.

    தினகரன் வீட்டு மீது வெடி குண்டை வீசி அவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

    காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் குண்டு வெடிப்பு பின்னணி குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×