search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்துக்கு நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் தண்ணீர் திறப்பு
    X

    திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்துக்கு நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் தண்ணீர் திறப்பு

    நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் தண்ணீர் வரத்து தொடங்கியதை அடுத்து விவசாயிகள் ஆற்றில் மலர்தூவி பூஜைகள் செய்து வரவேற்றனர்.
    தஞ்சாவூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து கடந்த 2 வாரங்களாக அந்த அணைகளில் இருந்து உபரி நீரை அதிகளவில் திறந்துவிடப்பட்டன.

    இந்த தண்ணீர் மூலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிபடியாக உயர்ந்தது. இதையடுத்து கடந்த 19-ந் தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்து வைத்தார்.

    இதைதொடர்ந்து கடந்த 22-ந் தேதி கல்லணை திறக்கப்பட்டது. தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களின் சம்பா சாகுபடி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தற்போது மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கல்லணையில் இருந்து காவிரிக்கு 7 ஆயிரம் கன அடியும், வெண்ணாற்றுக்கு 7 ஆயிரம் கன அடியும், கல்லணை கால்வாயில் ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கன அடியும் திறந்துவிடப்படுகிறது.

    தஞ்சை வெண்ணாற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அடுத்துள்ள மூணாறு தலைப்பை வந்தடைந்தது. வெண்ணாறு உதவி பொறியாளர் தியாகசேன், தண்ணீரை திறந்து வைத்தார்.

    நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் வெண்ணாறு, கோரையாறு, பாமணி ஆறு என மூன்றாக பிரிந்து செல்கிறது. இதில் வெண்ணாற்றில் 718 கன அடியும், கோரையாற்றில் 810 கன அடியும், 410 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த மூன்று ஆறுகள் தான் திருவாரூர், நாகை மாவட்டத்திற்கு முழுமையான பாசனத்தை அளித்து வருகிறது. மேலும் இந்த மூன்று ஆறுகள் திருவாரூர், நாகை மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட கிளைகளாகப் பிரிகிறது. திருவாரூர்- நாகை மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இந்த மூணாறு தலைப்பு காவிரி பாசனத்தின் கடைமடை பாசனத்துக்கு திறந்து விடப்படும் முக்கிய தடுப்பணையாக விளங்குகிறது.

    இன்று அதிகாலை மூணாறு தலைப்பில் தண்ணீர் வரத்து தொடங்கியதை அடுத்து விவசாயிகள் ஆற்றில் மலர்தூவி பூஜைகள் செய்து வரவேற்றனர். இதனால் திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×