search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தொழிலதிபர் பலி
    X

    சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தொழிலதிபர் பலி

    விராலிமலை அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலதிபர் பலியானார்.
    விராலிமலை:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் நிர்மல் (வயது 30). இவர் அங்கு ஷூமார்ட் வைத்துள்ளார். இந்தநிலையில் திருச்சியில் வசித்து வரும் அவரது மாமனாரை பார்ப்பதற்காக நேற்றிரவு காரில் கோவில்பட்டியில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார். காரை நிர்மலே ஓட்டினார்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் செல்லும் போது சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காருக்குள் இருந்த நிர்மல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனிடையே லாரி டிரைவர், லாரியை எடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் பலியான நிர்மலுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    திருச்சி -மதுரை நான்கு வழிச்சாலையில் டிரைவர்கள் ஓய்வு எடுப்பதற்காக டோல் கேட்டுகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் டிரைவர்கள் சிலர் ஆங்காங்கே லாரிகளை நிறுத்தி ஓய்வு எடுத்து வருகின்றனர்.

    இரவு நேரங்களில் சாலையோரம் லாரிகளை நிறுத்தியிருப்பது தெரியாததால், அந்த வழியாக வரும் வாகனங்கள் லாரிகள் மீது மோதி, அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×