search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? ஐகோர்ட் கேள்வி
    X

    ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? ஐகோர்ட் கேள்வி

    துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. #OPS #OPSAssetCase
    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி யிருப்பதாவது:-

    தமிழக துணை முதல்-அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், கடந்த 1996ம் ஆண்டு முதல் பொது ஊழியராக உள்ளார். 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை பெரியகுளம் நகராட்சி தலைவராக பதவி வகித்தார். 2001 மற்றும் 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில் பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 2011 மற்றும் 2016-ம் ஆண்டு களில் நடந்த சட்ட சபை தேர்தல்களில் போடி நாயக்கனூர் எம்.எல். ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வருவாய் அமைச்சராகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும், இடை இடையே முதல்-அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

    தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில், துணை முதல்-அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி பி.விஜயலட்சுமி. இவர்களுக்கு ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்ற மகன்களும், கவிதா பானு என்ற மகளும் உள்ளனர்.

    இவர்கள் மீதும், தன் சகோதரர்கள் ஓ.ராஜா, ஓ.பாலமுருகன், ஓ.சண்முகசுந்தரம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயரிலும் ஏராளமான முதலீடுகளை ஓ.பன்னீர் செல்வம் செய்துள்ளார்.

    தன்னுடைய தொழில் பங்குதாரர் ஆர்.சுப்புராஜ், அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் பெயரிலும், பல பினாமிகளின் பெயர்களிலும் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். தன்னுடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.

    ஆனால், 2016-ம் ஆண்டு தேர்தலின்போது, 2014-2015-ம் நிதியாண்டில், ஓ.பன்னீர்செல்வத்தின் வருமானம் ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்து 875 என்று அவர் வேட்புமனுவில் கூறியுள்ளார். அந்த நிதியாண்டில் எம்.எல்.ஏ.வுக்கான அடிப்படை மாத ஊதியம் ரூ.55 ஆயிரமாகும். 12 மாதத்துக்கு அதுவே ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

    அந்த காலக்கட்டத்தில் அவர் முதல்-அமைச்சர் பதவியை வகித்துள்ளார். இதை விட கூடுதலாக ஊதியம் பெற்றிருப்பார். இதுதவிர அந்த ஆண்டு ரூ.17.85 லட்சம் மதிப்புள்ள ஒரு புதிய சொகுசு காரையும் வாங்கியுள்ளார். எனவே, அவர் தவறான வருமான தகவலை தாக்கல் செய்துள்ளார்.

    பெரியகுளத்தில் தனக்குள்ள விவசாய நிலங்களையும், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள வீட்டின் சொத்து மதிப்புகளையும் மறைத்துள்ளார். 2011-ம் ஆண்டு தேர்தலில் அவர் தனது மனைவிக்கு ரூ. 24.20 லட்சம் மட்டுமே சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் 2016-ம் ஆண்டு தேர்தலில் விஜயலட்சுமிக்கு ரூ. 78 லட்சத்துக்கு சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வருமானமே இல்லாத குடும்பத் தலைவிக்கு இவ்வளவு வருமானம் வந்தது எப்படி?.

    தேனி மாவட்டத்தில் உள்ள போஜராஜன் மில்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்ட ரூ.140 கோடி நிலத்தை பன்னீர்செல்வம் தனது பினாமி மூலமாக சந்தை விலையை விட குறைவாக வாங்கியுள்ளார்.

    150 ஏக்கர் பரப்பில் பினாமி மூலமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு வாங்கியுள்ளார். போடியில் நடக்கும் ஏல மார்க்கெட்டை இவர் தான் நிர்ணயம் செய்கிறார்.

    அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் ரூ. 200 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். அவரது மகன்கள் பல இந்திய நிறுவனங்களில் இயக்குநர்களாக உள்ளனர்.

    பொது ஊழியரான ஓ.பன்னீர்செல்வமும் அவரது வாரிசுகளும் சட்டத்துக்கு புறம்பாக நேரடியாகவும், தங்களின் பினாமிகள் மூலமாகவும் பல கோடிக்கு சொத்துக்களை குவித்துள்ளனர்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் 2வது மகன் வி.ஜெயபிரதீப் 3 மிகப்பெரிய நிறுவனங்களின் இயக்குனராக பதவி ஏற்கும்போது, அவருக்கு 25 வயது கூட ஆகவில்லை. சின்ன வயதில், பல கோடி ரூபாய் முதலீடுகளை அவரால் எப்படி செய்ய முடிந்தது?



    எஸ்.ஆர்.எஸ். தாது நிறுவனத்தின் உரிமையாளர் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் (2016ம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை) 6 மாதத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரூ.4 கோடி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே, ஓ.பன்னீர்செல்வம், தன் மனைவி, மகன்கள், மகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், பினாமிகள் பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக சேர்ந்துள்ளார்.

    இதுகுறித்து கடந்த மார்ச் மாதம் 10ந்தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ள பொது ஊழியரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு முதல் வழக்காக ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வக்கீலிடம், நீதிபதி, மனுதாரர் கடந்த மார்ச் மாதமே புகார் செய்துள்ளார். இதுவரை அந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? போலீசார் இதுவரை என்ன செய்தனர்? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அரசு வக்கீல், புகார் வந்ததும், அந்த புகார் குறித்து மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து கருத்தினை கேட்டு, தலைமை செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இதையடுத்து நீதிபதி மார்ச் மாதம் கொடுக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. போலீசார் ஏன் தயங்குகின்றனர்? புகார்தாரர் தன்னுடைய புகாரில், சேகர் ரெட்டி டைரியில் பன்னீர்செல்வம் பெயர் உள்ளது என்று கூறியுள்ளார். அவருக்கு சேகர் ரெட்டி ரூ.4 கோடி கொடுத்துள்ளதாக குறிப்பு உள்ளது என்கிறார். ஏற்கனவே சேகர்ரெட்டி மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

    போலீசாரும், இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கையும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது?’ என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.

    அப்போது அரசு வக்கீல், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்கிறேன். அதற்கு கால அவகாசம் வேண்டும் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வருகிற 23-ந்தேதிக்கு விசாரணையை தள்ளி வைக்கிறேன். அன்று விரிவான பதில் மனுவை அரசு தரப்பு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.
    #OPS #OPSAssetCase

    Next Story
    ×