search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவன் முகமது யாசின்.
    X
    மாணவன் முகமது யாசின்.

    எனக்கு உதவிகள் வேண்டாம், ரஜினியை பார்க்க வேண்டும்- ஈரோடு மாணவரின் விருப்பம்

    கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவனின் நேர்மையை பாராட்டி பலர் உதவி செய்ய முன்வந்தாலும் ரஜினியை பார்ப்பது தான் எனது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு கனி ராவுத்தர் குளம் நந்தவனதோட்டம் பகுதியை சேர்ந்த பாட்ஷா என்ற துணி வியாபாரியின் மகனான முகமது யாசின் தற்போது சின்ன சேமூர் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    பள்ளியின் அருகே ரோட்டில் 500 ரூபாய் பணம் கட்டு கிடந்ததைப் பார்த்த முகமது யாசின், அதை எடுத்து ஆசிரியையிடம் ஒப்படைக்க ஆசிரியை வழியாக அந்தப் பணம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றது.

    ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த முகமது யாசின் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை எடுத்துச் சென்று குடும்பத்தினரிடம் கொடுத்து செலவு செய்திருக்கலாம்.

    ஆனால் பெற்றோரால் நேர்மையாக வளர்க்கப்பட்ட முகமது யாசின் அந்தப் பணத்தை எடுத்து கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் கூறியது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

    இந்த அற்புதமான செயலே முகமது யாசினை தற்போது ஈரோடு மக்கள் அனைவரும் அறியும் ‘ரியல் ஹீரோ’வாக மாற்றி விட்டது. அவரது இந்த நேர்மையான செயலுக்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டு குவிகிறது.

    பலரும் அவருக்கு உதவ தயார் ஆனார்கள். ஆனால் அதிலும் பெருந்தன்மை காட்டி அந்த உதவிகளை ஏற்காமல் உதவி செய்வதாக கூறியவர்களுக்கு நன்றியை மட்டும் தெரிவிக்கிறார்கள் முகமது யாசினும், அவரது பெற்றோரும்.

    எனினும் முகமது யாசின் நேர்மைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. ஈரோடு நகரவாசிகள் மட்டுமல்லாது பத்திரிகைகளிலும், மீடியாக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் முகமது யாசினின் நேர்மையை பார்த்த சினிமா பிரபலங்களும் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்

    நடிகை குஷ்பு தனது மானேஜர் மூலமாக ஈரோட்டுக்கு தொடர்பு கொண்டு மாணவனின் பெற்றோரிடம் செல்போனில் பேசினார். "உங்கள் மகனின் நேர்மை மகத்தானது. அவனது படிப்பு செலவுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.

    ஆனால் முகமது யாசினின் பெற்றோரோ, "நீங்கள் உதவி செய்ததாக கூறியதற்கு நன்றி" என்று மட்டும் கூறி எந்த பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் பதில் அளித்தனர். அதற்கும் நடிகை குஷ்பு பாராட்டு தெரிவித்து அந்த மாணவனிடமும் பேசி தனது வாழ்த்துக்களை கூறினார் நடிகர் எஸ்.வி. சேகரும் மாணவனின் நேர்மையை பாராட்டி உள்ளார்.

    இந்த நிலையில் ஈரோடு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மாணவர் முகமது யாசின் நேர்மையை பாராட்ட அவரது வீடு தேடிச் சென்றனர். ரஜினி மக்கள் மன்ற ஈரோடு மாவட்ட செயலாளர் சாம்ராஜ் தலைமையில் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் பைக்கே. முருகேஸ், 1-ம் மண்டல இணை செயலாளர் வெங்கட ரமணா, 2-ம் மண்டல இணை செயலாளர் ராஜ் பூவை சுரேஷ், 3-ம் மண்டல செயலாளர் குணசேகரன், இணை செயலாளர் மோகன் ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் சங்கர், 3-ம் மண்டல இணை இளைஞர் அணி செயலாளர் சின்னையன், இணை செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முகமது யாசின் வீட்டுக்கு சென்றனர்.

    மாணவர் முகமது யாசினை ஈரோடு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சாம்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.

    மாணவர் முகமது யாசினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முகமது யாசினினிடம் ரஜினி மக்கள் மன்ற ஈரோடு மாவட்ட செயலாளர் சாம்ராஜ், ‘‘தம்பி... நேர்மையாக பணத்தை எடுத்துக் கொடுத்த உனக்கு என்ன வேண்டும்? நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டும்?’’ என்று கேட்டார்.

    அதற்கு முகமது யாசின், "எனக்கு உதவி வேண்டாம். நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரை நான் சந்திக்க விரும்புகிறேன்" என்றான் குழந்தை குரலில். அவரது தந்தை பாட்ஷா, ‘‘நீங்கள் எனது மகனுக்கு உதவி செய்வதாக கூறியதற்கு நன்றி. இப்போது அவன் அரசு பள்ளியில் தான் படிக்கிறான். அவனது படிப்பு செலவுக்கு பணம் இப்போது தேவைப்படவில்லை.

    உதவி செய்வதாகக் கூறும் நீங்கள் எனது மகன் விருப்பப்படி ரஜினியை சந்திக்க ஏற்பாடு செய்தால் மகிழ்ச்சி அடைவோம்’’ என்று கூறினார்.

    இதைக் கேட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் சாம்ராஜ், ‘‘ரஜினி சாரை பார்க்க ஆசைப்படும் உங்கள் மகன் ரஜினி சாரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். அவரை சந்திக்கும் தேதி கேட்டு உங்களிடம் சொல்கிறேன். அப்போது உங்களையும், உங்கள் மகனையும் அழைத்து செல்கிறோம்’’ என்று கூறினார்.

    முகமது யாசின் தந்தை கூறும்போது, எனது மகன் மேற்படிப்பு படிக்கும் போது வேண்டுமானால் உதவி தேவைப்படும் என்று கூறினார். அதற்கு பதிலளித்த ஈரோடு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சாம்ராஜ், ‘‘உங்கள் மகன் மேற்படிப்பு படிக்கும்போது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள். நாங்கள் கண்டிப்பாக உதவி செய்கிறோம்’’ என்று கூறினார்.

    Next Story
    ×