search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்மேற்கு பருவமழையால் குந்தா அணையில் நீர்மட்டம் உயர்வு
    X

    தென்மேற்கு பருவமழையால் குந்தா அணையில் நீர்மட்டம் உயர்வு

    தென்மேற்கு பருவமழையால் நீலகிரி மாவட்டம் குந்தா அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மேலும், பரளி மற்றும் கெத்தை மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள குந்தாவில் நீர் மின்நிலையம் உள்ளது. அவலாஞ்சி, எமரால்டு, அணைகளில் தேக்கிவைக்கப்படும் நீரின் மூலம் இந்த மின்நிலையத்தில் 60 மெகாவாட், கெத்தை மின்நிலையத்தில் 175 மெகாவாட், பரளி மின்நிலையத்தில் 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தற்பொது மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது.

    இந்த மழையால் ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக மின்சார உற்பத்திக்கு நீராதாரமாக உள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    குந்தா அணையின் மொத்த கொள்ளளவு 89 அடிகளாகும். தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணையில் நீர் மட்டம் 88 அடிகளாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அணையில் உள்ள சுரங்கபாதை மூலம் கெத்தை மின்நிலையத்துக்கு அதிகளவு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மழை மேலும் தீவிரம் அடையும் பட்சத்தில் குந்தா அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
    Next Story
    ×