search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிக்கோவில் அருகே வீடு புகுந்து 13 பவுன் நகைகள் கொள்ளை
    X

    காஞ்சிக்கோவில் அருகே வீடு புகுந்து 13 பவுன் நகைகள் கொள்ளை

    காஞ்சிக்கோவில் அருகே கிரில் கேட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை அள்ளி சென்றனர்.

    பெருந்துறை:

    காஞ்சிக்கோவில் அருகே உள்ள கருங்கரடு, கரிச்சிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 70). இங்கு இவருக்கு சொந்தமான விவசாய தோட்டமும், வீடும் உள்ளது. வாரத்துக்கு ஒருநாள் மட்டும் இந்த வீட்டுக்கு சின்னம்மாள் வருவார். மற்ற நாட்களில் ஈரோடு அவல் பூந்துறை, கஸ்பாபேட்டையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருப்பார்.

    வழக்கம்போல கடந்த 15-ந் தேதி கரிச்சிக்காடு தோட்டத்து வீட்டுக்கு சின்னம்மாள் வந்தார். வீட்டின் முன்பக்க கதவில் அவர் போட்டிருந்த பூட்டை திறந்தார்.

    ஆனால் கதவை திறக்க முடியவில்லை. உள் பக்கமாக கதவு மூடப்பட்டிருப்பதை சின்னம்மாள் உணர்ந்தார். எனவே இது தொடர்பாக கஸ்பாபேட்டையில் இருந்த தனது பேரன் கோகுலிடம் (சின்னம்மாள் மகளின் மகன்) செல்போனில் தொடர்பு கொண்டு கூறினார்.

    அதற்கு கோகுல், ‘‘கதவின் பூட்டு பழுதுபட்டிருக்கும். நீங்கள் கஸ்பாபேட்டைக்கு வந்து விடுங்கள். நாளை (அதாவது 16-ந் தேதி) கார் பெண்டரை அழைத்து சென்று பழுது நீக்கிக்கொள்ளலாம்’’ என்று பாட்டியிடம் கூறினார்.

    இதையடுத்து சின்னம்மாள் கஸ்பாபேட்டைக்கு வந்தார். நேற்று பேரன் கோகுலுடன் கரிச்சிக்காடு தோட்டத்து வீட்டுக்கு சென்றார். பழுது நீக்கி கதவை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    எனவே பூட்டை உடைத்து கதவை திறந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறக்கப்பட்டு பொருட்கள், துணிமணிகள் சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னம்மாள் வீட்டில் வைத்திருந்த நகைகள் இருக்கிறதா? என்று பார்த்தார்.

    ஆனால் அவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து அங்கிருந்த 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் 2 கிலோ வெள்ளி பொருட்களையும் அள்ளி சென்றுள்ளனர்.

    கொள்ளை போன தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே தோட்டத்து வீட்டுக்கு சின்னம்மாள் வருகிறார் என்பதை நோட்ட மிட்டே மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த மர்ம நபர்கள் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து வந்து மாடியில் ஏறி அங்கு கிரில் கேட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.

    கொள்ளையடிக்கும் போது யாரும் உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காகவே உள் பக்கமாக கதவை தாழிட்டுக் கொண்டு நகை, பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து காஞ்சிக்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×