search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழையூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்
    X

    கீழையூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்

    திருமானூர் அருகே உள்ள கீழையூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியதில் 15 பேர் காயமடைந்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள கீழையூர் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி கிராமத்தின் நடுவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருமானூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 350-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    காளைகள் முட்டியதில் புள்ளம்பாடியை சேர்ந்த மகேஷ்வரன் (வயது 27), பூண்டியை சேர்ந்த சக்திவேல் (27), அயன்சுத்தமல்லியை சேர்ந்த இளங்கோவன் (30), வடுக பாளையத்தை சேர்ந்த முரட்டுகாளை (39), கண்டராதித்தத்தை சேர்ந்த பிரபாகரன் (28) உள்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த பிரபாகரன் மட்டும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், நாற்காலிகள், கட்டில் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை காண அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருமானூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கீழையூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×