search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி
    X

    போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

    போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

    சென்னை:

    சென்னை வடபழனியை சேர்ந்த மாணவி நர்மதா. இவர் சார்பில் அவரது தந்தை தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதியுள்ளேன். தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அட்டவணையின்படி, பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை நடந்தது. ஏப்ரல் 11-ந்தேதி முதல் 25-ந் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் மே 16-ந்தேதி அறிவிக்கப்படவேண்டும்.

    இதேபோல 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 30-ந் தேதியும், 10-ம் வகுப்புத் தேர்வு மே 23-ந்தேதியும் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில், விடைத்தாள் திருத்த வேண்டிய ஆசிரியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறப்படுகிறது. இதனால், விடைத்தாள் திருத்தும் பணி தொய்வு ஏற்பட்டு, குறிப்பிட்ட நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடுவது தள்ளி போகலாம் என்று மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    எனவே, ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும். அந்த போராட்டம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    கல்வித்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் முனுசாமி, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கையை அரசு எடுக்கும். பள்ளிக் கல்வித்துறை அளித்துள்ள அட்டவணையின் அடிப்படையில் உரிய தேதியில், பிளஸ் 2, 11-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்படும்’ என்று கூறினார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வைத்திய நாதன், ‘விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், ஆசிரியர்கள் சங்கங்களுக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

    Next Story
    ×