search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
    X

    எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

    சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று இரவு வண்டிவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.
    சேலம் குமாரசாமிப்பட்டியில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    விழாவில் நேற்று முன்தினம் கோவிலில் பெண்கள் பொங்கல் வைக்கும் வைபவம் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மேலும் பக்தர்கள் பலர் அலகு குத்தி ஊர்வலமாக எல்லைப்பிடாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.

    திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதற்காக கோவில் அருகே தீக்குண்டம் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் சின்னத்திருப்பதி சென்று நீராடி, மஞ்சள் ஆடை அணிந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுவர்கள், சிறுமிகள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தீக்குண்டம் இறங்கினார்கள். இதற்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. சிலர் தங்கள் குழந்தைகளை கையிலும், தோளிலும் சுமந்தபடி தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) பால்குடம் ஊர்வலமும், அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதையடுத்து மாலையில் வண்டிவேடிக்கை நிகழ்ச்சியும், இரவில் அம்மன் ஊர்வலமும் நடைபெறுகிறது.
    Next Story
    ×