search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல்வெட்டுகள் நிறைந்த நெல்லையப்பர் கோவில்
    X

    கல்வெட்டுகள் நிறைந்த நெல்லையப்பர் கோவில்

    நெல்லையப்பர் கோவில் பல்வேறு சிறப்புகள் கொண்டதாகும். இக்கோவிலில் கல்வெட்டுகள் நிறைந்து உள்ளன. இவற்றில் பல கல்வெட்டுகள் மிகவும் பழமையானவை.
    புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் இன்று காலை (வெள்ளிக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவில் பல்வேறு சிறப்புகள் கொண்டதாகும். இக்கோவிலில் கல்வெட்டுகள் நிறைந்து உள்ளன. இவற்றில் பல கல்வெட்டுகள் மிகவும் பழமையானவை. அவை வட்டெழுத்து, கிரந்தம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற எழுத்துகளில் பொறித்து வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த கோவில் குறித்து திருஞானசம்பந்தர் பாடி இருந்த போதிலும், கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள் சம்பந்தர் காலத்துக்கு பிந்தியவை. சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் (கி.பி.946 -966) என்ற பாண்டிய மன்னனின் இரண்டாம் ஆட்சி ஆண்டு பற்றிய கல்வெட்டு ஆகும். தாசி ஒருவர் விளக்கு எரிப்பதற்காக தினமும் ஆழாக்கு நெய் வழங்க தானம் அளித்த செய்தியை தருகிறது. இந்த கல்வெட்டு இறைவனை, “திருநெல்வேலி பிரம்மபுரித் தேவர்” என குறிப்பிடுகிறது.

    மூல மகாலிங்கர் கோவிலில் சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் கல்வெட்டுகள் உள்ளன. இவை அனைத்தும் 10-ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவை. இந்த கல்வெட்டுகள் வட்டெழுத்தில் உள்ளன. இவை விளக்கெரிப்பதற்காக தானம் வழங்கிய செய்தியை குறிப்பிடுகின்றன.

    முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012-1044), முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070-1120) போன்ற சோழ மன்னர்களுடைய காலத்தை சார்ந்த கல்வெட்டுகள், இந்த கோவிலில் முதல் திருச்சுற்றில் உள்ள வட்டத் தூண்களில் காணப்படுகின்றன.

    இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி.1190-1267) என்ற பாண்டிய மன்னன் கொடுத்த நில தானம் பற்றிய கல்வெட்டில் இந்த கோவில் இறைவனை, ‘திருநெல்வேலி உடையநாயனார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் சுந்தரபாண்டியன் (கி.பி.1216-1244), விக்கிரம பாண்டியன் (கி.பி.1250-1276), வீரசோமேசுவரன் (கி.பி.1238-1258), இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1251 திருவாதிரை திருவிழா நடனம் பற்றியது), இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1258-1265), முதலாம் மாறவர்மன் குலசேகரன் (கி.பி. 1258-1308 திருச்சுற்று மதில் எழுப்பியது), முந்திகோட்டு வீரம் அழகிய பாண்டிய தேவன் (பொல்லாப் பிள்ளையார் சன்னதி உருவாக்கம்), பராக்கிரம பாண்டியன் (வேணுவனநாதர் எனும் பெயர் இடம் பெற்ற முதல் கல்வெட்டு), வீரசங்கிலி மார்த்தாண்டவர்மன் (கி.பி. 1546-இசைத்தூண் மண்டபம் உருவாக்கம்) போன்றோரின் கல்வெட்டுகளும் காணப்பட்டு உள்ளன.

    மதுரை மீனாட்சி-சொக்கநாதர் கோவிலை விட இந்த கோவில் பெரிய கோவில் ஆகும். மதுரை மீனாட்சியம்மன் கோவில் 12 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால், நெல்லையப்பர் கோவில் 14 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இது சிற்பக்கலையின் சிகரம் என்றே சொல்லலாம். இந்த கோவில் 5 கோபுரங்களுடன் விளங்கும் ஒரு பெரிய கோவில் ஆகும். ஊருக்கு நடுவில் 850 அடி நீளமும், 756 அடி அகலமும் கொண்ட ஒரு விரிந்த இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. சுவாமி சன்னதி கோபுரத்தை விட, அம்பாள் சன்னதி கோபுரம் அழகுற வாய்ந்துள்ளது. கோவிலுக்குள் இருக்கும் பொற்றாமரை தீர்த்தக்கரையில் நின்று பார்த்தால் அம்பாள் சன்னதி கோபுரத்தின் கம்பீரமும், அழகும் தெரியும்,

    இங்குள்ள பொற்றாமரை குளத்தில் இறைவனே நீர் வடிவாகவும், பிரம்மன் பொன் மலராகவும் பூத்த புண்ணிய தடாகம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மேலும் இந்தியாவிலேயே மிக நீளமான சுவாமி சன்னதி வீதி (ரோடு) அமைந்துள்ளது நெல்லையில் மட்டுமே.

    சுவாமி சன்னதியின் மேற்கு பக்கத்தில் ஆறுமுக நயினார் சன்னதியில் ஆறுமுகப்பெருமான் மயில்மேல் அமர்ந்திருப்பது ஒரே கல்லில் ஆன சிலை ஆகும். 6 திருமுகத்தையும் பக்தர்கள் சுற்றி வந்து பார்த்து வணங்கலாம்.

    நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும் என்பார்கள். திருவிழாக்கள் தோறும் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளுவதற்கான உள்ள பல வாகனங்களும் வேறெங்கும் இல்லாத வகையில் மிகவும் அழகானவை.

    நெல்லையப்பர் கோவிலில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் என 5 தேர்கள் உள்ளன. இதில் சுவாமி தேர் தமிழ்நாட்டிலேயே 3-வது பெரிய தேர் ஆகும். அதாவது திருவாரூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் தேர்களுக்கு அடுத்தப்படியாக நெல்லையப்பர் சுவாமி தேர் 3-வது பெரிய தேர் ஆகும். 1,505-ம் ஆண்டு பெரிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. தேர்கள், டவுன் ரதவீதிகளில் வலம் வரும் அழகை காண கண் கோடி வேண்டும். டவுன் ரத வீதிகள் அரியநாயக முதலியாரால் வகுக்கப்பட்டது.

    இரட்டை கருவறைகளில் வேணுவன நாதர், நெல்லை கோவிந்தர் ஆகியோர் உள்ளனர். தை அமாவாசை அன்று 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றும் பத்ர தீப திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசை அன்று லட்ச தீபமும் ஏற்றப்படுகிறது. பத்ரதீபம், லட்ச தீப விழாக்களின் போது மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றப்படுகிறது.

    அன்னசத்திரங்கள்-மடங்கள்

    நெல்லையப்பர் கோவிலை சுற்றிலும் பல்வேறு அன்ன சத்திரங்களும், மடங்களும் அமைந்துள்ளன. தொண்டை மண்டல ஆதீன மடம், தெற்கு மடம், ஈசான தம்பிரான் மடம், செங்கோல் ஆதீன மடம், மேல மடம், லாலா சத்திரம் முக்கு சேக்கிழார் மடம், உமையொருபாகம் குருக்கள் மடம், திருநாவுக்கரசர் மடம் உள்பட 75-க்கும் மேற்பட்ட மடங்களும், அன்னதான சத்திரங்களும் உள்ளன.

    கோவிலை சுற்றி தெருக்களின் பெயர்கள் காரணப் பெயர்களாக அமைந்துள்ளன. சுவாமி சன்னதி தெருவில் சிவாச்சாரியர்கள் இருந்தனர். அம்பாள் சன்னதியில் வைதீக பிராமணர்கள், வேளாளர்கள் குடியிருந்தனர். கல்லத்தி முடுக்கு தெருவில் ஓதுவார்களும், வேளாளர்களும் வசித்தனர். அறம் வளர்த்த புது மாடத்தெருவில் திருநடனம் புரிந்த மங்கையர்கள் வசித்தனர். காவல் பிறை தெருவில் கோவிலை சுற்றி பிறை அமைத்து காவல் காத்த காவலர்கள் தங்கி இருந்தனர். இதே போல் தேர் வடம் பிடித்து இழுக்கும் போது ரதவீதி முக்குகளில் வடத்தை சுற்றி திருப்புவதற்காக நுழையும் தெருக்களின் பெயர் வடம் போக்கி தெரு என்று பெயர் பெற்றுள்ளன.

    சாரங்கி இசைக்கருவி

    நெல்லையப்பர் கோவிலில் இருக்கும் வயலின் போன்ற தோற்றமுடைய சாரங்கி இசைக்கருவி புகழ் பெற்றது ஆகும். 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கருவி சாயரட்சை பூஜையின் போது உற்சவர் மண்டபத்தில் வாசிக்கப்படும்.
    Next Story
    ×