search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நரம்பு சம்பந்தமான நோயை குணமாக்கும் திருவெண்காடு கோவில்
    X

    நரம்பு சம்பந்தமான நோயை குணமாக்கும் திருவெண்காடு கோவில்

    உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இங்கே புதனை வழிபட நிவர்த்தி பெறலாம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கோவில் அமைப்பு :

    திருவெண்காடு கோவில் அந்த ஊருக்கு நடுநாயகமாய் அமைந்து விளங்குகிறது. கோவில் திருமதிலைச் சுற்றி மடவளாகமும், அதனைச் சுற்றி நான்கு அகன்ற தேரோடும் திரு வீதிகளும் அமைந்துள்ளன.

    கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரமும், மேற்கே ஐந்து நிலை கோபுரமும் அமைந்துள்ளது. இக்கோவில் கிழக்கு மேற்காக 792 அடி நீளமும், வடக்கு தெற்காக 310 அடி அகலமும் கொண்டு அமைந்துள்ளது. வெளிப்பிரகாரத்திலிருந்து உட்பிரகாரம் செல்லும் கிழக்கு மேற்கு வாயில் களிலும் இரண்டு மூன்று நிலைக்கோபுரங்கள் உள்ளன. இக்கோவில் மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது.

    கீழக்கோபுரம் வழியே உள்ளே நுழைய வேண்டும். கொடி மரத்துப் பிள்ளையார், பலிபீடம், கொடிகம்பம் நந்தி இவை களை வழிபட வேண்டும். இந்த இடத்திற்குத் தெற்கே அக் கினி தீர்த்தமும், அதன் கிழக்கே அக்கினீசுவரர் கோவிலும் உள்ளன.

    அக்கினி தீர்த்தக் கரையில் ஊஞ்சல் மண்டபமும், மெய்கண்டார் சன்னதியும் உள்ளன. தெற்கு வெளிப்பிரகாரம் வழியே செல்கையில் சூரியன் கோவிலையும், சூரிய தீர்த்தத் தையும் காணலாம். வெளிப்பிரகாரத்தின் தென் மேற்கில் கோவில் அலுவலகம், களஞ்சியம், நந்தவனம் ஆகியன அமைந்துள்ளன.

    மேற்கு வெளிப்பிரகாரத்தில் மேற்கே ஐந்து நிலைக் கோபுரத்திற்கு உட்புறம் வடபால் ஆறுமுகப் பெருமான் கோவில் தனியாக பெரிய சன்னதியுடன் அமைந்துள்ளது. அதனுடன் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளது. நூற்றுக் கால் மண்டபம் சமயச் சொற்பொழிவுகள், இன்னி சையரங்குகள், சிவாகமச் சித்தாந்தப் பயிற்சி வகுப்புகள் முதலியவை நடைபெறப் பயன்படுகின்றது. முருகன் கோவிலுக்கு மேற்கே வீரபாண்டியன் என்னும் சிவலிங்கம் உள்ளது.

    வெளிப்பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் பிரம்ம வித்யாம்பிகை அம்மன் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சிறிய கோபுரத்துடன் தனி உட்பிரகாரத்துடன் உள்ளது. அம்மன் கோவிலிலுள்ள முன் மண்டபம் முழுவதும் கருங்கல் திருப்பணியாகும்.

    அம்மன் கோவில் மண்டபத்தின் இடது புறம் புதனுக்குத் தனி கோவில் உள்ளது. அதற்கு இடப்பகுதியில் பிரம்மசாது சமாதியும், ஸ்தலவிருட்சம் வில்வம், திருவெண்காட்டு நங்கை நந்தவனமும் உள்ளன.

    அதன் அருகில் சிறப்பு ஹோமங்கள் செய்வதற்கான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அம்மன் சன்னதிக்கு எதிரில் சந்திர தீர்த்த திருக்குளம் அமைந்துள்ளது. அதன் தென்கரையில் கொன்றை மரமும், கீழ்ப்பால் வடவாலவிருட்சமும், சந்திரேசுவர் கோவிலும் உள்ளன.

    கோவிலின் வடகிழக்கில் அரசும் வேம்பும் இணைந்துள்ள மேடை உள்ளது. நூற்றுக் கணக்கான நாகர் சிலைகள் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அம்மன் கோவிலுக்கு மேற்கே ருத்ர பாதம் மற்றும் சம்பந்த விநாயகர் கோவில் உள்ளது. வடகிழக்கு மூலையில் யாகசாலை இருக்கிறது.

    கிழக்கு வெளிப்பிரகாரத்தில் இருந்து உட்பிரகாரம் செல்வதற்கு முன் வடக்கே அலங்கார மண்டபமும், வாகன மண்டபமும் உள்ளது. மூன்று நிலைக்கோபுரத்தை ஒட்டி அழகிய திருக்கல்யாண மண்டபமும் அமைந்துள்ளது. அதன் வழியாகத் திருக்கோவிலின் உள்ளே நுழைந்தால் திருக்கல்யாண மண்டபத்தில் நடராஜரின் பல்வேறு ஆடல்களைக் சித்திரமாக எழுதியுள்ளனர்.

    உட்பிரகாரத்தின் தென் பகுதியில் பெரியவராணப் பிள்ளையாருக்கும், சோமாஸ்கந்தருக்கும் தனித்தனிச் சன்னதிகள் உள்ளன. தென் திருமாளிகைப் பத்தியில் அறுபத்துமூவர், பத்திரகாளி, வீரபத்திரர், இடும்பன், சுகாசனமுர்த்தி, சோலையப்ப முதலியார், மந்திரி ஆகிய மூர்த்திகள் உள்ளன.

    மேற்குத் திருமாளிகைப் பத்தியில் நாகேசுவரர், விநாயகர், யோகமாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆவுடையார் பத்திரபீடம், விசுவேசுவரர், விசா லாட்சி, அங்காள பரமேஸ்வரி, சுவேதவன பெருமாள், பஞ்சலிங்கம் பாலசுப்பிரமணியர், அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, சரஸ்வதி, தனி விநாய கர் முதலிய சன்னதிகள் உள்ளன.

    மேற்கு உட்பிரகாரத்தில் தெற்கு நோக்கிய ஸ்ரீநடராஜ சபை உள்ளது. வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீஅகோரமூர்த்தி மூவருக்கும், உற்சவருக்கும் தனித்தனிக் கோவில்கள் உள்ளன. காட்சி நாயனார், சண்டேசுவரர், சுவேதலிங்கம் ஆகிய சந்நிதிகளும் உள்ளன. கிழக்கு உட்பிரகாரத்தில் பைரவர், காசித்துண்டி விநாயகர், துர்க்கை நவக்கிரகங்கள் முதலியன உள்ளன. நவக்கிரகங்கள் மற்ற தலங்களில் இருப்பது போன்ற அமைப்பில் இல்லாமல் வரிசையாக இருக்கின்றன.

    நடுவில் சுவேதாரண்யேசுவரர் திருச்சன்னதி உள்ளது. நிருத்த மண்டபம், மகா மண்டபம், அர்த்தமண்டபங்களுடன் கூடிய பெரிய சன்னிதி இது. இதன் வாயிலில் துவார பாலகர் களும் கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, லிங்கோத் பவர், பிரம்மா ஆகியோரும் உள்ளனர். தெற்கு கோஷ்டத்தில் சட்டைநாதர் சுதை வடிவிலும், ஐராவதமும் சிவப்பிரியரும் புடைப்புச்சிற்பமாகவும் உள்ளனர். மூலஸ்தானத்தில் திருவெண்காடர் மகாலிங்கமூர்த்தமாக எழுந்தருளி உள் ளார்.

    திருவெண்காடு தலத்துக்கு செல்வது எப்படி?

    திருவெண்காடு ஆலயம் சீர்காழிக்கு மிக அருகில் உள்ளது. வெளியூர்களில் திருவெண்காடுக்கு செல்ல விரும்புபவர்கள் சீர்காழியை சென்றடைய தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பஸ், ரெயில் வசதிகள் உள்ளன.

    சீர்காழியில் பக்தர்கள் தங்கிச் செல்வதற்கு உரிய லாட்ஜ் வசதிகள் உள்ளன. அங்கு தங்குவதற்கு விருப்பம் இல்லாதவர்கள் அருகில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்லலாம்.

    வைத்தீஸ்வரன் கோவிலில் கூடுதல் வசதிகளுடன் தங்குவதற்கு உயர்ரக தங்கும் விடுதி இருக்கிறது. அங்கு அறைகள் கிடைக்காதபட்சத்தில் மயிலாடுதுறைக்கு செல்லலாம். மயிலாடுதுறையில் நிறைய லாட்ஜ் வசதிகள் இருக்கின்றன. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப அங்கு தங்கும் விடுதிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
    மயிலாடுதுறையில் தங்குவதில் மற்றொரு பலனும் இருக்கிறது. அங்கிருந்து திருவெண்காடு தலத்துக்கு மட்டுமல்ல மற்ற பாடல் பெற்ற தலங்களுக்கும் மிக எளிதாக சென்று வரலாம்.

    சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் நகர்ப்பேருந்து எண்கள் - 5, 5பி, 5சி. சீர்காழியிலிருந்து பொறையாறு செல்லும் ஒரு பேருந்தும் இவ்வூர் வழியாகச் செல்கிறது.

    மயிலாடுதுறையிலிருந்து நாங்கூர் செல்லும் பேருந்து எண்.28, மங்கைமடம் செல்லும் பேருந்து எண்.12, பெருந்தோட்டம் செல்லும் பேருந்து எண்.34 (ஆனந்த்) ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் திருவெண்காட்டின் வழியாகச் செல்கின்றன.

    நாகையிலிருந்து வருவோர் கருவி முக்கூட்டில் இறங்கி திருவெண்காட்டிற்கு வரும் பேருந்தில் வரவேண்டும். பூம்புகார் மேலையூரில் இறங்குவோர் திருவெண்காடு வழியாகச் செல்லும் பேருந்துகளில் வரலாம்.

    சென்னையில் இருந்து செல்ல விரும்புபவர்கள் சீர்காழி சென்றடைய ஏராளமான அரசுப் பேருந்துகள் உள்ளது. சீர்காழியில் இறங்கி அங்கிருந்து வாடகை கார் பிடித்து சென்று வரலாம். சென்னையில் இருந்து காரில் செல்லும் வசதி உடையவர்கள் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் கடந்து சீர்காழியை அடையலாம் காரில் செல்பவர்கள் சீர்காழி நகருக்குள் செல்வதை தவிர்ப்பது நல்லது.

    நாகை-காரைக்கால் பைபாஸ் சாலையில் சென்று திருவெண்காடுக்கு எளிதில் செல்லலாம். பஸ்சில் செல்பவர்கள் திட்டமிட்டு பயணத்தை அமைத்து கொள்ள வேண்டும். சென்னையில் இருந்து அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டால் 11 மணிக்கெல்லாம் சென்று சேர்ந்து விடலாம். மதியம் 1 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    அதற்குள் வழிபாடுகளை முடித்து விட்டு, மதியம் ஆலயத்தில் சற்று ஓய்வு எடுத்து விட்டு பிற்பகலில் புறப்பட்டால் இரவில் சென்னை வந்து சேர்ந்து விடலாம். ஆனால் பயணத்துக்கான திட்டமிடல் சரியாக இருத்தல் வேண்டும்.

    திருப்பணிகள்

    முதலாம் இராசராச சோழன் காலத்தில் (கி.பி. 985-1014) கல்வெட்டு இங்குள்ளதால் இக்கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கற்றளியாகி இருத்தல் வேண்டும். அதற்கு முன் செங்கல் கோவிலாக இருந்திருத்தல் வேண்டும். மூலஸ்தானமும் சுற்றுக்கோவில்களும் கருங்கல்லால் கட்டப்பெற்றவை. மூலஸ்தான விமானம் ஒரே கருங்கல்லால் ஆனது. திரிபுவனச் சக்ரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்தில் வைத்தியச் சக்ரவர்த்தி என்பவர் அரசன் பெயரால் வீரபாண்டீச்சுரம் உடையார் கோவிலும் வேயனதோளி நாச்சியார் கோவிலும் கட்டியதை ஒரு கல்வெட்டால் அறிகிறோம். விக்கிரமசோழன் மண்டபம் விக்கிர சோழனால் கட்டப்பட்டிருக்கலாம்.

    தஞ்சாவூர் மகாராட்டிர மன்னர் துக்கோஜி காலத்தில் (கி.பி. 1730) ஸ்ரீ தண்டாயுதபண்டாரம் என்பவர் பெரிய நாயகி அம்மன் கோவிலின் மதில்சுவரைக் கட்டி உள்ளார். தருமை ஆதீனத்தைச் சேர்ந்த வெள்ளியம்பல வாணத்தம்பிரான் சுவாமிகளால் நடராச சபை கட்டப்பெற்றுள்ளது. தேவக்கோட்டை மு.இராம.சுப.சுப்ரமணியன் செட்டியார் அவர்களால் பெரியநாயகி அம்பாள் திருக்கோவில் திருப்பணி 21.6.1937 அன்று தொடங்கப் பெற்று அவர்களுடைய குமாரர்கள் வெங்கடாசலம் செட்டியார், சுவாமிநாதன் செட்டியார் ஆகியோர்களால் நிறைவு செய்யப் பெற்றுள்ளது. 16.6.1940-ல் திருக் குடமுழுக்கு நடத்தப்பெற்றுள்ளது. பிற கோவில்களும் விமானங்களும் புதுப்பிக்கப் பெற்ற குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

    1959-ல் திருக்கல்யாண மண்டபம் ரூ. 26,000 செலவில் கட்டப்பெற்றது. 1961-ல் அகோரமூர்த்தி உற்சவருக்கும் மெய்கண்டாருக்கும் கோவில்கள் கட்டப்பெற்றன. 26.3.1991-ல் திருக்குடமுழுக்கு நடைபெற்றது.

    இராசகோபுரங்களைத் திருப்பணி செய்து அனைத்து சன்னதிகளையும் செப்பணிட்டு மீண்டும் குடமுழுக்கு 13-7-86 அன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2016-ல் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    வழிபாடு செய்வது எப்படி?

    1. முதலில் ஐந்து நிலைகளையுடைய கிழக்கு வாசல் ராஜகோபுரத்தை தரிசனம் செய்து, இருகரம் கூப்பி வணங்கி, நிலைப்படி யில் சூடம் வைத்துத் தொட்டு வணங்கி ஆலயத் தின் உள்ளே நுழைய வேண்டும்.

    2. பிறகு தெற்குப் பக்கத்திலுள்ள அக்கினி தீர்த்தத்தில் நீராடி, பிறகு கரையில் உள்ள விநாயகரிடம் வழிபட்டுப் பணிவுடன் விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும். “எனது இந்த பரிகார வழிபாடு நல்ல முறையில் அமைய அருள் புரிய வேண்டும்!” என வேண்டி, அடுத்து அங்குள்ள அக்கினி பகவானையும், மெய்கண்ட தேவரையும் வழிபட வேண்டும்.

    3. அடுத்தபடியாகச் சூரிய பகவானை வேண்டி, சூரிய தீர்த்தத்தில் நீராட வேண்டும்.

    4. பிறகு மேலக் கோபுர வாயிலில் உள்ள ஆறுமுகப் பெருமானை வணங்கிட வேண்டும்.

    5. பின் அம்பாள் சந்நிதியில் உள்ள பிள்ளையிடுக்கி அம்மனை வழிபட்டு, பள்ளியறைக்கு வந்து தாலாட்டுப் பாடித் தொட்டிலை ஆட்டிவிட்டு வணங்கி வெளியே வர வேண்டும்.

    6. இதன்பின் கிழக்குக் கோபுர வாயிலின் வலது பக்கம் உள்ள தீர்த்தக் கிணறு தீர்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு, எதிரே உள்ள கொடி மரத்தை தொட்டு வணங்கி, அடுத்துள்ள பலிபீடத்து முன் சென்று நமது அகந்தை, கோபம், ஆசை என்னும் மும்முலங்களையும் இங்கு பலியிடுகிறேன் என சங்கல்பம் செய்து கொண்டு, அடுத்து நந்திதேவரிடம் வணங்கி, பணிவாக அவரது இடது காதில், ‘உள்ளே செல்ல அனுமதி அளியுங்கள்!’ என்று கேட்டு, ஓம் என்னும் மந்திரத்தை ஓதி உள்ளே செல்ல வேண்டும்.

    7. அதன்பிறகு இடது பக்கம் திரும்பி நாயன்மார் அறுபத்து மூவர், பெரியவாரணப் பிள்ளையார்,சோமஸ்கந்தர், பத்திரகாளி, திருமால், லட்சுமி, சரசுவதி, அகோரமூர்த்தி, நடராஜர் தரிசனம், அகோரமூர்த்தி உற்சவர், நடராஜர் சன்னிதியில் ஸ்படிக லிங்கம், சிதம்பர ரகசியம் முதலியவற்றை தரிசித்து, பின் சுவேதலிங்கம், துர்கை அம்மன், நவக்கிரகம் முதலியவற்றை வேண்டி வழிபட்டு வர வேண்டும்.

    8. இதன் பின் மூலவர் சன்னதிக்குச் சென்று இரு பக்கத்திலும் உள்ள துவார பாலகர்களை வழிபட்டு, உள்ளே சென்று மேலே கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோரை வழிபட்டு, தெற்கு பகுதியில் மேலே, கோஷ்டத்தில் அதே வடிவில் உள்ள சட்டைநாதரையும் வழிபட வேண்டும்.

    9. இதன்பின் சந்திர குளத்தில் நீராடி விட்டு, பின் மேற்கு நோக்கி உள்ள மூலவர் அவேதாண் யேசுவரரை அபிஷேகம், அர்ச்சனை செய்வித்து, அதன் பிறகு அம்பாள் சன்னதிக்குச் சென்று பிரம்ம வித்யாம்பிகைக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்விக்க வேண்டும். அதற்கு முன் அங்குள்ள விநாயகரையும் வழி பட்டுக் கொள்ள வேண்டும்.

    10. இதன் பிறகு பிரம்மா சமாதி, வில்வ தலமரம், கொன்றை தல மரம் வழிபட்டு, சந்திர பகவான் வழிபட்ட சோமேச லிங்கத்தை வழிபட்டு, அங்குள்ள விநாயகரையும் வழிபட்டு, தலமரமாகிய வடவால் மரத்தை வலம் வந்து, ருத்ர பாதத்தையும் வழிபட வேண்டும்.

    11. பின் புதன் பகவானின் தந்தையாகிய சந்திர பகவானை வழிபட்டு விட்டு, இறுதியாக நாம் பரிகாரம் செய்ய வேண்டிய புதன் பகவானை வழிபடுதல் வேண்டும், அவருக்கு அபிஷேக ஆராதனை செய்வித்து, அவருக்குரிய பரிகாரங்களையும் செய்வித்து, புதன் பகவானை மனம் குளிர வழிபட வேண்டும்.

    12. பிறகு புதன் பகவானுக்கு 17 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.17 தடவை வலம் வர வேண்டும்.

    13. அடுத்ததாகச் சண்டீசுவரரை வழிபட்டு விடை பெற வேண்டும்.

    14. அடுத்தபடியாகக் கிழக்கு வாசல் முன்பு வந்து, கொடி கம்பத்தின் முன்பாக, வடக்கு பக்கம் தலை வைத்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    15. பின்னர் ஆலயத்தின் ஒரு பகுதியில் அமர்ந்து, விநாயகர், இறைவன், அம்பாள், நடராஜர், சந்திர பகவான், புதன் பகவான், அகோரர் போன்ற அங்குள்ள அனைத்து கடவுள்களையும் தியானித்து நம் வேண்டுகோளை ஏற்று, நமது குறைகளை போக்கி, அருள் புரிய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

    16. இதன் பிறகு கிழக்குக் கோபுர வாசலை விட்டு வெளியே வந்து அங்குள்ள சாதுக்களுக்கு முடிந்தளவு தான, தர்மங்கள் செய்து, நமது தோஷங்கள் யாவும் நீங்கியதாக மன நிம்மதியுடன் ஆலயத்தை விட்டு வர வேண்டும்.

    பக்தர்கள் கவனத்திற்கு

    திருவெண்காடு ஆகிய இத்திருத்தலம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. சீர்காழிக்குத் தென் கிழக்கே 17 கி.மீ. தூரத்திலும், பூம்புகாருக்கு மேற்கே 10 கி.மீ. தூரத்திலும், வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து தென்கிழக்கே 11 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. மயிலாடு துறையில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்ப கோணத்தில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    மூன்று தல விருட்சங்கள்

    பழங்காலத்தில் மக்கள் மரங்களின் அடியிலேயே தெய்வங்களை வைத்து வழிபட்டனர். பின்னர் களிமண், செங்கல், மரம் இவைகளால் கோவில் அமைத்தனர். அவை அழிந்துபோகும் பொருள்கள் என்பதால் கற்பாறைகளைக் குடைந்து கோவில் அமைத்தனர்.

    அந்தகுடை கோவில்களையே குகைக்கோவில்கள் என்று அழைக்கலாயிற்று நாளடைவில் கற்பாறைகளை உடைத்து அவைகளைக்கொண்டு கருங்கற்கள் கொண்டு கோவில்கள் கட்டினர்.

    மரங்களின் அடியில் ஆதியில் கோவில்கள் ஏற்பட்டதால் அந்த மரங்களைப் புனிதமாகக்கருதி அவைகளைத்தலவிருட்சங்கள் எனப்பெயரிட்டு அழைத்தனர். அந்த மரங்களின் பெயர்களாலேயே பல தலங்களின் பெயர்களும் ஏற்பட்டன.

    தில்லைவனம் (சிதம்பரம்), கடம்பவனம் (மதுரை), சண்பகவனம் (திருமுருகன்பூட்டி), வேணுவனம் (திருநெல்வேலி), திருஆலங்காடு, கச்சி நெறிக்காரைக்காடு, பனங்காடு, பனையூர், வேற்காடு முதலியவை அத்தகையன. திருவெண்காட்டு தலத்துக்கும் வில்லவனம் என்ற ஒரு பெயருண்டு.

    சாதாரணமாக, பெரும்பாலான தலங்களில் ஒரே ஒரு தலவிருட்சம்தான் இருக்கும். ஆனால் திருவெண்காட்டில் மூன்று தலவிருட்சங்கள் உள்ளன. அவை வடவால், கொன்றை, வில்வம் அகியவையாகும். இந்த மூன்று தல விருட்சங்களில் உள்ள சிறப்புகள் வருமாறு:-

    வடவால் விருட்சம்: சந்திர தீர்த்தத்தின் அருகில் இந்த தல விருட்சம் இருக்கிறது. தழைத்து நிழல் பரப்பி அழகுடன் விளங்குகிறது. கயாசேத்திரத்திலுள்ளது போலவே இது அஷயவடம் என்னும் அழியாத ஆலமரம். கயாவை விஷ்ணுபாதம் என்றும் திருவெண்காட்டில் உள்ளதை ருத்ரபாதம் என்றும் கூறுவர். இந்த ஆலமரத்தின் அடியில் இருக்கும் இருபாதங்கள் பக்கத்தில் ருத்ரபாதம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இம்மரத்தடியில் மக்கள் பிதிர்க்கடன் செய்து செல்கின்றார்கள்.

    வில்வமரம்: அம்பிகை கோவிலுக்கு வடக்கேயுள்ள பிரம சமாதியின் அருகே இருக்கிறது. கொன்றை மரம்: வெளிப் பிரகாரத்தில் அகோரமூர்த்தியின் பின்புறம் சந்திர தீர்த்தத்தின் தென்கரையில் இருக்கிறது.

    பிள்ளையிடுக்கி அம்மன்

    திருஞான சம்பந்தர் திருவெண்காட்டின் வட எல்லைக்கு வந்த போது அவருக்க ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. ஆதலின், இத்தலத்தை மிதித்தற்கஞ்சி அம்மா என்று அழைத்தார். அது கேட்டுப் பெரிய நாயகி அம்மை அங்குத் தோன்றி ஆளுடைய பிள்ளையை இடுப்பில் கோவிலுக்கு எடுத்து வந்தார். பிள்ளையைத்தம் இடுப்பில் தாங்கிய வடிவில் உள்ள அம்பாளின் சிலை பிரம்மவித்தியாம்பிகை கோவிலின் மேற்கு உட்பிரகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளைக் கூப்பிட்ட இடத்திலுள்ள குளத்தைக் கூப்பிட்டான் குளம் என்பர், அது இன்று கேட்டான் குளம் என்று வழங்குகிறது. அங்குள்ள விநாயகரின் பெயர் ஞானசம்பந்த விநாயகர்.

    விலங்கு தறித்த விநாயகர்

    இத்தொல்பதியின் தென்மேற்குத் திசையில் எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீ விலங்கு தறித்த விநாயகர். துறவி பூண்ட பட்டினத்தடிகள் தம் சொத்துக்களை ஊரார் எடுத்துச் செல்லும்படி நிதியறையைத் திறந்துவிடுமாறு தம் கணக்கர் சேந்தனாருக்கு ஆணையிட்டார். அதன்படிச் செய்த சேந்தனாரை, இழந்த பொருட்களுக்குக் கணக்குக் காட்ட வேண்டும் என்று கூறி, அரசன் விலங்கு பூட்டிச் சிறையில் அடைத்தான். சேந்தனாரின் மனைவி மக்கள் அதனைப் பட்டினத்தடிகளிடம் சென்று கூறினர். பட்டினத்தடிகள் வெண்காட்டு இறைவனிடம்,

    மத்தளைத் தயிருண்டானும் மலர்மிசை மன்னினானும்நித்தமும் தேடிக்காணா நிமலனே யமலமுர்த்தி செய்தளைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட கைத்தளை நீக்கியென் முன் காட்டு வெண் காட்டுளானே என வேண்டினார்.

    சிவபெருமான் கட்டளைப்படி விநாயகர் சேந்தனாரின் விலங்கைத் தறித்து (உடைத்து) அவரைச் சிறையினின்று விடுவித்தார். அதனால் விலங்கு தறித்த விநாயகர் என்னும் பெயர் பெற்றார். இன்றும் பட்டினத்தடிகள் சிவதீட்சைக்காகத் திருவெண்காட்டிற்கு எழுந்தருளும்போது விலங்கு தறித்த விநாயகரை வந்து வணங்கிச் செல்லுகிற விழா நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    எல்லாமே மூன்று  :

    இத்தலத்தின் சிறப்பு மூன்று மூர்த்திகள், மூன்று சக்திகள், மூன்று தல விருட்சங்கள், மூன்று தீர்த்தங்கள் என்பனவாகும். ‘சுவேதாரண்யர்’, ‘அகோரர்’, ‘நடராசர்’ என்பவர் மும்மூர்த்திகள். ‘பிரம்மவித்யா நாயகி’, ‘துர்க்கை’, ‘காளி’ என்பவை மூன்று சக்திகள். வடஆலமரம், கொன்றை, வில்வம் என்பன மூன்று தல விருட்சங்கள். அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் மூன்று தீர்த்தங்கள்.

    ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை :

    மாசி மாதம், கிருஷ்ணபட்சம், பிரதமை திதி, பூர நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை, இரவு 12 மணிக்கு அகோரமூர்த்தி தோன்றினார். இதே காலத்தில் ஆண்டு தோறும் அகோரமூர்த்தி மருத்துவாசுரனை அடக்கும் ஐந்தாம் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மேல், இரண்டாங் கால முடிவில், அகோர பூசை நடைபெற்று வருகின்றது. கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக் கிழமைகளில் மிக விசேஷமாகப் பூசை நடைபெறுகிறது.

    ஆலயத் திருவிழாக்கள் :

    சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை 12 மாதங்களிலும் திருவிழா கொண்டாடும் சிறப்புடைய திருத்தலம் இது. அதன் விவரம் இதோ:
    சித்திரை மாதம்:- திருவோண நட்சத்திரத்தில் நடராஜர் அபிஷேகம்.

    வைகாசி மாதம்:- அமாவாசையில் சிவப்பிரியர் மணிகர்ணிகையில் தீர்த்தமாடுதல், வெள்ளை யானைக்குச் சாப விமோசனம்.

    ஆனி மாதம்:- உத்திர நட்சத்திரத்தில் நடராசருக்கு அபிஷேகம்.

    ஆடி மாதம்:- பட்டினத்தார் சிவ தீட்சை பெறத் திருவெண்காட்டிற்கு வருதல். சிவபெருமான் பிட்சாடனர் வடிவில் மணிகர்ணிகையில் தீர்த்தம் கொடுத்தல்.

    சிவபூஜை செய்வித்தல், இரவு ரிஷப வாகனராய்க் காட்சி தருதல், அம்பாளுக்கு ஆடிப்பூரம் பத்து நாள் விழா. ஆடி அமாவாசைக்குச் சங்கமத்திற்கு சுவாமி எழுந்தருளல்.

    ஆவணி மாதம்:- வளர்பிறை சதுர்த்தசியில் நடராசருக்கு அபிஷேகம். கோகுலாஷ்டமி பெருமாள் சேவை. விநாயகர் சதுர்த்தி. ஆவணி மூலம் அன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.

    புரட்டாசி மாதம்:- வளர்பிறைச் சதுர்த்தசியில் நடராஜர் அபிஷேகம். நிறைபணி. தேவேந்திர பூசை. நவராத்திரி விழா. விஜயதசமியன்று சுவாமி மணிகர்ணிகை தீர்த்தக் கரையில் அம்பு போடல். அம்பாளுக்கு லட்சார்ச்சனை முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன.

    ஐப்பசி மாதம்:- அசுவினி நட்சத்திரத்தில் அன்னாபிஷேகம். வளர்பிறை பிரதமை தொடங்கி கந்தசஷ்டி விழா முதலியன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

    கார்த்திகை மாதம்:- ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் ஸ்ரீஅகோரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், பூசையும் நடைபெறும். மூன்றாவது ஞாயிறன்று மகாருத்ராபிஷேகமும், விபூதி அலங்காரமும் நடைபெறும். சோமவாரம் (திங்கள்கிழமை) தோறும் சுவேதாரண்யேசுவரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும். பரணி, கார்த்திகை தீப விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

    மார்கழி மாதம்:- தனுர்மாத பூஜை, சதயத்தன்று மாணிக்க வாசகர் விழா, டோலோற்சவம் திருவாதிரையில் ஸ்ரீநடராஜர் தரிசனம் நடைபெறும்.

    தை மாதம்:- சங்கராந்தி, மறுநாள் அம்பாள் கனுகுளிக்க மணிகர்ணிகைக்குப் போதல், மாலை சுவாமி குதிரை வாகனத்தில் பரிவேட்டைச் செல்லுதல். ஐயனாருக்குப் பத்து நாட்கள் விழா, பிடாரிக்குப் பத்து நாட்கள் விழா.

    மாசி மாதம்:- முதல் நாள் இந்திரப் பெருவிழா, வளர்பிறை துவாதசி புனர்பூசத்தில் கொடியேற்றம். 2-ம் நாள் திருவிழா. 3-ம் நாள் திருவிழா. சுவேகேதுவைப் பிடித்த எமனை எரித்தல். பூ வாகனம் மொட்டைச் சப்ரம். 4-ம் நாள் திருவிழா மகம் பவுர்ணமி திதியில் காவிரி சங்கமத்துறைக்குச் சுவாமி எழுந்தருளல். 5-ம் நாள் திருவிழா. பூர நட்சத்திரம், ஸ்ரீஅகோரமூர்த்தி எழுந்தருளல். இரவு மருத்துவாசுர சங்காரம் ரிஷப வாகனக் காட்சி, தெருவடைச்சான்.

    6-ம் நாள் திருவிழா யானை வாகனம். 7-ம் நாள் திருவிழா திருக்கல்யாணம். புஷ்ப பல்லக்கு. 8-ம் நாள் திருவிழா பிட்சாடனர் விழா. அறுபத்து மூவர் வீதி உலா. 9-ம் நாள் திருவிழா. திருத்தேர். 10-ம் நாள் திருவிழா காலை ஸ்ரீநடராஜர் வீதியுலா. முக்குளத்தீர்த்தம் கொடுத்தல் மாலை பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் மணிகர்ணிகைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல். 11-ம் நாள் திருவிழா தெப்பத் திருவிழா.
    பங்குனி மாதம்:- சுக்லபட்சப் பிரதமையில் ஸ்ரீஅகோரமூர்த்திக்கு லட்சார்ச்சனை ஆரம்பம். பங்குனி உத்திரத்தில் (பவுர்ணமியில்) பூர்த்தி, மறுதினம் விடையாற்றி.

    தினமும் 50 பேருக்கு அன்னதானம்

    தானத்தில் சிறந்தது அன்ன தானம் என்ற முதுமொழிக்கேற்ப நன் கொடையாளர்கள் பங்கேற் புடன் கூடிய மதிய உணவு வழங்கும் அன்னதானத் திட்டம் தமிழக முதல் வரின் ஆணைக்கிணங்க இத் திருக்கோவிலில் 15-2-2002 முதல் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தினமும் சுமார் 50 பக்தர்களுக்குக் குறையாமல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டச் செலவுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.1000 செலுத்தித் தாங்களும் இத்திட்டத்தில் நன்கொடையாளராய்ப் பங்கேற்று அன்னதானம் செய்யலாம்.

    இதனையே நிரந்தர வைப்பு நிதியாக ஒருமுறை ரூ.15000-ம் முதலீடு செய்து கட்டளை ஏற்படுத்தி தாங்கள் விரும்பும் நாட்களில் பிறந்த நாள், திருமண நாள் என வாழ்நாளின் முக்கிய நாட்களில் ஏதேனும் ஒருநாளில் அன்னதானம் செய்து மன நிறைவும், இறையருளும் பெறலாம்.
    அன்னதானத்திட்டத்திற்கு மளிகைப் பொருட்களாகவோ, அரிசியாகவோ, காய்கறியாகவோ, ரொக்க மாகவோ, வங்கி வரை வோலை-காசோலையாகவோ வழங்கலாம். தாங்கள் வழங்கும் தொகைக்கு (சட்டப்பிரிவு 80ஜி) படி வருமானவரி விலக்கு பெறப்பட்டுள்ளது.

    நித்திய பூஜைகள்

    திருவெண்காடு கோவிலில் தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. அவையானவை

    1. திருப்பள்ளி எழுச்சி    காலை    6.00    - 7.00
    2. காலசந்தி    காலை    8.30    - 10.00
    3. உச்சிகாலம்    பகல்    11.00    - 12.00
    4. சாயரட்சை    மாலை    5.30    - 6.30
    5. இரண்டாம் காலம்    இரவு    7.30    - 8.30
    6. அர்த்தசாமம்    இரவு    8.30    - 9.30

    கோவில் நடைமுறையில் உள்ள கட்டணங்கள்

    1. அஷ்டோத்திரம் - ரூ. 5.00
    2. சகஸ்ரநாமம் - ரூ. 3.00
    3. புதன் கவசம் சார்த்த - ரூ. 100.00
    4. ஸ்ரீஅகோரமூர்த்தி கவசம் சார்த்த - ரூ. 500.00
    5. அருள்மிகு புதன் கட்டளைஅர்ச்சனை (ஒரு வருடம்) - ரூ. 600.00
    6. அருள்மிகு புதன் பால் அபிஷேகம் - ரூ. 300.00
    7. அருள்மிகு புதன் பரிகாரம் - ரூ. 200.00
    8. அருள்மிகு புதன் ஹோமம் - ரூ. 2000.00
    9. அருள்மிகு புதன் திரவிய அபிஷேகம் - ரூ. 750.00
    10. அருள்மிகு ஸ்ரீஅகோரமூர்த்தி அபிஷேகம் - ரூ. 1500.00
    11. திலஹோமம் - ரூ. 500.00
    12. திதி கட்டணம் - ரூ. 100.00
    13. தர்ப்பன கட்டணம் - ரூ. 100.00
    14. வஸ்திர கட்டணம் - ரூ. 5.00
    15. அன்னதானம் 100 நபருக்கு நாள் ஒன்றுக்கு கட்டணம் - ரூ. 2000
    16. அன்னதான கட்டளை (நிரந்தர முதலீடு) - ரூ. 20000.00
    17. ஒருமுறை அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்ப - ரூ. 50.00
    18. 10 வாரம் அர்ச்சனை செய்ய - ரூ. 500

    நித்ய ஆராதனை கட்டளை திட்டம்

    இத்திருக்கோவிலில் நித்ய ஆராதனையில் பலரும் பங்கேற்கும் வகையில் நித்திய ஆராதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் இத்திட்டத்தில் பங்கேற்க ரூ.2,000, ரூ.5,000, ரூ.10000 அல்லது அதற்கு மேலும் நிதியாக அளித்து இத்திட்டத்தில் பங்கேற்கலாம். தாங்கள் விரும்பும் நாளில் சுவாமிக்கு ஆராதனை அர்ச்சனை செய்து விபூதி, குங்குமம் பிரசாதம் தபால் மூலம் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    நன்கொடைகள் அனுப்ப வேண்டிய முகவரி :

    செயல் அலுவலர்
    அருள்மிகு சுவேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோவில்
    திருவெண்காடு-60-9 114.
    சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்,
    போன் : 04364 - 256424
    Next Story
    ×