search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீவினை நீக்கும் வெளிகண்ட நாதர் கோவில் - திருச்சி
    X

    தீவினை நீக்கும் வெளிகண்ட நாதர் கோவில் - திருச்சி

    திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ளது சுமார் 1000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெளிகண்ட நாதர் கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    பஞ்சபூத தலங்கள் ஐந்து. அதேபோல் ஐந்து நாதர்கள் திருச்சிராப்பள்ளி நகரின் தெய்வங்களாக விளங்குவது நிறைய பேருக்குத் தெரியாது.

    ஆம். திருச்சி நகரின் கிழக்கில் கயிலாச நாதர் ஆலயம், வடக்கில் பூலோக நாதர் ஆலயம், மேற்கில் நாகநாதர் ஆலயம் மற்றும் காசி விசுவநாதர் ஆலயம், தெற்கில் வெளிகண்ட நாதர் ஆலயம் என ஐந்து ஆலயங்கள் நகரை அலங்கரிக்கின்றன.

    இதில் பாலக்கரை பகுதியில் உள்ளது வெளிகண்ட நாதர் ஆலயம்.

    ஆலய அமைப்பு :

    ஆலயம் கிழக்கு திசை நோக்கி இருந்தாலும், நுழைவு வாசல் தெற்குப் பக்கம் அமைந்துள்ளது. உய்யக் கொண்டான் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

    சுமார் 1000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயத்தின் பழமை, நம் மனதில் நம்மையும் அறியாமல் ஒரு அற்புத பக்தியையும் பரவசத்தையும் ஊற்றெடுக்க வைப்பது நிஜம்.

    ஆலய முகப்பில் மகாமண்டபமும், அதன் நடுவே நந்தியம் பெருமாளும், பலி பீடமும், கொடி மேடையும் உள்ளன. மகா மண்டபத்தின் இடது புறம் கருடாழ்வார் திருமேனியும், சமயக் குரவர்கள் நால்வர்களின் திருமேனிகள் கொலுவிருக்கும் மண்டபமும் உள்ளன.

    இறைவன் - இறைவி :

    மகாமண்டபத்தில் வலது புறம் அன்னை சுந்தரவல்லியின் சன்னிதி உள்ளது. இந்த அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் தாமரை மலர்களையும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக் கிறாள்.

    மகாமண்டபத்தை அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டாயுதபாணியும் அருள்புரிகின்றனர்.

    அர்த்தமண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் வெளிகண்ட நாதர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    அன்னையை அடுத்து சீனிவாசபெருமாள், தாயார் ஸ்ரீதேவி பூதேவியுடன் தனி மண்டபத்தில் சேவை சாதிக்கிறார்.

    திருச்சுற்று தெய்வங்கள் :

    அடுத்துள்ள வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். இறைவனின் தேவக்கோட்டத்தில் தென் திசையில் தட்சிணாமூர்த்தியின் திருமேனி உள்ளது. குருப் பெயர்ச்சி நாட்களில் தட்சிணா மூர்த்திக்கு நடக்கும் சிறப்பு ஆராதனைகளைக் காண பக்தர்கள் கூட்டமாக வருகின்றனர்.

    தேவக்கோட்டத்தின் வடதிசையில் பிரம்மாவின் திருமேனியும், துர்க்கையின் திருமேனியும் உள்ளன. செவ்வாய், வெள்ளிக்கிழமை களில் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு கன்னியர் எலுமிச்சைப் பழ விளக்கேற்றி நல்ல கணவனைப் பெற வேண்டு வதும் அவர்கள் பிரார்த்தனை பலிப்பதும் உண்மையே என்கின்றனர் பக்தர்கள்.

    திருச்சுற்றின் மேற்கு திசையில் முத்துக்கருப்பன், விநாயகர், சுப்ரமணியர், வள்ளி- தெய்வானை சன்னிதிகள் உள்ளன. வடக்கில் சண்டிகேசுவரர் மற்றும் பைரவர் சன்னிதிகள் உள்ளன.

    தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு ஆரா தனையும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. இந்த ஆராதனையில் கலந்து கொள்வதால் தங்களைப் பீடித்துள்ள பில்லி, சூனியம் விலகும் என்றும் வியாபாரம் அபிவிருத்தி ஆகும் என்றும் நம்புகின்றனர் பக்தர்கள். கிழக்கில் சூரியன், சனீஸ்வரன் நாகர் திரு மேனிகள் உள்ளன.

    திருவிழாக்கள் :

    பிரதோஷம், மாதப் பவுர்ணமிகள், சிவராத்திரி நாட்களில் இத்தல இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இறைவனின் கருணைப் பார்வையைப் பெற்று பலன் பெறுகின்றனர்.

    இங்கு உற்சவர் திருமேனி இல்லை. எனவே வீதியுலா கிடையாது. தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    திருமணத் தடை நீங்கவும் தங்களது மகன் அல்லது மகளுக்கு விரைந்து திருமணம் நடந்தேறவும் இங்கு இறைவன் - இறைவிக்கு திருக்கல்யாணம் நடத்தி வைக்கின்றனர். அவர்கள் வேண் டுதல் நிறைவேறுவதுடன் அவர்கள் வீட்டு திருமணம் மங்கலகரமாக விரைந்து நடந்தேறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

    சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் தலம் இது. இப்படிப்பட்ட அமைப்புடன் காணக்கூடிய சிவாலயங்கள் தமிழ்நாட்டில் அபூர்வமே!

    செய்வினை கோளாறு இருப்பதாக நினைப்பவர்கள் இங்கு வந்து இறைவன், இறைவியிடம் மனமுருக வேண்டிக் கொள்கின்றனர். சில தினங்களிலேயே அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது. அவர்கள் மீண்டும் ஆலயம் வந்து இறைவன், இறைவிக்கு அபிஷேகம் செய்து தங்கள் நன்றியை கண்கள் கலங்க நிறைவேற்றி மகிழும் காட்சி நம்மை சிலிர்க்க வைக்கும்.

    அமைவிடம் :

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் பாலக்கரையில் உள்ளது இந்த வெளிகண்ட நாதர் ஆலயம்.
    Next Story
    ×