search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெண்கள் நுழையாத அருங்கரை அம்மன் திருக்கோவில்
    X

    பெண்கள் நுழையாத அருங்கரை அம்மன் திருக்கோவில்

    கரூர் மாவட்டம் பெரியதிருமங்கலம் என்ற இடத்தில் உள்ள அருங்கரை அம்மன் திருக்கோவிலல் பெண்களுக்கு உள்ளே செல்ல அனுமதியில்லை. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    கரூர் மாவட்டம் பெரியதிருமங்கலம் என்ற இடத்தில் உள்ளது அருங்கரை அம்மன் திருக்கோவில். ஆலயத்தின் அருகில் ஓடும் அமராவதி ஆறு, அம்பாளுக்கு மாலையிட்டதுபோல் இந்த இடத்தில் திரும்பிச் செல்கிறது. தொடக்கத்தில் ‘நல்லதாய்’ என்று அழைக்கப்பட்ட அம்மன், ஆற்றங்கரையின் அருகே அமர்ந்த அம்பாள் என்பதால், ‘அருங்கரை அம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள். காலப்போக்கில் இந்த பெயரே நிலைத்து விட்டது.

    பெட்டிக்குள் அம்மன் :

    முன்காலத்தில் மீன் பிடிப்பதை தொழிலாக கொண்டவர்கள் இந்தப் பகுதியில் வசித்து வந்தனர். அவர்கள் அமராவதி ஆற்றில் மீன்பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு சமயம் மீனவர் ஒருவர் ஆற்றில் வீசிய வலையில் ஒரு பெட்டி சிக்கியது. அதை திறந்து பார்த்தபோது, அதற்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது. தனக்கு அருள்புரிவதற்காகவே அம்பாள் ஆற்றில் வந்ததாக கருதிய அந்த மீனவர், ஆற்றங்கரையில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அந்தப் பெட்டியை வைத்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த அனைவரும் பெட்டியையும், அதில் இருந்த அம்பாளையும் வழிபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் மீனவர்கள் அவ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். ஆகவே பெட்டி இருந்த இடம் மண் மூடி புதைந்து விட்டது. பெட்டி இருந்த இடத்தில் பெரிய மேடு மட்டும் இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சிலர் அங்கு மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்துள்ளனர். ஒரு முறை நல்லதாய் என்ற சிறுமி மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு பசு, மணல் மேடாக இருந்த இடத்தில் தானாக பாலை சுரந்தது. இதைக் கண்டு வியப்புற்ற அந்த சிறுமி, மணல் மேட்டின் மீது அமர்ந்தாள். அதன் பின் அச்சிறுமி எழவில்லை.

    ஜோதியாக மறைந்த சிறுமி :

    மாலையில் மாடுகள் மட்டும் வீடு திரும்பின. சிறுமியைக் காணாததால் ஊரில் இருந்த ஆண்கள், அவளைத் தேடி குறிப்பிட்ட இடத்திற்கு வந்தனர். அங்கு மணல் மேட்டில் சிறுமி அமர்ந்திருப்பதைக் கண்டு, அவளை வீட்டிற்கு வரும்படி அழைத்தனர். ஆனால் சிறுமியோ, ‘நான் இங்கேதான் இருக்க விரும்புகிறேன். பல ஆண்டு   களாக நான் இங்குதான் வசித்து வருகிறேன்.

    என்னைக் கண்ட இந்த நாளில் மட்டும் எனக்கு பூஜை செய்து வழிபடுங்கள்’ என்று சொல்லி விட்டு, சிறுமி ஜோதியாக மாறி மறைந்து விட்டாள். பின்னர் ஊர் மக்கள் சிறுமியை அம்பாளாக எண்ணி, உருவம் ஏதும் இல்லாமல் வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் இங்கு கோவில் எழுப்பப்பட்டது. ஆலயத்தில் கருவறை, விமானம், கோபுரம் என்று எதுவுமே கிடையாது.

    பெட்டி இருக்கும் இடத்தையே அம்பாளாக கருதி வழிபடுகின்றனர். நாட்ராயர், லாடமுனி, மதுரைவீரன், கருப்பசாமி, மகாமுனி என்ற காவல் தெய்வங்கள், ராகு– கேதுவுடன் விநாயகர் ஆகியோர் உள்ளனர். விநாயகருக்கும், காவல் தெய்வங்களுக்கும் அபிஷேகம் கிடையாது. கோவில் முன்புறத்தில் உள்ள பலிபீடத்தை ஆமை தாங்கியிருப்பதுபோல் அமைத்துள்ளனர்.

    குடும்பம் சிறக்கவும், விவசாயம் செழிக்கவும் அம்பாளிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், கோரிக்கை நிறைவேறியதும், அம்பாளுக்கும் காவல் தெய்வங்களுக்கும் கிடா வெட்டியும், குதிரை பொம்மைகள் செய்து வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அம்மனுக்கு சிலை எதுவும் கிடையாது. மணல் மேட்டையே வழிபடுகிறார்கள். மணல் மேட்டில் சிறுமி அமர்ந்திருப்பது போன்ற சுதை சிற்பம் கோவிலில் வடிக்கப்பட்டுள்ளது.



    பெண்களுக்கு அனுமதியில்லை :

    மாடு மேய்க்கச் சென்ற சிறுமி திரும்பி வராததால், அவளைத் தேடி ஆண்கள் இந்தப் பகுதிக்கு வந்தது ஒரு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேளை ஆகும். எனவே இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோவில் நடை திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடைபெறுகிறது. மற்ற நாட்களில் கோவில் இரவும், பகலும் அடைக்கப்பட்டே இருக்கும். மேலும் இந்த ஆலயத்திற்குள் ஆண்கள் மட்டுமே சென்று வழிபாடு செய்கின்றனர். பெண்களுக்கு உள்ளே செல்ல அனுமதியில்லை. அவர்கள் வாசலில் நின்றுதான் வழிபட வேண்டும். பெண் குழந்தைகள் கூட கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது.

    ஆலயத்தின் வெளியில் நின்று வணங்கும் பெண்கள், அமராவதி ஆற்றில் குளித்து விட்டு, தலையை முடியாமல் ஈரத்துணியுடன் வழிபட வேண்டும். அம்பாளுக்கு பூஜை முடிந்ததும், இறைவிக்கு படைக்கப்பட்ட பூஜைப் பொருட்கள் மற்றும் நேர்த்திக் கடனாக செலுத்தும் வாழை, தானியங்கள் போன்றவை கோவில் முன் மண்டபத்தில் இருந்து சூறை (எறிதல்) விடப்படும். இந்த பிரசாதங்களை பெண்கள் தங்களது சேலைத் தலைப்பில் பிடித்துக் கொள்கின்றனர். அம்பாள் பிரசாத பொருட்களின் வடிவில் பெண்களுக்கு அருள்வதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    ஆலயத்தின் தல விருட்சமாக ‘ஊஞ்சல் மரம்’ உள்ளது. ஆலயத் தீர்த்தம் அமராவதி நதி. இங்குள்ள பிரார்த்தனை ஊஞ்சல் பிரசித்தி பெற்றதாக உள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், துன்பத்தில் தவிப்பவர்கள் இந்த ஊஞ்சலில் அமர்ந்து சிறிது நேரம் ஆடியபடி அம்மனை நினைத்து வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கை உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    திருவிழா :

    சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் விழா நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை ‘பேரூட்ட விழா’ என்று அழைத்துள்ளனர். இந்த விழாவின் போது மட்டும் அம்பாள் சிலை இருக்கும் பெட்டியை கிராமம் முழுவதும் உலாவாக எடுத்துச் செல்வார்களாம். அம்பாள் உத்தரவு கிடைக்காத காரணத்தால் கடந்த சில நூற்றாண்டுகளாக இந்த ஆலயத்தில் திருவிழா நடத்தப்படவில்லை என்று கூறுகிறார்கள். இது தவிர்த்து தை மாதத்தில் அருங்கரை அம்மன் ஆலயத்தின் அருகில் உள்ள நாட்ராயர் கோவிலில் இருந்து அம்பாளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுக்கும் வைபவம் நடக்கிறது.

    கரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னதாராபுரம் சென்று, அங்கிருந்து மினி பஸ் மூலம் 10 கிலோமீட்டர் சென்றால் பெரியதிருமங்கலத்தை அடையலாம்.

    Next Story
    ×