search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு சொன்ன உவமைகள்: எதிர்பார்க்கும் நண்பன்
    X

    இயேசு சொன்ன உவமைகள்: எதிர்பார்க்கும் நண்பன்

    இயேசுவின் உவமைகள் பெரும்பாலும் ஒரு கேள்வியிலிருந்து துவங்குவதாக பைபிள் சொல்கிறது. இந்த உவமையும் அப்படியே துவங்குகிறது.
    “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.

    உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார்.

    எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். என்றார் இயேசு (Luke 11 5-8 )

    இயேசுவின் உவமைகள் பெரும்பாலும் ஒரு கேள்வியிலிருந்து துவங்குவதாக பைபிள் சொல்கிறது. இந்த உவமையும் அப்படியே துவங்குகிறது.

    “இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார் ( லூக்கா 11 : 1 )

    அப்போது இயேசு அவர்களுக்கு பிரபலமான அந்த ஜெபத்தைச் சொல்லிக் கொடுக்கிறார். அது கர்த்தர் கர்ப்பித்த ஜெபம் என அழைக்கப்படுகிறது. அந்த செபம் இது தான்.

    ‘தந்தையே, உமது பெயர்
    தூயதெனப் போற்றப்பெறுக!
    உமது ஆட்சி வருக!
    எங்கள் அன்றாட உணவை
    நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.
    எங்களுக்கு எதிராகக் குற்றம்
    செய்வோர் அனைவரையும்
    நாங்கள் மன்னிப்பதால் எங்கள்
    பாவங்களையும் மன்னியும்.
    எங்களைச் சோதனைக்கு
    உட்படுத்தாதேயும்.
    தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்”

    அதைச் சொல்லி முடித்ததும் இயேசு இந்த உவமையையும் சொல்கிறார். தனக்காக செபிக்கும் செபமாக கர்த்தர் கர்ப்பித்த செபத்தைச் சொன்ன இயேசு, பிறருக்காக எப்படி செபிக்க வேண்டும் என்பதற்காக அந்த உவமையைச் சொல்கிறார்.

    இந்த உவமையும், நிகழ்வும் பல பாடங்களை நமக்கு கற்றுத் தருகின்றன.

    1. இயேசு செபிப்பதை கவனிக்கும் சீடர்கள் தாங்களும் அதே போல செபிக்க ஆர்வம் கொள்கின்றனர். அதற்காக இயேசுவை அணுகுகின்றனர். செபம் வாழ்க்கையின் முக்கியமான அம்சம் என்பதைப் புரிந்து கொள்கின்றனர். நாமும் நமது வாழ்க்கையில் இயேசுவின் செயல்பாடுகளைக் கவனித்து, அதே போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக செபத்தின் தேவையை உணரவேண்டும்.

    2. நள்ளிரவில் வீட்டுக்கு வருகின்ற நண்பரின் “உடனடித் தேவை” என்ன என்பதை சக நண்பர் கண்டு கொள்கிறார். நண்பர் கேட்பதற்கு முன்பாகவே அந்தத் தேவையை நிவர்த்தி செய்ய முயல்கிறார். நாமும் நமது சக நண்பர்கள், சுற்றியிருப்பவர்கள், நம்மை அணுகுபவர்கள் இவர்களின் தேவைகளை “அவர்கள் சொல்லாமலேயே” புரிந்து கொண்டு அதை நிவர்த்தி செய்யும் மனநிலையில் நாம் இருக்க வேண்டும்.

    3. தன்னிடம் எதுவும் இல்லாத சூழலில் இறைவனை தேடி ஓடுகிறார் அவர். இறைவன் நம்மிடம் தந்திருப்பவை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்காகவே. நம்மிடம் பகிர்தலுக்கான வாய்ப்புகள் இருக்கும் போது முதலில் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து, “உனக்காக இறைவனிடம் வேண்டுகிறேன்” என்பது போலித்தனம். எதுவும் இல்லாத சூழலில் நாம் இறைவனையே நாடவேண்டும்.

    4. நாம் ஒன்றுமற்ற நிலையில் இருக்கும் போது நள்ளிரவின் இருளிலும், மிரட்டும் சூழலிலும் இறைவனை தேடிப் போக தயங்காத மனம் வேண்டும். பிறருக்காக நாம் இறைவனை நாடிச் செல்வதை இறைவன் விரும்புகிறார். பிறருக்காக வேண்டுகின்ற செபங்கள் கேட்கப்படும் என்பதை பைபிள் நமக்கு பல இடங்களில் தெளிவாக்குகிறது.

    5. கதவைத் தட்டும் மனம் வேண்டும். தயக்கத்தின் படிகளைத் தாண்டி, ‘சுயத்தை’ அழித்து இறைவனின் கதவைத் தட்டி உதவி தேடும் மனம் ரொம்ப முக்கியம். கதவு அடைக்கப்பட்டிருந்தாலும் அது திறக்கும் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.

    6. “மூன்று அப்பங்கள் வேண்டும்” என்கிறார் நண்பர். நாம் இறைவனிடம் வேண்டும்போது அந்த சூழலுக்கு, அந்த நபருக்கு என்ன தேவையோ அதை கேட்டுப் பெறுவதே சரியானது. அதிகமாகவோ, குறைவாகவோ கேட்பது சரியானதல்ல. இறைவன் ஆசைகளை நிவர்த்தி செய்பவரல்ல, தேவைகளை நிவர்த்தி செய்கிறவர்.

    7. நண்பருக்காய் இறைவனிடம் வேண்டுவதை தன்மேல் விழும் “கடனாகக்” கேட்கும் மனநிலை உயர்வானது. அது சக நண்பரை தமது பாகமாகப் பார்க்கும் உயரிய மனநிலை. என்னைப் போல அயலானை நேசிக்கும் மனநிலை. அந்த மனநிலையோடு இறைவனிடம் கேட்கவேண்டும். நமக்காகக் கேட்கும் போது எப்படி உருக்கமாக, நெருக்கமாக, ஆழமாக கேட்கிறோமோ அந்த அளவுக்கு அல்லது அதற்கு மேலாகவே நாம் நண்பர்களுக்காகக் கேட்கவேண்டும்.

    8. தொடர்ந்து கேட்கும் மனநிலை வேண்டும். நண்பரின் நிராகரிப்புக் குரல் கேட்டாலும், அவர் தருவார் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு வெற்றி தரும். இறைவனும் பல வேளைகளில் நமக்கான வரங்களை தாமதப்படுத்துவார். அது நமது விசுவாசத்தை பலப்படுத்துவதாகவோ, நாம் சரியான நேரத்தில் கேட்காத காரணத்தாலோ இருக்கலாம். ஆனால் கேட்பது பயனுள்ள விஷயமென இறைவன் கண்டால் அதைத் தராமல் இருப்பதில்லை.

    9. பிறருக்காக அசௌகரியங்களைத் தாங்கும் மனநிலை வேண்டும். நள்ளிரவு நேரம், இருளான சூழல் என்றாலும் கூட கை விரிக்காமல் நண்பனின் தேவையை நிவர்த்தி செய்ய புறப்படும் மனம் வேண்டும். அவமானங்கள், நிராகரிப்புகளைத் தாண்டி நண்பனுக்காய் நிற்கும் நெஞ்சுரம் வேண்டும்.

    10. இறைவனோடு ஆழமான நட்புறவு கொள்ள வேண்டும். தேவையான நேரத்தில் சென்று அறிமுகம் செய்து கொண்டு உதவி கேட்பது சரியான வழிமுறை அல்ல. இறைவனோடு ஆழமான நட்பு கொண்டு தினமும் அவர் வழியில் நடக்க வேண்டும். அப்போது தான் நள்ளிரவிலும் கதவைத் தட்டும் அன்னியோன்யம் உருவாகும். போ என்றாலும் கூட விடாப்பிடியாய் தட்டும் உரிமை உருவாகும்.

    இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.
    Next Story
    ×