search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்
    X

    சின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்

    அவதார வேட்டை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, சின்மயி மற்றும் மீடூ விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறார். #RadhaRavi #Chinmayi
    அவதார வேட்டை என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கம் ஒன்றில் நடைபெற்றது. வி.ஆர்.வினாயக், மீரா நாயர், ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், ரியாஸ் கான், சோனா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்டார் குஞ்சுமோன் இயக்கி உள்ளார். நிகழ்ச்சியில் ராதாரவி பேசியதாவது:-

    ‘சமீபகலாமாக திரைத்துறை பற்றி தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. நடிகைகளுக்கு மேக்கப் நடுரோட்டிலா போட முடியும்? தனியறையில் தான் போட முடியும். தப்பித்தவறி அந்த அறைக்குள் இயக்குனர் வந்தால் அவரது கதை அவ்வளவுதான். இடுப்பை கிள்ளினார் என்று செய்தி வந்துவிடும். இவை எல்லாம் இப்போது நமக்கு பரபரப்பான செய்திகள் ஆகிவிட்டன.

    இதுபோன்ற செய்திகளுக்கு சட்டமே ஆதரவு தருகிறது. இயக்குனர்கள் மிகவும் சிரமப்பட்டு சினிமாவுக்குள் வருகிறார்கள். அவர்கள் மீது இதுபோன்ற அபாண்டங்களை சுமத்தாதீர்கள். சினிமா என்ற தொழிலை கெடுத்து விடாதீர்கள்.

    இந்த குற்றசாட்டுகளுக்கு ஏதாவது தீர்வு வேண்டும் என்று கேட்கிறார்கள். என் மீது கூட வந்தது. நான் இதையெல்லாம் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. என்னை பற்றி இப்போதுதான் புகாரே வந்துள்ளது. சினிமாக்காரர்கள் வீடுகளில் காலாவதியான செக்குகளே மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

    நமக்கு குடும்பமே இல்லை. 30 நாட்கள், 40 நாட்கள் என்று எங்கேயோ சென்று தங்குகிறோம். அப்போது நாம் எல்லோருடனும் தான் பேசுவோம். ஒரு குடும்பமாக இருந்த சினிமா மாறி ஒருவரிடம் மற்றொருவர் பேசவே பயப்படும் நிலை உருவாகி விட்டது.

    ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் படம் சரியாக வராது. ஒற்றுமையாக இருங்கள். ‘மீ டூ’ போன்ற ஆங்கில கலாசாரங்களை இங்கே கொண்டு வர வேண்டாம். நமக்கும் மீடூவுக்கும் தொடர்புஇல்லை.

    அதெல்லாம் பெரிய இடங்களோடு பெரிய மனிதர்களோடு தொடர்புடைய விவகாரம். நமக்கு எதுக்கு அதெல்லாம்? சாலையில் ஆடையுடன் செல்ல வேண்டும் என்பது தான் சட்டம். குளியலறையை எட்டி பார்த்துவிட்டு அந்த சட்டத்தை பிரயோகிக்கக்கூடாது.

    சித்தார்த் தான் சரியான கருத்தை கூறி இருக்கிறார். ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி இருக்கிறார். விஷாலும் சரியான கருத்தை கூறி இருக்கிறார். நடந்ததை அப்போதே சொல்லி இருந்தால் அதற்கு தீர்வு கிடைக்குமே? 10 ஆண்டுகள் கழித்து சொன்னால் எப்படி சரிசெய்ய முடியும்? இதை எல்லாம் பேசுவது சினிமாவுக்கு அசிங்கம்.

    எங்கள் குடும்பமே வில்லன் குடும்பம். எனவே எங்களை பற்றி இதுபோன்ற புகார் வந்தால் மக்கள் எளிதில் நம்பிவிடுவார்கள். நான் இது தொடர்பாக கோர்ட்டுக்கே செல்லக்கூட தயாராக இருக்கிறேன். சாமியார்களிடம் போய் கெட்டுபோய் வருபவர்கள் தான் வெளியில் வந்து மற்றவர்களை புகார் சொல்கிறார்கள்.

    சின்மயி உள்பட அனைவருக்கும் ஒரு கோரிக்கை. புகார் சொல்வதால் உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். எப்போதோ நடந்ததை இப்போது வெளிபடுத்தினால் அது உங்களுக்கு தான் பாதிப்புகளை ஏற்படுத்தும். புகார் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறும் வரை யாரும் குற்றவாளி இல்லை’.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×