search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் ஆத்திரம்"

    • கடந்த 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை எடை போடவில்லை.
    • போலீசார் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி முதல் மே மாதம் 31- ந் தேதி வரை விவசாயிகளின் நெல் மூட்டைகள் எடை போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை எடை போடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 50- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூத்தக்குடி கள்ளக்குறிச்சி சாலையில் கூத்தக்குடி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வரஞ்சரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன், தனிப்பிரிவு போலீசார் கொளஞ்சி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தகவல் தெரிவித்து நெல் மூட்டைகளை எடை போட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் உள்ள சுமார் 30 க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 31- ந் தேதி மூடப்பட்டது. வியாபாரிகளின் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விவசாயிகளின் கைரேகையுடன் தற்போது பதிவு செய்யப்படுகிறது. அதன்படி விவசாயிகள் பலரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் நெல் கொள்முதல் நிலையத்தை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும், உத்தரவு கிடைத்தவுடன் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல் மூட்டைகள் எடை போடப்படும் என கூறினார்.

    ×