search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ளம்பெண்"

    • கடந்த ஜூன் மாதம் தங்கேஸ்வரனை வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது.
    • திலகவதியை திருமணம் செய்துகொண்ட தங்கேஸ்வரன் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று குடும்பம் நடத்தினார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ஏழாயிரம் பண்ணை அருகேயுள்ள சண்முகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கேஸ்வரன்.

    இவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு திலகவதி தங்கேஸ்வரனை வற்புறுத்தினார்.

    விரைவில் நம்முடைய திருமணம் நடக்கும் என்று நம்பிக்கை வார்த்தை கூறிய தங்கேஸ்வரன், அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு திலகவதியுடன் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். தொடர்ந்து திருமணத்துக்கு காலம் தாழ்த்தியதால் ஏமாற்றம் அடைந்த திலகவதி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியலுக்கு உட்படுத்தியது என்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தங்கேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

    இதற்கிடையே திலகவதியை சந்தித்து சமரசம் பேசிய தங்கேஸ்வரன், தான் வழக்கில் இருந்து விடுதலையாகும் வகையில் கோர்ட்டில் தனக்கு சாதகமாக சாட்சி சொன்னால் நாம் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தலாம் என்று கூறியுள்ளார். அதனை முழுமையாக நம்பிய திலகவதியும் நடந்துகொண்டார். அதன் மூலம் கடந்த ஜூன் மாதம் தங்கேஸ்வரனை வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது.

    இதையடுத்து திலகவதியை திருமணம் செய்துகொண்ட தங்கேஸ்வரன் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று குடும்பம் நடத்தினார். திருமணத்தின்போது திலகவதி 1 பவுன் நகை மட்டுமே அணிந்து வந்தார். இதனை ஏற்க மறுத்த தங்கேஸ்வரனின் பெற்றோர் எதுவும் இல்லாதவளை திருமணம் செய்து வந்ததாக மகனை திட்டியதோடு, மருமகளை சித்ரவதைக்கு ஆளாக்கியுள்ளனர்.

    அத்துடன், உன் பிறந்த வீட்டில் இருந்து 10 பவுன் நகை வாங்கி வந்தால் மட்டுமே என் மகனுடன் குடும்பம் நடத்த முடியும் என்று கூறி திலகவதியை வீட்டை விட்டு துரத்தினர். வேறு வழியின்றி 10 பவுன் நகை வாங்கிவர அவரும் சம்மதித்தார். அப்போது தங்கேஸ்வரனிடம் சித்ரவதை குறித்து கூறி திலகவதி அழுது புலம்பினார்.

    அதனை காதில் வாங்கிக் கொள்ளாத தங்கேஸ்வரன், தான் வழக்கில் இருந்து விடுதலை ஆவதற்கே உன்னை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறினார். மேலும், வேலை விஷயமாக கோவை செல்வதாக தெரிவித்து விட்டு புறப்பட்டார்.

    ஒருசில நாட்களில் திலகவதியை செல்போனில் தொடர்பு கொண்ட தங்கேஸ்வரன், தான் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சத்யா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், ஆண்டாள் கோவிலில் வைத்து மாலை மாற்றி தாலி கட்டியதாகவும், நீ உன் வீட்டிற்கு சென்றுவிடு என்றும் கூறி மிரட்டியுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த திலகவதி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×