search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோக்கா புயல்"

    • வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
    • மோக்கா புயல் கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் உருவானது. நேற்று முன்தினம் இரவு அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

    நீண்ட நேரமாக அந்த காற்றழுத்தம் அதே பகுதியிலேயே நிலைக்கொண்டு இருந்தது. பிறகு அது மெல்ல வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர தொடங்கியது.

    அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மதியம் முதல் வலுவடைய தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) காலை அது புயலாக மாறியது. அந்த புயலுக்கு மோக்கா புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    புயலாக மாறிய பிறகு அது சற்று வேகமாக நகர தொடங்கி உள்ளது. தொடர்ந்து அந்த புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். நாளை அதன் நகரும் திசையில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள அந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) அது அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது.

    இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அது வடக்கு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும்.

    தற்போது அந்த புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி போர்ட் பிளேயர் பகுதியில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தென்மேற்கு திசையில் இருந்தது. அதன் நகரும் வேகம் 15 கிலோ மீட்டராக உள்ளது. இன்று மாலை அதன் நகரும். வேகம் மேலும் அதிகரிக்கும்.

    13-ந்தேதி (சனிக்கிழமை) அது தொடர்ந்து வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி வேகமாக நகரும் அதற்கு அடுத்த நாள் (14-ந்தேதி) காலை அந்த புயல் வங்க தேசத்தில் உள்ள காக்ஸ் பஜா மற்றும் மியான்மர் நாட்டில் உள்ள சிட்வி நகரங்களுக்கு இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கரையை கடக்கும் முன்பு அதிதீவிர புயல் சற்று வலு குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா நிபுணர்கள் கணித்துள்ளனர் என்றாலும் மோக்கா புயல் கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    வங்கக்கடலில் புயல் உருவானதை தொடர்ந்து மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்த்து உள்ளனர். தமிழக கடலோர பகுதிகளில் சுமார் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

    புயல் காரணமாக அந்தமான், நிக்கோபார் தீவு பகுதியில் மிக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில 70 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.
    • புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவானது. இந்த புயலுக்கு 'மோக்கா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இன்று நள்ளிரவு அதிதீவிர புயலாக வலுப்பெற்று வரும் ஞாயிற்றுக்கிழமை (14ம் தேதி) மியான்மர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மோக்கா புயலால் தமிழகத்திற்கு பாதிப்புகள் எதுவும் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் கடந்த 10 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் வங்கக் கடலில் 3-ந்தேதி புதிய புயல் உருவாகிறது. இந்த புயலுக்கு மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-

    தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது.

    இதன் காரணமாக அப்பகுதிகளில் நாளை (7-ந்தேதி) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது 8-ந்தேதி (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.

    இதன் காரணமாக இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இன்று முதல் 9-ந்தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு அந்தமான் கடல், இலங்கை கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மோக்கா புயல் இந்திய பெருங்கடலில் இந்த ஆண்டில் உருவாகும் முதல் புயலாகும்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கோடை வெயில் தொடங்கிவிட்டது. கடந்த மாதம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.

    சென்னையிலும் வெயில் 100 டிகிரியை தாண்டியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். பகலில் வெளியில் சென்றவர்கள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் நாளை மறுநாள் (7-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை ஏமன் நாடு வழங்கியுள்ளது. மோக்கா என்ற அரபிமொழி வார்த்தையானது பருவகாலம், நிகழ்வு மற்றும் வாய்ப்பு ஆகிய அர்த்தங்களை கொண்டுள்ளது.

    மோக்கா புயல் இந்திய பெருங்கடலில் இந்த ஆண்டில் உருவாகும் முதல் புயலாகும். கோடை காலத்தில் எப்போதாவது உருவாகும் அரிய புயல் வகையை சேர்ந்தது. இந்த புயல் மத்திய வங்கக்கடல் அருகே நகர்ந்து மியான்மரை நோக்கி செல்லும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நாளை (6-ந்தேதி) உருவாகிறது. இது வலுப்பெற்று 7-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறும். இதன் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 7, 8-ந்தேதிகளில் 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 10-ந்தேதி 80 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இந்த தேதிகளில் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×