search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mocha Cyclone"

    • மியான்மர் கிழக்கு சான் மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
    • புயலுக்கு 700-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    டாக்கா:

    தென்கிழக்கு வங்ககடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக மாறியது. நேற்று பிற்பகல் மியான்மர் சிட்வே நகரம் மற்றும் வங்க தேசம் காக்ஸ்பஜார் இடையே மேக்கா புயல் கரையை கடந்தது.

    இதனால் கடலோர பகுதிகளில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டி தீர்த்தது. இதனால் ஏராளமான மரங்கள் வேராடு சாய்ந்தது. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது. ரோடுகளில் ஆறு போல வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஆறுகளில் கரையே தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். உயிருக்கு பயந்து அவர்கள் வீட்டின் மேற்கூரைகளிலும் கட்டிடங்களின் மேல் மாடியிலும் தஞ்சம் புகுந்தனர்.

    சூறாவளி புயலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரங்கள் மற்றும் மின்சார டிரான்ஸ் பார்மர்கள் சாய்ந்ததால் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இணையதள சேவைகள் அனைத்தும் முடங்கியது. மியான்மர் கிழக்கு சான் மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி கணவன்- மனைவி பரிதாபமாக இறந்தனர்.

    பியான்யோலாவின் நகரத்தில் மரம் விழுந்ததில் ஒருவர் உடல் நசுங்கி பலியானார்.

    இந்த புயலுக்கு 700-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    மோக்கா புயலால் கடலோரபகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மேற்கு மியான்மர் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் கரையோரம் இருந்த குடிசைபகுதிக்குள் நீர் புகுந்தது. இதில் ஆயிரம் மக்கள் சிக்கி கொண்டனர். மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு சென்று அவர்களை மீட்டனர். கடல் நீர் புகுந்ததால் குடிசைகள் அனைத்தும் சேதம் அடைந்தது.

    வங்காளதேசம் காக்ஸ் பஜார் பகுதியில் உலகில் மிகப்பெரிய அளவிலான அகதிகள் முகாம் உள்ளது. ,இங்கு மூங்கில்களில் ஆன 1300 குடில்கள் உள்ளது. இதில் 3 லட்சம் மக்கள் தங்கி இருந்தனர். அவர்கள் புயல் தாக்குவதற்கு முன்பு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நேற்று வங்கதேசத்தை புரட்டி போட்ட புயலுக்கு இந்த முகாமில் அமைக்கப்பட்டு இருந்த குடில்களும் தப்பவில்லை. இந்த குடில்கள் அனைத்தும் கடுமையாக சேதம் அடைந்தது.

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இந்த பணியில் மீட்பு குழுவை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு, மற்றும் குடிநீர், மருத்துவ உதவிகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் இறந்தவர்கள் பற்றிய முழு விவரமும் தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    • மியான்மரில் சிட்வே பகுதியில் நேற்று முன்தினம் முதலே பலத்த மழை பெய்து வருகிறது.
    • இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் மோக்கா புயல் பாதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தென்கிழக்கு மற்றும் அதைஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவான 'மோக்கா' புயல் நேற்று முன்தினம் இரவு அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்தது.

    நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடலில் போர்ட் பிளேயரில் இருந்து 530 கி.மீ. மேற்கு-வடமேற்கே நிலை கொண்டிருந்தது. மோக்கா புயல் இன்று தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் மற்றும் மியான்மரில் உள்ள தியாக்பியூ இடையே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புயல் கரையை கடக்கும் போது 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மோக்கா புயல் இன்று வங்காளதேச கடற்கரையை நெருங்கியது. காக்ஸ் பஜார் பகுதியில் கரையை கடக்கும் முன்பு பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து வங்காள தேசம், மியான்மரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும் காக்ஸ் பஜார் பகுதியில் ரோங்கியா அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 10 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே போல் மியான்மரின் மேற்கு ரக்கைன் கடற்கரையில் உள்ள சிட்வேயில் உள்ள முகாம்களிலும் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    புயலையடுத்து காக்ஸ் பஜார் பகுதியில் 1.90 லட்சம் பேரையும், சிட்டகாங்கில் 1 லட்சம் பேரையும் பாதுகாப்பான இடங்களுக்கு வங்காளதேச அதிகாரிகள் இடம் மாற்றி உள்ளனர். அவர்கள் 4 ஆயிரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக 21 கப்பல்கள், கடல் ரோந்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

    அதேபோல் மருத்துவ குழுக்கள், ஆம்புலன்சுகள் ஆகியவையும் தயார் நிலையில் உள்ளன. வெள்ளம், சூறாவளி ஆகியவற்றால் காக்ஸ் பஜாருக்கு அதிக ஆபத்து ஏற்படலாம் என்றும் சூறாவளியால் 8 கடலோர கிராமங்களில் கடுமையான சேதம் ஏற்படலாம் என்றும் வங்கதேச ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மலை மாவட்டங்களான ரங்கமதி, பந்தர்பன், கக்ராச்சாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து பேரிடர் மேலாண்மை குழுவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் மீட்புபணி நடந்து வருகிறது.

    மியான்மரில் சிட்வே பகுதியில் நேற்று முன்தினம் முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் மோக்கா புயல் பாதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அந்தமான் அருகில் மையம் கொண்டுள்ள இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது.
    • கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை துறை எச்சரித்து உள்ளது.

    வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள 'மோக்கா' புயல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.

    தொடர்ந்து அந்தமான் அருகில் மையம் கொண்டுள்ள இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது.

    தொடர்ந்து வருகிற 14ம் தேதி காலை அந்த புயல் வங்கதேசத்தில் உள்ள காக்ஸ்பஜா மற்றும் மியான்மர் நாட்டில் உள்ள சிட்வி நகரங்களுக்கு இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கரையை கடப்பதற்கு முன்பு அதிதீவிர புயல் சற்று வலு குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாக நிபுணர்கள் கணித்து உள்ளனர். கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை துறை எச்சரித்து உள்ளது.

    இதன் எதிரொலியால், மேற்கு வங்க மாநிலம் திகாவில் தேசிய பேரிடர் மீட்புப் படை 8 குழுக்களையும், 200 மீட்புப் பணியாளர்களையும் தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2வது பட்டாலியின் குர்மிந்தர் சிங் கூறியுள்ளார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் கடந்த 10 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் வங்கக் கடலில் 3-ந்தேதி புதிய புயல் உருவாகிறது. இந்த புயலுக்கு மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-

    தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது.

    இதன் காரணமாக அப்பகுதிகளில் நாளை (7-ந்தேதி) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது 8-ந்தேதி (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.

    இதன் காரணமாக இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இன்று முதல் 9-ந்தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு அந்தமான் கடல், இலங்கை கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×