search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேக்கப்"

    • ஒவ்வொரு பருவ நிலைக்கு ஏற்ப மேக்கப் போடுவது முக்கியமானது.
    • மழைக்காலத்திற்கு ஏற்ப சிறப்பாக மேக்கப் போட்டு கொள்வதற்கு சில குறிப்புகள் இதோ...

    பல பெண்களின் அன்றாட பணிகளில் ஒன்றாக 'மேக்கப்' போடுவது உள்ளது. இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக உளவியல் கூறுகிறது. தோற்றத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் மேக்கப் உதவுகிறது. ஒவ்வொரு பருவ நிலைக்கு ஏற்ப மேக்கப் போடுவது முக்கியமானது.

    இதனால், மேக்கப் கலையாமல் நீண்ட நேரம் அழகை மெருகேற்றிக்காட்டும். மழைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், அதற்கு ஏற்ப சிறப்பாக மேக்கப் போட்டு கொள்வதற்கு சில குறிப்புகள் இதோ...

     மழைக்காலம் என்றாலும் டோனர், மாய்ஸ்சுரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் உபயோகிப்பதைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். இது சரும வறட்சி, எண்ணெய் வழிதலைக் குறைத்து, தொற்று ஏற்படுவதை தடுக்கும்.

     மழையில் நனைந்தாலும் அதிக வித்தியாசம் தெரியாமல் இருப்பதற்கு, குறைவான மேக்கப் பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது. கலர் கரெக்டர், பவுண்டேஷன், கன்சீலர் என்று அடுக்கு அடுக்காக போடாமல், முக்கியமான பொருட்களைமட்டும் உபயோகித்தால், மழையில் நனைந்தாலும் உங்கள் முகம் சிறப்பாக தோற்றமளிக்கும். குறிப்பாக பிரைமரைத் தொடர்ந்து கன்சீலர் மற்றும் காம்பாக்ட் மட்டும் போட்டுக்கொள்வது மழைக்காலத்திற்கு ஏற்றது. பவுண்டேஷன் போட்டுக்கொள்ள விரும்பினால் அதனை பிரைமருடன் கலந்து போடுவது நல்லது.

     தண்ணீரில் அழியாத மேக்கப் பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அதே சமயம் முழு மேக்கப்புக்கு தேவையான, அனைத்து பொருட்களும் கிடைப்பது இல்லை. சில வாட்டர்-புரூப் மேக்கப் பொருட்களை மட்டும் பயன்படுத்தி, மற்றவற்றுக்கு சாதாரணப் பொருட்களை உபயோகித்தால் அது மேக்கப்பின் தரத்தைக் குறைக்கும்.

     ப்ளஷ் (Blush) மற்றும் ஹைலைட்டர் (Highlighter) போன்றவற்றை பயன்படுத்த விரும்பினால் 'பவுடர்' வடிவில் இருப்பவற்றை பயன்படுத்தலாம்.

     புருவம், இமைகள் மற்றும் விழிகளை சிறப்பாகக் காட்டும் ஐ லைனர், கண் மை (காஜல்) மற்றும் மஸ்காரா போன்றவை வாட்டர்-புரூப் வகையில் அனைத்து கடைகளிலும் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம்.

     காஜல் அணியும்போது, வழக்கமான கருப்பு நிறத்தில் அணியாமல் வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் அணிந்தால் கரைவது தெரியாது, கண்கள் பெரிதாகத் தெரியும்.

     வாட்டர்-புரூப் லிப்ஸ்டிக் சந்தையில் கிடைக்கிறது. அதில் மேட் ரகத்தில் உள்ளவற்றை பயன்படுத்தலாம். லேசான நிறங்களான பிங்க் மற்றும் பழுப்பு நிறங்கள் மழைக்காலத்தில் சிறப்பாக இருக்கும்.

     இமைகளில் மஸ்காரா அணியும்பொழுது, முதலில் வழக்கமான ஒன்றை அணிந்து கொண்டு பின்னர் அதன் மேல் வாட்டர் புரூப் வகையை பயன்படுத்தினால் அதிக நேரம் நீடிக்கும். இமைகளை நீளமாக காட்டும். நீரில் அழியாது. மேக்கப் என்பது நம் அம்சங்களை மேம்படுத்துவதற்கு பயன்படுவது. அது சரியான அளவில் மற்றும் சீரான நிறத்தில் இருந்தால்தான் சிறப்பான தோற்றம் பெற முடியும். மழைக்கால மேக்கப்பை பொறுத்த வரை, குறைவான பொருட்களை பயன்படுத்துவதால் அழகான தோற்றம் பெறலாம்.

    • மேக்கப்பை நாம் கவசமாகப் பயன்படுத்தும்போது, நம்மைத் திறமையானவர்களாக வெளிக்காட்ட முடியும்.
    • நாம் போடும் மேக்கப் நமது ஆளுமையை வெளிப்படுத்தும்.

    'ஒப்பனை' என்பது தோற்றத்தை அழகாக எடுத்துக்காட்டுவது மட்டுமல்ல. நீங்கள் விரும்பும் விதத்தில் உங்களை உருவாக்குவதும் தான். நாம் போடும் மேக்கப்பை, நமது ஆளுமையை வெளிப்படுத்தும் கருவியாக மாற்றுவது எவ்வாறு என்பதைப் பற்றி பார்ப்போம்

    கண்கள்: கண்கள் மனதின் ஜன்னல்கள். எனவே, கண்களைச் சுற்றி செய்யும் அலங்காரம், நமது மனதின் ஆழத்தில் உள்ள சாயல்களை வெளிப்படுத்தும். பெரும்பாலான இளம்பெண்கள் அணியத் தொடங்கும் முதல் அழகுசாதனப் பொருள் கண் மை (காஜல்). கண்களுக்கு செய்யும் ஒப்பனைக்கு முகத்தை மாற்றும் சக்தி உள்ளது. ஐ லைனர்கள் முதல் ஐ ஷேடோக்கள் வரை, நீங்கள் விரும்பும் அழகான கண் தோற்றத்தை உருவாக்க பல அழகு சாதனங்கள் உள்ளன.

    முகம்: கண்களுக்கு அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டியது முகம்தான். லேசான மேக்கப் மட்டும் இருந்தாலே, முகத்தை அழகாக எடுத்துக் காட்டலாம். குறைவாக ஒப்பனை செய்யும் போது, முகம் பிரகாசமாக மட்டுமின்றி, தன்னம்பிக்கையுடனும் வெளிப்படும். இதில், கவனிக்க வேண்டிய விஷயம், நம் சரும நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷனைத் தேர்வு செய்தல். இது முகத்தின் அழகை மெருகூட்டிக் காட்டும்.

    லிப்ஸ்டிக்: முகத்தில், நாம் உதிர்க்கும் புன்னகையை தன்னம்பிக்கையுடன் வெளியே பிரதிபலிக்க உதட்டை அழகாக வைத்திருப்பது அவசியம். வறட்சியுடனோ, வெடிப்புடனோ உதடு இருந்தால், பல பாதிப்புகள் ஏற்படும். உதட்டை எப்போதும் மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைக்க 'லிப் பாம்' பயன்படுத்தலாம். ஒப்பனைக்கேற்ப லிப்ஸ்டிக் நிறத்தைத் தேர்வு செய்யலாம். சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தினால், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அழகாய் பிரதிபலிக்க முடியும்.

    நகப்பூச்சு: நகங்களுக்கு நாம் தேர்ந்தெடுக்கும் நகப்பூச்சு, நம் எண்ணங்களின் பிரதிபலிப்பாக மாறும். சிவப்பு நிறம் பூசும்போது, அது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்கும். பிறர் மீதான கோபத்தின் வெளிப்பாட்டுக்கு கறுப்பு நிறத்தையும் பயன்படுத்தலாம். மற்ற உணர்ச்சிகளின் வெளிப்பாட்டுக்கு வானவில்லின் பிற நிறங்களைப் பயன்படுத்தலாம். இந்த வண்ணக் குறியீடு, உங்கள் ஆற்றலின் அளவை வெளிப்படுத்தும். அழகு, ஒப்பனை, தோல் பராமரிப்பு மற்றும் சுய பாதுகாப்பு போன்றவை பெண்களுக்கு முக்கியமானவை.

    'மேக்கப்' நம் அழகை வெளிக்காட்ட உதவும் ஓர் ஆயுதம். இதனால், பெண்கள் தங்களை சக்தி வாய்ந்தவர்களாக உணர முடியும். இது உங்களின் ஆளுமையை மீட்டெடுப்பதற்கான சிறந்த வழியும் ஆகும். மேக்கப்பை நாம் கவசமாகப் பயன்படுத்தும்போது, நம்மைத் திறமையானவர்களாக வெளிக்காட்ட முடியும். கச்சிதமாக ஒப்பனை செய்வதற்கு நாம் செலவழிக்கும் 10 நிமிடம் என்பது நமக்கான தியானம் போன்றது. பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருக்கும் ஒருவர் தனக்காக சிறிது நேரம் ஒதுக்க ஒப்பனை சிறந்த வழியாகும்.

    • மேக்கப் என்பது ஒரு படிப்படியான செய்முறை.
    • மேக்கப்பில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன.

    அழகுக்கு அழகு சேர்ப்பதுதான் 'மேக்கப்'. இதில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. ஆனாலும், 'மேக்கப்' என்றதும் பவுண்டேஷன் போட்டு, அதற்கு மேல் ரோஸ் பவுடர் போடுவது என்ற தவறான கருத்து பலரிடம் இருக்கிறது. மேக்கப் என்பது ஒரு படிப்படியான செய்முறை. அதன் விளக்கங்களை கீழே காணலாம்:

    1. முதலில் மேக்கப் செட்டிங் ஸ்பிரே அடித்து, சருமத்தை மேக்கப்பிற்குத் தயார் செய்ய வேண்டும்.

    2. அடுத்ததாக மேக்கப்பின் அடிப்படையாக செயல்படும், பிரைமரை (primer) சருமத்தில் பூச வேண்டும். எண்ணெய்பசை கொண்ட சருமத்திற்கு, ஜெல் வடிவிலான பிரைமரையும், உலர்ந்த சருமத்திற்கு, கிரீம் வடிவிலுள்ள பிரைமரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    3. அதைத் தொடர்ந்து முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், திட்டுகள் உள்ள இடத்தில் கலர் கரெக்டரை பூசி, அதை சருமத்துடன் ஒன்றுமாறு செய்ய வேண்டும்.

    4. பின்பு, கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மற்றும் உதட்டை சுற்றியுள்ள கருமை நிறத்தை மறைக்க, கன்சீலரைப் (concealer) பயன்படுத்த வேண்டும். இதையும் பிளண்டர் வைத்து பிளண்ட் செய்வது அவசியம்.

    5. உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷனைத் தேர்வு செய்ய வேண்டும். அதை முகத்தில் புள்ளி புள்ளியாக ஆங்காங்கே வைத்து பூச வேண்டும். முகத்தோடு சேர்த்துக் கழுத்திலும் பூசுவது அவசியம். அப்பொழுதுதான் முகம் தனியாக வித்தியாசமாகத் தெரியாமல் இருக்கும். பவுண்டேஷனைக் கீழ் நோக்கி தடவும் முறையே சரியானது.

    6. இதற்கு அடுத்து, காம்பேக்ட் பவுடரை முகத்தில் பூச வேண்டும். முகத்திலுள்ள சிறுசிறு குழிகள், கோடுகளை மறைக்கவும், சரி செய்து சமன்படுத்தவும் இது உதவும்.

    7. இப்பொழுது கண்களுக்கான மேக்-அப்பில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடைக்கு ஏற்ற நிறத்தில் 'ஐ ஷேடோ'வைத் தேர்ந்தெடுத்து, அதனுடன் ஒரு தங்க நிற நிறமியைக் கலந்து பூசினால், கண்கள் பளிச்சென இருக்கும்.

    8. காஜலை கண்களுக்குக் கீழேயும், ஐ-லைனரை கண்களுக்கு மேலேயும், கவனமானத் தடவ வேண்டும். அது கரைந்து போகாத மற்றும் வாட்டர் ப்ரூப் ஐ-லைனராக இருந்தால் சிறந்தது.

    9. செயற்கையாக விற்கும் கண் இமை முடிகளை, அதன் பசையுடன் சேர்த்து ஒட்டிக் கொண்டால், கண்களை மேலும் அழகாகக் காட்ட முடியும். இல்லையெனில், மஸ்காரா தடவி இமை முடிகளை அடர்த்தியாக காட்டலாம்.

    10. புருவத்திற்கென தனியாக ஸ்பூலி பிரஷ் (spoolie brush) கிடைக்கிறது. முதலில் அதன் ஒரு பக்கம் இருக்கும் மையை பயன்படுத்தி, புருவத்தின் பார்டரை வரைந்துவிட்டு, மறுபக்கம் உள்ள பிரஷின் மூலம், புருவ முடிகளை ஒழுங்குபடுத்தி பிளண்ட் செய்துகொள்ள வேண்டும்.

    11. முகத்தில் பிளஷ்ஷிற்கு (blush) பதிலாக ஹைலைட்டரை தேவைப்படும் இடங்களில் பூசி மெருகேற்ற வேண்டும்.

    12. கடைசியாக மேக்கப் பிக்ஸர் ஸ்ப்ரே (fixer spray) அடிக்க வேண்டும். இதன் மூலம் பல மணி நேரங்கள் வரை மேக்கப் கலையாமல் பாதுகாக்கலாம்.

    ×