search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்பு கருவிகள்"

    • நாகர் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
    • மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு சென்று செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்

    நாகர்கோவில், அக்.3-

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. கன மழை பெய்வதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    எனவே வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் மாவட்டத்தில் 8 தீயணைப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதே போல நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்திலும் மீட்பு கருவிகளை தயார் செய்யும் பணி இன்று தீவிரமாக நடந்தது.

    இங்குள்ள ரப்பர் படகுகள், கயிறுகள், மோட்டார் என்ஜின்கள், மோட்டார் ரம்பம், ஆக்சிஜன் சிலிண்டர்கள், காலி தண்ணீர் பாட்டில்களால் தயார் செய்யப்பட்ட படகு மற்றும் மிதவை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கருவிகள் அனைத்தும் சரியாக வேலை செய்கிறதா? என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதற்காக அனைத்து கருவிகளும் தீயணைப்பு நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    அதோடு நவீன கருவிகளையும் ஆய்வு செய்தனர். இந்த பணிகளை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார், உதவி அலுவலர் துரை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு சென்று செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அதோடு வெள்ளம் அதிகமாக செல்லும் காட்டு பகுதிகளுக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செல்ல கூடாது என்று தீயணைப்பு வீரர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×