search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்மபொருள்"

    • சிக்னல் டிவைஸ் கருவி கரும் புகையுடன், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • பாதுகாப்பு நடவடிக்கையாக காலை முதலே அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நாயக்கர் குப்பம் மீனவர் கிராமத்தில் கடந்த 12-ந்தேதி காலை உலோகத்தால் ஆன உருளை வடிவிலான மர்மபொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் அப்பொருளை மீட்டு கடற்கரை பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் நீர்மூழ்கிய கப்பல்களில் பயன்படுத்தப்படும் சிக்னல் டிவைஸ் கருவி என தெரியவந்தது. மேலும் அப்பொருளில் அபாயகரமானது, தொடாதீர்கள், காவல்துறைக்கு தெரிவியுங்கள் எனவும் அச்சிடப்பட்டிருந்தது. உடனே இது குறித்து சென்னை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அதன் பெயரில் சென்னையிலிருந்து வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் சீர்காழிக்கு வந்தனர். பின்னர் சீர்காழி புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் ஆழமான குழி தோண்டப்பட்டு அதில் சிக்னல் டிவைஸ் கருவி வைக்கப்பட்டு வெடிகுண்டு செயல் இழப்பு செய்யும் கருவிகளுடன் இணைப்பு ஏற்படுத்தி அதனை வெடிக்க வைத்தனர். அப்போது அந்த சிக்னல் டிவைஸ் கருவி கரும் புகையுடன், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    வெடிக்க வைக்கும் பணிகள் தொடங்கியதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், 108 மீட்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக காலை முதலே அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×