search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி கதறல்"

    கோவை அருகே கண்ணாம்மூச்சி விளையாடிய போது தண்ணீர் தொட்டியில் விழுந்து மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கணுவாய் அருகே உள்ள சி.வி.சி சாய் அவென்யூவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பூவிதா. இவர்களுக்கு தேவதர்சினி (4) என்ற மகளும், தேஜூ அஸ்வீன் (2) என்ற மகனும் உள்ளனர். நேற்று இரவு வீட்டில் இருந்த மணிகண்டன் தனது மகள், மகனுடன் சேர்ந்து கண்ணாம்மூச்சி விளையாட்டு விளையாடி கொண்டு இருந்தார்.

    அப்போது தேவதர்சினி வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் அருகில் சென்று ஒளிந்து கொண்டார். தேஜூ அஸ்வீன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கார் அருகில் ஒளிந்து கொள்ள சென்றார். அப்போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் சிறுவன் தவறி விழுந்து பலியானான். குழந்தைகளை தேடி வெளியே வந்த மணிகண்டன் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி தனது மகன் தேஜூஅஸ்வின் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் தனது மகனின் சாவுக்கு தானே காரணமாகி விட்டோமே என மனவேதனை அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தந்தை மற்றும் தம்பியை தேடி மாடியில் இருந்து இறங்கி வந்த தேவதர்சினி தந்தை தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். குழந்தையின் சத்தம் கேட்டு சமையல் செய்து கொண்டு இருந்த பூவிதா ஓடிவந்து பார்த்த போது கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பூவிதாவை சமாதானம் செய்தனர். பின்னர் தேஜூ அஸ்வினை தேடினர். ஆனால் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர் இது குறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தேஜூஅஸ்வினை வீடு முழுவதும் தேடினர்.

    அப்போது வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் மணிகண்டன், தேஜூஅஸ்வின் ஆகியோரின் உடலை பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தபகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×