search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை தலைமை செயலகம்"

    • கோர்ட்டு உத்தரவுக்கு பிறகும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லை.
    • கட்டண பாக்கியை கோர்ட்டில் செலுத்திவிடுவதாக தலைமை செயலக அதிகாரிகள் கோர்ட்டு ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தேர்தல் பணிக்காக தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களை சேர்ந்த வாகனங்களும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

    இதற்கான வாடகை பாக்கி ரூ.1 கோடியே 28 லட்சம் தொகையானது 2 தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு தரப்பட வேண்டி இருந்தது. ஆனால் ரூ.77 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. மீதி தொகை வழங்கப்படவில்லை.

    இதுதொடர்பாக டிராவல்ஸ் நிறுவனங்கள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த கோர்ட்டு வாடகை பாக்கியை செலுத்த உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவுக்கு பிறகும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லை. டிராவல்ஸ் உரிமையாளர்கள் கோர்ட்டை அணுகவே தலைமை செயலகம், தேர்தல் துறை, கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கடந்த 2021-ல் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அந்த உத்தரவின் பேரில் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வாடகை பாக்கியை தருவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை கட்டண பாக்கி தரப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து மீண்டும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி இளவரசன் தலைமை செயலகம், தேர்தல்துறை, கலெக்டர் அலுவலக மேஜை, நாற்காலி, ஏ.சி. மெஷின்கள், வாகனங்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

    அதை நிறைவேற்றும் வகையில் கோர்ட்டு அமீனாக்கள் தலைமை செயலகத்துக்கு வந்தனர். தலைமை செயலாளர் அலுவலகத்துக்கு வந்த அவர்கள் கோர்ட்டு உத்தரவு தொடர்பாக அங்கிருந்த அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.

    ஜப்தி நடவடிக்கை தொடர்பான தகவல் உடனடியாக தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் சட்டத்துறை செயலாளர் செந்தில்குமாருடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடனும் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார். அதன் பின் கட்டண பாக்கியை கோர்ட்டில் செலுத்திவிடுவதாக தலைமை செயலக அதிகாரிகள் கோர்ட்டு ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு கோர்ட்டு ஊழியர்கள் திரும்பி சென்றனர். இதன் காரணமாக புதுவை தலைமை செயலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தலைமை செயலகத்தை நேரு எம்.எல்.ஏ. முற்றுகையிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொடங்கப்பட்ட பணிகளில் முறைகேடுகளால் கட்டுமான பணிகள் தரமற்றதாகவும், குறைபாடுகள் நிறைந்தும் காணப்படுகிறது.

    பல கட்டுமான பணிகள் தடைபட்டு வேலைகள் நடைபெறாமல் உள்ளது என்றும் உயர் அதிகாரிகளின் அலட்சிய போக்கும் லஞ்ச ஊழலமே காரணம் என உருளையான்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு குற்றம்சாட்டி இருந்தார்.

    மேலும் தனது தொகுதியில் ஒராண்டில் கட்டி முடித்திருக்க வேண்டிய அண்ணாதிடல் கட்டுமான பணி 2 ½ ஆண்டுகளை கடந்தும் காட்சி பொருளாக உள்ளது என்றும் புதிய பஸ் நிலையம், பெரிய மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் கூட செய்யவில்லை என்றும் புகார் கூறியிருந்தார்.

    அதோடு ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் மற்றும் ஊழலை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் நேரு எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.

    இதன்படி இன்று காலை தலைமை செயலகத்தை நேரு எம்.எல்.ஏ. முற்றுகையிட்டார்.

    அவருடன் வாழ்வுரிமை கட்சி தலைவர் ஸ்ரீதர், தமிழர் களம் அழகர், திராவிடர் விடுதலை இயக்கம் லோகு.அய்யப்பன், நகர தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தலைமை செயலகத்தின் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    தலைமை செயலாளரை சந்திக்க வேண்டும் என கோரினர். ஆனால், தலைமை செயலாளர் இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தொடர்ந்து புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த உலக சுற்று சுழல் தின விழாவில் தலைமை செயலாளர் பங்கேற்று இருந்ததால் அங்கு சென்றனர்.

    மேடையில் விழா நடந்த போது நேரு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளருடன் கிழே நின்றபடி தலைமை செயலாளருக்கு எதிராக பேசினார்.

    இதனால் விழா தடைப்பட்டது. மேடையில் இருந்த முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஆகியோர் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர்.

    ஒரு கட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. விழாவில் முதலமைச்சர் பேச இடையூறு செய்யமால் வெளியேறுவதாக கூறி சென்றார்.

    அவருடன் வந்த ஆதரவாளர்களும் அங்கிருந்து சென்றனர். இதை தொடர்ந்து விழா நடந்தது.

    ×