search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுக்கோட்டை மருத்துவமனை"

    • மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய்ப்பால் வங்கி திறக்கப்பட்டது.
    • தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும் ஆரம்பத்தில் பால் குடிக்க முடியவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவ அவர் தயங்கவில்லை.

    புதுக்கோட்டை:

    குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் இன்றியமையாதது. 2 ஆண்டுகள் முழுமையாக தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் தாங்கள் உயிர் வாழும் காலம் வரை அதற்கு தேவையான ஆரோக்கிய அடிப்படையை தாய்ப்பால் வழங்குகிறது.

    அதுமட்டுமல்லாமல் 40 வகையான புற்றுநோய்கள் நம்மை அண்டாமல் தாய்ப்பால் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஆனால் பல்வேறு காரணங்களால் ஒரு சிலருக்கு குறைந்த அளவு தாய்ப்பால் மட்டுமே சுரக்கிறது.

    இந்த சூழலில் தாய்ப்பால் வங்கியில் இருக்கக்கூடிய தாய்ப்பாலை அந்த பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுத்து வளர்த்தெடுக்கிறார்கள்

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த பீர் முகமது (வயது 39). தனியார் பஸ் டிரைவரான அவர் ஊர்க்காவல் படையிலும் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும் சம்சாத் பேகம் (30) என்பவருக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்தது. திருமணமான முதல் வருடத்தில் சம்சாத் கர்ப்பம் தரித்தார். அது குறுகிய காலத்தில் கலைந்து விட்டது.

    அதன் பின்னர் பல்வேறு மருத்துவமனைகளில் குழந்தை பாக்கியத்திற்காக சிகிச்சை பெற்றார். அதன் விளைவாக மீண்டும் கடந்த ஆண்டு சம்சாத் பேகம் கர்ப்பமடைந்தார்.

    பின்னர் பிரசவத்திற்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் மாதம் அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் ஒன்றரை கிலோ மட்டுமே அந்த குழந்தையின் எடை இருந்தது.

    அதைத்தொடர்ந்து அக்குழந்தையை அங்குள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    ஆரம்பத்தில் அந்த குழந்தை தாய்ப்பால் எடுத்து கொள்ளவில்லை. பின்னர் படிப்படியாக ஒரு மில்லி 2 மில்லி அளவுக்கு தாய்ப்பால் அருந்த தொடங்கியது.

    இவ்வாறான சூழலில் சம்பத் பேகம் தனது குழந்தையின் தேவைக்கு தாய்ப்பாலை கொடுத்து விட்டு மீதமுள்ள தாய்ப்பாலினை அங்குள்ள தாய்ப்பால் வங்கிக்கு தானமாக வழங்கி வந்தார். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் அவர் 20 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்தார்.

    அதைத்தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழாவில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சம்சாத் பேகத்துக்கு டீன் ராஜ்மோகன் கேடயம் வழங்கி பாராட்டினார்.

    இதுகுறித்து நியோ நாட்டலஜி துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் பீட்டர் கூறும் போது,

    இந்த மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய்ப்பால் வங்கி திறக்கப்பட்டது. இதற்கு முன்பு ஒரு தாயிடம் அதிகபட்சமாக 14 லிட்டர் தாய்ப்பால் மட்டுமே தானமாக பெறப்பட்டது. இப்போது முதல் முறையாக சம்சாத் பேகம் ஒன்றரை மாதத்தில் 20 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்தார்.

    தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும் ஆரம்பத்தில் பால் குடிக்க முடியவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவ அவர் தயங்கவில்லை.

    இது மற்றவர்களும் தங்கள் தாய்ப்பாலை தானம் செய்ய தூண்டுவதாக அமைந்துள்ளது என்றார்.

    சம்சாத்தின் கணவர் பீர் முகமது கூறும்போது,

    திருமணமான முதல் ஆண்டிலேயே குழந்தையை கலைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் பல ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று கடைசியில் குழந்தை பிறந்தது.

    ஆனால் குறை பிரசவமாக இருந்ததால் புதுக்கோட்டை அரசு ராணி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். சிகிச்சைக்கு பின் கடந்த சனிக்கிழமை குழந்தையை டிஸ்சார்ஜ் செய்தனர். இப்போது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்றார்.

    சம்சாத் கூறும்போது, நான் என் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தபோது தாய்ப்பால் குறைவாக இருந்த பல தாய்மார்கள் மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு செல்வதை பார்த்தேன். இதனால் தாய்ப்பால் தானமாக வழங்க முடிவு செய்தேன் என தெரிவித்தார்.

    ×