search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் மாணவன்"

    • மாணவர் தேர்வு எழுத சென்ற மையத்தில் 500 மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.
    • 500 மாணவிகளுக்கு மத்தியில் இவர் ஒருவர் மட்டுமே மாணவர் ஆவார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் ஷெரீப் பகுதியில் இயங்கி வரும் அலமா இக்பால் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவர் ஒருவர் சுந்தர்கர் பகுதியில் உள்ள பிர்லியன்ட் கான் வென்ட் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்துக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத சென்றார்.

    அன்று கணித தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த மாணவரும் தேர்வு எழுத தொடங்கினார். தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது அந்த மாணவருக்கு திடீரென படபடப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

    இதனால் பதறிப்போன தேர்வு மைய அதிகாரி அவரை எழுப்ப முயன்றார். அப்போது அவர் மயங்கி கிடந்தது தெரிய வந்தது. இதுபற்றி அவர் சக ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக ஆம்புலன்ஸ் பள்ளிக்கு விரைந்தது. அதில் மாணவரை ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கீழே விழுந்ததில் மாணவருக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

    அவரை உறவினர் ஒருவர் அருகில் இருந்து கவனித்து வருகிறார். மாணவ ருக்கு மயக்கம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து அவரது உறவினர் ஒருவர் கூறியதாவது:-

    மாணவர் தேர்வு எழுத சென்ற மையத்தில் 500 மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர். 500 மாணவிகளுக்கு மத்தியில் இவர் ஒருவர் மட்டுமே மாணவர் ஆவார். மாணவிகளுக்கு மத்தியில் தனியாக தவித்த மாணவருக்கு திடீரென்று வெட்கம் அதிகமாகி படபடப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி விழுந்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து தேர்வு மையத்தினர் கூறுகையில், மாணவரின் ஹால்டிக்கெட்டில் அவரது பாலினம் பெண் என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டு இருக்கலாம். அதனால் அவருக்கு பெண்கள் தேர்வு எழுதும் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மாணவர் தனது ஹால்டிக்கெட்டில் பாலினம் பெண் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டதும் அவர் உடனடியாக அதை சரி செய்திருக்க வேண்டும். இதில் திருத்தம் செய்ய 20 நாட்கள் அவகாசம் உள்ளது. இது மாணவர் அல்லது அவரது பாதுகாவலரின் கவனக்குறைவாகும். அல்லது படிவம் நிரப்பி கொடுத்த பள்ளியின் கவனக்குறைவாகும்" என்றார்.

    ×