search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாவல் பழம்"

    • குமரி மாவட்டத்தில் போட்டிபோட்டு வாங்கி செல்லும் மக்கள்
    • சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறுகளுக்கு தீர்வு தரும்

    நாகர்கோவில் :

    நாவல் பழம் என்றவுடன் தமிழ் ஆர்வலர்களுக்கு அவ்வை மூதாட்டியின் நினைவுதான் வரும்.

    அவ்வைக்கும், தமிழ் கடவுள் முருகனுக்கும் இடையே நாவல் பழத்தை மையமாக வைத்து ஒரு உரையாடல் இடம்பெற்றிருக்கும்.

    அதில் முருகன் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என அவ்வையிடம், கேட்பார். அவரும் பழத்தில் சுட்ட பழம் இருக்கிறதா? எனக்கேள்வி எழுப்பியபடி, எனக்கு சுட்ட பழமே தா, எனக்கூறுவார்.

    உடனே முருகன், அருகில் இருந்த நாவல் மரத்தை அசைக்க அதில் இருந்து நாவல் பழங்கள் மண்ணில் விழும். அதனை அவ்வையிடம் முருகன் எடுத்து கொடுப்பார்.

    அந்த பழத்தில் மண் ஒட்டி இருக்கும். அந்த மண்ணை அப்புறப்படுத்த, ஒவ்ெவாரு பழமாக எடுத்து அவ்வை, அதனை ஊதி, ஊதி உண்பார். இதனை பார்த்த முருகன், அவ்வையே பழம் என்ன சூடாக இருக்கிறதா? என்று கேட்பார்.

    இப்படி நாவல் பழத்தை வைத்து முருகன் நடத்திய திருவிளையாடல் தமிழ் பக்தி இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது.

    தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்ற நாவல் பழத்திற்கு பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளன என்பது பெரும்பாலோருக்கு தெரியாத விஷயம்.

    நாவல் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். தொடர்ந்து இதனை உண்டால் சர்க்கரை நோய் மட்டுப்படும் என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    அதோடு மட்டுமின்றி சிறநீரகம் மற்றும் மண்ணீரல் கோளாறுகளை நீக்கும் சக்தியும் நாவல் பழத்திற்கு உள்ளது. நாவல் பழத்தின் விதைகளில் கால்சியம் மற்றும் புரத சத்து உள்ளது.

    பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழத்தின் சிறப்பை தெரிந்து கொண்ட கிராம மக்கள் அதனை வாங்கி உண்ண ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    நாவல் மரங்கள் பெரும்பாலும் மலையோர கிராமங்களில் அதிகம் வளருகிறது. மதுரை, திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன. இதுபோல குமரி மாவட்டத்திலும் கன்னியாகுமரி, பொத்தையடி, குண்டல், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் பகுதிகளில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன.

    இந்த மரங்களில் இருந்து விழும் பழங்களை இப்பகுதி மக்கள் போட்டி போட்டு எடுத்து செல்கிறார்கள். சிலர் வீடுகளிலும் இந்த மரத்தை வளர்க்கிறார்கள்.

    இப்போது நாவல் பழத்தின் மகிமை கிராமங்களை தாண்டி நகர் பகுதிகளுக்கும் எட்டியுள்ளது.

    இதனால் நகர்புற மக்களும் நாவல் பழங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். வழக்கமான பழங்களை போல் இல்லாமல் இந்த பழம் லேசான துவர்ப்பு சுவையுடன் இருக்கும். நன்றாக பழுத்த பழத்தின் மீது சிலர் உப்பு தூவி உண்பார்கள்.

    அது இன்னும் டேஸ்டியாக இருக்கும். இந்த பழத்தை உண்டு முடித்தவுடன் நாக்கு, நாவல் பழ கலருக்கு மாறிவிடும். இதனால் குழந்ைதகளும் நாவல் பழத்தை ஆர்வமாக கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்.

    நகர் பகுதிகளில் இந்த பழம் கிலோ ரூ.400 வரை விற்கப்படுகிறது. கிராம புறங்களில் இந்த பழத்தை கூறுபோட்டு விற்கிறார்கள். ஒரு கூறு ரூ.25 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது.

    நாகர்கோவில் பகுதியில் இப்போது தள்ளுவண்டிகளில் நாவல் பழம் விற்பனை ஜோராக நடக்கிறது. பெண்களும், மக்களும் இதனை ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.

    ×