search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நள்ளிரவில்"

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு வழிபாடு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் வீதிஉலா, சமய மாநாடு, யானை மீது களப பவனி, வில்லிசை, கலை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழா நாட்களில் தினமும் குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் அதிகமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர். கோவில் திருவிழாவில் நிறைவு விழா நேற்று நடந்தது. இதையொட்டி குமரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. நேற்று மண்டைகாடு கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் காலையிலிருந்து குடும்பத்துடன் குவிய தொடங்கினார். ஆங்காங்கே உள்ள தென்னந்தோப்புகளில் கூடியிருந்தனர். மண்டைக்காடு கடற்கரை மற்றும் கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் பக்தர்கள் வெள்ளமாக தான் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாக காட்சி அளித்தன.

    நேற்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும், காலை 6 மணிக்கு குத்தியோட்டமும் நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதலும், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு இன்னிசை விருந்தும் 9 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 10மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்த ருளல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்கியது.

    இதற்காக மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தான் கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த் தங்கள் 9 மண்பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகள் கோவிலுக்கு பவனியாக கொண்டு வந்தனர். அத்துடன் 2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது.

    இவற்றை தலையில் சுமந்து வந்த பூசாரிகளின் வாய் பகுதி சிகப்பு துணியால் மூடி கட்டப்பட்டிருந்தது. உணவு பதார்த்தங்கள் வெள்ளை துணியால் ஒரே சீராக போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஒடுக்கு பவனி கோவிலை ஒரு முறை வலம் வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன்பு இறக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே குருதி கொடுக்கும் நிகழ்ச்சி யும் நடந்தது.

    அதை தொடர்ந்து நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. தீபாரா தனை நடந்து கொண்டி ருக்கும்போதே கொடி மரத்தில் கொடி இறக்கப்பட்டது. மண்டைக்காடு கோவில் விழாவில் காலையில் இருந்தே அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கியது. அது போல் கேரளா அரசு போக்குவரத்துக் கழகமும் சிறப்பு பஸ்களை இயக்கியது. திருவனந்தபுரம், தக்கலை, மார்த்தாண்டம், திங்கள்சந்தை போன்ற பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் நடுவூர்க்கரை தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. நாகர்கோவில் பகுதியில் இருந்து வந்த பஸ்கள் புதூர் அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.

    மண்டைக்காட்டில் பக்தர்கள் நேற்று அதிகமாக குவிந்திருந்ததால் பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டனர்.

    ×