search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடுகல்"

    • பாப்பாபட்டி அருகே பழமை வாய்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
    • இங்குள்ள மக்கள் வளரி என்ற ஆயுதத்துடன் நெருங்கிய மற்றும் நீண்ட உறவினை கொண்டுள்ளனர் என்பதனை அறிய முடிகிறது.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டிக்கு தாலுகா பாப்பாபட்டி அருகே உள்ள கிராமம் லிங்கப்பநாயக்கனூர். இந்த ஊருக்கு வடக்கில் நாகமலை தொடர் உள்ளது. இந்த மலையில் ஒரு குன்றின் மீது பரமசிவன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலிக்கு செல்லும் வழித்தடத்தில் மலை அடிவாரத்தில் நடுகல் ஒன்று தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், பட்டி அருண் குமார், சோலை பாலு ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடுகல் சுமார் 4½ அடி உயரத்திலும் சுமார் 3½ அடி அகலத்திலும் உள்ளது.

    இந்த சிற்பத்தில் ஆண் மற்றும் பெண் உருவங்கள் காட்டப்பட்டுள்ளது .இதில் ஆணின் இடது கையில் வளரி, வளைத்தடியும், வலது கையில் வாளை உயர்த்திய நிலையிலும், அருகில் உள்ள பெண் சிற்பத்தின் இடது கையில் மலர் வைத்திருப்பது போலவும், இடது கை தொங்கிய நிலையிலும் காட்டப்பட்டுள்ளது.

    இதில் ஆண் சிற்பத்தில் தலையின் இடது புறம் கொண்டையும், பெண் சிற்பத்தில் தலைக்கு மேலே கொண்டையும் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன.ஆண் மற்றும் பெண் சிற்பங்கள் மேல் ஆடையின்றி இடைக்கு கீழே ஆடையுடனும் நேர்த்தியான அணிகலன்களும் காணப்படுகிறது. இந்த சிற்பம் தோற்றத்தின் அடிப்படையில் சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.

    உசிலம்பட்டி பகுதியில் இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட நடு கற்கள் வளரியுடன் கரு மாத்தூர், கோட்டை ப்பட்டி, கள்ளப்பட்டி போன்ற இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. கருமாத்தூர் அருகே உள்ள கோவிலாங்குளத்தில் இன்றளவும் அங்குள்ள பட்டவன் சுவாமி கோவிலில் மாட்டுப்பொங்கல் அன்று கோவிலுக்கு வளரியை காணிக்கையாக செலுத்தும் பழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல இங்குள்ள குலதெய்வ கோயில்களில் சாமி பெட்டிகளில் வளரி வைத்து வழிபடும் வழக்கம் இந்த பகுதியில் இன்றளவும் உள்ளது. இங்குள்ள மக்கள் வளரி என்ற ஆயுதத்துடன் நெருங்கிய மற்றும் நீண்ட உறவினை கொண்டுள்ளனர் என்பதனை அறிய முடிகிறது.

    • சின்னப்புத்தூா் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
    • பண்டைய மக்கள் வழிபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

    தாராபுரம் :

    திருப்பூரில் இயங்கிவரும் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சோ்ந்த பொறியாளா் சு.ரவிகுமாா், க.பொன்னுசாமி ஆகியோா் தாராபுரம் அருகே உள்ள சின்னப்புத்தூா் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.இந்த ஆய்வில் சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனா்.

    இது குறித்து பொறியாளா் ரவிகுமாா் கூறியதாவது: - பண்டைய தமிழகத்தில் வீரம் காட்டிப் போா் புரிந்து மாண்ட மறத்தமிழா்கள் நினைவாக நடுகற்கள் எடுத்து அவற்றுக்குப் பூச்சூடிப் படையலிட்டு வழிபட்ட மரபை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு வழிபட்டால் மாண்ட வீரா்களின் ஆன்மா தமக்கு நல்லது செய்யும் என்ற நம்பிக்கையில் பண்டைய மக்கள் வழிபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நமது சங்க இலக்கியங்கள் இந்த நடுகற்கள் நடும் இடங்களாக நீா்நிலைகள், பண்டையப் பெருவழிகள், ஊா் மன்றம் மற்றும் சாலைகள் சந்திக்கும் இடம் ஆகியவற்றைச் சுட்டுகின்றன.

    இந்த கிராமத்தைச் சோ்ந்த நாராயணசாமி கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது 50 செ.மீ. உயரமும், 40 செ.மீ. அகலமும், 30 செ.மீ. கனமும் உள்ள இந்த நடுகல் இங்குள்ள ஓா் ஆல மரத்துக்கு கீழ் உள்ளது. இதில் செதுக்கப்பட்டுள்ள இரண்டு மாவீரா்களின் ஓவியத்தில் முதல் மாவீரன் தனது இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் வைத்துள்ளாா். இரண்டாவது மாவீரன் தன் வலது கையில் ஈட்டியும், இடது கையில் கேடயமும் வைத்துச் சற்றே சாய்ந்தவாறு உள்ளாா். இந்த இரு வீரா்களின் அள்ளி முடித்த குடுமியும் மேல்நோக்கி உள்ளன. தோள் வரை தொங்கும் காதுகளில் குண்டலம் அணிந்துள்ளனா். கழுத்தில் கண்டிகை, சரப்பள்ளி போன்ற அணிகலன்களும், கைகளில் தோள்வளை மற்றும் வீரத்துக்கு அடையாளமாக வீரக்காப்பும் அணிந்துள்ளனா்.

    இடையில் மட்டும் மடிந்த மிகவும் நோ்த்தியான ஆடை அணிந்துள்ள இந்த மாவீரா்கள் தங்கள் கால்களில் வீரக்கழலும் அணிந்துள்ளனா். எழுத்துப் பொறிப்பு இல்லாத இந்த நடுகல்லின் சிலை அமைப்பை வைத்துப் பாா்க்கும்போது இது சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். மேலும், இங்கு உடைந்த நிலையில் காணப்படும் கருப்பு-சிவப்புப் பானை ஓடுகள் மற்றும் இரும்புக்கசடுகள் மூலம் சின்னப்புத்தூா் கிராம மக்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கால்நடை வளா்ப்பு, வேளாண்மையுடன் வணிகமும் செய்துவந்ததை அறியமுடிகிறது என்றாா்.

    ×