search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "த்ண்ணீர்"

    • வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வழியாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜ வாய்க்கால்களுக்கு உட்பட்ட 7 ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த ஜூன் மாதம் நீர் திறக்கப்பட்டு அக்டோபர் வரை நீர் வழங்கப்பட்டது. நடப்பாண்டு, தென் மேற்கு பருவ மழை ஏமாற்றியதால் அணைக்கு நீர்வரத்து பெருமளவு பாதித்தது. இதனால் வழக்கமாக ஆகஸ்டு- செப்டம்பர் மாதங்களில் மீதம் உள்ள நிலங்களுக்கு பாசனம், பழைய ராஜவாய்க்கால் பாசனத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு நீர் திறப்பது கேள்விக்குறியானது. இதனால் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களுக்கு இரு முறை உயிர்த்தண்ணீர் மட்டும் வழங்கப்பட்டது.

    புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் பயன்பெறும் 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களுக்கும் உயிர்த்தண்ணீர் மட்டும் வழங்கப்பட்டது.இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த 15 நாட்களாக அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அமராவதி அணையில் மொத்தம் உள்ள 90 அடியில், 74.12 அடி நீர்மட்டம் உள்ளது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில் 2,705.89 மில்லியன் கனஅடி நீர் இருப்பும், நீர்வரத்து வினாடிக்கு 709 கன அடியாக உள்ளது. அமராவதி பழைய ஆயக்கட்டு, ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு இரண்டாம் போகம் நெல் சாகுபடிக்கும், பழைய ஆயக்கட்டு வலது கரை கால்வாய்கள் பாசனம் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களில், நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர் சாகுபடிக்கு நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நீர் இருப்பு எதிர்பார்க்கும் நீர்வரத்து அடிப்படையில் வாட்டர் பட்ஜெட் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அணையில் தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கும் நீர்வரத்தை பொருத்தும், பாசன பகுதிகளிலும் பருவ மழை பெய்யும் போது நீர் தேவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வட கிழக்கு பருவ மழை காலத்தில் அணை நிரம்பி நீர் வீணாகாமல் முழுமையாக பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு இரண்டாம் போகம் நெல் சாகுபடிக்கும், வலது கரை பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் வழங்குவதற்கான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஒரு வாரத்தில் பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×