search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரடி"

    • 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றது.

    தஞ்சாவூர்:

    திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா கொடி ஏற்றம் கடந்த 25-ந்தேதி தொடங்கியது.

    29-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெற்றது. அப்போது 6 ஊர்களிலிருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

    3-ந்தேதி தேரில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற்றது.

    6-ந்தேதி சப்தஸ்தான பெருவிழாவையொட்டி ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் சிவாச்சாரியர்கள் வேத பாராயணம் முழங்க புறப்பட்டு சென்றனர்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லை ஸ்தானத்தில் சங்கமித்தது.

    இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது. நேற்று தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது மழை பெய்தது. இந்த மழையிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றது.நேற்று இரவு காவேரி ஆற்றில் வாணவேடிக்கையும், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீன சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×