search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெய்வ தமிழ் பேரவையினர் கைது"

    • வள்ளலார் சர்வதேச மையத்தை ஞானசபை பெருவெளியில் அமைக்க கூடாதென்றும், இதனால் பூச நடசத்திர நாளில் நடைபெறும் ஜோதி தரிசனம் பாதிக்கும்.
    • கடந்த சில தினங்களுக்கு முன்பாக சர்வதேச மையம் அமைக்க ஞானசபை வெளியில் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் ஞானசபை பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க கடந்த மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இந்த மையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, வள்ளலாரை பின்தொடரும் சன்மார்க்க சங்கத்தினர், அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    வள்ளலார் சர்வதேச மையத்தை ஞானசபை பெருவெளியில் அமைக்க கூடாதென்றும், இதனால் பூச நடசத்திர நாளில் நடைபெறும் ஜோதி தரிசனம் பாதிக்கும். எனவே, சர்வதேச மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், இவர்களுக்கு ஆதரவாக பா.ம.க.வும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

    அடிக்கல் நாட்டு விழாவினை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக சர்வதேச மையம் அமைக்க ஞானசபை வெளியில் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும், சன்மார்க்க சங்கத்தினரும் கடந்த 8-ந் தேதி, குழிக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். அவர்களை கைது செய்த போலீசார், அருகிலிருந்த தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் அன்புமணியின் கண்டனத்தை தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வடலூர் தெய்வத்தமிழ் பேரவை மற்றும் சன்மார்க்க சங்கத்தினர், மற்றும் சன்மார்க்க ஆர்வலர்கள் இணைந்து ஞானசபை பெருவெளியில் சர்வதேச அமைக்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து வடலூர் 4 முனை ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்த வடலூர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்திய போலீசார், 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் வடலூர் நகரப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    வடலூர் ஞானசபை வெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×