search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பைஞ்சீலி"

    திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முன்னொரு காலத்தில் மதுரையில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள வைகை அணை நிரம்பி உடைந்து விட்டது. அந்த உடைப்பை சரிசெய்ய, வீட்டுக்கு ஒருவர் வர வேண்டும் என்று மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் உத்தரவிட்டான். அதன்படி ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு நபர் அந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புட்டு வியாபாரம் செய்யும் ஒரு மூதாட்டி தனது சார்பில் அனுப்ப வீட்டில் ஒரு ஆள் கிடைக்கவில்லையே, இதை அறிந்தால் மன்னனின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று கலங்கி தனக்கு உதவி செய்யும்படி சிவபெருமானை வேண்டினாள். மூதாட்டியின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு சிவபெருமானே கூலி தொழிலாளியாக மாறி மண் சுமந்து வைகை கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அதற்கு கூலியாக மூதாட்டியிடம் புட்டு வாங்கியதாக வரலாறு.

    இதனை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நடைபெறுகிறது. அதன்படி நேற்று இவ்விழா நடைபெற்றது. இதற்காக கோவிலின் வலது புறத்தில் சிறிய அளவு அணை போன்று கட்டப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நீலிவனேஸ்வரர் சிறிய சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து விழா நடக்கும் இடத்திற்கு வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து அங்கு சாமிக்கு கோவிலின் தலைமை அர்ச்சகர் சங்கர் குருக்கள் தலைமையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தண்ணீர் நிரப்பிய அணையில் பூக்கள் தூவப்பட்டது. தொடர்ந்து அணையின் ஒரு ஓரத்தில் உடைப்பு ஏற்பட்டது போல செய்து பின்னர் அதனை மண்வெட்டி மூலம் மண்ணை எடுத்து அடைப்பது போன்று விழா நடைபெற்றது.

    இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருச்சி உதவி ஆணையர் ராணி மேற்பார்வையில் கோவில் செயல் அலுவலர் ஹேமலதா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். 
    ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில். காவிரி வடகரையில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பாடப்பெற்ற 61-வது திருத்தலமாகும். சிவபெருமான் அப்பர் பெருமானாகிய திருநாவுக்கரசருக்கு திருக்கட்டமுது அளித்து காட்சி அருளியதும், அதிகார வல்லவராகிய சிவபெருமான் எமதர்ம ராஜனுக்கு இழந்த பதவியையும், அதிகாரத்தையும், மீண்டும் வழங்கியதும், தேவலோக சப்த கன்னிகள் என்றும் அழியாத வரம் பெற்று கல் வாழைகளாக அவதரித்து ஆண், பெண் இருபாலரின் சகல தோஷங்களை நிவர்த்தி செய்து அவர்கள் எண்ணிய வரம் அளித்து அருள்புரிந்து வருவதான சிறப்பு பெற்ற இக்கோவில் கி.பி.6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதான கோவிலாகும்.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் ஆடிபூரத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆகஸ்டு 13-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு நேற்று கோவிலின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தின் முன்பு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் அனைத்து கிராம பட்டயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமயஅறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பா.ராணி மேற்பார்வையில் செயல் அலுவலர் ஹேமலதா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    ×