search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் உற்பத்தியாளர்கள்"

    • கடந்த மாதம் முதல் வெளிநாட்டு ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது.
    • தங்களுடைய தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்து, நவீன தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளனர்.

     திருப்பூர்:

    இந்தியா-இங்கிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் (எப்.டி.ஏ.) அமைந்தால் ஆயத்த ஆடைகள், ஜவுளித்துறை வர்த்தகம் மேம்படும் என்று பின்னலாடை துறையினர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அதற்கான முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:-இங்கிலாந்து-இந்தியா இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்துக்குள் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறும் என்று மத்திய தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் நிச்சயம் நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதற்காக இங்கிலாந்து நாட்டின் வர்த்தகர்கள், முக்கிய பிராண்டட் ஆடைகளை தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டனர். நிறுவனங்களின் ஆடை தயாரிப்பு திறன், வசதிகள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருக்கு ஆர்டர்கள் வருகை அதிகரிக்கும். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி திறனை வெகுவாக அதிகரித்து வைத்துள்ளது. தங்களுடைய தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்து, நவீன தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளனர்.விரிவாக்கம் செய்யப்பட்ட அளவுக்கு வெளிநாட்டு ஆர்டர்கள் வரவில்லை என்றாலும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மிக குறைந்த அளவே வர்த்தகம் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 5 மாதங்களில் திருப்பூரில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இது கடந்த ஆண்டு 5 மாதங்களை ஒப்பிடும்போது 2.6 சதவீதம் அளவே குறைவு. இது பயப்படும்படியான நிகழ்வு இல்லை.கடந்த மாதம் முதல் வெளிநாட்டு ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.இந்தியா-இங்கிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறினால் திருப்பூருக்கான ஆர்டர் அதிகரிக்கும். அதாவது விரிவாக்கம் செய்யப்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் முழுவீச்சில் ஆடை உற்பத்தியில் ஈடுபட முடியும். அவ்வாறு நடக்கும்போது திருப்பூரில் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்தநிலையில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் 'பிராண்ட் திருப்பூர்' என்ற இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர். வளம்குன்றா வளர்ச்சி என்பது உலக நாடுகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் ஆடைகள் தயாரிப்பு ஆகும். இந்த தொழில்நுட்பத்தை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மீண்டும் சுத்திகரிப்பு செய்து சாய ஆலைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இந்த தொழில்நுட்பத்தில் தினமும் 13 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து அதில் 85 முதல் 90 சதவீதம் நீரை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தண்ணீர் பயன்பாட்டை குறைத்துள்ளனர். சூரியஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலமாக திருப்பூர் தொழில் துறையினர் 2 ஆயிரத்து 500 மெகாவாட் உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு 600 மெகாவாட் மின்சாரம் போதும். மீதம் உள்ள மின்சாரத்தை அரசுக்கு வழங்கி வருகிறார்கள்.திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் தன்னார்வ அமைப்புகள் மூலமாக மரக்கன்றுகள் நடப்பட்டு தற்போது மழையின் அளவை அதிகமாகியிருப்பதாக தெரிவித்தனர். 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்துள்ளனர். ஐ.நா. சபையும் வளம்குன்றா வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது. உலக வர்த்தகர்களும் அதையே விரும்புகிறார்கள்.இவை அனைத்தையும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே கடைபிடித்து செய்து வருவதால் 'பிராண்ட் திருப்பூர்' என்பதை உலக அளவில் தெரியப்படுத்தும் நடவடிக்கையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறும்போது, சர்வதேச பின்னலாடை கண்காட்சி வருகிற 12-ந் தேதி திருப்பூரில் தொடங்க உள்ளது. உலக அளவில் வர்த்தகர்கள் இந்த கண்காட்சிக்கு வர இருக்கிறார்கள். வளம்குன்றா வளர்ச்சியை நோக்கி ஏற்கனவே நாம் பயணப்பட்டு வருகிறோம். இந்த கண்காட்சியின் மூலமாக 'பிராண்ட் திருப்பூர்' என்பதை தெரிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். ஆண்டு முழுவதும் உலக அளவில் வர்த்தகம் செய்யும் தொழில்முறையை கையில் எடுத்துள்ளோம். நிச்சயம் வெற்றி பெறுவோம்' என்றார்.

    • ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு வழங்கப்படும் 3 சதவீத வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
    • கொரோனா சமயத்தில் வழங்கியதை போல மேலும் ஓர் ஆண்டுக்கு கடன் திட்டத்தை தொடர வேண்டும்.

    திருப்பூர்:

    டாலர் நகரம் என்று அழைக்கப்படும் திருப்பூர் பனியன் தயாரிப்பில் பிரசித்தி பெற்றது. இங்கு உள்ளாடைகள் மட்டுமல்லாது டீ -சர்ட், பின்னல் துணியால் ஆன ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் எந்த மூலைக்கு சென்றாலும் திருப்பூரில் இருந்து வரும் பின்னலாடைகளுக்கு தனி மவுசு உள்ளது. அதே போல் இந்திய பின்னலாடைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் தனி மவுசு உண்டு. நிறம், தரம், வடிவமைப்பு என ஏற்றுமதி ஆடைகள் ஐரோப்பிய வாடிக்கையாளர்களை கவர்வதால் வர்த்தகர்களின் முதல் தேர்வாக திருப்பூர் உள்ளது.

    ஆண்டுக்கு 33 ஆயிரம் கோடி ரூபாய் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் 35 ஆயிரம் கோடி ரூபாய் உள்நாட்டு உற்பத்தி என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பின்னலாடை துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

    இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பற்றாக்குறை காரணமாக நூல் விலை கிலோ ஒன்றுக்கு 220 ரூபாயில் இருந்து படிப்படியாக உயர்ந்து 480 ரூபாய் என்ற வரலாறு காணாத உச்ச விலையை பதிவு செய்தது. அது குளிர்கால ஆடைகளுக்கான ஆர்டர்கள் பெறும் சமயம். அடுத்த 6 மாதங்களுக்கான வேலைவாய்ப்பை நிர்ணயம் செய்யும் இந்த சமயத்தில் நூலின் விலை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால் புதிதாக ஆர்டர்கள் பெற ஏற்றுமதியாளர்கள் தயக்கம் காட்டினர்.

    இதன் காரணமாக இந்தியாவிற்கு வர வேண்டிய குளிர்கால ஆடைகளுக்கான ஆர்டர்களை பங்களாதேஷ் தட்டிச்சென்றது. இலவச வர்த்தக ஒப்பந்தம் கைவசம் இருந்ததால் 12 சதவீத வரி விலக்குடன் குறைந்த விலைக்கு பங்களாதேஷ் இந்த ஆர்டர்களை பெற்றது. இதன் விளைவாக ஆர்டர் இன்றி திருப்பூர் பின்னலாடை துறை சரிவை சந்திக்க துவங்கியது. மீண்டும் ஆர்டர்களை பெற ஏற்றுமதியாளர்கள் முயன்ற போது ரஷியா- உக்ரைன் போர் ஐரோப்பாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்நாட்டு மக்களின் வாங்கும் சக்தி குறைந்ததால் ஆர்டர்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்தனர். புதிய ஆர்டர்கள் இல்லாமல் நூல் தேவை குறைந்ததால் மீண்டும் நூல் விலை படிப்படியாக குறைந்து கிலோ 230 ரூபாய் என்ற நிலைக்கு திரும்பி உள்ளது. என்றாலும் ஆர்டர்கள் இல்லாததால் பல நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. புதிய ஆர்டர்கள் பெற ஏற்றுமதியாளர்கள் அதிக அளவில் மாதிரி ஆடைகளை வடிவமைத்து அனுப்பி வருகின்றனர்.

    இந்த ஆர்டர்கள் வந்து சேர இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என்பதால் திருப்பூர் பழைய நிலைக்கு திரும்ப 3 மாதங்கள் வரை ஆகும் எனவும் இந்த நேரத்தில் ஏற்றுமதியாளர்கள் துவண்டு போகாமல் தடுக்க மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பை வழங்கும் பின்னலாடை துறை மீண்டும் புத்துயிர் பெற வரும் மத்திய பட்ஜெட்டில் ஜவுளி துறைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் கூறுகையில்,

    ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு வழங்கப்படும் 3 சதவீத வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். கொரோனா சமயத்தில் வழங்கியதை போல மேலும் ஓர் ஆண்டுக்கு கடன் திட்டத்தை தொடர வேண்டும். மேலும் ஏற்றுமதி துறைக்கு 200 கோடி என்ற கடன் வரம்பை 5 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும். அதிக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அறிவிக்க வேண்டும் என்றார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.என்.சுப்ரமணியம் கூறுகையில்,

    30 ஆண்டுகளாக இல்லாத அளவு பின்னலாடை துறை சரிவை சந்தித்துள்ளது, பஞ்சு விலை ஏற்ற இறக்கம் மற்றும் கொரோனா பாதிப்புக்கு பிறகு இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடன் வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஏற்றுமதி கடன் திரும்ப செலுத்தும் காலக்கெடுவை 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரிக்க வேண்டும். ஐரோப்பாவுடன் பங்களாதேஷ் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்திருப்பது அந்த நாட்டுக்கு கூடுதல் ஆர்டர்களை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்திய அரசும் ஐரோப்பிய நாடுகள் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். கனடா -ஆஸ்திரேலியா நாடுகள் உடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக 30 சதவீத ஆர்டர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

    திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில்,

    70 சதவீதம் அளவிற்கு பின்னலாடை தொழில் முடங்கி உள்ளதாகவும் அதனை மீட்டெடுக்க வங்கி கடன் உதவிகளை தாராளமாக செய்ய வேண்டும். மூலப்பொருளான நூல் விலை ஏற்ற இறக்கத்தை தவிர்க்க பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் . ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம் தரும் பட்ஜெட்டாக அமைய வேண்டும் என்றார்.

    பின்னலாடை உற்பத்தியாளர் செல்வகுமார் தெரிவிக்கையில்,

    வருகிற பட்ஜெட்டில் நூல் விலை சீராக அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும், மாதாமாதம் நூல் விலையில் மாற்றம் வருவதால் ஆர்டர்கள் பெரும்பொழுது ஒரு விலையும், பெற்று தயாரிப்பில் இருக்கும் பொழுது ஒரு விலையும் உள்ளது. இதனால் ஆர்டர்களை முடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு ஒருமுறை நூல் விலை நிர்ணயிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    ×