search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரிய புயல்"

    • சூரிய புயல் தாக்கியதை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் அரிய துருவ ஒளிநிகழ்வை பார்க்க முடிந்தது.
    • சூரிய புயலால் உருவான ஒளிவெள்ளம் இந்தியாவின் லடாக் பகுதியில் வானில் வர்ணஜாலத்தை நிகழ்த்தியது.

    வாஷிங்டன்:

    சூரியனின் மேற்பரப்பில் இருந்து கிளம்பும் மின்காந்த வெடிப்புகள் மற்றும் சக்திவாய்ந்த ஆற்றல்கள் சூரிய புயல் என்று அழைக்கப்படுகிறது.

    சூரிய புயல், புவி மற்றும் அதன் காந்த மண்டலம் உள்ளடக்கிய முழு சூரிய மண்டலத்தையும் தாக்கும்.

    இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூரிய புயல் நேற்று முன்தினம் பூமியை தாக்கியது.

    இதன் எதிரொலியாக பூமியின் வட துருவத்தில் வானில் பல வண்ணங்களில் துருவ ஒளி ('அரோரா பொரியாலிஸ்') தோன்றியது. இந்த ஒளி வெள்ளம் பார்த்தவர்களை பரவசம் அடைய செய்தது.

    சூரிய புயல் தாக்கியதை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் அரிய துருவ ஒளிநிகழ்வை பார்க்க முடிந்தது.

    இந்த ஒளி வெள்ளத்தில், வெளிர்பச்சை நிறம் பொதுவானது. அதோடு, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களும் தோன்றுவது உண்டு. இந்த முறை இளஞ்சிவப்பு நிறமும் காணப்பட்டது.

    பூமியை சூரிய பூயல் தாக்கும்போது மின்கட்டமைப்புகள், தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.

    அந்த வகையில் ஏற்கனவே இது தொடர்பான எச்சரிக்கையை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் (என்ஓஏஏ) தெரிவித்து இருந்தது. அரிதான மற்றும் கடுமையான சூரிய புயலின் விளைவுகள் வார இறுதி வரை மற்றும் அடுத்த வாரம் வரை நீடிக்கும் என்றும், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் செயற்கைக்கோள்களை இயக்குபவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் என்ஓஏஏ எச்சரித்தது.

    இதனிடையே சூரிய புயலால் வானில் உருவான ஒளிவெள்ளத்தை கண்டு ரசித்த மக்கள் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். துருவ ஒளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

    இதற்கு முன்னர் கடந்த 2003-ம் ஆண்டு சூரிய புயல் தாக்கியதும், அப்போது சுவீடன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் மின் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சூரிய புயலால் உருவான ஒளிவெள்ளம் இந்தியாவின் லடாக் பகுதியிலும் வானில் வர்ணஜாலத்தை நிகழ்த்தியது. லடாக்கின் ஹான்லே நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி முதல் வானில் சிவப்பு ஒளி தோன்றியது. இது நேற்று அதிகாலை வரை தொடர்ந்தது.

    இது குறித்து ஹான்லே டார்க் ஸ்கை ரிசர்வ் அமைப்பின் என்ஜினீயர் ஸ்டான்சின் நோர்லா கூறுகையில், "வழக்கமான தொலைநோக்கி கண்காணிப்பின்போது எங்கள் ஆல்-ஸ்கை கேமராவில் 'துருவ ஒளி' செயல்பாடுகளைக் காணும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது. அடிவானத்தில் உருவான சிவப்பு ஒளி வெள்ளத்தை வெறும் கண்களால் காண முடிந்தது. இந்த அரிய நிகழ்வு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை தொடர்ந்தது" என்றார்.

    ×