search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுங்கச்சாவடி வசூலிக்க முடிவு"

    • கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • கட்டண சுங்கச்சாவடி கட்டமைப்பு அமைத்து சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா தலைமையில் நடைபெற்றது. கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் முத்துமாரி சுரேஷ் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக் பேசுகையில், பெருமாள்மலை முதல்அடுக்கம் பிரிவு வரை உள்ள பிரதான சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும், மேலும் அந்தப் பகுதி சாலையோரங்களில் முறிந்து விழும் நிலையில் உள்ள பட்டுப்போன யூக்கலிப்டஸ் மரங்களை உடனடியாக அகற்ற வனத்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    இங்குள்ள கிராம பகுதியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் 470 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். மாணவிகளின் சிரமத்தை போக்க மாவட்டக் கல்வி அலுவலரிடம் அறிவுறுத்தி இப்பகுதியில் உள்ள பள்ளிகளை இன்னும் தரம் உயர்த்த வேண்டும் என்றார்.

    இதுபோல் ஒன்றிய கவுன்சிலர் பூங்கொடி சுரேஷ் பேசுகையில், தங்கள் பகுதியில் குப்பைகள் அதிகளவில் குவிந்துள்ளது. குடிநீர் வசதி முறையாக வழங்கப்படுவதில்லை. குழந்தைகள் படிக்கும் பள்ளி மற்றும் மக்கள் அதிகம் கூடும் ரேஷன் கடை அருகிலும் குப்பைகள் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.

    வில்பட்டி பகுதி ஒன்றிய குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன் தங்கள் பகுதிகளில் மக்காத குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தெருப்பகுதிகளில் உள்ள சாலைகளை சிமெண்ட் சாலையாக மாற்ற வேண்டும். வில்பட்டியில் இருந்து கோவில்பட்டி வரை செல்லும் சாலையையும் சிமெண்ட் சாலையாக மாற்ற வேண்டும் என்றார்.

    மேல் மலைப்பகுதி ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் பேசுகையில், 2 பஞ்சாயத்துகளுக்கு ஒரு டிராக்டர் வீதம் அமைத்து குப்பைகளை அகற்ற பயன்படுத்துவதற்கும், கிராம பகுதியில் முக்கியமாக தெரு விளக்குகள் முறையாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரிகா மற்றும் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் தெரு விளக்கு, குடிநீர்வசதி, சுகாதாரம் அனைத்தையும் மேம்படுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    பேத்துப்பாறை ஆதி மனிதன் குகை, ஐந்தருவி செல்லும் பகுதி, பூம்பாறை குழந்தை வேலப்பர் முருகன் கோவில் காட்சி முனைகள் செல்லும் பகுதி, மன்னவனூர்சூழல் சுற்றுலா பூங்கா, ஏரிப் பகுதிக்குச் செல்லும் வழிகள், கூக்கால் ஏரி, நீர்வீழ்ச்சி காட்சி முனைகள் ஆகிய இடங்களில் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் கட்டண சுங்கச்சாவடி கட்டமைப்பு அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும். அந்த தொகை அதன் தொடர்புடைய கிராம ஊராட்சியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட பயன்படுத்தப்படும் என்றனர். இது மன்றத்தில் தீர்மானமாக வைக்கப்பட்டது.

    ×