search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு கட்டுரை"

    • ஒப்பிட்டுப் பார்த்து வாழத்தொடங்கினால் பெரும்பாலும் துன்பமே மிஞ்சும்.
    • வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றையே மூலதனமாக்கினால் எந்நாளும் வெற்றிதான்

    ஒப்பீடு செய்வதால் உன்னதம் காணமுடியாது என்பதை நம்பும் இனிய வாசகர்களே! வணக்கம்.!.

    நம் எல்லாருக்கும் வாழ்க்கை வழங்கப்பட்டிருக்கிறது; வாழ்க்கையை வாழ்வது என்பது பள்ளிக்கூடப் பாடங்களில் பரீட்சை எழுதுவதுபோலப் பல நேரங்களில் கடினமானதாகத்தான் இருக்கிறது.

    வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் தேர்வு என்றால், அது ஒரே மாதிரியான தேர்வு அல்ல!; வழங்கப்பட்டிருக்கிற கேள்வித்தாளும் ஒரே மாதிரி கேள்வித்தாள் கிடையாது!; ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கேள்வித்தாள்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.

    எனவே நமக்கான தேர்வை நாம் மட்டுமே எழுதியாக வேண்டும். அடுத்தவரைப் பார்த்து எழுதவோ, அடுத்தவரோடு ஒப்பிட்டுப் பார்க்கவோ முடியவே முடியாத வினோதமானது நமது வாழ்க்கை.

    அவர்களது வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொள்கிறார்கள்!. நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்துவிட்டுப் போவோமே!. அவரைப் போல வாழ்!;

    இவரைப் போல வாழ்! என்று சிலரை முன்மாதிரிகளாகவோ, எடுத்துக் காட்டுகளாகவோ வைத்துக் கொள்ளலாமேயொழிய, அவரோடு நாம்!, இவரோடு நாம்! என்று ஒப்பிட்டுப் பார்த்து வாழத் தொடங்கினால் பெரும்பாலும் துன்பமே மிஞ்சும்.

    ஒப்பீடு செய்வதன்மூலம் சிறந்தவற்றைக் கண்டறிய முடியும்! என்று சிலர் கூறலாம். ஆனால் எந்த வகையிலும் சமமாகவோ பொருத்தமாகவோ இல்லாதவரோடு ஒப்பீடுகள் நிகழ்த்தி நிகழ்த்தியே உருப்படாமல் போன கதைதான் இங்கு அதிகம்.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஒப்பிடும் குணத்தை அவனது குழந்தைப் பருவத்திலேயே, பெற்றோர்கள் உசுப்பிவிட்டு விடுகிறார்கள்." அண்ணனைப் பார்! தம்பியைப் பார்! அக்காவைப் பார்! தங்கையைப் பார்!" என்று உடன்பிறந்தோரில் தொடங்கி, அண்டை வீடு, அயல் வீடு, உடன் படிப்போர், ஊடகங்களில் வரும் சாதனைகள் புரிவோர் … என எந்த அளவீடுகளும் இல்லாமல் எல்லாருடனும் ஒப்பிடத் தொடங்கி விடுவார்கள்.

    உயரமாக,குள்ளமாக, குண்டாக, ஒல்லியாக, வெள்ளையாக, கறுப்பாக, முடி அடர்த்தியாக, நீளமாக, என உருவத்தில் தொடங்கி, உண்ணுகிற உணவு, படிக்கிற படிப்பு, எடுக்கிற மதிப்பெண், விளையாடுகிற விளையாட்டு, சாதிக்கிற சாதனைகள் வரை எல்லாவற்றிலும் ஒப்பீடுகள்.

    ஒப்பீடுகள் பெரும்பாலும் திட்டல்களில் தொடங்கி, 'நீ எங்கே உருப்படப் போறே!' என்று சாபங்களிலேயே நிறைவு செய்வார்கள்!. குழந்தைப் பருவத்தில் பெற்றோரிடமிருந்து பற்றிக்கொள்ளும் ஒப்பிடும் குணம் கடைசிவரை மாற மறுக்கிறது.

    பெரும்பாலும் நமது ஒப்பிடும் குணம் நம்மில் இருந்தே தொடங்குகிறது; அடுத்தவர்கள் நம்மைவிட எவ்வளவு தூரம் நல்ல நிலையில் இருக்கிறார்கள்? என்று சிந்திக்கத் தொடங்கும் அடிப்படையிலேயே ஒருவிதப் பொறாமைகுணம் நம்மை அறியாமலேயே நம்மிடம் ஒட்டிக்கொள்ளத் தொடங்கி விடுகிறது.

    பொறாமை எனும் தீக்குணம் நம்மிடம் வந்துவிட்டால், வஞ்சனை, கோபம், சூழ்ச்சி,பொய், களவு என அத்தனை பேய்க்குணங்களும் மனித மனத்தை ஆட்டிப் படைக்க ஆரம்பித்துவிடுகின்றன.

    அடுத்தவரோடு நம்மை ஒப்பிட்டுநோக்கிப் பார்ப்பதன்மூலம், 'அவரைப்போல நாமும் உழைக்க வேண்டும்!, அவரைப்போலப் படித்து முன்னேற வேண்டும்!, அவரைப்போல நல்ல வேலையில் அமர வேண்டும்!,

    அவரைப்போல செல்வந்தர் ஆகவேண்டும், அவரைப்போல நல்ல மனிதராக வலம் வர வேண்டும்!,அவரைப்போலச் சாதனைகள் புரிய வேண்டும்!' என நமக்கு நாமே ஊக்கம் அடைந்துகொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு என்று சிலர் கருதலாம். ஆனால் பெரும்பாலான தருணங்களில் ஒப்பீடுகள் நேர்முறை விளைவுகளைவிட எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கி விடுகின்றன.

    ஒப்பிட்டுப் பார்ப்பதில் அடிப்படையில் தவறு இல்லை; ஆனால் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கும்போதே ஒருவகை எதிர்மறைகுணம் நமக்குள் வந்து அமர்ந்து கொள்வதால், எதிர்மறைச் சிந்தனையோடு, அடுத்தவர்களைப் பற்றிய தவறான கணிப்புகளையும் நாக்கூசாமல் பேசவும், விரல்கூசாமல் எழுதவும் தொடங்கி விடுகிறோம். இதுவே நம்மைத் தீயவர்களாக மாற்றி விடுகிறது.

    ஜப்பானிய சாமுராய் வீரர்கள் பெரும்பலம் பொருந்திய மகா வீரர்கள். நாட்டிற்காக உயிரையும் துச்சமென மதித்துப் போரிடுபவர்கள். அப்படிப்பட்ட சாமுராய் வீரர்களில் ஒருவன், அந்த ஊரில் இருந்த புகழ்மிக்க ஜென் மத குருவைக் காணச் சென்றிருந்தான். அதிகாலை நேரத்திலேயே மடத்திற்குச் சென்றுவிட்டான்.

    குரு ஆசுவாசமாக எழுந்து காலைப் பிரார்த்தனை, தியானம் போன்றவற்றை வரிசைக் கிரமமாகச் செய்துவிட்டு சாமுராய் வீரனை மெல்லிய புன்னகையோடு வரவேற்று வந்த காரியத்தை வினவினார்.

    கொஞ்சம் படபடப்போடு காணப்பட்ட வீரன் பேசத் தொடங்கினான், " குருவே நான் ஒரு சாமுராய் வீரன். நீங்கள் எப்படி இங்கிருந்துகொண்டு ஆன்மீக அடிப்படையில் நாட்டுமக்களின் அமைதிக்குப் பாடுபடுகிறீர்களோ, அதைப்போல நான் போர்முனையில் இருந்து கொண்டு நாட்டுமக்களின் அமைதிக்குப் பாடுபட்டு வருகிறேன்!.

    நாலைந்துமுறை சாவின் விளிம்புவரை சென்று வந்திருக்கிறேன். கோழைகளாய் இருந்து சாவைச் சந்திக்க இருந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை எனது வாள்முனையில் காப்பாற்றி இருக்கிறேன்."

    சாமுராய் வீரன் எதற்காக இந்தப் பீடிகை போடுகிறான்? என்ன கூற வருகிறான்? என்பதை முன்கூட்டியே ஊகித்தறியும் அவசரமில்லாமல் ஜென் குரு அமைதியான புன்னகையோடு செவிமடுத்துக் கொண்டிருந்தார்.

    சாமுராய் மேலும் தொடர்ந்தான்." இவற்றை யெல்லாம் நான் ஏன் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றால், அடிப்படையில் நீங்களும் நானும் ஒரே நோக்கத்திற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்! என்பதை விளங்க வைப்பதற்குத்தான். நாடும் மக்களும் அமைதியாக வாழவேண்டும் என்பதே நம் இருவரின் நோக்கமாகவும் இருக்கிறது!"

    "இதில் இங்கு நான் வந்ததற்கான காரணம் என்ன வென்றால், என் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கிற அடிப்படையான ஒரு வினாவை உங்களிடம் கேட்டுத் தெளிவுபெற்றுச் செல்ல வேண்டும் என்பதுதான். "

    "துறவியாகிய நீங்களும் போர்வீரனாகிய நானும் ஒரே நோக்கத்திற்காக வாழ்கிறோம் என்றாலும், நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுகிறீர்கள், எந்த வேலையும் செய்யாமல் தியானம் என்ற பெயரில் உட்கார்ந்தே அனுபவிக்கிறீர்கள்;

    காலத்தைக் கழிக்கிறீர்கள், காலைமுதல் மாலை வரை ஏராளமான மக்கள் வந்து உங்களுக்கு வணக்கம் சொல்கிறார்கள்; உங்களிடம் கடவுளைப்போல ஆலோசனை கேட்டுப் போகிறார்கள்;

    நீங்களும் எந்த சிரமமும்படாமல் சிரித்த முகத்தோடு ஆசீர்வாதங்களை அள்ளி வழங்குகிறீர்கள்!. நானோ அன்றாடம் வேகாத வெயிலில் போர்ப் பயிற்சியிலும், போர்முனைகளிலும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறேன்!. இது எந்த வகையில் நியாயம்?" என்று கேட்டான் சாமுராய்.

    "இப்போது என்னைச் சந்தித்து ஆலோசனையும் ஆசீர்வாதங்களும் பெறுவதற்காக நிறைய அன்பர்கள் வந்து மடத்தில் காத்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு வந்து உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்;

    மாலைவரை காத்திரு!" என்று கூறிவிட்டு ஜென்குரு அன்பர்களைக் காணச் சென்றுவிட்டார். அங்கே வந்திருந்த ஒவ்வொருவருக்கும் புன்னகை மாறாத முகத்தோடு ஆசி வழங்கினார் துறவி.

    மாலைநேரம் கடந்து இருட்டத் தொடங்கிவிட்டது. துறவியைக் காணவந்திருந்த அனைவரும் சென்று விட்டனர். இப்போது துறவி, சாமுராயை உள்ளே தன் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அமைதியான இருள்; வானத்தில் நிலவு வந்து தன் வெளிச்சக் கிரணங்களைப் பரப்பத் தொடங்கியிருந்தது.

    துறவி பேசினார்," வீரனே வா!. இந்த வானத்தை பார்! மெல்லிய வெளிச்சத்தை பூமி முழுவதும் பரப்புவதற்காக அமைதியாக வந்துகொண்டிருக்கும் நிலவைப் பார். இனி விடியும் வரை வானத்திலும் பூமியிலும் இந்த நிலவின் ஆட்சிதான். நாளை விடிந்தவுடன் சூரியன் வந்து விடும்;

    அதன் ஒளியாட்சி தொடங்கிவிடும். பகலின் சூரிய ஒளியில் இப்போது மங்கலாகத் தெரிபவை எல்லாம் துல்லியமாகக் காட்சியளிக்கும். மலை, அருவி, கடல், வயல் என அனைத்தும் இரவின் நிலவொளியில் தெரிந்ததைவிடப் பன்மடங்குத் தெளிவாகச் சூரிய ஒளியில் தெரியும்."

    `நாம் இப்போதைய இரவிலும் நிலவைப் பயன்கொள்கிறோம்; நாளைய பகலில் சூரியனையும் பயன்கொள்கிறோம். என்னுடைய பயன் குறைவு என்று நிலவோ என்னுடைய பயன் கூடுதல் என்று சூரியனோ எந்த நேரத்திலும் குறைப்பட்டுக் கொண்டதாகவோ, மார்தட்டிக் கொண்டதாகவோ இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. ஏனென்றால் அவை ஒன்றையொன்று ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை!" என்றார் துறவி.

    படைப்புகள் அனைத்தும் அவ்வவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வியல் குறிக்கோள்களோடு வாழத் தொடங்கினாலே போதும். அவற்றின் பிறவிப்பயன் அடுத்தவர்க்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

    அடுத்தவர் கட்டியிருக்கும் வீட்டையோ, வாங்கியிருக்கும் பொருள்களையோ, வாழுகின்ற வசதியான வாழ்க்கையையோ நம்முடையவற்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் தேவையற்ற பொருள் விரயத்தையும் அதனால் பெரும்பான்மை நேர விரயத்தையும் நாம் சந்திக்க நேரிடும்.

    பொறாமையில் பொசுங்கிடும் மனம் என்றுமே வளமாகச் சிந்திக்கும் திராணியற்றுப் போய்விடும். முடிவற்ற மகிழ்ச்சியின்மையைச் சந்திக்க நேரிடும். மொத்தத்தில் நம்மை அடுத்தவரோடு ஒப்பிடத்தொடங்கி விட்டால், நமக்கு நாமே பின்னோக்கி ஓடத் தொடங்கிவிட்டோம் என்று பொருள்.

    வாழ்க்கையில் வெற்றி எனும் இலக்கு நமக்கு எப்போதும் முன்னோக்கியதாகவே இருக்கிறது. ஓடுகிற குதிரையின் பார்வை முன்னோக்கியதாக இல்லாமல் பக்கவாட்டுகளைப் பார்த்துக்கொண்டே ஓடுவதாக இருந்தால், அக்குதிரை நிச்சயம் ஊர்போய்ச் சேராது. அதுபோன்றதுதான் நமது வாழ்வியல் இலக்குநோக்கிய பயணங்களும்; பக்கவாட்டுகளைப் பார்த்துக்கொண்டு ஓடாமல் தேங்கிவிடுவதுதான் ஒப்பிடுகிற வாழ்க்கை.

    அவர் வாழ்க்கையின் வடிவம் அப்படி; நம் வாழ்க்கையின் வடிவம் இப்படி என்று நமதைப் பற்றிய எண்ணங்களோடு வாழ்க்கையில் பயணப்பட்டால் நமக்குள் தாழ்வுமனப்பான்மை ஏற்படாது.

    தம்மைப் பற்றிய கழிவிரக்கம்!, அடுத்தவர் பற்றிய உயர்வு நவிற்சி! இவை இரண்டையும் கை விட்டாலே போதும்; எல்லா ஒப்பீடுகளும் தூள் தூளாகிப் போகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே கணியன் பூங்குன்றன் சொன்னான்,' மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!'

    பொதுவாக நமக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்தால் நமக்குப் பொறாமை வரும்!; நமக்குக் கீழே உள்ளவர்களைப் பார்த்தால் நாம் எவ்வளவோ பரவாயில்லையே என மகிழ்ச்சி வரும். இந்த இரண்டு உணர்ச்சிகளில் பொறாமையைப் போட்டியாக மாற்றும் உத்தியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினால், போதுமென்கிற மகிழ்ச்சியை மூலதனமாக்கி வெற்றி காணாலாம்.

    அவரவர் பாதையில் அவரவர் பயணம் என்கிறபோது, இதில் போட்டி எதற்கு? பொறாமை எதற்கு?

    வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றையே மூலதனமாக்கினால் எந்நாளும் வெற்றிதான்!

    போட்டிகள், ஒப்பீடுகள் விளையாட்டில் இருக்கலாம்!

    வாழ்க்கையில் எதற்கு?

    தொடர்புக்கு 943190098

    • வைராக்கியம் என்றால் என்ன?
    • ஞான வைராக்கியம் என்பது ஆத்மா சார்ந்தது.

    அன்பார்ந்த வாசகர்களே, கடந்த வாரம், வைராக்கியம் என்றால் என்ன? நாம் எந்த வைராக்கியத்தில் இருக்கிறோம் என்பதை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய நேரம் இது என்று பார்த்தோம். நம்முடைய வேதாந்தம் சொல்வது என்னவென்றால் "கோப வைராக்கியா, துக்க வைராக்கியா, சிந்தனை வைராக்கியா, ஞான வைராக்கியா" என்கிறது.

    கோப வைராக்கியம்: என்பது நாம் ஒருவர் மீது கோபம் வந்து விட்டால், வாக்கு வாதத்தில் இனி என் முகத்தில் முழிக்காதே, உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று சொல்கிறோம்.

    ஆனால் அந்த உணர்ச்சி நிலையில் இருந்து நாம் உணர்வு நிலைக்கு திரும்பியவுடன் அந்த வைராக்கியம் நம்மை விட்டு விலகுகிறது, ஆனால் வார்த்தைகள் மட்டும் விலகுவது இல்லை. எனவே கோப வைராக்கியத்தை நாம் விட்டுவிட வேண்டும். ஏனெனில் அது நிரந்தரம் அல்ல.

    துக்க வைராக்கியம்: என்பது நம் வாழ்வில் ஏதாவது நடக்க கூடாதது நடந்து விட்டால் என் வாழ்க்கையே தொலைந்து விட்டது. இனி நான் எப்படி வாழ்வேன் என்று புலம்பி கொண்டும் அழுது கொண்டும் இருக்கிறோம்.

    உதாரணத்திற்கு நமக்கு நெருங்கிய உறவுகள் யாராவது மரணம் அடைந்து விட்டால், நம் வாழ்வே பறிபோனது போல் ஒரு உணர்வுக்கு ஆட்பட்டு விடுகிறோம். ஆனால் ஒரு சில நாட்கள் செல்ல செல்ல, நாம் இயல்பு நிலைக்கு வந்து விடுகிறோம். அன்று ஏற்பட்ட துக்கம் இன்று எங்கே போனது என்பதை பற்றி நாம் சிந்திப்பது இல்லை.

    வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். இன்பத்தை ஏற்று கொள்ளும் நாம் துன்பத்தை ஏற்று கொள்ள ஏன் மறுக்கிறோம்? எனவே துக்க வைராக்கியத்தை நாம் விட்டுவிட வேண்டும். ஏனெனில் அது நிரந்தரம் அல்ல.

    சிந்தனை வைராக்கியம்: என்பது மனம் பற்றியது. மனம் அமைதி நிலையில் இருக்கும் போது சில முடிவுகளை எடுப்போம். உதாரணத்திற்கு இந்த புத்தாண்டில் இருந்து நான் இந்த இந்த விஷயங்களில் சில விதிமுறைகளை கடைபிடிப்பேன். சில பழக்கங்களை விட்டு விடுவேன் என்று சபதம் எடுக்கிறோம்.

    ஆனால் அந்த வைராக்கியம் நிறைய மனிதர்களுக்கு நீண்ட காலம் நிலைப்பது இல்லை. வாழ்க்கை சக்கரத்தில், சுழற்சியில் மாட்டி கொண்டு, துன்பம் வரும் போது, மனம் துவண்டு விடும்போது நம் சபதம் எல்லாம் மறைந்து விடுகிறது.

    எனவே சிந்தனையில் தெளிவு வேண்டும். இல்லை என்றால் சிந்தனை வைராக்கியத்தில் வெற்றி பெற முடியாது. மனம் எப்போதும் அமைதி நிலையில் இருந்தால் தான் வெற்றி பெற முடியும்.

    ஞான வைராக்கியம்: என்பது ஒரு முடிவை எடுத்து விட்டால் அதில் வாழ்நாள் முழுவதும் என்ன துன்பங்கள் வந்தாலும் தான் எடுத்த கொள்கையில் மாறாது இருக்க வேண்டும். முதலில் சொன்னது எல்லாம் உடல், மற்றும் மனம் சார்ந்து வருவது ஆகும். ஆனால் ஞான வைராக்கியம் என்பது ஆத்மா சார்ந்தது.

    ஆத்மா என்பது அழிவு இல்லாதது. நிரந்தரம் ஆனது. மற்றது அனைத்தும் ஒரு நாள் அழியக்கூடியது. எனவே வாழும் காலத்திலேயே பிறவி பயனை அடைவதற்கு உடல், மனம், உயிர், குணம், ஆத்மா சார்ந்து, இயற்கையோடு சேர்ந்து கொண்டு வாழ்ந்தால், ஞான வைராக்கியம் கிடைக்கும்.

    வாழ்வில் எது நடந்தாலும் மனதை சமநிலையில் வைத்து பழகி கொள்ள வேண்டும். அதனால், புலன்கள் நம் கட்டுக்குள் இருக்கும். இதற்கு நாம் ஆன்மிகத்தையும் அறிவியலையும் இணைக்க வேண்டும்.

    விஞ்ஞானமும், மெய்ஞானமும் சேர்ந்தால் உலகம் அைமதியாகும். ஏனெனில் விஞ்ஞானம் என்பது விண்பற்றிய அறிவியல். மெய் ஞானம் என்பது இறைவன் மற்றும் நம்மை பற்றிய அறிவாகும். இதை உணராமல் இருப்பதால் தான் கர்ம வினை பதிவுகளில் சிக்கி, நமது ஆயுளை நாமே குறைத்து கொள்கிறோம்.

    ஒரு விஷயத்தை நாம் சிந்திக்க வேண்டும். அது என்னவென்றால், விஞ்ஞானம் என்றால் ஆராய்சி என்று பொருள். எனவே விஞ்ஞானத்திற்கு, ஒன்றை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஒரு பொருள் தேவை.

    பொருள் என்கின்ற ஒன்று இருந்தால் தான் விஞ்ஞானத்தால் ஆராய்ச்சியை தொடரமுடியும். பொருள் இல்லாமல் ஆராய்ச்சி செய்ய முடியாது. விஞ்ஞானத்தின் ஆரம்பம் ஆனது பொருளில் தொடங்கி அதன் முடிவு இருளில் முடியும். இருள் என்பது இறைவன். அந்த இடத்திலே ஒன்றும் இல்லை.

    அதனை தான் மகான்கள் பாழ், இருள், சூனியம், ஆதி, சுத்தவெளி, கடவுள், இறைவன், என்று நாம் சொல்கிறோம்.

    ஆனால் மெய்ஞானம் என்பது, விஞ்ஞானம் எதில் முடிந்ததோ (இருள்) அதில் தான் தொடங்கும். இருளில் தொடங்கும் மெய்ஞானம் நமக்கு உள்ளே முடியும். முடிவு என்பது நானாக இருக்கும் போது,அண்டத்தில் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவை அனைத்தும் இந்த பிண்டத்தில் உள்ளது என்கின்ற உண்மை விளங்கும். இது தான் ஞான வைராக்கிய நிலையாகும்.

    இந்த நிலை வந்து விட்டால் நமது எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் மூச்சின் எண்ணிக்கையும் குறையும். இதனால் மனம் அமைதி நிலை பெறும்.

    இந்த நிலையில், நம் மனதிலே உதிக்கின்ற எண்ணங்களின் வெளிப்பாடு, சொல்லாக மாறி, நல்ல செயலிலே முடியும். இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், நமது மனம் ஆனது விரிந்த நிலையில், நல்ல எண்ணங்களும், மனம் குறுகிய நிலையில் தீய எண்ணங்களும் உருவாகும் என்று குறிப்பிடுகிறார்.

    மனம் விரியும் போது, நமது எண்ணங்கள் நமக்கும் பிறருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காத எண்ணங்களாக மலர்கிறது. இது கர்ம வினை பதிவுகளில் இருந்து, நம்மை விடுவித்து கொள்ளும் வழியாகும்.

    குறுகும் மனம் ஆசை, துன்பத்தை தரக்கூடிய எண்ணங்களாக மலரும் போது, நமக்கும் பிறருக்கும், தீமையை உருவாக்குகிறது. இதனால் நமக்கு தீமை தரக்கூடிய பதிவுகள் சேருகிறது.

    எனவே எந்த ஒன்றுக்கும் ஆரம்பம் இறைவன் என்றால் அது முடியும் இடம் நம்முடைய மனம் ஆகும். அசையாமல் இருந்தால் சிவம். அது அசைந்தால் மனம். எனவே ஞான வைராக்கியத்திலே நமக்குள்ளாக அடிக்கடி நான் சிவமா? அல்லது மனமா என்ற கேள்வியை எழுப்பி கொண்டே இருக்க வேண்டும். இதை தான் அக ஆராய்ச்சி என்கிறோம்.

    உதாரணத்திற்கு நாம் உடலை அசைத்து நடந்து செல்லும் போது, நம்மோடு எந்த அசைவும் இல்லாமல், நமக்குள்ளாக ஒன்று வந்து கொண்டு இருக்கிறதே அது யார்? எனக்கு தலை வலி, உடல் வலி, காய்ச்சல் என்று சொல்கிறோமே, அது உடலுக்கா அல்லது உள்ளே உள்ள ஒன்றுக்கா?

    எனக்கு பசி எடுக்கிறது என்று சொல்கி–றோமே எனக்கா அல்லது உள்ளே உள்ள ஒன்றுக்கா? -இப்படி என்றாவது நாம், நம் சுகத்தை நோக்கி ஆராய்ச்சி செய்து இருக்கிறோமா?

    இதில் ஆச்சரியம் என்னவென்றால், மேலே நாம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும், எந்த வித தொடர்பும் இல்லாமல், எந்த கர்ம வினை பதிவுகளோடும் தொடர்பு இல்லாமல், எந்த பொருள் மற்றும் உறவுகளோடு பற்றும் இல்லாமல் உள்ளே ஒன்று இருக்கிறதே அது யார்?

    இதை அடிக்கடி நாம் நமக்குள்ளாக கேள்வியாக எழுப்பும் போது, அதுவே சர்வ வல்லமை பொருந்திய ஆத்மா என்பது தெரிய வரும்.

    ஒரு கட்டத்தில் இந்த ஞான வைராக்கியம் மலரும் போது, இந்த உடல், மனம், உயிர், பொருள் அல்ல நான், ஏகமாக எங்கும் உள்ள இறைவனின் சொரூபமான ஆத்மாமே நான் என்பது விளங்கும். அப்படி தன்னை ஆத்மாவாக உணர்ந்தவர்களை தான் 'ஆத்மஸ்வருபி' என்று அழைக்கிறோம்.

    அந்த நிலையில், நாம் காணும் காட்சிகள், பொருட்கள், நபர்கள் அனைத்தும் இறைவனின் பிம்பங்களாகவே தெரியும். இதை தான் 'சர்வம் பிரம்ம மயம்' என்று கூறுகிறோம்.

    அப்படி ஞான வைராக்கியத்திலே எல்லாம் இறை காட்சிகளாக தெரிந்தால், நம்மோடு தினமும் நம்முைடய குடும்பத்திலே உறவாடி கொண்டு இருக்கின்ற உறவுகளான கணவர், மனைவி, குழந்தைகள், தாய், தந்தை, சகோதர சகோதரிகள் இவர்கள் எல்லாம் யார்? அனைவரும் இறைவனின் பிம்பங்களே!

    இந்த நிலை வந்து விட்டால் நமக்குள்ளே எந்த பகையும், வெறுப்பும் வராது. குடும்பத்திலே சச்சரவுகள் எதுவும் வராது. இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அமைதி என்பது தனி மனிதரில் ஆரம்பித்து, குடும்ப அமைதியாக மாறி, அது சுற்றத்தை மாற்றி, சுற்றம் ஆனது ஊரையே மாற்றி, ஊர் ஆனது உலகத்தை மாற்றி உலகம் முழுவதும் அமைதியை கொடுக்கும் வல்லமை படைத்தது தான் இந்த ஞான வைராக்கியம்.

    இதை நம்மில் இருந்து தான் தொடங்க வேண்டும். தொடக்கம் என்னில் இருந்து என்றால், நான் எப்பேற்பட்டவன், எனக்குள் உள்ள பலம் என்ன என்பதை தெரிந்து கொண்டு, நமக்குள் உள்ள தெய்வீகத்தை முறையாக வெளிபடுத்த வேண்டும். அப்படி செய்தால் நான் வாழும் காலத்திலேயே ஞானம் அடைந்தவராக மாறுவோம் என்பதில் சந்தேகமே இல்லை.

    இறைவன் நம்மை பல பிறவிகள் கடக்க வைத்து, இறுதி பிறவியான மனிதனாக ஒரு தாயின் வயிற்றில் நம்மை உருவாக்கி, அதனோடு நமக்கான கர்மாவையும் கொடுத்து இருக்கிறார் என்றால், நாம் எவ்வளவு புண்ணி யம் செய்தவர்கள்.

    எனவே நான் ஏன் பிறந்தேனோ என்று சலிப்பு அடையாமல், இந்த பிறவியை கொடுத்த இறைவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இதன் மூலம் நமது வாழ்க்கை முழுமையடையும். அந்த முழுமை பேறு பற்றி ஆராய்ச்சி தொடரும்.

    மனவளக்கலை பேராசிரியர்கள்

    கி. சௌமித்ரன்,

    பொன்னி சௌமித்ரன்

    போன்: 9444234348

    • நாட்டின் பிரச்சினைகள் பற்றி பொது விவாதம் நடத்த வேண்டும்.
    • வேட்பாளர்களின் கருத்துகளை தெரிந்து கொள்ள இது ஒரு அருமையான ஏற்பாடு.

    உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் மதன் லாகூர், ஏபி ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் இந்து ராம் ஆகியோர் சமீபத்தில் ஒரு அழைப்பு விடுத்தனர். பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாட்டின் பிரச்சினைகள் பற்றி பொது விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

    மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், இத்தகைய விவாதங்கள் எப்போதும் நடந்து வருகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பு ஜனாதிபதி வேட்பாளர்கள் பல்வேறு நேருக்கு நேர் விவாதங்களில் கலந்து கொள்வார்கள்.

    நாட்டின் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவற்றைப் பற்றிய வேட்பாளர்களின் கருத்துகளை வாக்காளர்கள் நேரடியாகத் தெரிந்து கொள்ள இது ஒரு அருமையான ஏற்பாடு. விவாதங்களின் சிறப்பு மற்றும் வேட்பாளர்களின் அணுகுமுறைத் தெளிவு ஆகியவற்றை வைத்து வாக்காளர்கள் முடிவுக்கு வருவார்கள்.

    சில நேரங்களில் நாடு முழுமைக்குமான ஒரே ஒரு பிரச்சினை குறித்த விவாதமும் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. "கிரேட் டிபேட்" என்று இன்றும் அழைக்கப்படும் விவாதம் கூட்டாட்சித் தத்துவத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் சார்பாக நடந்தது.

    அதன் பின்னர் தான் குடிமக்களின் உரிமைகள் குறித்த ஷரத்து அமெரிக்க அரசியலமைப்பில் இடம்பெற்றது. கூட்டாட்சித் தத்துவம் வலிமை பெற்றது.

    அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது. எனவே டிபேட்டுகள் களை கட்டத் துவங்கி விடும். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இன்றைய ஜனாதிபதி ஜோ பைடன் ஆகிய இருவருக்கும் இடையிலான விவாதம் 2020-ல் நடந்தது.

    முன்னதாக "எப்போது வேண்டுமானாலும்- எங்கு வேண்டுமானாலும்- எந்த நேரம் வேண்டுமானாலும்" விவாதத்திற்கு தயார் என்று மார்தட்டினார் டிரம்ப். ஆனால் பல டிபேட்களுக்கு அவர் டிமிக்கி கொடுத்தார். இறுதியாக பைடன் விவாதம் வாக்காளர்கள் மனங்களைக் கவர்ந்தது.

    ஜனாதிபதி வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதிக்கும் நிகழ்ச்சி 1960 முதல் நடைபெற்று வருகிறது. அப்போதெல்லாம் தொலைக்காட்சி நிறுவனங்களால் அவை நடத்தப்பட்டன. ஆனால் 1987-க்குப் பிறகு டிவிக்கள் இத்தகைய விவாதம் நடத்த அனுமதி இல்லை.

    ஜனாதிபதி வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவாதம் நடத்துவதற்கு இன்று சிபிடி என்று அழைக்கப்படும் தனியான அரசு அமைப்பு அமெரிக்காவில் உள்ளது. டிபேட் மற்றும் அவற்றின் விதிமுறைகளை அது வகுக்கிறது. உதவி ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாதங்களும் நடப்பது உண்டு.

    வாட்டர் கேட் ஊழல் காரணமாக நிக்சன் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பதவியேற்ற ஜெரால்ட் போர்ட் எதிரணி வேட்பாளரான கார்ட்டரை விவாதத்திற்கு அழைத்தார். அந்த டிபேட்டில் போர்ட் ஜொலிக்கவில்லை. பரபரப்பாக இருந்த அந்த விவாதத்தை நான் அமெரிக்க தொலைக்காட்சிகளில் நேரடியாகக் கண்டேன்.

    நேருக்கு நேர் லைவ் விவாதங்களில் உடல் மொழி மிகவும் முக்கியம். அடிக்கடி வாட்சைப் பார்த்தார் என்ற காரணத்திற்காக நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் அமெரிக்காவில் உண்டு.

    விவாதத்திற்குப் பயிற்சி கொடுப்பதற்காகவே நிபுணர்கள் இருக்கிறார்கள். வேட்பாளர்களின் அங்க அசைவுகள் மற்றும் பார்வை மூலம் நம்பகத்தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. நடுவர் உண்டு. எதிர்த்தரப்பு வைக்கிற குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வேட்பாளர் எப்படி பதில் சொல்கிறார் என்பதையும் கூர்ந்து கவனிப்பார்கள்.

    லைவ் டிபேட்டுகளுக்குப் பின் அவை பற்றிய விமர்சனங்கள் டிவிக்களில் எழுப்பப்படும். மதிப்பெண்கள் போடப்பட்டு வெற்றி-தோல்வி அலசப்படும். எனவே உலகெங்கிலும் இது பேசுபொருள்.

    ஆனால் அமெரிக்கக் கான்செப்ட் இந்தியாவுக்குப் பொருந்துமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் அங்கு இரண்டு கட்சி முறை. அதிபர் தேர்தல் என்பதால் நேரடி விவாதம் சாத்தியப்படுகிறது.

    மேலும் ஆங்கிலம் என்கிற ஒற்றை மொழி. இங்கு இந்தி பல்வேறு மாநிலங்களில் பேசப்படுகிறது. என்றாலும் பல்வேறு பழமையான மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

    இந்தியாவில் பிரதமர் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக யாரும் கிடையாது. நாம் எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கிறோம். எனவே மோடி- ராகுல் நேரடி நேருக்கு நேர் சாத்தியமில்லை.

    ஆனால் தலைவர்கள் தங்கள் கருத்துகளை முன் வைக்கிற "லீடர்ஸ் டிபேட்" சாத்தியம். நியூசிலாந்து போன்ற நாடுகளில் இத்தகைய விவாதம் நடக்கிறது.

    நேருக்கு நேர் விவாதத்தின் மூலமாக நாட்டின் பொதுப் பிரச்சினை பற்றிய தலைவர்களின் கருத்தை வாக்காளர்கள் அறிந்து கொள்ளலாம். யாருக்கு ஓட்டுப் போடுவது என்று முடிவு எடுக்க அது உதவி செய்யும்.

    தலைவர்களும் கொள்கை மற்றும் செயல்திட்டத்தைப் பற்றி மட்டும் பேசுவார்கள். வெறுப்புப் பேச்சு, மதம் மற்றும் ஜாதி ரீதியிலான பிளவுக்கு இடம் கிடைக்காது. தேர்ந்தெடுக்கப்பட்ட பின் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படும்.

    இந்தியத் தேர்தல் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஆரம்பத்தில் தலைவர்கள் பேசியதற்கும் இப்போது பேசுவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

    தேர்தல் பரப்புரைகளின் போது பிரதமர் மோடி இந்து, முஸ்லீம் என்று பேசினார். வெறுப்புப் பேச்சு என்று கண்டனங்கள் எழுந்தன. தேர்தல் ஆணையத்திற்கும் புகார்கள் சென்றன. ஆனால் இப்போது அவரே தான் அப்படிப் பேசவில்லை என்று கூறுகிறார்.

    இறுதியில் யார் எண்ண பேசினார்கள் என்று வாக்காளர்களுக்கு குழப்பம் தான் மிஞ்சுகிறது. எனவே தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி மாதிரியான அமைப்புகள் நேருக்கு நேர் விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யலாம்.

    ஆனால் உச்சகட்டத் தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்பது சந்தேகம் முன்பெல்லாம் கட்சி பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிப் பொது மேடை அமைத்து தந்து வந்தது தூர்தர்ஷன். அவற்றில் பெரிய தலைவர்கள் பேசி வந்தார்கள். கல்லூரிப் பருவத்தில் ரேடியோவில் அண்ணா, கலைஞர் பேசியதைக் கேட்ட நினைவு இருக்கிறது.

    மொத்தத்தில் பொது மேடைகள் படிப்படியாகக் குறைந்துவிட்டன. இப்போதெல்லாம் பெரும்பாலும் செய்தித் தொடர்பாளர்கள் தான் கலந்து கொள்கிறார்கள்.

    பொது மேடைகளுக்குப் பதிலாக டிவிக்களில் தினமும் இரவு விவாத அரங்கம் நடத்தப்படுகிறது. அன்றாடப் பிரச்சினைகள் குறித்த கருத்துகள் அலசப்படுகின்றன.

    அவற்றில் செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அதே நேரத்தில் மூத்த பத்திரிகையாளர்களும் தங்கள் கருத்துகளை முன் வைக்கிறார்கள்.

    தலைவர்கள் கலந்து கொள்ளும் நேரடி விவாதம் அல்ல. என்றாலும் சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் டி.வி. விவாத மேடைகளில் தலைவர்களும் தோன்றுகிறார்கள்.

    இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் சில தலைவர்கள் விவாதப் பேச்சில் வல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் வேறு சிலருக்கு செயல் திறன் மட்டுமே!

    எடுத்துக்காட்டாக 2009 பொதுத் தேர்தலில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் என்று பரவலாக வர்ணிக்கப்பட்ட அத்வானியும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொண்டிருந்தால் சரிப்பட்டிருக்குமா?

    தலைவர்கள் அனைவருக்கும் "கம்யூனிகேஷன் ஸ்கில்" ஒரே மாதிரி இருக்க வழியில்லை. செய்தித் தொடர்பாளர்கள் தான் அந்தப் பணி செய்கிறார்கள். நிதி மந்திரி நிர்மலா சீதாராமனே முன்னாள் செய்தி தொடர்பாளர் தான். அப் பணியை அவர் நேர்த்தியாகக் கையாண்ட விதமே அவருக்கு மோடியின் குட் புக்சில் இடம் பெற்றுத் தந்தது.

    பொது விவாதத்தின் தேவை பற்றி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளும் மூத்த பத்திரிகையாளரும் பின்வருமாறு விளக்கி உள்ளார்கள்.

    1. நடப்பு தேர்தலில் வெறும் குற்றச்சாட்டுகளும், பரஸ்பர சவால்களும் மட்டுமே மலிந்துள்ளன.

    2. மக்களுக்குப் பயன் தரக்கூடிய பொருள் பொதிந்த தீர்வுகள் முன் வைக்கப்படவே இல்லை.

    3. ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா மற்றும் அதை அடுத்து அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் பொது விவாதத்தில் கலந்து கொள்வது இந்திய ஜனநாயகத்தை முதிர்ச்சி அடையச் செய்யும் .

    4. எனவே பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    ராகுல்காந்தி தரப்பில் உடனடிச் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. இணங்கவில்லை. ராகுல் காந்தி வெறும் எம்பி என்றும் அதே நேரத்தில் மோடி பிரதமர் என்றும் அது கூறி விட்டது. இருவருக்கும் ஒரே அரசியல் அந்தஸ்து இல்லை என்றும் மறுத்து விட்டது.

    ஆனால் தேசிய அரசியல் பற்றிய பரப்புரைகளின்போது ராகுல்காந்தியை மட்டுமே "இளவரசர்" என்று மையப்படுத்தினார் பிரதமர். தனக்கு ராகுல் சரியான களப் போட்டியாளர் இல்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார். அதாவது களத்தை "மோடி vs ராகுல்" என்று கட்டமைத்தது அவர் தான்.

    தராசு காலகட்டத்தில் மக்கள் மேடை என்ற பதாகையின் கீழ் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களை வைத்து இத்தகைய "நேருக்கு நேர்" நிகழ்ச்சிகளை துவக்கத்தில் நடத்தினோம். ஆனால் நாளாவட்டத்தில் வேட்பாளர்கள் தயக்கம் காட்டினார்கள். எனவே அது கை விடப்பட்டது. மறைந்த எம்.எஸ்.உதயமூர்த்தி இது போன்ற விவாதங்களை நடத்தியதாக ஒரு நினைவு.

    தலைவர்கள் நேரடி விவாதங்களுக்குச் சம்மதித்தால் நமது மக்களாட்சி மேலும் கூர்மைப்படும்.

    • வெளிநாடு செல்லும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
    • வெளிநாட்டு கல்லூரிகளின் கல்வி ஆண்டானது செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.

    கடந்த வாரம் நமது மாணவர்கள், வெளிநாடுகளில் சென்று மருத்துவக்கல்வி கற்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களான 18-11-2021 புதிய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள், நீட் தகுதி மதிப்பெண் மற்றும் இன்னபிற விவரங்களை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, தற்போது மேலும் சில முக்கியமான விவரங்களை தெரிந்து கொள்வோம்.

    வெளிநாடு செல்லும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

    1) புதிய தேசிய மருத்துவ ஆணையத்தின் 18-11-2021 அரசாணைக்கு பின்பாக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கான முதல் தகுதியாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு இருந்த தகுதிச் சான்றிதழ் பெறும் நடைமுறை இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது.

    2) முதலில் மாணவர்கள் இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் அவ்வப்போது தரப்படும் அறிவிப்புகள் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அதன் இணையதளமான www.nmc.org.in ல் சென்று இது குறித்து சரியான விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    3) மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரியானது உலக சுகாதார மையத்தின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளதா என்பதை அதன் இணையதளமான www.wdoms.org-ல் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    4) மேலும் மேற்சொன்ன www.wdoms.org என்ற இணையதளத்திலேயே அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் இணையதள முகவரியும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்வழியே கல்லூரிகளைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் கல்லூரிகளின் போலியான இணையதள முகவரிகளை தவிர்த்து கல்லூரிகளைப் பற்றிய சரியான விவரங்களை பெற முடியும்.

    5) முக்கியமாக இன்றைய நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் ஏராளமான போலியான விளம்பரங்களும், தவறான செய்திகளும் பல்வேறு வழிகளில் பகிரப்படுகின்றன. அதனை அப்படியே நம்பாமல், அதன் உண்மைத் தன்மையை மேற்கண்ட தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் உலக சுகாதார மையத்தின் இணையதளங்களில் சரிபார்த்து கொள்ள வேண்டும்..

    சரியான மருத்துவக் கல்வி /ஆலோசகர் நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி?

    *ஒரு மாணவர் வெளிநாடு சென்று மருத்துவக்கல்வி பயில வேண்டும் என்று முடிவெடுத்தால் முதலில் ஒரு சரியான கல்வி ஆலோசகரை / நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் எளிதாக தங்களுக்குத் தேவையான கல்லூரியை அடையாளம் காண இயலும்.

    *முதலில் அந்த நிறுவனம் முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

    *பின்னர் அவர்களுக்கு இந்த துறையில் உண்மையில் எத்தனை ஆண்டுகள் அனுபவம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    *மற்றும் மேற்படி நிறுவனத்திற்கும், வெளிநாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பதை அவர்களின் கல்லூரிகளுடனான ஒப்பந்தங்களைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    *மேலும் முக்கியமாக மேற்கண்ட நிறுவனமானது ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் மாணவர்களை அனுப்புகிறார்களா? அல்லது பல்வேறு நாடுகளுக்கும் மாணவர்களை அனுப்புகிறார்களா? எனத் தெரிந்து கொள்வது மிக அவசியம். ஏனென்றால் ஒரு நாட்டிற்கு மட்டும் மாணவர்களை அனுப்பும் நிறுவனத்தார் அந்த ஒரு நாட்டினைப் பற்றி மட்டுமே உயர்வாக சொல்லுவார்கள். இது ஒரு சரியான வழிகாட்டுதலாக அமையாது.

    *மாணவர்களின் 6 வருட கல்வி காலத்திற்கும் அந்த நிறுவனம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறதா என்பதை முறையான ஒப்பந்தம் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    *நிறுவனமானது மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் பல்வேறு கிளை அலுவலகங்களை கொண்டுள்ளதா அல்லது ஒரே இடத்தில் உள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    *மிக முக்கியமாக சரியான பதிவு செய்யப்பட்ட நிறுவனம் வழியாக மட்டுமே, மாணவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும். ஏற்கனவே அங்கு பயிலும் மாணவர்கள், தெரிந்த உறவினர் என்பது போன்ற நபர்கள் மூலம் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவ்வாறானவர்களால் ஏதேனும் அவசர காலங்களில் மாணவர்களுக்கு சரியாக உதவ இயலாது. உதாரணமாக தற்போது உக்ரைன் போர் சூழலில் அவ்வாறு சென்ற மாணவர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகினர்.

    கல்லூரி கட்டணங்கள் மற்றும் பிற செலவுகள் குறித்து:

    1)மாணவர்கள் அவர்களின் கல்லூரி கட்டணத்தை நேரடியாக கல்லூரியில் சென்றோ அல்லது வங்கி மூலமாக ஸ்விப்ட்பரிவர்த்தனை வழியாகவோ நேரடியாக கல்லூரிக்கு செலுத்த வேண்டும். தற்போது எல்லா வங்கிகளும் இது மாதிரியான ஸ்விப்ட் பரிவர்த்தனையை செய்கின்றன. அனுப்பும் நிறுவனத்திடம் கல்லூரி கட்டணத்தை செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    2)இந்தியாவில் செலுத்தும் அட்மிஷன், விசா, விமான கட்டணம் போன்ற செலவுகளுக்கு பணம் செலுத்திய பின் முறையாக ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

    3)ரஷ்யா போன்ற நாட்டில் கல்லூரி கட்டணமானது அவர்களின் கரன்சியானலும், மற்ற நாடுகளில் பெரும்பாலும் அமெரிக்க டாலரிலும், போலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் ரூபல்லிவிலும் பெறப்படுகிறது. எனவே பண பரிமாற்றம் குறித்து இணையதளத்தில் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    4)மிக முக்கியமாக வெளிநாடுகளில் எல்லாவற்றிலுமே இளங்கலை (எம்.பி.பி.எஸ், எம்.டி.) படிப்பிற்கு எந்தவிதமான ஸ்காலர் ஷிப்பும் கல்லூரிகளோ வெளிநா டுகளோ தருவதில்லை. அவ்வாறு கல்வி உதவித் தொகை தருகின்றன என பகிரப்படும் போலியான விவரங்களை மாணவர்கள் கவனமுடன் தவிர்த்து விட வேண்டும்.

    5)எல்லாவற்றையும் விட முக்கியமாக 6 வருட கல்வி கட்டணத்தையும் மொத்தமாக முதலிலேயே கட்டினால் டிஸ்கவுண்ட் தரப்படும் என்பது போன்ற போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாம். அவ்வாறு எந்த வெளிநாட்டு கல்லூரி நிர்வாகமும் எப்போதுமே தெரிவித்தது இல்லை 

    வெளிநாட்டு கல்லூரிகளில் அட்மிஷன் முதல் கல்லூரி செல்வது வரை:

    அட்மிஷன்:

    முதலில் மாணவர்கள் அவர்களுடைய 12-ம் வகுப்பு மதிப்பெண் மற்றும் நீட் மதிப்பெண் சான்றிதழை கொண்டு விரும்பும் கல்லூரியை தேர்வு செய்து அட்மிஷனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)

    அதன் பின்னர் முக்கியமான ஆவணமான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) எடுத்தல் வேண்டும். தற்போதைய நடைமுறையில்எபாஸ்போர்ட் எடுப்பது மாணவர்களுக்கு மிக எளிதானது.பாஸ்போர்ட் எடுக்கத் தேவைப்படும் ஆவணங்கள்:

    (a)மாணவனின் ஆதார் கார்டு

    (b) மாணவனின் 10-ம் வகுப்பு சான்றிதழ்

    (c)மாணவனின் பிறப்பு சான்றிதழ்

    (d)பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500- மற்றும் விண்ணப்ப முகவர் கட்டணம் அதிக பட்சமாக ரூ.500 -. நமது தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைத்து விடுவது குறிப்பிடத்தக்கது.

    (e) பாஸ்போர்ட் கிடைத்தவுடன் மாணவர்கள் அட்மிஷனுக்கு அணுகிய நிறுவனத்தினரிடம் அதன் நகலை மாணவர்கள் விசா பெறும் பொருட்டு ஒப்படைக்க வேண்டும்.

    விசா

    மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் போது கண்டிப்பாக மாணவர்கள் விசா வில் மட்டும்தான் செல்ல வேண்டும். வேறு எளிமையான வழிகளான டூரிஸ்ட் விசா போன்றவை மூலம் செல்லக்கூடாது. தற்போது என்.எம்.சி. ஆனது மாணவர்களின் பாஸ்போர்ட் – ஐயும் சரிபார்ப்பு செய்கின்றது.

    கிர்கிஸ் குடியரசு போன்ற சில நாடுகளில் மாணவர்களின் விசா ஒரே நாளில் மிக எளிமையாக கிடைக்கப் பெறுகிறது. இதன்மூலம் பாஸ்போர்ட் கிடைப்பதில் தாமதம் ஆனாலும் மாணவர்கள் அதனால் கல்லூரி செல்வது தடையாகாது.

    1.பெரும்பாலான மற்ற நாடுகளில் விசா பெறுவதற்கான மிக முக்கிய ஆவணமான வெளிநாட்டு கல்லூரி மற்றும் அரசாங்கத்தால் தரப்படும் இன்விடேஷன் எனப்படும் கடிதம் பெறுவதற்கு குறைந்தது 7 நாட்கள் முதல் 1 மாதம் வரை ஆகிறது.

    2.அதன்பின் விசா அலுவலகத்தில் தேவையான சான்றுகளுடன் சமர்ப்பித்தால் மாணவர் விசா கிடைப்பதற்கு அதிகபட்சம் 1 மாதத்திற்குள் விசா கிடைத்து விடும்.

    3.பெரும்பாலும் கிர்கிஸ் குடியரசு, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், அர்சீனியா போன்ற நாடுகளுக்கு VISA பெற தேவைப்படும் ஆவணங்கள்:

    a) கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)

    b) அட்மிஷன் லெட்டர்

    c) இன்விடேஷன் (அந்த நாட்டு அரசாங்க அனுமதிக் கடிதம்)

    d) குறிப்பிட்ட இரத்தப் பரிசோதனை

    e) இன்சூரன்ஸ்

    இதுதவிர தென் அமெரிக்கா, ஜார்ஜியா, போலந்து, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சற்று விரிவான ஆவணங்களும், மாணவர்கள் விசா அலுவலகத்திற்கு நேரில் இன்டர்வியூ செல்ல வேண்டிய நடைமுறைகளும் உள்ளன.

    சான்றிதழ் சரிபார்ப்பு:

    மாணவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக அவர்களின் பள்ளி சான்றிதழ்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் பல்வேறு சமயங்களில் போலி சான்றிதழ்கள் பற்றி செய்திகள் வந்துள்ளன. எனவே வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகள், இந்திய மாணவர்களின் சான்றிதழ்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் சரிபார்ப்பு செய்திருந்தால் மட்டுமே அதனை உண்மை என ஏற்றுக் கொள்கின்றன.

    எனவே மாணவர்கள் அட்மிஷன் பெற்ற பின்பு அந்த நிறுவனத்தார் மூலமாகவே மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

    மொத்தத்தில் மேற்சொன்ன அட்மிஷன், பாஸ்போர்ட், சான்றிதழ் சரிபார்ப்பு, விசா போன்ற நடைமுறைகளை முடிப்பதற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் முதல் அதிகபட்சம் 90 நாட்கள் வரை ஆகி விடும்.

    வெளிநாட்டில் கல்லூரிகள் திறப்பு:

    பெரும்பாலான வெளிநாட்டு கல்லூரிகளின் கல்வி ஆண்டானது செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. அக்டோபர் இறுதி வரை கல்லூரிகள், இந்திய மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு அனுமதி அளிக்கின்றன.

    கல்லூரி விடுமுறை:

    பெரும்பாலும் ஜூலை, ஆகஸ்டு என்ற இரு மாதங்கள் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் பங்களாதேஷ் போன்ற ஒரு சில நாடுகள் ஜனவரி, மற்றும் ஜூன் என இரு முறைகளில் மாணவர் சேர்க்கை செய்கின்றன.

    பல்வேறு நாடுகளின் கல்வி முறை, கல்லூரி விவரம், கல்விக் கடன், மாணவர்கள் கல்வி முடித்தபின் இந்தியாவில் பதிவு செய்வதற்கான தேர்வு முறை பற்றிய விவரங்களை வரும் வாரங்களில் பார்க்கலாம்.

    மருத்துவக்கல்வி ஆலோசகர்

    அனிதா காமராஜ்

    செல்: 94980 88890

    • ஆடை என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சி நிலையாகும்.
    • நாம் அணியும் ஆடைகள் இழைகளால் ஆனது.

    ஆடை என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சி நிலையாகும். நாம் அணியும் ஆடைகள் இழைகளால் ஆனது. இழைகள் என்பது மெல்லிய நூல் போன்ற அமைப்பாகும். இழைகளின் தோற்றம் மற்றும் தன்மையின் அடிப்படையில் ஆடைகள் தயாரிக்க பயன்படும் துணி இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒன்று இயற்கை துணி மற்றொன்று செயற்கை துணி.

    இயற்கை துணி வகைகள்:

    இயற்கையான மூலப்பொருட்களான பருத்தி, சணல், வாழை நார், கற்றாழை நார், பட்டுப்புழு போன்ற பொருட்களில் இருந்து இவ்வகை துணிகள் தயாரிக்கப்படுகிறது.

    பருத்தி:

    இயற்கையான முறையில் கிடைக்கும் இவ்விழைகளில் ஈரப்பதத் தன்மை உள்ளது. எனவே வெயிலில் உடலை குளுமையாக உணரச்செய்யும். மேலும் காட்டன் நூலிழைகளில் காற்று புகும் தன்மை உள்ளது. எனவே எவ்வளவு வெயிலாக இருந்தாலும் காற்றோட்டமாக இருக்கும். வியர்வையை நன்றாக உறிஞ்சும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து நம்மை பருத்தி ஆடை பாதுகாக்கும்.

    ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே தோல் நோய் உள்ளவர்கள் பருத்தி ஆடை அணிவது நன்று. சித்த மருத்துவ நூல்கள் பருத்திக்கு உள்ளழலாற்றி செய்கை இருப்பதாக கூறுகிறது. எனவே இதை அணியும்போது உடல் வெப்பம் தணியும்.

    சணல்:

    சணல் இழைகளினால் உருவாக்கப்படும் ஆடைகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடை காலங்களில் அணிவதற்கு இது ஏற்ற துணியாகும். ஏனெனில் செயற்கை துணியை போன்று வியர்வையை ஏற்படுத்தாது. வியர்வையை உறிஞ்சும் தன்மையும் இதற்கு அதிகம். மேலும் புற ஊதா கதிர்களை உறிஞ்சாது. இதிலுள்ள பைட்டோகெமிக்கல்ஸ் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடும் தன்மை பெற்றுள்ளது.

    வாழை நார்:

    மற்ற இயற்கை துணி வகைகளை போலவே இது ஈரப்பதத்தை நன்றாக உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளது. நுண்ணுயிர்களை எதிர்த்து போராடுவதோடு, சூரியனின் தீங்கான கதிர்களில் இருந்தும் நம்மை பாதுகாத்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. தோல் நோய்கள் உள்ளவர்களும், இதை பயன்படுத்தலாம்.

    வாழை நாரினால் ஆன ஆடைகளை தொடர்ந்து உடுத்தி வரும்போது மகப்பேற்றிற்கு பிறகு பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் அறுவை சிகிச்சை தழும்புகள் விரைவில் மறையும்.

    கற்றாழை நார்:

    கற்றாழையில் 96 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. எனவே இவற்றின் நாரை கொண்டு உருவாக்கப்படும் ஆடைகள் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து, சரும செல்கள் புத்துயிர் பெற உதவுகிறது. ஆண்டிபேக்சரியல், ஆன்டிவைரஸ், ஆன்டிப்ருரிடிக் போன்ற பண்புகள் உள்ளதால் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. குழந்தைகளின் ஆடைகளை தயாரிக்க இந்த வகை நார்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மூங்கில் நார்:

    மூங்கிலின் இலை மற்றும் தண்டு பகுதியில் இருந்து நார்கள் பிரிக்கப்பட்டு ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதில் நுண்ணிய இடைவெளிகள் நிறைய உள்ளதால் வியர்வையை நன்கு உறிஞ்சி காற்றோட்டத்துடன் இருக்க செய்யும். பருத்தியை விட மென்மையான இதன் இழைகள் ஆடைகள், துண்டுகள், முக மூடிகள், சானிட்டரி நாப்கின்கள் போன்றவை தயாரிக்க பயன்படுகிறது.

    மூங்கில் இழைகளில் ஆன்டிபங்கள், ஆன்டிபேக்ட்ரியல், பேக்டீரியாஸ்டிக் போன்ற பண்புகள் உள்ளதால் பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. மேலும் இவ்வகை ஆடை உடல் துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது.

    தாமரை நார்:

    தாமரை நார்களை கொண்டு தயாரிக்கப்படும் ஆடைகளை அணியும்பொழுது மன அமைதியும் நல்ல ஆரோக்கியமும் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதை தொடர்ந்து அணியும்போது தலைவலி, இருதய கோளாறுகள், நுரையீரல் பிரச்சினை குணமாவதாக கூறப்படுகிறது.

    மேலும் மற்ற இயற்கை துணி வகைகளை போன்று இதுவும் ஈரத்தை நன்றாக உறிஞ்சும். காற்றோட்டத்துடன் இருக்க செய்யும். அணிவதற்கு மிருதுவாகவும், சவுகரி யமாகவும் இருக்கும். தாமரை இழைகளினால் ஆன ஆடைகளில் கறை படியும் வாய்ப்பு மிகவும் குறைவு.

    பட்டு:

    பட்டு ஆடைகள் உடலுக்கு பலவித நன்மைகளை கொடுக்கும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை பட்டாடை தடுக்கும். தோலில் உள்ள ஈரபதத்தை தக்க வைக்கும். இதில் உள்ள ஆல்புமென் என்ற வேதிப்பொருள் சருமத்தின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.

    இதனால் இறந்த சரும செல்கள் நீங்கி புதிய செல்கள் நிறைய உற்பத்தியாகிறது. இதனால் சருமம் பொலிவு பெறுகிறது. இதனையே சித்த மருத்துவ நூல்களில் உடலுக்கு ஒளியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

    பட்டில் இயற்கையாக உள்ள ஒருவகை புரதம் (ஹைபோ அலர்ஜெனிக்) ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. எனவே இது கரப்பான் (எஜிமா), ஆஸ்துமா போன்ற நோயுள்ளவர்களுக்கு ஏற்ற உடையாகிறது.

    பட்டுத்துணியில் ஆன்டிபங்கள் பண்புள்ளதால் பூஞ்சைகளினால் ஏற்படும் நோய்தொற்றை சரி செய்ய உதவுகிறது. மேலும் சுத்தமான பட்டாடை அணியும் போது வெயில் காலத்தில் குளிர்ச்சியும், குளிர் காலத்தில் வெப்பமும் கிடைக்கும். பட்டாடைகளை தொடர்ந்து அணிந்து வரும் போது நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தி நல்ல உறக்கத்தை கொடுக்கிறது.

    சித்த மருத்துவ நூல்கள் பட்டாடை அணியும் போது மனம் தெளிவு பெறும் என்றும், கபம் நீங்கும் என்றும் கூறுகிறது. வெண் பட்டினால் ஆன ஆடையை அணியும் போது குளிர் மற்றும் காய்ச்சல் குணமாகும், வாத நோய்கள் நீங்கும்.

    கம்பளி:

    கம்பளி துணிகள் குளிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்சுலேட்டர் போன்று செயல்பட்டு உடலுக்கு வெப்பத்தை கொடுக்கும். கம்பளி ஆடையினை அணியும் போது நீரேற்றம், தலைவலி, வாத நோய்கள் நீங்கும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

     செயற்கை துணி வகைகள்:

    செயற்கை துணிகள் என்பது வேதியியல் செயல்முறைகள் மூலம் உருவாகும் துணியாகும். ரேயான், நைலான், வெல்வெட், பாலியெஸ்டர் போன்றவை செயற்கை துணி வகைகளாகும்.

    ரேயான்:

    ரேயான் துணிகளை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது இதிலுள்ள வேதிப்பொருட்கள் தோலின் மூலம் கிரகிக்கப்பட்டு நோய் நிலையை ஏற்படுத்தும். ரேயான் துணி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சல்பியூரிக் மற்றும்நிட்ரிக் ஆசிட் தோலில் அரிப்பு ஏற்படுத்தும். குமட்டல், வாந்தி, நெஞ்சு வலி மற்றும் தூக்கமின்மை போன்ற குறிகுணங்களும் ஏற்படும்.

    பாலியஸ்டர்:

    பாலியஸ்டர் துணியில் இருந்து வெளிவரும் பைடோஸ்ட்ரோஜன் உடலில் ஹார்மோன் கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை அணியும் போது ஏற்படும் அதிக உடல்சூடு மற்றும் வியர்வையால் தோலில் அரிப்பு மற்றும் படைகள் ஏற்படும். வெகு நாட்கள் இவ்வகை ஆடைகளை அணியும் போது சுவாச பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    நைலான்:

    நைலான் ஆடை அணியும்போது உடல் வெப்பம் வெளியேறாது. உடல் வெப்பத்தால் ஆடையில் இருந்து வெளியேறும் பார்மல்டெக்ஸ் தோலில் அரிப்பு, கண்ணில் நீர்வடிதல் போன்ற குறிகுணங்களை ஏற்படுத்தும்.

    நைலான் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பாரியம் சல்பேட் மற்றும் டைட்டானியம் ஆக்சைடு தோலை கருமை நிறமடையச் செய்யும். மேலும் இது நரம்பு மண்டலத்தை தாக்கி தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

    ஜீன்ஸ்:

    ஜீன்ஸ் உடை ஆரம்பத்தில் குளிர்பிரதேசங்களில் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் தற்போது அனைத்து இடங்களிலும் பெரும்பான்மையினரால் அணியப்படுகிறது. ஜீன்ஸ் பேண்ட் இறுக்கமாக அணிவதால் காற்று உள்புகாமல் உடம்பு சூடாகும். இதனால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி குறைவதற்கு வாய்ப்புள்ளது. பெண்களுக்கும் கருப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    நம் உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியாகும். எனவே நாம் உடுத்தும் உடை வியர்வையை உறிஞ்சக்கூடிய தன்மை உடையதாக இருக்க வேண்டும். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணியும்போது சுரக்கின்ற வியர்வை வெளியேறாமல் அதிலிருந்து நுண்கிருமிகள் உற்பத்தியாகி படர்தாமரை போன்ற சரும பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அதுமட்டுமல்லாமல் ஜீன்ஸ் அணிவதால் சிறுநீர்பாதை தொற்று, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    மேலும் இது அடிவயிற்றில் இருந்து தொடைப்பகுதி வழியாக செல்லும் மெல்லிய நரம்புகளை அழுத்துவதால் கடுமையான கால் வலி ஏற்படும் வாய்ப்புள்ளது.

    இயற்கை மருத்துவர்

    நந்தினி

    9500676684

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு.
    • உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பமாகும்.

    "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாராதியார் உணவின் முக்கியத்துவத்தை பற்றி கூறியுள்ளார். மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு. இந்த உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பமாகும்.

    உணவின் பாதுகாப்பையும், பசி, பட்டினியை போக்கவும் 1945-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூரும் விதமாக 1981-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ந் தேதியை உலக உணவு நாளாக கொண்டாடப்படுகிறது.

    உணவு உற்பத்திக்கு முக்கியமான விவசாயிகள், உணவு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலாளர்கள் என இதில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    ×