என் மலர்
நீங்கள் தேடியது "special article"
- உற்சவர் ‘ஸ்ரீதேவி பூமிதேவியுடன் ஸ்ரீனிவாசப் பெருமாளாக’ திருவருள் புரிகிறார்.
- திருமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் காட்சி கொடுத்த தலமாதலால் புரட்டாசி மாதம் முழுவதும் குறிப்பாக சனிக்கிழமைகள் அதிக மக்கள் வருகை இருக்கும்.
மாறுபட்ட நிலையில் இருக்கும் பக்தர்களுக்காக திருமால் கீழிறங்கி வந்து சீலம் எனப்படும் ஒழுங்குபடுத்துவது அல்லது குணப்படுத்துமிடம் குணசீலம் ஆகும். புகழ்பெற்ற குணசீலம் திருச்சியில் இருந்து முசிறி செல்லும் வழியில், சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருப்பைஞ்ஞீலி வனத்தில் எழுந்தருளி தவம் செய்து கொண்டிருந்த தால்பிய மகரிஷிக்கு குணசீல மகரிஷி சீடரானார். இவர்கள் இமயம் உள்ளிட்ட வடதேசங்களுக்கு யாத்திரை சென்று தரிசனம் செய்து திருப்பைஞ்ஞீலி திரும்பும் வழியில் திருமலையில் திருவேங்கடமுடையானையும் தரிசித்தனர். திருவேங்கடமுடையானின் திவ்ய தரிசனத்தில் மனதைப் பறிகொடுத்த குணசீலர் அங்கிருந்து அகல மனமின்றி குருவோடு திருப்பைஞ்ஞீலி திரும்பினார். ஊர் திரும்பியும் வேங்கடவனை மறக்காத குணசீலர் காவிரி நீராடி, எந்நேரமும் வேங்கடவனை நினைத்துக் கடும்தவத்தில் ஈடுபட்டார்.
காலச்சக்கரச் சுழற்சியில், கடும் மழையிலும் இடியிலும் தவம் தொடர்ந்தது. குணசீலரின் இடைவிடாத தவத்துக்கு மகிழ்ந்த பெருமாள் காவிரிக் கரையில் இருந்த குணசீல மகரிஷியின் ஆசிரமத்திற்கு உபய நாச்சியார்களுடன் ஒளி வண்ணத்தில் கருடன் மீதமர்ந்து எழுந்தருளிய வேங்கடேசனின் அருட்காட்சி கண்டு தொழுதார் குணசீலா்.
குணசீல மகரிஷி பெருமாளிடம் பக்தர்கள் வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை வழங்கவும் மனித மனங்கள் சீலம் பெறவும் 'மத்திய திருப்பதி' எனும் பெயரால் எப்போதும் இக்காவிரிக்கரையில், பிரசன்ன வேங்கடேசனாக எழுந்தருளி குறைகளை நீக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.
வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் வேங்கடவன் அவரின் வேண்டு தலை ஏற்று, கலியுக வரதனாக ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் என்ற பெயரோடு விக்ரக வடிவில் சங்கு, சக்கரம், வரதம், கடிக ஹஸ்தம் கொண்டவராக எழுந்தருளினார். எல்லாவற்றுக்கும் மேலாக கையிலே செங்கோல் தாங்கி "ராஜா வேங்கடநாதன்"என்ற வடிவில் இங்கு காட்சி கொடுத்தார். அப்போதும் திருமார்பில் திருமகளோடு, அா்ச்சாவதாரத் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்கள் மனம் குளிர அருள்பாலித்தார்.
ஊரும் பேரும்: குணசீல மகரிஷிக்கு காட்சி தந்து பெருமாள் எழுந்தருளிய தலமாதலால் குணசீலம்' என அழைக்கப்பட்டது.. மூலவா் 'ஸ்ரீபிரசன்ன வேங்கடாஜலபதி' என்ற திருநாமத்துடன் அருளுகிறார். உற்சவர் 'ஸ்ரீதேவி பூமிதேவியுடன் ஸ்ரீனிவாசப் பெருமாளாக' திருவருள் புரிகிறார்.
குணசீலரின் குரு தால்பியர், தவம் புரிந்து கொண்டிருந்த தன்னுடன் வந்து தங்கி இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன் ஒருவனிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்றார். அப்போது குணசீலம் காடாக இருந்தது. வன விலங்குகள் சீடன் இருக்குமிடம் வந்து தொந்தரவு அளித்தன. பயந்துபோன சீடன் எவரிடமும் எதுவும் தெரிவிக்காமல் அங்கிருந்து ஓடி விட்டான். காலப்போக்கில் பெருமாளை புற்று மூடியது.. ஞானவர்மன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டபோது, அரண்மனையில் இருந்த பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்தன.
தொடர்ச்சியாக மேய்ச்சலுக்குப் போன பசுக்களின் மடியில் இருந்த பால் மறைந்தது. தகவலறிந்த மன்னன் காரணத்தையும் இந்த அதிசயத்தையும் அறிய வந்தான். அப்போது ஒலித்த அசரீரியால், புற்றுக்குள் பெருமாள் இருப்பதை அறிந்து பசுக்கள் அதன் மீது பால் சொறிவதைக் கண்டான். மன்னன் சிலையை கண்டெடுத்து கோவில் எழுப்பினான். புற்றிலிருந்து தோன்றியதால் "பிரசன்ன வெங்கடாஜலபதி" எனப் பெயரிட்டு வணங்கத் தொடங்கினார்கள். அது முதல் மக்கள் வழிபட்டு வரும் இக்கோவிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு வரும் போது பக்தர்கள் வழிபாடும் பூஜையும் தடைபடுவதால் சிறிது காலம் முன்பு சன்னதி வெள்ளத்தால் பாதிக்காத அளவு உயர்த்தியும் சுற்றிலும் பக்தர்கள் வசதியை முன்னிட்டு பிரகார மண்டபமும் அமைக்கப்பட்டது.
ராஜ கோபுரம் கடந்து செல்லும் போது இடது புறம் விகனச குருவின் சன்னதியும் பிரகாரச்சுற்றும் அமைந்துள்ளன. சன்னதி முன்புறம் கொடிமரம் பலிபீடம் தாண்டி மகாமண்டபமும் அர்த்த மண்டபமும் அடுத்து கருவறையும் அமைந்துள்ளன.
குலம் காக்கும் குணசீலன்: கருவறையில் பலருக்கு குல தெய்வமாகவும் கண்கண்ட தெய்வமாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவதை அருளும் வரப்பிரசாதியாக பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் சங்கு, சக்கரம், வரதம், கடிக ஹஸ்தம் கையிலே பில்லி சூனியம் ஆகியவற்றை அதட்டி ஓட்டும் தண்டமும் ராஜ்யத்தை நிர்வகிக்கும் தங்க செங்கோலும் கொண்டு திரிநேத்ர விமானத்தின் கீழ் நின்ற கோலத்தில் அருளுகிறார். உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளக்கிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் இருந்து அனுக்கிரகிக்கிறார். தாயார் பெருமாளுடன் சேர்ந்தே திருமார்பிலேயே இருந்து அருளுவதால் தனி சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை.
மலர் சார்த்தி மகிழும் பக்தர்கள்: தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது, பெருமாளுக்கு சார்த்துவதற்கான சுத்தமான வாசம்மிக்க மலர்கள் விளைவிக்க திருநந்தவனம் அமைக்கப்பட்டு அதில் இருந்து வரும் மலர்களைக் கொண்டு தொடுத்து பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. நந்தவன பராமரிப்பில் பக்தர்களும் பங்கேற்கிறார்கள்.
நாளும் வழிபாடும்: தினமும் காலை 6.30 முதல் மதியம் 12.30 மணிவரையும், மாலை 4 இரவு 8.30 மணி வரையும் தரிசன நேரமாக உள்ளது, தினமும் விஸ்வரூபம், காலசந்தி,உச்சிகாலம், சாயுங்காலம்,அர்த்தஜாம் என 5 காலபூஜைகள் நடக்கின்றன; பிரார்த்தனைத் தலமாதலால் வாரத்தில் அனைத்து நாட்களும் முக்கிய நாட்களாகும். சனி ஞாயிறு அதிகளவில் மக்கள் வருகை தருகின்றனர். மாதப்பிறப்பு அமாவாசை, பவுர்ணமி திருவோணம் முக்கிய நாட்களாக இருந்தாலும், சித்ரா பவுர்ணமியில் தெப்பத்திருவிழா, ஸ்ரீராமநவமி, கோகுலாஷ்டமி, நவராத்திரி, புரட்டாசியில் நடைபெறும் 11 நாட்கள் பிரம்மோற்சவம் மக்களின் உளம் கவர்ந்தவையாகும் . திருமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் காட்சி கொடுத்த தலமாதலால் புரட்டாசி மாதம் முழுவதும் குறிப்பாக சனிக்கிழமைகள் அதிக மக்கள் வருகை இருக்கும்.
பன்னிரு கருட சேவை: கோவில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடனில் எழுந்தருளி சேவை சாதிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருட சேவை சாதிக்கிறார். வைகாசி விசாகத்தன்றும் விசேஷ பூஜை உண்டு.
பிரார்த்தனைத் தலம்: அபிமான மற்றும் பிரார்த்தனைத் தலமாகவும் இருப்பதால் அங்கப் பிரதட்சணம், அடி பிரதட்சணம், முடி காணிக்கை, செலுத்துதல், சந்தனக்காப்பு, புஷ்பாங்கி சேவை, கருடசேவை, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செய்தல் ஆகியவை நடக்கின்றன. இதனை "மத்திய திருப்பதி" என அழைத்து வணங்குவதால் திருப்பதிக்கு வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை இங்கு செலுத்துகிறார்கள்.
நோய் நீக்கும் நிமலன்: இப்போது மட்டுமில்லாமல் தொன்மைக் காலத்திலேயே கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கு சுவாமியை வேண்டி குறை நீங்கி பலன் பெற்றுள்ளனர். வாய் பேசாத கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், இங்கு வந்து சுவாமியை வணங்கி பேசும் சக்தி பெற்றதுடன், பாடலும் இயற்றிப் பாடியுள்ளான். இன்று பார்வைக்கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் மன நிம்மதிக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.
மன நோய் நீக்கும் மருத்துவர்: 60 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கோவிலின் கல் தூணில் பிணைத்து வைத்திருப்பார்கள். திருக்கோவில் பணியாளர்கள் காலை 5 மணிக்கு அவர்களை வரிசையாக அழைத்துச் சென்று காவிரியில் குளிக்க வைத்து சன்னதியின் முன்புறம் நிறுத்திவைத்து விஸ்வரூபம் தரிசனம் செய்வார்கள். மதியம் உச்சி காலத்தில் அவர்களுக்கு பெருமாளின் திருமஞ்சன தீர்த்தம் அடிக்கப்படும். உணவும் பராமரிப்பும் திருக்கோவிலே செய்து வந்தது. பில்லி சூனியம் மனபிரமையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மண்டலம் தங்கி மனபிரமை நீங்கி சித்தம் தெளிந்து பூரண குணம் பெற்று வீடு திரும்பிய நிலையை என் இளமைக் காலத்தில் கண்டுள்ளேன். இந்தக் கோவிலின் இந்த இடத்தின் சிறப்புகளில் அதுவும் ஒன்றாகும்.
மனநல மறுவாழ்வு இல்லம்: தற்போது அரசு அனுமதிப்படி மனநல சுகாதார மறுவாழ்வு இல்லம் அமைந்துள்ளது. இம்மையத்தில் தனிப்பட்ட அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளது. வாரம் ஒன்று அல்லது இருமுறை அரசின் மனநல மருத்துவர் மையத்திற்கு வந்து பார்வையிட்டு தேக மன ஆரோக்கியத்தை பரிசீலித்துச் செல்லுகிறார். தினசரி மனநிலை பாதிப்படைந்த மக்களை கவனித்துக்கொள்ளும் பணியாளர்கள் உள்ளனர். 48 நாட்களுக்கு உச்சிகாலம் (நண்பகல்) மற்றும் அர்த்தசாமத்தின் (இரவு) போது ஒவ்வொரு நாளும் மன பாதிப்படைந்த மக்களை பூஜையின்போது குணசீலப்பெருமாள் முன்பு அமரச்செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளித்து பிரசாதம் வழங்கப்படுகிறது. இறையருளால் அவர்கள் பூரண குணம் பெற்று ஊருக்குத் திரும்புகிறார்கள்.
குணசீலத்து வேங்கடவன் துணையிருக்க குறையேதுமில்லை! வினையேதுமில்லை! பயமேதுமில்லை!
- தங்கமே மனிதர்க்கு மகிழ்ச்சி தரும் பொருள் என்று கூறாமல் கூறினார்.
- நம்மை நாமே நேசிக்கத் தொடங்கும் போது நமது எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் அழகாக ஆகி விடுகின்றன.
அன்பின் வாழ்த்துகள் அன்பர்களே!
கண்களை அகல விரித்துக்கொண்டு. பற்கள் தெரிய வாயை நீள விரித்துச் செய்வதல்ல மகிழ்ச்சி. இன்னும் சொல்லப்போனால் மகிழ்ச்சி என்பதே முகம் சார்ந்த செயல் அல்ல; அது அகம் சார்ந்த மலர்ச்சி. ஒரு பூவின் புன்னகை போன்றது மகிழ்ச்சி; அது இயல்பாக நடப்பது. எந்தவிதச் சிரமுமின்றிப் பூக்கள் மலர்வது போல நம் மனங்களில் மகிழ்ச்சி மலர வேண்டும்; அது நிறைந்த மகிழ்ச்சியாய் முகங்களில் படர்ந்து ஒளி வீசவேண்டும் மலர்களில் மணம் வீசுவதுபோல!.
மகிழ்ச்சி என்பதற்கு எளிமையான விளக்கம் கேட்டால், "மகிழ்ச்சியாக இருப்பதே மகிழ்ச்சி!" என்று பதில் கூறலாம்.
மகிழ்ச்சி என்பதன் பொருள் அறிய ராஜ ராஜ சோழன் ஒரு போட்டி அறிவித்ததாக ஒருகதை உண்டு. "உலகில் அனைவருக்குமே மகிழ்ச்சி தரக்கூடிய பொருள் எது? அதனைக் கொண்டுவந்து அரண்மனைக் கொலு மண்டபத்தில் ஒரு மேடையில் வைத்துவிட வேண்டும்!. மிகப்பொருத்தமான பொருளை வைப்பவருக்கு 1000 பொற்காசுகளும் அரசாங்க வேலையும் வழங்கப்படும்!" என்று அறிவித்தார்.
மக்களில் சிலர் அவர்களின் கருத்துக்குத் தோன்றிய வண்ணம், சில பொருள்களைக் கொண்டுவந்து கொலு மண்டபத்தில் வைத்தனர்.
ஒருவர் கொலுமண்டப மேடையில் ஒரு சிறிய அளவுத் தங்கத்தை வைத்தார். தங்கமே மனிதர்க்கு மகிழ்ச்சி தரும் பொருள் என்று கூறாமல் கூறினார். ஏற்கனவே செல்வம் அதிகமுடைய பணக்காரர்களுக்கும் துறவிகளுக்கும் தங்கம் மகிழ்ச்சி தராது என அரசர் நிராகரித்துவிட்டார்.
ஒருவர் நல்லிசைக் கருவியான யாழைக் கொண்டுவந்து மேடையில் வைத்தார்; இசையே இதமான இன்பத்தை மனிதர்களுக்கு வழங்கக் கூடியது என்றார். காது கேளாதவர்களுக்கு இது நல்லின்பம் பயக்காது என ஒதுக்கிவைக்கப்பட்டது.
வாசமிகு வண்ணமலர்கள் ஒருவரால் மேடையில் அலங்காரமாக வைக்கப்பட்டன. கண்களுக்கும் நாசிக்கும் மகிழ்ச்சி தருவன மலர்கள் என எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் கண்பார்வை இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சிதர அவை பயன்படாது எனத் தள்ளிவைக்கப்பட்டது.
ஒருவர் இனிப்பான பல்வகைப் பலகாரப் பண்டங்களைக் கொண்டுவந்து மேடையில் வைத்தார். இனிக்க இனிக்க உண்பதே நாவிற்கும்,வயிற்றிற்கும், மனத்திற்கும் மகிழ்ச்சியைத் தரும் என்பது அவரது வாதம். ஆனால் நோயாளர்களுக்கு இது இன்பம் தருவதற்கு மாறாகத் துன்பமே தரும் என விலக்கி வைக்கப்பட்டது.
ஓர் அழகான சிற்பத்தை ஒருவர் கொண்டுவந்து மேடையில் வைத்தார். ஒரு பெரிய சிவலிங்க சொரூபம்; அதன்கீழே பசித்த ஒரு சிறுவனுக்கு ஒரு தாய் கனிவோடு உணவு ஊட்டி விடுவதுபோலச் சிற்பம் வடிவமைக்கப் பட்டிருந்தது. வருந்தும் சக உயிரினங்களுக்காக இரக்கப்படும் அன்பே தலைசிறந்த மகிழ்ச்சியைத் தரும் என்பது சிற்பம் கூறும் கருத்து என விளக்கப்பட்டது.
ஆம்! வறியவர், செல்வந்தர், துறவியர், கண்ணற்றவர், செவித்திறன் குறைந்தவர், மாற்றுத் திறனாளர், நோயாளர், சிறுவர், பெண்கள், ஆண்கள் என உலகின் எல்லாத் தரப்பினர்க்கும் மகிழ்ச்சியை வழங்க வல்லது அன்பு ஒன்றே! எனத் தீர்மானிக்கப்பட்டு அவருக்குப் பரிசும் வேலைவாய்ப்பும் ராஜ ராஜ சோழனால் நல்கப்பட்டதாம்.
அன்பு, கொண்டவர் மனத்தைக் கனிவிக்கிறது!; கொள்பவர் மனத்தை நெகிழ்விக்கிறது. அதனால் அன்புள்ளம் கொண்டோர் தாமும் எப்போதும் மகிழ்வாக இருக்கின்றனர். தம்மைச் சுற்றியிருப்போரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றனர்.
மகிழ்ச்சியாக இருக்க அன்பு அடிப்படை என்றால், அந்த அன்புக்கு முதல்படி நமக்கு நாமே அன்போடு இருக்கக் கற்றுக்கொள்வது ஆகும். பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம் அடுத்தவர்கள் மீது காட்டுவது மட்டுமே அன்பு என்று. ஆனால் அதற்கும் முதற்படியாக நம்மை நாமே நேசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.
நம்மை நாமே நேசிக்கத் தொடங்கும் போது நமது எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் அழகாக ஆகி விடுகின்றன. நமது எண்ணங்கள் செயல்கள் அழகாக அழகாகத் தாமாகவே நாமும் அழகாகி விடுகிறோம். நமது அழகும் நமது மகிழ்ச்சியும் நமது வாழ்வியலுக்கான தன்னம்பிக்கையை வழங்கி விடுகின்றன. எல்லாவற்றுக்கும் பணமே ஆதாரம் என்கிற போலியான கருத்துருக்கள் தவிடுபொடியாகி விடுகின்றன.
ஓர் அரசன், ஒருநாள் காலையில் ஒரு அரண்மனைச் சேவகனை அழைத்தான். "நான் எப்போது பார்த்தாலும் நீ பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் மகிழ்ச்சியாக வேலைசெய்து கொண்டிருக்கிறாயே! அது எப்படி?. நான் இந்த நாட்டுக்கு அரசன்; கடல்போல அரண்மனை! ஆயிரக்கணக்கில் வேலையாட்கள், லட்சக்கணக்கில் படை வீரர்கள்! கோடிக்கணக்கில் சொத்து பத்துக்கள்! எல்லாம் இருந்தும் என்னால் உன்போல மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லையே? ஏன்? உன் மகிழ்ச்சிக்கான காரணம் என்ன?" என்று கேட்டார்.
"அரசே! வணக்கம்! நான் தங்களது அரண்மனைச் சேவகன். தங்களது ஊதியத்திற்கேற்ற உழைப்பைத் தவறாது நாள்தோறும் செய்து விடுகிறேன். பெறுகிற சம்பளத்திற்குள் குடும்பம் நடத்தும் எளிய வாழ்க்கையைக் கற்றுகொண்டுவிட்டேன். நானும் என் மனைவியும் மக்களும் வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க ஓர் ஓலைக்குடிசை உண்டு.அன்றாடம் குறைவில்லாமல் மூன்று வேளையும் எளிமையான உணவை உண்டு வருகிறோம். உடுத்தி மானம் மறைக்க ஒவ்வொருவருக்கும் இரண்டு மூன்று ஜோடி உடைகளும்
உண்டு. வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி தான். இரவு உறங்கப்போனால் உறக்கம் உடனே வந்து விடுகிறது!. இதுதான் என் மகிழ்ச்சியின் ரகசியம் "என்றான் அரண்மனைச் சேவகன்.
அரண்மனைச் சேவகனின் கூற்றை அமைச்சரை அழைத்து அப்படியே சொன்னார் அரசர். "அவன் அப்படியா சொன்னான்? அவனையும் நாளையே நமது வருத்தப்படுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கி விடுவோம்!" என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அமைச்சர்.
"அது எப்படி முடியும்?" அரசர் கேட்டார்.
"பொறுத்திருந்து பாருங்கள் அரசே! இன்னும் ஒரு வாரத்திற்குள் அவன் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு என்ன பாடு படப்போகிறான் பாருங்கள்". அமைச்சர் கிளம்பினார்.
அன்று இரவு, அந்த அரண்மனைச் சேவகனின் வீட்டு வாசலில் 99 பொற்காசுகள் இருக்கும் ஒரு சுருக்குப் பையைப் போட்டு விட்டு வந்தார் அமைச்சர்.
மறுநாள் காலை எழுந்து வீட்டு வாசலுக்கு வந்த சேவகன் வாசலில் ஒரு சுருக்குப்பை கிடப்பதைப் பார்த்தான். அவசரமாக எடுத்து வீட்டுக்குள் வந்து, உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தான். தங்க நாணயங்கள். எத்தனை என்று எண்ணத் தொடங்கினான்; அப்போது முதல் அவனது மகிழ்ச்சி தொலையும்காலம் தொடங்க ஆரம்பித்துவிட்டது.
நூறு தடவைக்குமேல் எண்ணிப் பார்த்துவிட்டான். காசுகள் 99 மட்டுமே இருந்தன.இருந்தால் நூறு காசுகள் அல்லவா இருந்திருக்க வேண்டும்; அந்த நூறாவது காசு எங்கே போயிற்று?. அன்று அரண்மனை வேலைக்குப் போகவில்லை. வீட்டைச் சுற்றியுள்ள குப்பைகளைக் கிளறத் தொடங்கினான்; சாக்கடைக்குள் இறங்கிச் சல்லடை போட்டு அலசித் தேடினான். அவனது வீட்டைச் சுற்றியுள்ள தெருக்களையெல்லாம் கூட்டிப்பெருக்கித் தேடினான்.
இப்படியாகத் தேடி அலைவதிலேயே பத்து நாட்கள் கழிந்து போயின; சேவகன் அரண்மனைக்கு வேலைக்கும் போகவில்லை!. சேவகனின் நிலையை அரசனும் அமைச்சரும் கண்காணித்துக் கொண்டே இருந்தனர்.
பத்துநாளுக்குப் பிறகு, இனிமேல் எப்படித் தேடினாலும் தொலைந்துபோன அந்தத் தங்கக் காசு கிடைக்காது என்கிற முடிவுக்கு வந்தான். அப்படியானால் அந்த 99 காசுகளை வைத்துக்கொண்டு அவன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினானா? என்றால் அதுதான் இல்லை.
அவன் புதிதாக ஒரு முடிவுக்கு வந்தான். இனிமேல் அரண்மனைச் சேவகம் தவிர மற்ற வேலைகளுக்கும் சென்று கடுமையாக உழைக்க வேண்டும். கிடைக்கிற பணத்தை வைத்து அந்த ஒற்றைத் தங்கக் காசை உருவாக்குகிற வரை சரியாக உண்ணவும் கூடாது; உறங்கவும் கூடாது! என்று முடிவெடுத்துவிட்டான்.
அவ்வளவுதான் அவனது நிலைமை அந்தோ பரிதாபம் என ஆகிவிட்டது. "பார்த்தீர்களா அரசே! அவன் இப்போது நமது வருத்தப்படுவோர் சங்கத்தில் எவ்வளவு தீவிரமான உறுப்பினனாக ஆகிவிட்டான் என்பதை!" கேட்டார் அமைச்சர். அந்தத் தங்க நாணயப் பையைப் பார்த்த நாளில் அந்தச் சேவகன் தொலைத்த மகிழ்ச்சியை இனி எந்த நாளிலும் மீட்டெடுக்கப் போவதே இல்லை.
பணம் இல்லையென்றால் தான் மனிதர்கள் மகிழ்ச்சியைத் தொலைக்கிறார்கள் என்பதில்லை. பணம் இருந்தாலும் மகிழ்ச்சியைத் தொலைக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது. அந்த அரண்மனைச் சேவகன் இப்போது 99 தங்க நாணயங்களுக்கு அதிபதி என்றாலும், அவன் தேடி அலையும் அந்த ஒற்றை நாணயம் அவனைப் பிச்சைக்காரனாக மாற்றிவிட்டது. அதனால் அவனை விட்டு மகிழ்ச்சி தொலைதூரம் பயணப்பட்டுவிட்டது.
மகிழ்ச்சியாக இருக்க அன்பு வேண்டும் என்கிறோம். அந்த அன்பைச் செலுத்தப் பணம், காசு, நகை, வீடு, வாகனம் எனப் பலவகையான செல்வத் துணைகள் வேண்டும் என அலையத் தொடங்குகிறோம். வாழ்க்கை அலைவதிலேயே கழிந்து போகிறது. மகிழ்ச்சி என்பது துரத்தத் துரத்த எட்டிப்போகும் கானல்நீராய்க் கலைந்து போகிறது.
செல்வம் சேர்ப்பதற்கு எத்தனைவிதமான வழிகள் இருக்கின்றன? என்பதனைத் துருவித் துருவி ஆராய்ந்து முனைகிறோமே! என்றாவது அன்பு செலுத்துவதற்கும், அதன்மூலம் நிலைத்த மகிழ்ச்சியை அடைவதற்குமான வழிகள் என்னென்ன? என்று தேடியிருக்கிறோமா?
வீடுகளில் தாயாக அன்பு செலுத்துவது!,தந்தையாக அன்பு செலுத்துவது! கணவனாக அன்பு செலுத்துவது! மனைவியாக அன்பு செலுத்துவது! மகனாக அன்பு செலுத்துவது! மகளாக அன்பு செலுத்துவது! ஆசிரியராக அன்பு செலுத்துவது! மாணவராக அன்பு செலுத்துவது! மருத்துவராக அன்பு செலுத்துவது! நோயாளராக அன்பு செலுத்துவது! அலுவல்களில் அலுவலராக அன்பு செலுத்துவது! கோயில்களில் பக்தனாக அன்பு செலுத்துவது!....மொத்தத்தில் மனிதனாக அன்பு செலுத்துவது!...என அன்பு செலுத்தி மகிழ்ச்சி அடைவதற்கு வழிகள்தாம் எத்தனை? எத்தனை?.
எல்லா வழிகளும் மகிழ்ச்சி வழிகள்!
வலிகள் இல்லாத வாழ்க்கையின் வழிகள்!
பொருள்களில் இல்லை மகிழ்ச்சி!
மனிதங்களில் மலர்ந்திருக்கிறது மகிழ்ச்சி!
தொடர்புக்கு - 9443190098
- டான்சிலோ நடிப்பிலோ கொஞ்சம் சரியில்லை என்றாலும் டைரக்டர் திட்டுவார்.
- ஏன்டா சினிமாவுக்கு வந்தோம் என்று கூட நினைக்க தோன்றியது.
கொள்ளே கால் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. தண்ணீரில் இறங்கி, பாறை மீது நின்றெல்லாம் டூயட் பாடலுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டே நடிக்கணும்.
வழுக்கும் பாறை என்பதால் கவனம் முழுவதும் அதில் தான் இருக்கும். டான்சிலோ நடிப்பிலோ கொஞ்சம் சரியில்லை என்றாலும் டைரக்டர் திட்டுவார். அந்த பயம் வேறு! இப்படியாக ஒவ்வொரு காட்சியிலும் நடித்தது திரில்லிங்கான அனுபவம்.
ஷூட்டிங் முடிந்து காரில் ஓட்டலுக்கு திரும்புவோம். அப்பல்லாம் ஏ.சி.கார் கிடையாது. பக்க விட்டு கண்ணாடியை இறக்கி விட்டிருப்போம். கார் போகும் வேகத்தில் கண்ணில் போட்டிருக்கும் 'ஐலேஷ்' காற்றில் படபட என்று அடிப்பது கண்ணில் பட்டாம்பூச்சி தொட்டு ெதாட்டு போவது போல் அழகாக இருக்கும். அதை மிகவும் ரசிப்பேன்.
குழந்தை நட்சத்திரமாக நடித்த போது இந்த மாதிரி மேக்-அப் எல்லாம் போட்டது கிடையாது. கதாநாயகி என்றால் சும்மாவா...? பயங்கர எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் வடக்கில் இருந்து வந்த சேதி எங்களுக்கு சாதகமாக இல்லை. முக்கியமாக அது மகிழ்ச்சியை தரவில்லை.
ஆம். திட்டமிட்டபடி எனது நடிப்பில் உருவான 'சீதா ராமையா காரி மனவரலு (சீதா ராமையாவின் பேத்தி) என்ற தெலுங்கு படம் திரைக்கு வந்தது.
படிப்பா? நடிப்பா? என்பதை இந்த படம்தான் முடிவு செய்யும் என்றிருந்ததால் அந்த படத்தை பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இருந்தோம்.
ஆனால் தெலுங்கு பட உலகில் இருந்து வந்த தகவல் படம் வெற்றி பெறவில்லை. தியேட்டர்களில் கூட்டமே இல்லை. காற்றாடுகிறது... இரண்டு வாரத்தில் தூக்க வேண்டியதுதான் என்பதுதான். அதை கேட்டதும் மிகவும் சங்கடமாக இருந்தது.
குழந்தை பருவத்தில் ரசிகர்கள் காட்டிய ஆதரவை பெரியவளானதும் காட்ட வில்லையே ஏன்? நாம்தான் சரியாக நடிக்க வில்லையா? என்று பல்வேறு குழப்பம் மனதுக்குள்.
ஏன்டா சினிமாவுக்கு வந்தோம் என்று கூட நினைக்க தோன்றியது.
குழந்தை நட்சத்திரமாக நடித்த போது ஜாலியாக மட்டும் தான் இருக்கும். பொறுப்பாக எதுவும் தெரியாது. ஆனால் கதாநாயகியாக மாறிய பிறகு என்னை அறியாமலே மனதுக்குள் ஒரு பொறுப்புணர்வு.
நடிப்பதோடு கடமை முடிந்ததாக நினைக்க தோன்றாது. எப்படியாவது படம் நல்லா வரவேண்டும். வெற்றிப்படமாக அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அதன் விளைவு தான் படம் வெற்றி பெறவில்லை என்று தகவல் வந்ததும் எங்களை கவலையில் ஆழ்த்திவிட்டது.
என்ன சார்...? இப்படி ஆகிவிட்டதே என்று அம்மாவும் தயாரிப்பாளரிடம் பேசி இருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் நம்பிக்கையுடன் சொன்னார்.
நீங்க கவலைப்படா தீங்க. நல்ல படம். நல்லா வந்திருக்கு. ஜனங்க நிச்சயம் ரசிப்பாங்க. வேணும்னா பாருங்க 'மவுத் டாக்' போக, போக ஜனங்க வருவார்கள் என்றார்.
அவர் சொன்னது அப்படியே பலித்தது. அடுத்த சில நாட்களில் கூட்டம்.... கூட்டம்... அப்படியொரு கூட்டம்...
திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடியது. ஆந்திரா முழுவதும் படம் சக்கை போடு போட்டது.
ஹீரோயின் மீனா... தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் ஹீரோயின் ஆகிவிட்டேன். படம் பேசப்பட்டது. அதோடு மீனாவும் பட்டி தொட்டியெல்லாம் பேசப்பட்டேன்.
இதற்கிடையில் எங்கள் வீட்டில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. அதை கேளுங்கள்....
கஸ்தூரிராஜா சார் இயக்கப் போகும் 'என் ராசாவின் மனசிலே' என்ற தமிழ் படத்துக்கு ஹீரோயின் தேடியிருக்கிறார்.
என்னை பற்றி அறிந்து நேரில் வீட்டில் வந்து என்னை பார்த்து பேச வேண்டும் என்று வீட்டிற்கே வந்திருந்தார்.
தனது படத்தின் கதையை சொன்னார். கதையை சொன்னதோடு அவர் விடவில்லை. படத்தில் வரும் டயலாக்குகள் தென் மாவட்டங்களில் பேசும் சாயலில் இருக்கும். நீ பேசுவியா என்றார்.
நானும் சரி என்றேன்.
உடனே நான்கைந்து வரி டயலாக்கை சொன்னார்.
'நான் ஒண்ணும் அந்த மனுஷனுக்கு கழுத்த நீட்ட மாட்டேன். பொழுது விடிஞ்சு ராத்திரி படுக்க போற வரைக்கும் சாராயம் குடிக்குறது.எதுக்கெடுத்தாலும் ஈவு இரக்கமில்லாம அடிக்குறது. முரட்டு புத்தி. மூர்க்க குணம். நாட்டு கம்பு, புளியங்கம்பு, பெல்ட் அடி. அத தாங்குறதுக்கு என் உடம்புல சக்தி இல்லை. அந்த மனுஷனுக்கு வாக்கப்படுறதற்கு பதிலா சீவி, சிங்காரிச்சு, பொட்டு வச்சு, பூவச்சு, பட்டுச்சேலை கட்டிக்கிட்டு மாலையும், கழுத்துமா கிணத்துல குதிச்சிடலாம் சாமி..."
-இதுதான் அவர் தந்த டயலாக். அதை பேசி காட்டு பார்ப்பேம் என்றார்.
நானும் மனப்பாடம் பண்ணி பேசி காட்டினேன். ஆனால் அந்த டயலாக்கை அதற்கேற்ற முக பாவனையுடன் பேசியதில் எனக்கே முழு திருப்தி இல்லை.
கஸ்தூரிராஜா சார் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
நானே தொடர்ந்து சொன்னேன். சார், ஒரு சிறிய ரூமில் நின்று பேசுவதற்கும் கேமிரா முன்பு கதா பாத்திரத்தை புரிந்து கொண்டு பேசுதற்கும் வித்தியாசம் உண்டு. காமிரா லைட் வெளிச்சத்தில் நின்று பேசும் போது இன்னும் பெட்டரா வரும் சார்' என்றேன்.
அது என்ன டைரக்டருக்கு தெரியாதா? எனக்கு அப்போது கொஞ்சம் அதிக பிரசங்கித் தனம்தான். இப்படி நான் பேசியதை கேட்டால் எல்லோரும் அப்படித் தானே நினைப்பார்கள். எந்த இடத்தில், யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று யோசிப்பது இல்லை. மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடுவேன். அதுதான் என் குணம்.
டைரக்டர் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.
நான் டயலாக் பேசியது அவருக்கு பிடித்திருக்குமா? வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று ஒரே குழப்பம்.
அவர் போனதும் அம்மா என்னிடம் 'இப்படியா சொல்றது? ஒரு வாய்ப்பு தேடி வரும் போது முழுமையாக பயன்படுத்திக் கொள்ளணும். உணர்ச்சிகளை முகத்தில் கொண்டு வந்து காட்டுவதுதானே அழகு? அப்பதானே அவுங்களுக்கு திருப்தி வரும். இப்படி சொன்னா ஏற்றுக் கொள்வார்களா? என்றார்.
எனவே அந்த படத்தில் என்னை ஹீரோயினா செலக்ட் பண்ணுவாங்களா? மாட்டங்களா? என்று எதுவும் புரியாமல் இருந்தோம்.
நாட்கள் சென்று கொண்டே இருந்தது. ஆனால் எந்த தகவலும் இல்லை. ஒரு கட்டத்தில் இனி வர மாட்டார்கள். நிச்சயம் கஸ்தூரிராஜா சார் வாய்ப்பு தரப் போவதில்லை என்றே முடிவு செய்து விட்டோம். ஆனால் நடந்தது வேறு.
என் ராசாவின் மனசிலே...
என் மனசில் இடம் பிடித்தது எப்படி...? அடுத்த வாரம் சொல்கிறேன்....
(தொடரும்)
- பெயர் மாற்றத்திற்குச் சர்வதேச அளவில் ஒப்புதல் தேவைப்படும்.
- அரபிக்கடலை ஒட்டிய இந்தியாவின் தென்மேற்கு கடற்கரை மலபார் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.
"பாரதம், இந்தியா" பட்டிமன்றம் அனல் பறந்துகொண்டிருந்த ஜி-20 மாலை வேளை! வழக்கமாக நான் தொலைபேசியில் பேசும் எங்கள் கிராமத்து ஏழாம் வகுப்புக் குட்டி ஒரு மாபெரும் சந்தேகத்தைக் கிளப்பியது:
"அங்கிள்.. இனி இண்டியன் ஓஷனை எப்படி அழைக்க வேண்டும்? பாரதப் பெருங்கடல் என்றா? "
மறுநாள் கிளாஸ் டெஸ்ட்! கவலையைப் புரிந்துகொள்ள முடிந்தது. பெயர் மாற்ற அரசியல் விளையாட்டில் மறுபடியும் முதலில் இருந்து படிக்க வேண்டும்! எனது லாயர் நண்பர்களுக்கும், சட்டக் கல்லூரி மாணவ மணிகளுக்கும் இதே கவலை இருக்கிறது. இந்திப் பெயர் சூட்டப்பட்ட புதிய சட்டங்கள் படுத்துகிற பாடு, ஆத்தாடி, ஆத்தா!
உண்மையில் "இந்தியப் பெருங்கடல்" என்பதைப் பெயர் மாற்றம் செய்ய முடியுமா? அது யார் வைத்தது? நம்மை அடிமைப்படுத்திய வெள்ளைக்காரனா? அல்லது அதற்கு முந்திய இஸ்லாமிய அரசர்களா? வங்காள விரிகுடா என்ற "பே ஆப் பெங்கால்", அரபிக் கடல் என்ற "அராபியன் ஸீ" ஆகியவற்றின் கதி?
வரலாறு முழுவதும் இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் பல்வேறு பெயர்களால் அறியப்பட்டு வந்திருக்கின்றன, இந்திய மற்றும் உள்ளூர் மொழிகளில் இருந்து காலப்போக்கில் உருவாகியுள்ளன. வேறு சில வெவ்வேறு ஆட்சியாளர்கள் மற்றும் கலாச்சாரப் பாதிப்புகளால் தோன்றியவை.
அரபிக்கடல்:- இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்கே அமைந்துள்ள அரபிக் கடல் பல நூற்றாண்டுகளாக அரேபிய தீபகற்பத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தியாவிற்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளின் காரணமாக ஏற்பட்டது.
இந்தியப் பெருங்கடல்: இந்தியத் துணைக் கண்டத்தைச் சூழ்ந்துள்ள இந்து மகா சமுத்திரம் உலகின் மூன்றாவது பெருங்கடல். கி. பி. 1515 வரைபடத்தில் குறிப்பிடப்பட்டி ருந்த பெயர் நாளடைவில் "இந்தியப் பெருங்கடல்" ஆனது. தமிழன் வைத்த பெயர் "குமரிக்கடல்!"
மன்னார் வளைகுடா: இந்தியாவின் தென் முனைக்கும் இலங்கையின் வடக்குக் கடற்கரைக்கும் இடையில் மன்னார் வளைகுடா அமைந்துள்ளது. இலங்கையின் மன்னார் நகரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. ராமர் பாலம் பற்றிய சர்ச்சை ஏற்கனவே உள்ளது. "வடக்கே அயோத்தியில் ராமர் கோவில்! தெற்கே ராமர் கடல்!" என்று அண்ணாமலை விவாதத்தைக் கிளப்பலாம்!
வங்காள விரிகுடா: இந்தியாவின் கிழக்கே உள்ள வங்காள விரிகுடா நீண்ட காலமாக இந்தப் பெயரில் அறியப்படுகிறது. "வங்காளம்" என்ற சொல் இப்பகுதியில் இருந்த பழங்கால ராஜ்யமான வாங்காவில் இருந்து வந்திருக்கலாம். குணக்கடல் என்று தமிழர்கள் அழைத்து வந்தனர். அரபிக்கடலுக்குக் குடக்கடல் என்ற தமிழ்ப் பெயர் உண்டு.
வங்காள வளைகுடா: இந்தப் பெயர் வரலாற்று ரீதியாக வங்காள விரிகுடாவின் வடக்குப் பகுதிக்குப் பாரசீக மற்றும் அரபு மூலங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்திய மொழியான வங்கத்தின் கலப்பு இருப்பதால் இந்தப் பெயரை அப்படியே விட்டுவிடலாம்! அல்லது மம்தா பானர்ஜி மீதுள்ள கோபத்தால் "பாரத விரிகுடா" என்று பெயர் மாற்றம் செய்தாலும் தப்பில்லை.
கோரமண்டல் கடற்கரை: வங்காள விரி குடாவை ஒட்டிய இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரை கோரமண்டல் கடற்கரை என்று ஐரோப்பிய காலனித்துவ சக்திகளால் குறிப்பாகப் போர்த்துகீசியர்களால் பெயரி டப்பட்டது. தாராளமாக எதிர்ப்புத் தெரிவிக்கலாம்! சோழ வம்சத்தைக் குறிக்கும் "சோழ மண்டலம்" என்ற தமிழ்ச் சொல் இருப்பதால் அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்து சோழர் செங்கோல் வரலாற்றோடு "லிங்க்" கொடுத்து தமிழ்நாட்டின் பெருமையைக் காப்பது மோடி தான் என்று மார் தட்டிக்கொள்ளலாம்.
மலபார் கடற்கரை: அரபிக்கடலை ஒட்டிய இந்தியாவின் தென்மேற்கு கடற்கரை மலபார் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. "மலபார்" என்ற பெயர் பண்டைய இந்திய வேர்களைக் கொண்டுள்ளது. எனவே பெயர் மாற்றம் தேவை இல்லை. அல்லது கேரளாவில் காலூன்ற ஏதாவது வழி கிடைக்குமென்றால் மலையாள மொழி விற்பன்னர்களைக் கலந்து புராதனப் பெயர்களைத் தேடலாம்.
லட்சத்தீவுக்கடல்: இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கும் லட்சத்தீவுகளுக்கும் இடையே அமைந்துள்ளது. "லட்சத்தீவு" என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தைகளான "லக்ஷ்யா" (நூறாயிரம்) மற்றும் "த்வீப்" (தீவு) ஆகியவற்றி லிருந்து பெறப்பட்டது. எனவே பெயர் மாற்ற பனிஷ்மெண்ட் நஹி!
எனது நண்பர் ஒருவர் சர்வதேசப் பெயர் மாற்ற ஸ்பெஷலிஸ்ட். அவரிடம் கேட்டேன்.
"இந்தியப் பெருங்கடலின் பெயரை "பாரத் பெருங்கடல்" என்று மாற்றுவது முடியாது. அது உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய மாற்றத்திற்கு சர்வதேச அமைப்புகளை உள்ளடக்கிய நீண்ட ராஜதந்திர செயல்முறை தேவைப்படும்." என்றார் அவர்.
அதனால் என்ன? ஜி 20 அதிகரப்பூர்வமாக நிறைவடைந்து தலைமைப் பொறுப்பை மாற்றிக் கொடுத்த பிறகும் நவம்பர் மாதம் "இணைய ரீவ்யூ" வைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறோம் அல்லவா? அதில் இதை "புரோபோஸ்" செய்தால் போயிற்று! தேர்தல் வரை பேசுபொருள் வேண்டும் சுவாமி!
ஆனாலும் "ஸ்பெஷலிஸ்ட்" நம் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார். தேசத் துரோகி!
"கடல்சார் வரைபடம் உலகெங்கிலும் உள்ள நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே பெயர் மாற்றத்திற்குச் சர்வதேச அளவில் ஒப்புதல் தேவைப்படும். அந்தப் பொறுப்பு சர்வதேச ஹைட்ரோகிராபிக் அமைப்பிடம் (IHO) உள்ளது." என்று முட்டுக்கட்டை போட்டார். "அடப் போங்க சார்.. உங்களுக்குத் தேச பக்தியே இல்லை!" என்று கூறி விட்டு இடத்தைக் காலி செய்தோம்.
அந்த நேரத்தில் வந்து சேர்ந்தார் வலதுசாரி ஆதரவாளர் ஒருவர். "இந்தியாவைச் சுற்றியுள்ள எல்லாக் கடல்களுக்கும் பெயர் மாற்றம் அவசியம் தேவை!" என்று அவர் பிடிவாதமாகக் கூறினார். நேரடியாக ஏதோ டிவி விவாத மேடையிலிருந்து வந்திருப்பார் போலும்!
முக்கியமாக அவர் சுட்டிக் காட்டியது தமிழ்நாட்டின் தென் கிழக்கு முனையை! அது "பாக் ஜலசந்தி" என்று அழைக்கப்படுவது காரணம். "ஜி.. பால்க் ஜலசந்தி என்பது பேச்சுவழக்கில் அப்படி ஆகிவிட்டது!" என்று சமாதானப்படுத்திப்பாரத்தோம். அவர் கேட்கவில்லை. "யார் பால்க்? வெள்ளைக்காரன் தானே?" என்று கோபப் பார்வை பார்த்தார்.
"இந்தியாவின் தென்கிழக்கு முனையை இலங்கையின் வடக்குக் கடற்கரையில் இருந்து பிரிக்கும் நீர்நிலை பால்க் ஜலசந்தி. ராபர்ட் பால்க் என்பவர் 1755 முதல் 1763 வரை மெட்ராசின் (இப்போது சென்னை) ஆளுநராகப் பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில் அவர் ஆற்றிய சேவை மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஜலசந்திக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது." என்று நமது "ஜி"யிடம் விளக்கினோம்.
"மாத்தனும் சார்.. எல்லாத்தையும் மாத்தனும்!" என்று பொங்கியவாறே தனது கோட்டைச் சரி செய்துகொண்டு அவிழ்ந்திருந்த காலணிகளின் முடிச்சுகளைச் சீராக்கி விட்டுத் தலை சிறந்த தேசபக்தனுக்கே உரிய கம்பீரத்தோடு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்தார், "ஜி"!
ஆத்தாடி.. இவ்வளவு சிக்கல்களா? இந்தியப் பிரதமர் எவ்வளவு எளிதாக பாரதப் பிரதமர் ஆகி விட்டார்? இந்தியக் குடியரசுத் தலைவரை எத்தனை ஈசியாக பாரத ஜனாதிபதி என்று பெயர் மாற்றம் செய்து விட்டோம்? நமது எல்லைக்குட்பட்ட கடல் மற்றும் நீரிணைகளின் பெயரை மாற்ற முடியாதா? அதிலும் "பால்க் ஜலசந்தி" வெள்ளைக்காரக் கவர்னரின் பெயரால் அழைக்கப்படுவது இந்த தேசத்துக்கே அவமானம் அல்லவா?
மீண்டும் எட்டிப் பார்த்தார் நமது "ஸ்பெஷ லிஸ்ட்" நண்பர். அவர் கையில் இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்ட இந்திய அரசமைப்பு தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தது. டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை செய்த தமிழாக்கம் அது. புத்தகத்தைக் காட்டி அவர் ஆவேசமாகச் சொன்னார்.
"சார்.. நமது அரசமைப்புச் சட்டத்தின் பகுதி ஒன்றில் "ஒன்றியமும் அதன் ஆட்சி நிலையும்" என்ற தலைப்பில் ஒன்றியத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஓஹோ.. ஒன்றிய சர்ச்சை) பகுதி இரண்டில் "இந்திய மரபினரின் குடிமை உரிமைகள்" என்று இருக்கிறது. அதை "பாரத மரபினர்" என்று மாற்றினால் விடுதலைக்கு முன்னால் ஒரே நாடாக இருந்தபோது இங்கு இருந்த வம்சாவளியும் சேர்ந்துவிடும்!"
ஒன்று சொல்ல மறந்து விட்டேன். நமது நண்பர் "ஸ்பெஷலிஸ்ட்"டை அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் நீங்கள் பார்க்கலாம்.
"ஐந்தாம் பகுதியில் "இந்தியக் குடியரசுத் தலைவர்" "இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்" என்று தெளிவாக உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி சார் பாரத ஜனாதிபதி என்று பெயர் மாற்றம் செய்யலாம்?" என்று புத்தகமும் கையுமாக அடித்துப் பேசினார் அவர்.
"முகப்புரையே "இந்திய மக்களாகிய நாம்" என்றுதான் துவங்குகிறது. பழங்காலத்தில் வழக்கில் இருந்த பெயர்தான் பாரதம். நாம் நவீன தேசம் ஆனபோது நம்மிடமிருந்து பிரிந்தது பாகிஸ்தான். பிரியாமல் எஞ்சி இருந்த பகுதி இந்தியா. ஐநா சபைக்கு பாகிஸ்தான் தான் புதிய உறுப்பினர். ஆனால் இந்தியா ஏற்கனவே இருந்த மெம்பர்ஷிப்பை தக்க வைத்துக் கொண்டது. "பாரதம் என்ற இந்தியா" என்பதை தவிர வேறு எங்கும் பாரதம் என்ற பெயர் அரசியலமைப்பில் பயன்படுத்தப்படவில்லை." என்று தன் வாதத்திற்கு வலுச் சேர்த்தார்.
"பிரதர்.. இதெல்லாம் நமது மாட்சிமை தாங்கிய ஜனாதிபதிக்கும், மாண்புமிகு பிரதமருக்கும் தெரியாதா? நீங்கள் மட்டும் தான் மேதாவியா? ஜி 20 உலக நாடுகள் மத்தியில் "பாரதப் பிரதமர்" என்று சூசகமாகச் சொல்லி விட்டாரே, மோடி?' என்று மடக்கினோம்.
"சார்.. எல்லாமே தப்பு! (எதையும் ரைட் என்று ஒத்துக் கொள்ளாத ஸ்பெஷலிஸ்ட் அவர்) ஜி 20 மாநாட்டு இலச்சினையில் தாமரைச் சின்னம்! அதற்கு யூனியன் பட்ஜெட்டில் 990 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. கடைசியில் 4100 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். ஆனாலும் டெல்லியின் ஒரு நாள் மழைக்கே தாக்குப் பிடிக்காமல் ஜி 20 அரங்கமான "பாரத மண்டபத்தில்" தண்ணீர் தேங்கி நின்றது! 2004 ஆகஸ்ட் 3 அன்று உ. பி. சட்டமன்றத்தில் மறைந்த முலாயம்சிங் யாதவ் "பாரத் என்ற இந்தியா" பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அதை ஏன் இவர்கள் எதிர்த்தார்கள்? " என்று வரலாறு பேசினார் அவர்.
அப்போது மீண்டும் பிரசன்னமானார் இன்னொரு "ஜி!" இவரையும் டிவி விவாதங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். யாரையும் பேசவிடாமல் சண்டமாருதமாகப் பொங்குவாரே அவர் தான்!
"பாரத மண்டபம் என்று பெயர் வைத்தது இந்த தேச விரோதிகளுக்குப் பொறுக்கவில்லை. மழைத் தண்ணீர் சிறிது நேரம் தேங்கியதைப் பெரிய விஷயமாக்குகிறார்கள். புதிய நாடாளுமன்றக் கட்டிடப் பணியாளர்களுக்கு மேற்கத்திய பாணிச் சீருடைக்குப் பதிலாகப் பாரதக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பஞ்சகச்ச சீருடை கொடுத்திருக்கிறோம்." என்று பெருமையுடன் சொன்னார் அவர்.
"பெரிய அநியாயம் சார். பணியாளர் சீருடை மேல் சட்டையில் தாமரைச் சின்னம் உள்ளது!" என்று கூறினார் ஸ்பெஷலிஸ்ட்.
சண்டமாருத ஜி காதில் வாங்கிக் கொண்டால் தானே? "பாரதம் என்ற பெயர் பிடிக்காத ஆண்டி இன்டியன்ஸ் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று கூறிவிட்டார் எங்கள் முன்னாள் தேசீயத் துணைத்தலைவர் திலிப் கோஷ். பாரதத்தில் உள்ள எல்லா வெள்ளைக்கா ரர்களின் சிலைகளையும் அகற்றப் போவதாகவும் அவர் சூளுரைத்திருக்கிறார்!" என்றார்.
இந்தியப் பெருங்கடலா, பாரதப் பெருங்க டலா? எல்லாப் பெயர்களையும் எப்போது மாற்றுவீர்கள்? அது வரைக்கும் கிளாஸ் டெஸ்ட்டில் என்ன எழுதுவது? எந்தப் பாடத்தைப் படிப்பது?
இறுதிவரை குட்டியின் கேள்விக்கு விடை கிடைக்கவேயில்லை.
- நிலவேம்பில் உள்ள ‘ஆன்ரோகிராபோலாய்டு’ எனும் வேதிப்பொருள் வைரஸ் கிருமிக்கொல்லித் தன்மைக்கு காரணமாகின்றது.
- வீட்டிலும் நல்ல நீரினை சேமித்து வைக்கும் போது மூடிவைக்க வேண்டும்.
சமீப காலமாக தமிழகத்தை உலுக்கி வரும் டெங்கு காய்ச்சல் மக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. டெங்கு வைரஸ் கிருமிக்கு நேரடியான எதிர் மருந்துகள் இல்லாததும், தடுப்பூசி மருந்துகள் இல்லாததுமே இதற்கு முக்கிய காரணம். ஆகவே டெங்கு காய்ச்சலைப் பற்றிய விழிப்புணர்வு இறப்புக்களைத் தவிர்ப்பதற்கு அவசியமாகின்றது.
கடந்த 50 ஆண்டுகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 30 மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் அதிர்ச்சியான தகவலைத் தெரிவிக்கின்றன. அதிலும் வெப்பமண்டல நாடுகளில் டெங்கு அதிகம் காணப்படுவதாக குறிப்பிடுகின்றன. திடீரெனெ ஏற்படும் மழையும், அதனால் மாறுபடும் சீதோஷண நிலையும், இந்த டெங்கு வைரஸ் பரவுவதற்கான சூழலை உண்டாக்குகின்றன.
சமீபத்திய மருத்துவ ஆய்வறிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் 10 கோடி பேர் டெங்குவால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றன. இதில் 2-5 சதவீதம் பேர் கடுமையான நோய்நிலையை அடைகின்றனர். டெங்கு பரவுவதற்கு கொசுவின் அடர்த்தி, மக்கள் தொகை அடர்த்தி, டெங்கு வைரஸ் கிருமிகளின் இணை சுழற்சி, மழைப்பொழிவு மற்றும் ஈரப்பதம் போன்ற காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன.
டெங்கு காய்ச்சலும், குறிகுணங்களும்:
டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸ் தாக்கத்தினால் உண்டாவதாக இருப்பினும் 'ஏடிஎஸ்' எனப்படும் பகல் நேரங்களில் கடிக்கும் பெண் கொசுக்களினால் பரவுகின்றது.
சுரம், அதீத உடம்பு வலி, வாந்தி, வாய் குமட்டல், வயிற்று வலி, கண்ணுக்கு பின்பக்க வலி, பசியின்மை, தசை வலி, எலும்பு வலி, உடல் சோர்வு ஆகியன இந்நோயின் குறிகுணங்களாக உள்ளன. சுரம் விட்ட பின் ஏற்படும் அதிகப்படியான தசை வலி, உடம்பு வலி மிக முக்கிய அறிகுறியாகும். அதிகப்படியான வாந்தியும், வாய்குமட்டலும் நோயின் தீவிர நிலைக்கு வெகு விரைவில் கொண்டு செல்லும்.
ஏடிஎஸ் கொசு கடித்து 3 -10 நாட்களில் நோயரும்பும் (இன்குபேஷன்) காலமாக உள்ளது. அதற்கு பின் குறிகுணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். மூன்று நாள் சுரம் காய்ந்து, அதன்பின் நான்காம் நாள் தொடங்கி ரத்த தட்டணுக்கள் குறையத் துவங்கும். தட்டணுக்கள் குறைவதனால் உடலில் ரத்தம் கசிய துவங்கும். ரத்தபோக்கினை ஏற்படுத்தும். தோலில் ரத்த கசிவு அதனால் தடிப்பு, சில பேருக்கு பல் ஈறில் இருந்து அதிக ரத்தம் கசிதல், சிறுநீரில் ரத்தக்கசிவு, பெண்களுக்கு அதிக மாதவிடாய் ஆகிய குறிகுணங்கள் தோன்றக்கூடும்.
காய்ச்சல் துவங்கிய முதல் மூன்று நாட்களில் சுரத்துடன் நீர்சத்து இழப்பு இருக்கும். அடுத்து மூன்று நாட்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதும் அதனால் குருதிப்போக்கு, மயக்கம், முக்கிய உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைபாடு ஆகிய குறிகுணங்கள் ஒன்று சேர்ந்து நோயின் தீவிர நிலைக்கு கொண்டு செல்லும். முறையான சிகிச்சை மூலம் இந்த நாட்களை கடந்தால் அடுத்து நோயின் மீட்பு நிலைக்கு சென்று இயல்பான நிலைக்கு திரும்பலாம்.
பொதுவாக ரத்த பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள், மற்றும் தட்டணுக்கள் ஆகியன வைரஸ் காய்ச்சலில் குறையக்கூடும். மேலும் டெங்குவை எலிசா பரிசோதனை செய்து உறுதி செய்துக் கொள்ளலாம்.
டெங்குவை உறுதி செய்த பின்னர் 24 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை பரிசோதனை செய்தல் அவசியம். முழு நேரம் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பது மிக மிக அவசியம். மேலும் மிக முக்கியமாக ரத்தப் பரிசோதனையில் 'பி.சி.வி' எனும் குறியீடு அதிகரித்தால் 'டெங்கு ஷாக்' குறிகுணங்கள் தோன்றக்கூடும். அத்துடன் தட்டணுக்கள் சேர்ந்து குறைந்தால் 'டெங்கு ஹெமரேஜிக் ஷாக்' ஏற்படக்கூடும். இந்நிலைகளில் சிகிச்சை அளிக்கத் தவறினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
சரியான நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, நோய் கணிப்புச் செய்து சிகிச்சை மேற்கொண்டால் நோயின் தீவிர நிலையில் இருந்து காத்துக்கொள்ளலாம். நீர்ச்சத்து அதிகம் இழக்கப்படுவதால் திரவ மேலாண்மை மிக அவசியம். நீர்ச்சத்து மிகுந்த கஞ்சி, பழச்சாறுகளை அதிகம் தரலாம். தட்டணுக்களை அதிகரிக்க வைட்டமின்-சி நிறைந்த பழச்சாறுகளை ஒரு மணிக்கொரு முறை கொடுத்து வரலாம்.
டெங்கு காய்ச்சலும், சித்த மருத்துவமும் :
சித்த மருத்துவத்தில் 4448 வியாதிகள் வாதம், பித்தம், கபம் இவற்றின் அடிப்படையில் அகத்திய மாமுனிவரால் கூறப்பட்டுள்ளன. இன்றைய நவீன மருத்துவம் கூறும் டெங்கு காய்ச்சலின் குறி குணங்களும், நோய்நிலையும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள 'பித்த சுரம்' என்பதுடன் ஒத்துப் போவதால், பித்த சுரத்துக்கான மருத்துவ முறைகளும், பித்தத்தை குறைக்கும் படியான கசப்பு தன்மையுடைய சித்த மருத்துவ மூலிகைகளும் பயன் தரக்கூடியதாக உள்ளன. இதனை சமீபத்திய ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.
நிலவேம்பு, ஆடாதோடை, பப்பாளி இலை, சீந்தில், வேப்பிலை, மலைவேம்பு இவற்றாலான மருந்துகள் பித்தத்தைக் குறைத்து நோயினை தீர்க்க உதவும். இந்த மூலிகை மருந்துகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் உடையதால் கிருமிகளுடன் போராடும் திறத்தையும் உடலுக்கு அளிக்கும்.
உலக அளவில் பிரபலமான சித்த மருந்தான 'நிலவேம்பு குடிநீர்' வைரஸ் சார்ந்த பல்வேறு நோய்த்தொற்றுக்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நிலவேம்பு குடிநீரில் சேரும் நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தானம், பேய்புடல், கோரைக்கிழங்கு, பற்பாடகம், சுக்கு, மிளகு ஆகிய பல்வேறு மூலிகைச் சரக்குகள் டெங்கு காய்ச்சலில் உண்டாகும் குறிகுணங்களை குறைப்பதுடன் நோய்க்கு காரணமாகும் வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படும் தன்மையும் உடையன. முக்கியமாக நிலவேம்பில் உள்ள 'ஆன்ரோகிராபோலாய்டு' எனும் வேதிப்பொருள் வைரஸ் கிருமிக்கொல்லித் தன்மைக்கு காரணமாகின்றது.
சித்த மருந்தான ஆடாதோடை மணப்பாகினை 10 -15 மிலி வெந்நீருடன் ஒரு நாளைக்கு மூன்று முறை கொடுக்கலாம். நிலவேம்பு குடிநீருடன், ஆடாதோடை மணப்பாகு சேர்த்து டெங்கு நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் ரத்தத்தில் தட்டணுக்கள் அதிகரிப்பதையும், நோய் விரைந்து குணமாக இம்மருந்துகள் துணை நிற்பதையும் முதல் கட்ட ஆய்வு முடிவுகள் உறுதியாக தெரிவிக்கின்றன.
கசப்பு சுவையுடைய பப்பாளி இலையில் மருத்துவ குணமிக்க எண்ணற்ற வேதிப்பொருட்கள் உள்ளன. அல்கலாய்டுகள் இயற்கை நிறமிகள், குர்சிட்டின், கேம்ப்பெரால் ஆகியன குறிப்பிடத்தக்கவை. குர்சிட்டின், பப்பைன், கைமோபப்பைன் ஆகியன அதன் மருத்துவ தன்மைக்கு முக்கிய காரணமாகின்றன. இது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எனும் தட்டணுக்கள் குறைவதை தடுப்பதாகவும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதாகவும், வெள்ளையணுக்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
பப்பாளி இலைச்சாறு 10 மிலி மூன்று வேளை கொடுக்க நல்ல பலன் தருவதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன. எனவே மருத்துவர் ஆலோசனைப்படி நிலவேம்பு, ஆடாதோடை இவற்றுடன் பப்பாளி இலைச் சாற்றினை எடுத்துக்கொள்வது டெங்கு நோய் சிகிச்சையில் நல்ல பலன் தரும்.
காலம் காலமாக அம்மைத் தொற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் 'வேப்பிலை' டெங்கு வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படுவதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன. வேப்பிலையில் உள்ள 'அசாடிராக்டின்' எனும் வேதிப்பொருள் அதன் கிருமிகொல்லித் தன்மைக்கு காரணமாக உள்ளது. வேப்பிலையானது டெங்கு வைரஸ் பல்கி பெருகுவதை தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு. அதே போல் 'பொன்முசுட்டை' எனும் சித்த மருத்துவ மூலிகை டெங்கு வைரசின் நான்கு வகை பிரிவுகளிலும் அவற்றின் வளர்ச்சியைத் தடுப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
'அமிர்தவல்லி' எனப்படும் 'சீந்தில்' மூலிகையை ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுக்கலாம். இது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும், ரத்தத்தில் தட்டணுக்கள் அதிகரிக்கும் தன்மையும், வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படும் தன்மையும் உடையது. இதில் உள்ள 'டினோஸ்போரின்' எனும் முக்கிய தாவர வேதிப்பொருள் அதன் மருத்துவத் தன்மைக்கு காரணமாக உள்ளது.
மூலிகைகளைத் தவிர அன்னபேதி செந்தூரம், அய செந்தூரம், அயகாந்த செந்தூரம், பவள பற்பம், சங்கு பற்பம் போன்ற பல்வேறு மருந்துகள் பித்தத்தைக் குறைத்து டெங்குவின் பின் விளைவுகளில் இருந்து காப்பதாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தடுப்பு முறைகள் :
டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் கொசுக்கள் தேங்கிய சுத்தமான நீரில் தான் உற்பத்தி ஆகின்றன. முக்கியமாக மழை நீர் தேங்கி இருக்கும் இடங்களை சோதனை செய்து அதனை நீக்குவது நல்லது. வீட்டிலும் நல்ல நீரினை சேமித்து வைக்கும் போது மூடிவைக்க வேண்டும். கொசு கடிக்காமல் இருக்க முழு சட்டைகளை பயன்படுத்தலாம்.
இயற்கை கொசு விரட்டிகளாக வேப்பிலை, நொச்சி இலை புகை போடலாம். தினமும் குளிப்பது கொசுக்கள் நம்மை அண்டாமல் தடுக்கும். சுத்தமான அழுக்கில்லாத உடைகளை உடுத்துவது நல்லது. கற்பூராதி தைலம் எனும் சித்த மருந்தை கொசு கடிக்காமல் இருக்க மேலே பூசிக்கொள்ளலாம். முறையான தடுப்பு நடவடிக்கைகளும், நோயினை பற்றிய விழிப்புணர்வும், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையை நாடுவதும், டெங்குவில் இருந்து நம்மை காக்கும் ஆயுதங்கள்.
ஆண்டுதோறும் இந்தியாவில் டெங்குவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டெங்குவால் பாதிக்கப் பட்டு மீண்டு வந்தவர்க ளின் துன்பத்தை வெறும் வார்த்தைகளால் விளக்க முடியாது. அதே போல் டெங்கு காய்ச்சலில் சிகிச்சை பலனின்றி இறப்போர்களின் இழப்பும் ஏற்கக்கூடியது அல்ல. இத்தகைய அச்சுறுத்தலான சூழ்நிலையில் ஒருங்கிணைந்த மருத்துவமாக சித்த மருத்துவத்தைப் பயன்படுத்தி இறப்பினைத் தடுத்து, சமூக நலன் காப்பது, இன்றைய தருணத்தில் அவசியமான ஒன்று.
தொடர்புக்கு:
drthillai.mdsiddha@gmail.com
- கும்பேஸ்வரரை ஒரு நாள் தரிசித்தாலே நற்பெயர் கிடைக்கும். தொடர்ந்து தரிசித்தால் மோட்சம் கிடைக்கும்.
- கரும்பாயிரம் விநாயகரை வழிபட்ட பிறகு நீங்கள் அடுத்து அருகில் உள்ள கும்பேஸ்வரர் ஆலயத்துக்கு தான் வர வேண்டும்.
கும்பகோணம் நகரம் எப்படி உருவானது என்பதை கடந்த வாரம் பார்த்தோம். ஜீவ வித்துக்கள் கொண்ட அமுத கலசத்தை சிவபெருமான் அம்பு எய்து தெறிக்க வைத்ததால் அந்த அமுதம் சிதறி நாலாபுறமும் பாய்ந்தது. அந்த அமுதம் பாய்ந்தோடிய இடங்களில் எல்லாம் லிங்கங்கள் தோன்றி ஆலயங்கள் உருவானது. அமுத கலசம் தங்கிய இடத்துக்கு கும்பகோணம் என்ற பெயர் ஏற்பட்டது.
மாசி மாதத்தில் இந்த நிகழ்வு நடந்ததாக குறிப்புகள் உள்ளன. எனவேதான் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் கும்பகோணம் எப்போதும் திருவிழா கோலமாக மாறிவிடும். அதிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகம் திருவிழா நாடெங்கும் உள்ள பக்தர்களை கும்பகோணத்துக்கு வரவழைப்பதாக இருக்கும்.
கும்பகோணத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருந்தாலும் பிரபஞ்சம் தோன்ற காரணமாக அமைந்த கும்பேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆதிகும்பேஸ்வரர் ஆலயம்தான் முதன்மையானதாக கருதப்படுகிறது. கரும்பாயிரம் விநாயகரை வழிபட்ட பிறகு நீங்கள் அடுத்து அருகில் உள்ள கும்பேஸ்வரர் ஆலயத்துக்கு தான் வர வேண்டும்.
கும்பகோணம் நகரின் நடுநாயகமாக இருக்கும் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தை கும்பகோணத்தின் தலைமை கோவில் என்றே அழைக்கிறார்கள். 128 அடி உயர ராஜகோபுரத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றால் மிக பிரமாண்டமான ஆலயத்தை காணலாம். ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் வரலாற்று பின்னணி கொண்டது.
ஒவ்வொரு சன்னதியும் ஒரு கதை சொல்லும் மகத்துவம் மிக்கது. எனவே கும்பேஸ்வரர் ஆலயத்தை அவசரம் அவசரமாக வழிபடாமல் பொறுமையாக, நிதானமாக நடந்து வழிபட்டால் பல புதிய தகவல்களை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.
விநாயகர், முருகர், அம்பாள், அகத்தியர், சப்த கன்னியர், வீரபத்ரர், லட்சுமி நாராயண பெருமாள் என்று பல்வேறு கடவுளர்களுக்கும் தனித்தனி சன்னதிகள் நிரம்பிய ஆலயம். குறிப்பாக மங்களாம்பிகை சன்னதி அதிக சிறப்பு வாய்ந்தது. புன்னகை ததும்ப காட்சி அளிக்கும் மங்களாம்பிகை கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து விடுவது போல இடது காலை சற்று முன்னே வைத்து நிற்கும் அழகே அழகு.
அம்பிகையின் நிகரற்ற அருள்பீடமாக மங்களாம்பிகை சன்னதி கருதப்படுகிறது. கருவறையில் கும்பேஸ்வரர் கிழக்கு நோக்கிய வண்ணம் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். அமுதத்தையும், மணலையும் குழைத்து உருவாக்கப்பட்ட லிங்கமாக இந்த லிங்கம் திகழ்கிறது. எனவே கவசம் சாத்தப்பட்டுள்ள இந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. லிங்கத்துக்கு பவுர்ணமி தோறும் புனுகு சட்டம் சாத்துகிறார்கள்.
கும்பேஸ்வரர் ஆலய கருவறை லிங்கத்தில் இருந்து தெய்வீக கதிர்வீச்சு தினமும் வெளியில் வருவதாக பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. அந்த தெய்வீக கதிர்வீச்சை பக்தர்களில் சிலர் அடிக்கடி உணர்வதும் உண்டு.
ஆதி கும்பேஸ்வரரை வழிபட்டால் எங்கு செய்த பாவமும் இல்லாமல் போய் விடும் என்பது ஐதீகமாகும். கும்பேஸ்வரர் ஆலயம் நம் வாழ்க்கை பயணத்துடன் தொடர்புடையது. அதாவது மனித குலத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சக்தியை இந்த ஆலயம் கொண்டிருப்பதாக புராணங்களில் புகழப்பட்டுள்ளது. எனவேதான் கும்பகோணத்துக்கு யாத்திரை வருபவர்களுக்கு இந்த ஆலயத்தில் முதலில் வழிபட்டு தொடங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
பிரபஞ்சத்தில் பிரளயம் ஏற்பட்ட பிறகு பிரம்மன் கும்பகோணத்தில்தான் தனது படைப்பு தொழிலை முதல் முதலாக தொடங்கினார். இதற்காகவே சிவபெருமான் இந்த தலத்தில் லிங்கத்துக்குள் உறைந்து சுயம்பு வடிவமாக மாறினார் என்று சொல்வார்கள். இதன் மூலம் உயிர் படைப்பின் தொடக்கமாக இந்த தலம் கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு பக்தரும் இந்த தலத்தில் வந்து வழிபடுவது என்பது பிறவி கடமையாக சொல்லப்படுகிறது.
உயிர்களின் தொடக்கத்துக்கு மூலமாக திகழும் இந்த தலத்தில் வழிபட்டால் வாழ்வின் சவால்களை சமாளிக்கும் ஆன்மீக சக்தி கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும். கும்பேஸ்வரரை மனமுருகி வழிபட்டால் உடல் பிரச்சினைகள் மட்டுமல்ல மன பிரச்சினைகளும் நீங்கும் என்பது லட்சக்கணக்கான பக்தர்களின் அனுபவமாகும்.
இந்த தலத்தில் சிவபெருமான் தனது 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகளை மங்களாம்பிகைக்கு கொடுத்து பிரதிஷ்டை செய்ததாக குறிப்புகள் உள்ளன. அம்பாள் ஏற்கனவே 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகளை கொண்டவள். சிவனின் 36 ஆயிரம் மந்திர சக்திகளையும் சேர்த்து 72 ஆயிரம் கோடி மந்திர சக்தி கொண்டவளாக மங்களாம்பிகை திகழ்கிறாள்.
எனவே மங்களாம்பிகையை இந்த தலத்தில் மனமுருக வழிபட்டால் மங்களம் உண்டாகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும், சந்திரன் குருவுடன் இணையும் மாசி மாத பவுர்ணமி நாளில் வரும் மகாமக பெருவிழா இந்த ஆலயத்துடன் முதன்மையான தொடர்பு கொண்டதாகும். எனவே மகாமக குளத்தில் புனித நீராடி யார் ஒருவர் கும்பேஸ்வரரை மனமுருக வழிபாடுகள் செய்கிறாரோ அவருக்கு நினைத்ததெல்லாம் நடக்கும்.
சித்தர்களில் குள்ளமுனி என்று அழைக்கப்படும் அகத்தியர் இங்குதான் ஐக்கியமாகி இருக்கிறார். அவர் கும்பேஸ்வரரையும் மங்களாம்பிகையையும் தியானம் செய்து வழிபட்டு நிகரற்ற ஆற்றல்களை பெற்றார். அதனால்தான் சீதையை மீட்க வந்த ராமருக்கு அவரால் இந்த தலத்தில் நல்ல வழியை காட்ட முடிந்தது. அதை உணர்த்தும் வகையில் அகத்தியர் இந்த ஆலயத்தில் தனி சன்னதியில் இருக்கிறார்.
அந்த சன்னதி முன்பு அமர்ந்து அகத்தியரை நினைத்து தியானம் செய்தால் அவரது அருள் அலைகள் பெருகி வருவதை உணர முடியும். அதுபோல காஞ்சி மகாபெரியவர் இந்த தலத்தில் அம்பாளை பார்த்து அமர்ந்து தியானம் செய்த இடம் இங்கு சிறப்பான இடமாக கருதப்படுகிறது. அங்கு அமர்ந்து தியானம் செய்தால் மனம் அமைதி அடைவதாக சொல்கிறார்கள்.
படைப்பு தொழிலை தொடங்கிய பிரம்மனிடம் சிவபெருமான், "உமக்கு வேறு என்ன வேண்டும்?" என்று கேட்டாராம். அப்போது பிரம்மன், "மனிதர்கள் பல்வேறு வகையான பாவங்களை செய்து விடுகிறார்கள். அந்த பாவங்களில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ப சில வரங்களை தர வேண்டும்" என்று கேட்டாராம். அதன்படி சிவபெருமான் சில வரங்களை கொடுத்துள்ளார்.
* கும்பேஸ்வரரை ஒரு நாள் தரிசித்தாலே நற்பெயர் கிடைக்கும். தொடர்ந்து தரிசித்தால் மோட்சம் கிடைக்கும்.
* கும்பேஸ்வரரை கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தினத்தன்று நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் நிறைவான வாழ்க்கை பெற்று முக்தியை பெற முடியும்.
* கும்பேஸ்வரர் ஆலயத்தில் திருப்பணி செய்பவர்களுக்கு வேண்டுபவை எல்லாம் தாமதமின்றி கிடைக்கும்.
* மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தன்று கும்பேஸ்வரரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் உள்பட முக்கிய தோஷங்கள் அனைத்தும் பனி போல் விலகி விடும்.
* மாசி மாத விழா நாட்களில் கும்பேஸ்வரரை வழிபட்டால் குலவிருத்தி உண்டாகும்.
* மகாமகம் குளத்தில் நீராடி கும்பேஸ்வரரை வழிபட்டில் அஸ்வமேத யாக பலன்களுக்கு நிகரான பலன்கள் வந்து சேரும்.
* கும்பேஸ்வரர் ஆலயத்தில் கொடி மர வழிபாட்டால் தொடங்கி இறுதி வரை ஆகம விதிகளுடன் உரிய வழிபாட்டை செய்தால் எல்லா பாவங்களும் நீங்கி விடும்.
-இப்படி பல்வேறு பலன்களை தருவதாக கும்பேஸ்வரர் பிரம்மனிடம் வாக்களித்து இருப்பதால் நிச்சயம் இந்த தலத்து வழிபாடு வாழ்க்கை மேம்பாட்டுக்கான வழிபாடாக இருக்கும்.
சுயம்பு வடிவமாகவும், சக்தி பீடமாகவும் இந்த தலத்து கும்பேஸ்வரரும், மங்களாம்பிகையும் இருப்பதால் இவர்களை வழிபடும் அனைவருக்கும் மங்களம் உண்டாகும். வெள்ளிக்கிழமைகளில் மங்களாம்பிகைக்கு செம்பருத்தி பூக்களை மாலையாக அணிவித்து வழிபட்டால் வாழையடி வாழையாக வம்சவிருத்தி உண்டாகும். செம்பருத்தி பூவால் மங்களாம்பிகைக்கு மகுடம் சூட்டினால் குபேரன் ஆவான் என்று பிருமாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இப்படி கும்பேஸ்வரர் ஆலயத்தில் எத்தனையோ பலன்களை உங்களால் பெற முடியும். இங்கு வழிபட்ட பிறகு கும்பகோணத்தை சுற்றியுள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட தொடங்கலாம்.
கரு உருவாவது முதல் வாழ்க்கையின் நிறைவு வரை ஒவ்வொரு கால கட்டத்திலும் என்ன நடக்கும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை நிர்ணயிக்கும் ஆற்றல் கொண்டதாக கும்பகோணம் பகுதி ஆலயங்கள் உள்ளன. அந்த வகையில் கருவை உருவாக்கும் ஆலயமான கருவளர்ச்சேரி ஆலயத்தை அடுத்த வாரம் காணலாம்.
- பத்து நாட்கள் திலகர் வசித்த இல்லத்தில் ஓர் அறை விவேகானந்தர் தங்கியிருந்தார்.
- அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற பலவகைத் தத்துவப் போக்குகள் பாரதம் முழுவதும் பரவியிருக்கின்றன.
இப்போது நாடெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிற விநாயகர் சதுர்த்தி விழாவில் இத்தகைய உற்சாகமான போக்கு தோன்றக் காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? பகவத் கீதைக்கு உரையெழுதிய பால கங்காதர திலகர். அவருக்கு மதப்பற்றும் ஆன்மிகப் பற்றும் மிகுதி.
ஒருமுறை ரெயில் பயணத்தில் தற்செயலாக சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தார் அவர். விவேகானந்தரின் தோற்றமும் பேச்சும் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.
அவரைத் தம் இல்லத்தில் ஓர் அறையில் தங்குமாறு வேண்டினார் திலகர். பத்து நாட்கள் திலகர் வசித்த இல்லத்தில் ஓர் அறை விவேகானந்தர் தங்கியிருந்தார். அந்த அறையை விவேகானந்தர் தங்கி தியானம் செய்த இடம் என்பதால், புனிதமானது என்று கருதியது திலகரின் ஆன்மிக மனம்.
இந்தியர்களை ஒருங்கிணைத்தால்தான் சுதந்திரம் பெற முடியும். விவேகானந்தர் வழிதான் சரியானது. இந்தியர்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைப்பது தான் சாத்தியமானது.
மொழிகளாலும் மாநிலங்களாலும் இந்திய மக்கள் பிரிந்திருந்தாலும் ஆன்மிகம் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய ஆன்மிகம் மொழிப் பிரிவு, எல்லைப் பிரிவு இவைகளைக் கடந்து பரவியிருக்கிறது.
வடக்கே காசிக்குச் செல்பவர்கள் தெற்கே ராமேஸ்வரத்திற்கும் வருகிறார்கள். ராமாயணமும் மகாபாரதமும் எல்லா இந்திய மொழிகளிலும் இருக்கின்றன. பகவத் கீதை எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
ஆன்மிகம் இந்தியர்களின் ஆழ்மனத்தில் வேரூன்றியிருக்கிறது. இந்தியாவில் நாத்திகச் சிந்தனைகள் மிக மிகக் குறைவு.
எனவே விவேகானந்தர் வழியில் ஆன்மிகத்தின் மூலம் இந்தியர்களை ஒன்றிணைப்பதே சரி, அதுவே எளிதில் சாத்தியமாகக் கூடியது எனத் திலகர் முடிவெடுத்தார். அப்படியானால் இந்தியர்களை மிக எளிதில் ஒன்றிணைக்கக் கூடிய ஆன்மிகக் கொள்கை எது எனவும் யோசனையில் ஆழ்ந்தார்.
அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற பலவகைத் தத்துவப் போக்குகள் பாரதம் முழுவதும் பரவியிருக்கின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட தத்துவம் சார்ந்து இந்தியர்களை ஒருங்கிணைப்பது சிரமமாக இருக்கும். மற்ற தத்துவப் பிரிவினர் மனத்தால் இணைவதில் சங்கடம் எழும்.
ஆனால் மக்கள் போற்றித் துதிக்கும் ஏதேனும் ஒரு கடவுள் வடிவத்தின் மூலம் ஒற்றுமையை உண்டுபண்ணி விடலாம்.
அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்துமதம் எல்லா வகை வழிபாட்டுக்கும் இடம்தரும் பரந்த மனப்பான்மை கொண்ட மதம். சிவனை வணங்குபவர்கள், திருமாலை வணங்குபவர்கள் என தெய்வ வடிவங்களில் தங்களுக்கு உகப்பானதை ஏற்றுத் தொன்று தொட்டு அந்த மரபில் வழிபடுபவர்கள் பற்பலர்.
அவர்களை ஒரே தெய்வ வடிவத்தைப் போற்றுவதன் மூலம் இணைப்பது எப்படி? அந்த வகையில் இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் ஏற்கும் வகையில் ஒரு தெய்வ வடிவம் வேண்டுமே?
திலகர் மனத்தில் ஒளிவீசும் விநாயகர் உருவம் தோன்றியது. விநாயகர்தான் இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் ஏற்கும் கடவுள்.
வைணவர்களும் கூடத் தும்பிக்கை ஆழ்வார் என விநாயகரைக் கொண்டாடுகிறார்கள். இந்து மதத்தின் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களும் எழுதும்போது பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுதத் தொடங்குகிறார்கள்.
சத்ரபதி சிவாஜி காலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஓரளவு பிரபலமாகியிருந்தது.
`நாம் விநாயகர் சதுர்த்தி விழாவை தேசிய விழாவாக மறுபடி உருவாக்குவோம். மக்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைப்போம்.
ஆங்கிலேய ஆட்சி நீங்கி நல்லாட்சி மலர இது ஒன்றே வழி. இந்திய மக்களை ஒருங்கிணைத்துவிட்டால் சுலபமாக சுதந்திரம் பெற்றுவிட முடியும்.
சரியாகச் சிந்தித்த திலகர் சரியாகவே முடிவெடுத்தார். விநாயகர் சதுர்த்தி விழாவை தேசமெங்கும் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இந்தியாவின் எல்லாப் பிரதேசங்களிலும் விநாயகர் சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் எனப் பிரசாரம் செய்யலானார்.
தாம் முன்னின்று நடத்திய முதல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒரு புனிதமான இடத்தில் இருந்து தொடங்கி நடத்த விரும்பினார். அத்தகைய மிகப் புனிதமான இடம் அவர் இல்லத்திலேயே இருந்தது. சுவாமி விவேகானந்தர் பத்து நாட்கள் தங்கியதால் புனிதமடைந்த அறைதான் அது.
அந்த அறையிலிருந்தே தம் முதல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அவர் தொடங்கினார். அவ்விதம் தொடங்கியதுதான் நாடெங்கும் நிகழும் இப்போதைய விமரிசையான விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களுக்குத் தொடக்கத்தில் போடப்பட்ட பிள்ளையார் சுழி!...
மகாபாரதத்தை, வியாசர் சொல்லச் சொல்ல தந்தத்தால் எழுதி நமக்களித்தவர் பிள்ளையார்தான். பலவகைப் பிள்ளையார்கள் இருக்கிறார்கள்.
கணிப்பொறியைக் கையில் வைத்து இயக்கும் கணிப்பொறி விநாயகர் கூட இப்போது காட்சிப் படுத்தப்படுகிறார். கணிப்பொறி விநாயகருக்கு ஒரு சவுகரியம். அவரிடம் `மவுஸ்` ஏற்கெனவே உண்டு!
விநாயகரைப் பற்றிப் பல்வேறு தலங்களில் பற்பல கதைகள் உலவுகின்றன. `கடுக்காய்ப் பிள்ளையார் என்று ஒரு பிள்ளையார் திருவாரூருக்குத் தெற்கே திருக்காறாயில் என்ற திருத்தலத்தில் காட்சி தருகிறார்.
அந்தப் பிள்ளையாருக்குக் கடுக்காய்ப் பிள்ளையார் எனப் பெயர்வந்த கதை சுவாரஸ்யமானது.
அந்த ஊருக்கு ஒரு வியாபாரி ஜாதிக்காய் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக வாங்கிக் கொண்டு வந்தான். ஜாதிக்காய்க்கு வரி உண்டு. அதனால் அவன் டோல்கேட் என்கிற சுங்கச் சாவடியில் கடுக்காய் மூட்டை என்று பொய்சொல்லி ஏமாற்ற எண்ணினான்.
அதிகாரிகள் ஏமாற வேண்டுமே? அதற்காக வண்டியில் முன்னாலும் பின்னாலும் கடுக்காய் மூட்டைகளைப் போட்டுக் கொண்டு ஜாதிக்காய் மூட்டைகளை மறைத்து எடுத்துக் கொண்டு வந்தான்.
அந்த விதமாக வரி கொடுக்காமல் ஏமாற்றி ஜாதிக்காய் மூட்டைகளை ஊருக்குள் கொண்டுவந்து விட்டான் வியாபாரி.
பிள்ளையார் அநீதி செய்தால் தண்டனை கொடுத்து விடுவாரே? அதனால் உண்மையாகவே எல்லா மூட்டைகளிலும் இருந்த ஜாதிக்காயை இரவோடு இரவாக கடுக்காயாகவே மாற்றிவிட்டார் பிள்ளையார்.
மறுநாள் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வியாபாரி, திகைத்துப் போனான். இனி என்ன செய்வது? ஏராளமான பண நஷ்டம் ஏற்படுமே?
கடுக்காய் மட்டும் மறுபடி ஜாதிக்காயாக மாறினால் அதற்குண்டான வரியும் அதற்குமேல் அபராதமும் கட்டுவதாக வேண்டிக் கொண்டான் அவன்.
அவன் பிரார்த்தனை பிள்ளையார் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தியது. மறுபடி கடுக்காயை ஜாதிக்காயாக மாற்றிவிட்டார் பிள்ளையார்.
மகிழ்ச்சி அடைந்த வியாபாரி ஒப்பந்தப்படி வரி செலுத்திவிட்டு பக்தியுடன் பிள்ளையாரை வணங்கினான் என்கிறது கடுக்காய்ப் பிள்ளையார் கதை. பிள்ளையாருக்கு யாராலும் கடுக்காய் கொடுத்துவிட முடியாது!
இப்படியாக இனிக்கும் கொழுக்கட்டையைக் கையில் வைத்திருக்கும் பிள்ளையாருக்கு அந்த ஊரில் கசக்கும் கடுக்காய், பெயரில் அமைந்துவிட்டது!
`அவ்வையாருக்குப் பிள்ளையார் மேல் மிகுந்த பக்தி. தனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது அதை விரும்பாத அவ்வையார் பிள்ளையாரை வேண்டித்தான் முதுமையைப் பெற்றார்.
அவ்வைப் பாட்டி ஊர் ஊராகச் சுற்றிப் பல்வேறு இடங்களுக்குச் சென்றாள். மன்னர்களைச் சந்தித்ததோடு மக்களையும் சந்தித்தாள். தமிழையும் ஆன்மிகத்தையும் எல்லா இடங்களிலும் பரப்பினாள். உயர்ந்த நீதிக் கருத்துகளை அழகிய வெண்பாக்களில் தொகுத்துத் தந்தாள்.
`வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -
பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு`
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் -
கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
என்றெல்லாம் அவ்வைப் பாட்டி தன் இஷ்ட தெய்வமான விநாயகரைப் பாடித் துதித்திருக்கிறாள்.
`சீதக் களப செந்தாமரை` எனத் தொடங்கும் அவ்வையார் எழுதிய விநாயகர் அகவல் யோக சாஸ்திரம் முழுவதையும் செய்யுளில் சொல்கிறது. தமிழையும் ஆன்மிகத்தையும் ஒருசேர வளர்த்த பெருமை அவ்வைக்குரியது.
மகாகவி பாரதியார் பிள்ளையார்மேல் `விநாயகர் நான்மணி மாலை` எழுதி அவரைத் தம் கவிதையில் போற்றுகிறார்.
பிள்ளையார் தொந்தியும் தொப்பையுமாக யானை முகத்துடன் அழகே வடிவாக ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருக்கிறார். அதனால்தான் கல்லுப் பிள்ளையார் மாதிரி ஏன் அசையாமல் இருக்கிறாய் என்று நாம் சிலரைக் கேட்கிறோம்.
சிவன் பார்வதியின் மூத்த பிள்ளையான பிள்ளையாரை மரியாதையோடு ஆர் விகுதி சேர்த்துப் பிள்ளையார் என வழங்குகிறோம். நமக்கு வரும் விக்கினங்களை அழிப்பதால், அவரை விக்னேஸ்வரர் என்கிறோம்.
எந்த பூஜை செய்தாலும் முதலில் அவருக்கு பூஜை செய்துவிட்டுத் தான் தொடங்குகிறோம். எப்போதும் முதல் பூஜை அவருக்குத்தான்.
தமிழகத்தில் அரச மரத்தடியில் தெரு மூலைகளில் என எல்லா இடங்களிலும் பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார். இந்த அளவு பிள்ளையார் கோவில்கள் இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை.
தமிழ் மக்கள் விநாயகர்மேல் அளவற்ற பக்தி உடையவர்கள். பல அரச மரத்தடிகளில் மேற்கூரை கூட இல்லாமல் பிள்ளையார் காட்சி தருகிறார்.
எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் நாம் எழுதத் தொடங்குகிறோம். மளிகைக் கடையில் வாங்க வேண்டிய பொருட்களை எழுதினால்கூட அந்தக் காகிதத்தில் பிள்ளையார் சுழிபோட்டுப் பிறகுதான் வாங்கவேண்டிய பொருட்களை எழுதுகிறோம்!
நம் சுழி எப்படியிருந்தாலும் பிள்ளையார் அதைச் சரிசெய்து விடுவார் என்பது நம் நம்பிக்கை.
`நம்பிக்கை கொண்டிங்கு நாளும்
தொழுவோர்க்கு
தும்பிக்கை நாதன் துணை!'
என்கிறது புகழ்பெற்ற ஈரடி வெண்பா ஒன்று. விநாயகரை வழிபடுவோம். விக்கினங்கள் நீங்கப் பெற்று வாழ்வில் உயர்வோம்!
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.
- தெலுங்கிலும் புதுயுகம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
- படிக்க வைப்பதா? நடிக்க விடுவதா? நடிக்கவிட்டால் எதிர்காலத்துக்கு கை கொடுக்குமா? என்ற பயங்கர குழப்பம்.
படிப்பா... நடிப்பா...
எந்த பாதையில் பயணிப்பது என்று எனக்கும் புரியவில்லை. அம்மா-அப்பாவுக்கும் எதுவும் புரியாமல் ஒருவிதமான தயக்கம்.
எட்டாம் வகுப்பில் பாதியிலேயே கதாநாயகியாக தெலுங்கு பட உலகில் கால் ஊன்றினேன். ராஜேந்திர பிரசாத்துக்கு ஜோடியாக நான் நடித்த நவயுகம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை.
அந்த நேரத்தில் தமிழிலும் 'ஒரு புதிய கதை' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கே.சுப்பையா டைரக்ஷன். அந்த படம்தான் தமிழில் நான் கதாநாயகியாக நடித்த முதல் படம். ஹீரோவும் பிரபுராஜ் என்ற அறிமுக நடிகர்.
நான் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனுபவம் இருந்ததால் டைரக்டர் சொல்வதை கேட்டு அதற்கு ஏற்ப எங்கு நிற்க வேண்டும்? எப்படி திரும்பி நிற்க வேண்டும் என்பதை உடனே சரியாக செய்து விடுவேன்.
ஆனால் ஹீரோவுக்கு அதுதான் முதல் அனுபவம் என்பதால் சரியாக செய்யாமல் அடிக்கடி டைரக்டரிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பார். அதைப்பார்த்து எனக்கே கஷ்டமாக இருக்கும்.
அவர் என்னிடம் 'நீங்க நல்லா நடிக்கிறீங்க மேடம்' என்பார். கதாநாயகியாக எனக்கும் இதுதான் முதல்படம். உங்களுக்கும் நடிப்பு வந்துவிடும் என்று நான் அவருக்கு தைரியம் கொடுப்பேன்.
ஒரு புதிய கதை படப்பிடிப்பு முடிந்து படமும் 10.8.1990 அன்று வெளியானது. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
'ராசாவே என் ராசாவே', 'தெக்கத்தி காத்த டிச்சு உடம்பு ஒரு மாதிரி ஆயிடுச்சி' என்ற பாடல்கள் ரசிக்கும்படி இருந்தன. ஆனாலும் எனக்கு பெயர் வாங்கி தந்த படமாக அமையவில்லை.
தெலுங்கிலும் புதுயுகம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தமிழில் ஒரு புதிய கதையும் இப்படி ஆனதால் அம்மா, அப்பாவுக்கு மனதளவில் ஒரு விதமான பயம். நம் மகளை தொடர்ந்து நடிக்க வைக்கலாமா? சினிமா அவளது எதிர்காலத்துக்கு கைகொடுக்குமா? என்று ரொம்பவே யோசித்து கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் முன்னணி தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் படத்தில் நடிப்பதற்காக என்னை தேடி வந்தார்கள். 'சீதா ராமையா காரிமனவரலுரு' அதாவது சீதாராமையாவின் பேத்தி என்ற அந்த படத்தில் நாகேஸ்வர ராவின் பேத்தி வேடத்தில் நடிக்க கேட்டார்கள். 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள வேண்டும் என்றார்கள்.
அதைக்கேட்டதும் அம்மா ரொம்பவே யோசித்தார். இதுவரை நடித்த படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை. இந்த படத்தில் வேறு 35 நாட்கள் கால்ஷீட் கேட்கிறார்கள். இத்தனை நாட்கள் பள்ளிக்கூ டத்துக்கு போகாவிட்டால் படிப்பும் கெட்டுப் போகும். படிக்க வைப்பதா? நடிக்க விடுவதா? நடிக்கவிட்டால் எதிர்காலத்துக்கு கை கொடுக்குமா? என்ற பயங்கர குழப்பம்.
கடைசியில் நடிக்க வைக்க வேண்டாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள். கால்ஷீட் கேட்டு வந்தவர்களிடம் நடிக்க வைக்க விரும்பவில்லை. அவள் படிக்கட்டும் என்று அம்மா உறுதியாக கூறினார்.
ஆனால் படக்குழுவினரோ 'இது நல்ல கதை' நாகேஸ்வர ராவின் பேத்தி பாத்திரமும் வலுவாக உள்ளது. இந்த பாத்திரத்தில் மீனா நடித்தால் நிச்சயம் பெயர் வாங்கி கொடுக்கும் என்றார்கள்.
ஆனால் அம்மா-அப்பாவுக்கு முழு நம்பிக்கை ஏற்படவில்லை. 'யோசிக்கி றேன்' என்றார்கள்.
ஆனால் படக்குழுவினர் 'இந்த ஒரு முறை... 35 நாட்கள் மட்டும் அனுமதியுங்கள்... பெயர் கிடைக்காவிட்டால் அப்புறம் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு படிக்க வையுங்கள்' என்று வற்புறுத்தினார்கள்.
அவர்களின் வற்புறுத்தலை தட்ட முடியாமல் அம்மாவும் சம்மதித்தார். அதைக்கேட்டதும் படக்குழுவினருக்கு மிகுந்த சந்தோசம்.
சம்பளம் உள்ளிட்ட எல்லா விசயங்களையும் பேசி முடித்துவிட்டு ஷூட்டிங் தேதியை சொல்லி அனுப்புகிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
சீதா ராமையாவின் பேத்தி கதாபாத்திரத்தில் நடிகர் நாகேஸ்வரராவ் பேத்தியாக நடித்தேன்.
தெலுங்கில் புகழ்பெற்ற நடிகர் நாகேஸ்வரராவ். அவரது பேத்தியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். படம் எப்படியாவது வெற்றிப்படமாக அமைய வேண்டுமே என்ற எண்ணத்தோடு முழு ஈடுபாட்டோடு நடிக்க தொடங்கினேன்.
டைரக்டர் கிராந்திகுமார். ரொம்ப கோபக்காரர். அதே நேரம் மனதுக்குள் பாசம் உண்டு. அந்த பாசத்தை வெளிக்காட்ட தெரியாதவர் என்பது தான் உண்மை.
டைரக்டரிடம் திட்டு வாங்கிவிட கூடாது என்பதற்காகவே வசனங்களை அடிக்கடி மனப்பாடம் செய்து கொள்வேன். தெலுங்கு நன்றாக பேச தெரிந்து இருந்தாலும் சில நேரங்களில் ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் வைத்து திடீரென்று வசனங்களை மாற்றி தருவார்கள். அந்த நேரங்களில் தான் மனம் கொஞ்சம் திக்... திக்.. என்று இருக்கும்.
என்னதான் இருந்தாலும் தெலுங்கு தாய்மொழி இல்லையல்லவா? எனவே திடீரென்று புதிதாக நிறைய வசனங்கள் தந்தால் பேச பயமாக இருக்கும்.
பாடல் காட்சிகளில் சரியாக நடிக்க வேண்டும் என்பதற்காக பாடல்களை போட்டு கேட்டுவிட்டுத்தான் படப்பிடிப்புக்கு செல்வேன்.
ஒரு காட்சியில் நிறைய மந்திரங்கள் சொல்லி நடிக்க வேண்டும். அந்த மந்திரங்களை மனப்பாடம் செய்து அப்படியே சொல்லி 'சபாஷ்' வாங்கினேன். அது மனதுக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது.
நமது பாத்திரம் மூலம் டைரக்டர் படத்தில் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு பேசினால் முகபாவனையும் நன்றாக வந்துவிடும் என்று அட்வைஸ் செய்வார்கள். அப்படித்தான் மெல்ல மெல்ல பழகி கொண்டேன்.
ஒரு நாள் ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் படப்பிடிப்பு. நான் பாவடை-சட்டையில் போய் நின்றதை பார்த்ததும் டைரக்டர் இந்த காஸ்ட்டியூம் யார் சொன்னது? பாவாடை தாவணி தான் அணிய வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.
உடனே புதிய காஸ்ட்டியூமை தயார் செய்வ தற்காக ஓடினார்கள். புதிய காஸ்ட்டியூமை உடனே தைத்து ரெடி பண்ணி கொண்டு வருவதும் சிரமம் தான். ஆனால் டைரக்டர் அதை யெல்லாம் யோசிக்கமாட்டார். என்ன செய்தாலும் சரி. அவர் எதிர் பார்க்கும் காஸ்ட்டியூமை உடனே தயார் செய்தே ஆக வேண்டும்.
துணி எடுக்க சென்றவர் மதியம் வரை வரவில்லை. அவருக்காக நான் காத்திருந்தேன். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. காலதாமதம் ஆனதால் டைரக்டர் சூடாகி இருக்கிறார். அது எனக்கு தெரியாது.
துணி வந்ததும் அவசர அவசரமாக பாவாடை, தாவணி காஸ்ட்டியூமில் ரெடியாகி படப்பிடிப்புக்கு ஓடினேன்.
என்னை பார்த்ததும் டைரக்டருக்கு கடும் கோபம். இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறேன் என்று நினைத்து இருக்கிறார். ஆனால் அது என் தப்பில்லை. துணி கிடைப்பதற்கு தாமத மாகி விட்டது. அதற்கு நான் என்ன செய்வது?
ஆனால் டைரக்டருக்கு அந்த பிரச்சினை எதுவும் தெரியவில்லை. டிரெஸ் மாற்றிவிட்டு வருவதற்கு இவ்வளவு நேரமா? என்று கன்னா பின்னாவென திட்டினார். ஒரே படத்தில் இவ்வளவு திமிரா உனக்கு? என்று கடுமையாக திட்டினார்.
எதற்காக திட்டுகிறார்? நாம் எந்த தப்பும் செய்யவில்லையே? செய்யாத தப்புக்கு ஏன் இப்படியெல்லாம் திட்டுகிறார்? என்று தவித்து போனேன். முகம் சுருங்கி கண்கள் கலங்கிவிட்டன.
என்னை பார்த்து பரிதாபப்பட்ட தாராமாஸ்டர் தான் எனக்கு ஆறுதல் கூறினார். 'அவர் அப்படித்தான்' நீ எதையும் கண்டுக்காதே, என்று என்னை தேற்றினார்.
அவர் எப்போது திட்டினாலும் கொஞ்சம் நேரத்தில் மறந்து விடுவார். நீ நடிப்பதில் கவனமாக இரு. நீ எந்த தப்பும் செய்யவில்லை. எனக்கு புரிகிறது. நிச்சயம் அவரும் புரிந்து கொள்வார் என்று என்னை ஆசு வாசப்படுத்தி நடிக்க வைத்தார்.
கண்களை துடைத்துக்கொண்டு காட்சி யில் நடிக்க சென்றேன். இப்படித்தான் அந்த படத்தில் பரபரப்பு, பதட்டம், பயம் என்று எல்லாவற்றையும் சந்தித்து தான் ஒவ்வொரு காட்சி யையும் நடித்து முடித்தேன்.
35 நாட்களில் திட்ட மிட்டபடி படப்பிடிப்பு முடிந்தது. அப்புறம் அங்கு என்ன வேலை? சென்னைக்கு திரும்பிவிட்டேன்.
பட வேலைகள் முடிந்து குறிப்பிட்ட நாளில் படமும் திரைக்கு வந்தது!
'ரிசல்ட்' எப்படி? இந்த படமாவது கை கொடுத்ததா? கை விட்டதா? அடுத்த வாரம் சொல்கிறேன்...
(தொடரும்)
- கனடாவில் மத்திய பெடரல் மற்றும் பிராந்தியத் தேர்தல்கள் தனித்தனியாக நடக்கின்றன.
- பஞ்சாயத்துக்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரே தேர்தல் என்றால் பாதுகாப்பு என்ன ஆகும் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது.
இந்தியாவின் ("பாரத்" என்று சொல்ல வேண்டுமோ?) அரசியலமைப்பை உருவாக்க சுமார் மூன்று ஆண்டு ஆனது. ஆனாலும் அப்போது "ஒரே நாடு.. ஒரே தேர்தல்" என்று கூறி ஸ்திரத்தன்மை ஏன் பரிந்துரைக்கப்படவில்லை? "ஸ்திரத்தன்மையும் பொறுப்புடைமையும் இணைந்து இருந்தால் நல்லது. அப்படி இருப்பதில்லை. எனவே பொறுப்புடைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்!" என்று நமது அரசியல் நிர்ணய முன்னோர்கள் நினைத்ததே காரணம்! சட்டத்தின் வரிகளை விட அதை இயற்றுபவர்களின் நோக்கமே பிரதானம்!
அமெரிக்காவில் கூட ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்களுக்கான தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதில்லை. ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் முதல் செவ்வாய் அன்று 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதாவது நிலையான கால அளவு! ஆனால் கவர்னர் தேர்தல் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
கனடாவில் மத்திய பெடரல் மற்றும் பிராந்தியத் தேர்தல்கள் தனித்தனியாக நடக்கின்றன. இங்கிலாந்து நாட்டில் "ஹவுஸ் ஆப் காமன்ஸ்" (தேசிய பாராளுமன்றம்) மற்றும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள சட்டமன்றங்களுக்குத் தனித் தேர்தல் வெவ்வேறு நேரங்களில் நடக்கும். ஜெர்மனியில் பெடரல் பாராளுமன்றம் மற்றும் மாநிலத் தேர்தல்கள் ஆகியவற்றிற்கான தேர்தல்கள் தனித்தனி தான்!
சுவீடனில் ரிக்ஸ்டாக் (உச்ச அமைப்பு), பிராந்தியம் அல்லது கவுண்டி கவுன்சில் சட்ட மன்றங்கள் மற்றும் நகராட்சி மன்றங்களுக்கான பொதுத் தேர்தல்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நாளில் நடத்தப்படுகின்றன. பெல்ஜியத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்றத் தேர்தல்! தென் ஆப்பிரிக்காவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாகாண மற்றும் தேசியத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன.
பெல்ஜியம் மற்றும் சுவீடன் ஆகியவை சிறிய நாடுகள்! ஒரே நேரத்தில் வாக்கெடுப்பு நடத்துவதில் பெரிய சவால்கள் இல்லை. தென் ஆப்பிரிக்கா ஓரளவு சரியான ஒப்பீடு. இந்தியா பரப்பளவில் உலகில் ஏழாவது இடம். தென் ஆப்பிரிக்கா 24-வது! அங்கு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் மாகாண மற்றும் தேசிய தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் தேர்தல் முறை விகிதச்சாரப் பிரதிநிதித்துவம்.
தென் ஆப்பிரிக்காவின் தேசிய பாராளுமன்றத்தில் 400 எம்.பி.க்கள் உள்ளனர், பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மொத்தம் ஒன்பது மாகாணங்கள்! சட்டமன்றங்களின் அமைப்பு மக்கள்தொகையைப் பொறுத்து 30 முதல் 90 இடங்கள் வரை மாறுபடும்.
தென் ஆப்பிரிக்காவில் பழைய ஓட்டுச் சீட்டு முறை! எனவே பெரிய புகார்கள் எழுவதில்லை. நாம் வாக்குச் சீட்டு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம். எனவே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏராளமான இ.வி.எம்.கள் தேவை! மேலும் இந்தியாவில் "பர்ஸ்ட் பாஸ்ட் போஸ்ட்" முறை. அதிக வாக்கு பெற்றவர் வெற்றியாளர். 30 சதவீதம் ஆதரவுடன் கூட ஆட்சியைப் பிடிக்க முடியும்.
எனவே "ஒரே நாடு.. ஒரே தேர்தல்" முறையில் மத்திய, மாநில ஆட்சிகளைக் கைப்பற்றிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறது பாரதிய ஜனதா. "வந்ததடி வெள்ளையம்மா, உன் காளைக்கு ஆபத்து!" என்று பதறுகின்றன பெரும்பாலான மாநிலக் கட்சிகள்.
எனது பள்ளி மற்றும் கல்லூரிக் காலம் வரை 1957, 1962, 1967 ஆகிய மூன்று தேர்தல்களும் "ஒரே நாடு..ஒரே தேர்தல்"! தான்! மக்களவை, சட்டமன்றம் ஆகிய இரண்டுக்குமான வேறுபாடுகள் பற்றி எல்லாம் பெரிய புரிதல் கிடையாது. "மேலே", "கீழே" என்பார்கள். அதாவது மேலே என்பது மக்களவை. கீழே என்பது சட்டமன்றம்.
எனது ஆரம்பக் கல்விக் கூடமான கமாலியா பள்ளியில் ஆழ்வார் சார் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் இந்தியத் தேர்தல் முறை பற்றி மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த எண்ணினார். அதனால் பள்ளிக்கூடத்தில் மாதிரி சட்டமன்றம் ஒன்றை நடத்தினார். அதில் நான் மந்திரிசபையில் இடம் பெற்று இருந்தேன். ஆழ்வார் சார் மேற்பார்வையில் பள்ளி கரும்பல கையில் தினமும் தேர்தல் முறை பற்றி செய்தி எழுதிப் போடுவோம்.
ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி 1969-ல் பிளவுபட்டது. அன்றைய பிரதமர் இந்திராகாந்தி பெரும்பான்மையை இழந்தார். திமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவரது ஆட்சி தொடர்ந்தது. வங்கதேச யுத்தம், மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமயமாக்கம் போன்ற நடவடிக்கைகளால் இந்திராவுக்கு ஆதரவு பெருகியது.
அதைப்பயன்படுத்தி மக்களவையைக் கலைத்துவிட்டுத் தேர்தலை முன்கூட்டியே கொண்டுவர 1970-ல் திட்டமிட்டார் இந்திரா. 1971ல் திடீர்த் தேர்தல்! அண்ணாவின் மறை வுக்குப் பிறகு 1969ல் கலைஞர் முதல்வராகி இருந்தார். தனது தலைமையை உறுதிப்படுத்திக்கொள்ள சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்தித்தார்.
இந்தியாவில் முதல் மூன்று மக்களவையும் (1952, 57, 62) முழுக் காலமும் பதவியில் இருந்தன. நான்காவது மக்களவை (1967) முன்கூட்டியே கலைக்கப்பட்டது. அவசர நிலைக்குப் பின் ஐந்தாவது மக்களவையின் காலம் (1976) ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டது. 8, 10, 14, 15-வது, மக்களவைகள் முழுப் பதவிக் காலமும் நீடித்தன. 6, 7, 9, 11, 12, 13-வது மக்களவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன.
இப்படி நிகழ்ந்ததால், 'ஒரே நேரத்தில் தேர்தல்' என்ற நடைமுறை முழுக்கச் சீர்குலைந்தது. 1999 ல் ஆட்சிக்கு வந்த பா. ஜனதா பிரதமர் வாஜ்பாய் சில மாதங்கள் முன்னதாக மக்களவையைக் கலைத்தார். மன்மோகன்சிங், நரேந்திர மோடி (1.0.) முழு ஆட்சிக்காலமும் பதவி வகித்தார்கள். நடப்பு மக்களவை முன்கூட்டியே கலைக்கப்படலாம் என்ற பேச்சு உள்ளது.
மீண்டும் பழைய நிலைக்குப் போகவேண்டும் என்று நினைக்கிறார் பிரதமர் மோடி. எனவே "ஒரே நாடு.. ஒரே தேர்தல்" நிகழ்ச்சிநிரலை கையில் எடுத்து இருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் நியமிக்கப்பட்ட மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் விலகிவிட்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் ஆகியோர் ராம்நாத் கோவிந்த்துடன் தொடர் ஆலோசனை செய்துவருகின்றனர்.
"ஒரே நாடு.. ஒரே தேர்தல்" முறையைக் கொண்டுவருவதற்குக் கூறப்படும் காரணம் என்ன? நாடு முழுவதும் ஏதாவது ஒரு தேர்தல் எப்போதும் நடப்பதால் வளர்ச்சிப்பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், ஆறு, ஏழு ஆயிரம் கோடி ரூபாய் வரையில் மிச்சமாகும்.
தேர்தல் செலவு என்பது மக்களாட்சியின் அடிப்படை!. பல,பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் மத்திய அரசு தேர்தல் செலவைப் பெரிதாக நினைக்கத் தேவையில்லை. கிட்டத்தட்ட 70 கோடி வாக்காளர்கள் இருக்கும் இந்தியா மாதிரியான பெரிய தேசத்தில் ஒரு வாக்காளருக்கு 100 ரூபாய் கூட தேர்தல் செலவு செய்ய முடியவில்லை என்றால் "பச்சப் புள்ள" கூட பக,பக என்று சிரிக்கும்! பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் தங்கள் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொண்டாலேபோதும்!
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆயுள் பாக்கி இருக்கிற பல சட்டமன்றங்களைக் கலைக்க வேண்டியிருக்கும். இப்போது தான் தேர்தல் நடந்து முடிந்த கர்நாடக அரசுக்குக் கிட்டத்தட்ட முழு ஆயுள் பாக்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த தேர்தல் 2026-ல் தான்! இப்படிப் பல மாநிலங்கள்!
"இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்" என்று கூறுகிறது நமது அரசியலமைப்பின் முதல் ஷரத்து. எனவே "பாரதம்" என்ற பெயர் மாற்றத்தின் மூலம் அதையும் உடைத்துவிட்டு கூட்டாட்சிக் கோட்பாட்டை நீக்கி விடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பெயர் மாற்றம் மூலம் பழமைவாதிகளைத் திருப்திப்படுத்திவிடலாம். அதே நேரத்தில் "மாநிலங்களின் ஒன்றியம்" என்பதை மாற்றியமைப்பதன் மூலம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்து விடலாம்!
பல்வேறு வட மாநிலங்களுக்கு 2023 கடைசியில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. 2024-ல் மேலும் பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 6 மாதம் முன்னதாகத் தேர்தல் அறிவிக்கத் தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் போபால் நகரத்தில் சூசகமாகக் கூறிவிட்டார்.
ஆகையால் 2023 செப்டம்பர் 18 -ந் தேதி துவங்க இருக்கும் சிறப்புக் கூட்டத் தொடரில் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு "ஒரே நாடு-ஒரே தேர்தல்" நடைமுறையை "நாட்டு நன்மைக்காக" கொண்டுவருகிறோம் என்று தேச பக்தர்கள் கூறினாலும் கூறுவார்கள் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. கூடவே "ஒரே நாடு.. ஒரே தேர்தல்" நடைமுறையின் முதல் கட்டமாக 9-10 மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்படலாம்! அல்லது ஒட்டு மொத்தமாகக் கூடத் தேர்தல் அறிவிக்கப்படலாம்! எல்லாம் மோடிக்கே வெளிச்சம்!
தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம், சி.பி.ஐ., சி.பி.எம்., பார்வர்ட் பிளாக், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. அ.தி.மு.க. 2018-ல் எதிர்த்தது. இப்போது ஆதரிக்கிறது. இது தான் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்குமான வித்தியாசம், பிரதர்!

மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை என்பது பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம் தான். 1983-ல் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆண்டறிக்கையை சமர்ப்பித்த போதே இது விவாதிக்கப்பட்டது. 1999-ம் ஆண்டின் சட்ட ஆணையத்தின் அறிக்கையிலும் உள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒரே நேரத்தில் பெருமளவிலான மனிதவளம் தேவைப்படும். அதிக எண்ணிக்கையிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கை (VVPAT) இயந்திரங்கள் வேண்டும். அவற்றை வாங்க எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்? அவை ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் மாற்றப்பட வேண்டும்.. பாதுகாப்பாகச் சேமிக்கப்பட வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும்?
தற்போது உள்ளாட்சித் தேர்தல்களை மாநிலங்கள்தான் நடத்துகின்றன அவற்றின் எண்ணிக்கை மிக, மிகப் பெரிய அளவு! அவற்றையும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்திற்குள் கொண்டுவர முன்னாள் ஜனாதிபதி குழுவுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள். பஞ்சாயத்துக்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரே தேர்தல் என்றால் பாதுகாப்பு என்ன ஆகும் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது.
ஏதாவது ஒரு காரணத்தால் மத்திய அரசு கவிழ்ந்தாலோ, மாநில அரசு நடைபெறமுடியாமல் போனாலோ என்ன செய்வது? மக்களவைக்கும் சட்டப் பேரவைக்கும் வெவ்வெறு சமயத்தில் தேர்தல் நடக்கும் போது மாநிலப் பிரச்சினைகளைப் பரிசீலித்து வாக்களிக்கும் வாய்ப்பு உருவாகும். எனவே மாநில சுயாட்சியை இது பாதிக்கும். மத்திய மேலாதிக்கத்தை மேலும் அதிகப்படுத்துவதே இதன் நோக்கம் என்பது வெட்டவெளிச்சம்!
வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தடையாக இல்லாமல் இருக்க விதிகளைத் நிறுத்தினாலே போதும். நான்கு மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற இரண்டு மாதம் தேவை என்றால் எல்லா மாநிலத்திலும் எதற்கு "பணி நிறுத்தம்" செய்ய வேண்டும். தேர்தல் பரப்புரைக் காலத்தை 10 நாட்களாகக் குறைக்கலாம்!
இந்தியா என்பது ஒரே நாடு தான் என்றாலும் அது தேசங்களின் தேசம்! தனியொரு பிரதமரின் கனவுத் திட்டத்திற்காக நாடு சுமையை ஏற்க முடியாது.