என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special article"

    • ஒருநாள் திடீரென அவரது மனதில் ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது.
    • பல சரக்கு வணிகம் செய்து வந்த அவருக்குப் போதுமான அளவுக்கு வருமானம் இருந்தது.

    வாழ்க்கையின் இன்பத் தருணங்களை எப்போதும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் இனிய வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    "எல்லாம் இன்ப மயம்!" என்கிற முழக்கம் கவிதைகளிலும் பாடல்களிலும் கதைகளிலும் மட்டுமே கேட்கிறதே, அன்றாட வாழ்வியலில் அது வந்து போவது எக்காலம்?; அப்படி அது வந்து போனாலும் ஒரு மின்னலைப் போலல்லவா தோன்றியவுடன் மறைந்து விடுகிறது?; நிரந்தர மகிழ்வாய்த் தங்கி நம்மை நிரந்தர இன்பத்தில் ஆழ்த்திடும் காலம் என்பது வாராதா? என்பதெல்லாம் நம் ஒவ்வொருவரின் ஏக்கமாகவே இருக்கிறது. துன்பமும் இன்பமும் மாறி மாறி வருமென்பது வாழ்வியல் உண்மை என்றாலும், பெரும்பாலானோர் வாழ்வில் துன்பம் மட்டுமே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதே இதற்கு மாற்றுக் காண்பது எவ்வாறு?.

    'இன்பம்' என்பதும் 'துன்பம்' என்பதும் எதிர் எதிர் உணர்வுகள்தாம். இன்பம் வந்தால் உள்ளமும் உடலும் மகிழ்ச்சியால் திளைத்திருப்பதும், உற்சாக உணர்வோட்டம் உடலெங்கும் பரவுவதும் இயல்பாக இருக்கிறது. இன்பச் சூழ்நிலையில் எதைச் செய்தாலும் சரியாகவும் திறமாகவும் இருக்கிறது; இன்பச் சூழ்நிலை பெரும்பான்மையும் வெற்றிச் சாதனைகளின் ஊற்றுக் கண்ணாகவே இருக்கிறது. ஆனால் துன்பச் சூழலோ முற்றிலும் மாறுபட்ட உணர்வுகளைக் கொண்டுவந்து சேர்க்கிறது; மனம் துயரத்தில் ஆழ்ந்து குழப்பத்தில் தடுமாறுகிறது; உடலோ சோகத்தில் தள்ளாடிச் செயலற்றுப் போகிறது. துன்பம் நமக்கு எதிர்மறைச் சிந்தனைகளைக் கொண்டுவந்து கொட்டுவதால், எல்லாச் செயல்களும் தோல்விப் பயணங்களாகவே முடிவடைகின்றன. துன்பத்தை இன்பமாக மாற்றும் மாயவித்தைதான் என்ன?.

    இராமாயணத்தில், இராமனைப் பிரிய நேருகிற தருணத்தில் குகன் கலங்கி நிற்கின்றான். பிரிவு என்பது வந்துவிட்டால் துன்பம் வந்துவிடுமே! என்பது அவனது கலக்கத்திற்கான காரணம். அந்த நேரத்தில் குகனைப் பார்த்து இராமன், "துன்புளது எனினன்றோ சுகம் உளது!" என்று கூறுகிறான். அதாவது 'எல்லா இன்பங்களும் முதலில் துன்பங்களாகவே வரும்; துன்பங்களின் நிறைவு இன்பங்களாகவே மலரும்!' என்பதை இந்தத் தொடரின் வாயிலாக இராமன் நமக்கு உணர்த்த விரும்புகிறான். பிரிவது துன்பமானால் பின்பு இணைவது இன்பம்தானே! என்று குகனிடம் உணர்த்தாமல் உணர்த்தி நிற்கிறான் இராமன். திருவள்ளுவரும்,

    "இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

    துன்பம் உறுதல் இலன்"

    என்கிறார். 'இடும்பை எனப்படும் துன்பம் என்பது, மனித வாழ்வியலின் போக்கில் அடிக்கடி ஏற்படுவதுதான்!; இயல்பானதுதான்! என்கிற உண்மையைப் புரிந்து கொள்பவன் இன்பத்தைத் தனியாகத் தேடாமல், துன்பத்தோடு வாழ்வதற்கும்கூடப் பழகிக்கொள்வான்' என்கிறார் திருவள்ளுவர். சுவைகளில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு, உறைப்பு எனப் பலவகை உண்டு என்றாலும் மனம் எப்போதும் இனிப்பை மட்டுமே நாடி நிற்பது போன்றது இன்பத்தை மட்டுமே வேண்டி நிற்பது ஆகும். எல்லாச் சுவைகளின் கூட்டுக்கலவைகளில் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்கள், ஆகச் சிறந்த சுவைப்பையும், சத்துக்களையும் தருவதைப்போல, இனிப்புத் தவிர்ந்த பல்சுவை உணர்வுகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும்.

    துக்கமோ மகிழ்ச்சியோ அதை நமது மனம் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொறுத்தே அவை தரும் விளைவுகளின் தாக்கமும் எதிர்மறையானதாகவோ நேர்முறையானதாகவோ இருக்கும். இன்பத்தை இன்பமாக எதிர்கொள்வதைப்போல, துன்பத்தையும் இன்பமாகவே எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு துன்பம் வருகிறது; அதற்கு எளிதாகத் துன்பம் கொடுத்து அதனைத் தூரத் தள்ளிவிடுவதற்கு ஓர் எளிய வழியை வள்ளுவர் கூறுகிறார்.

    "இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு

    இடும்பைப் படாதவர்"

    'துன்பத்தைக் கண்டு துவண்டுவிடாமல் துணிச்சலோடு எதிர்த்து நின்று போராடத் தெரிந்தவர்களே துன்பத்திற்குத் துன்பம் செய்து இன்பம் விளைவிப்பவர்கள் ' என்பது வள்ளுவ வாக்கு. வாழ்க்கையில் துன்பமே இயல்பானது; அதனைத் துரத்தித் துரத்திப் போரிடுவதே இன்பம் விளைவிக்கும் செயலாகும். இப்போராட்டத்தில், துன்பமும் துயரமும் சூழத் தளர்ந்து போரிடாமல், தெம்பும் நம்பிக்கையும் பெருக உத்வேகத்துடன் போரிட்டால், வெற்றி இலக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். ஓர் ஊரில் ஒரு வணிகர் இருந்தார். பலசரக்கு வணிகம் செய்து வந்த அவருக்குப் போதுமான அளவுக்கு வருமானம் இருந்தது. நாலு பெண்குழந்தைகள். தனது வருமானத்தில் நாலு பெண்குழந்தைகளுக்கும் நல்ல கல்வியை வழங்கி ஆளாக்கி வளர்த்து விட்டார். இப்போதுதான் அவரது வாழ்க்கையில் துன்பம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. நாலு பெண்களுக்கும் படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்க வேண்டும்; அதோடு அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளைகள் கிடைத்துக் கல்யாணம் வேறு நல்லபடியாகச் செய்து முடிக்க வேண்டும். பல சரக்குக் கடை வணிகமும் தற்போது சிரமதிசையில் போய்க்கொண்டிருந்தது; போட்டிக்கு நிறையக் கடைகள் வந்ததனால் நஷ்டக் கணக்கு நாள்தோறும் பெருகிக் கொண்டே இருந்தது.

    அந்த ஊரில் பெரிய கோவில் ஒன்று இருந்தது. அக்கோவிலுக்குச் சென்று அங்குள்ள கடவுளை நாள்தோறும் வழிபடும் வழக்கத்தைப் பல்லாண்டுகளாகக் கொண்டிருந்தார் வணிகர். முன்பெல்லாம் வியாபாரம் நன்றாக நடந்துகொண்டிருக்கும் போது, அவருக்கு நிதானமாக நின்று சாமி கும்பிடுவதற்கே நேரம் இருக்காது; ஆனால் இப்போதெல்லாம் கோவிலுக்கு வந்தால் மணிக்கணக்காக நேரத்தைச் செலவழிக்கிறார். தெய்வத்தின்முன் நின்று தன்னுடைய மகள்களின் வேலைவாய்ப்பு, திருமணம், மற்றும் வணிகத்தில் நேர்ந்துவரும் நஷ்டங்கள் ஆகியவை குறித்து நிறையவே புலம்பவும் தொடங்கி விட்டார்.

    ஒருநாள் திடீரென அவரது மனதில் ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது. "நாள்தோறும் கூட்டத்தோடு கூட்டமாய் வந்து சாமிமுன் நின்று நமது துன்பங்களையெல்லாம் புலம்பிவிட்டுச் செல்கிறோமே! உண்மையிலேயே சாமி அதனை முழுமையான கவனத்தோடு கேட்பாரா?. நாம் இப்படிச் செய்தால் என்ன? ஊரில் சில முக்கிய நபர்களைக் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று பார்க்காமல், தனியாகச் சென்று தனிப்பட்ட முறையில் பார்த்தால் காரியம் நடந்துவிடுகிறதே!. அதைப்போல நாமும் சாமியை யாருமில்லாத நேரம் பார்த்துச் சென்று , நமது துன்பங்களைச் சொல்லிக் கதறி அழுதால் நிச்சயம் நமது துன்பங்களைக் கடவுள் நீக்கி விடுவாரல்லவா?".


    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

    தொடர்புக்கு 9443190098

    'சரியான முடிவு!' எனத் தீர்மானித்த வணிகர் அன்று இரவே கோவிலுக்குள் சென்று நடை சாத்தும் நேரத்தில் யார் கண்ணிலும் படாமல் கோவில் மண்டபத்தில் ஒளிந்து கொண்டார். அப்படியே ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்து சிறிது நேரம் கண்ணயர்ந்து தூங்கவும் தொடங்கிவிட்டார். நள்ளிரவு நேரத்தில் யாரோ பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டு படக்கென்று விழித்துக்கொண்டார். அந்தக்கோவில் பிரகாரத்தில் இருந்த ஒரு தூணும் ஒரு படிக்கல்லும் பேசிக்கொண்டன. அவை பேசிக்கொண்டிந்ததை எந்தவித ஓசையும் எழுப்பிவிடாமல் அமைதியாகக் கேட்டார் வியாபாரி.

    படிக்கல் பேசியது, "இந்தக் கோவிலில் கருவறையில் சாமியாக இருக்கக் கூடிய சிலையும், தூணாக இருக்கக் கூடிய நீயும், படியாகக் கிடக்கக் கூடிய நானும் ஆகிய நாம் மூவரும் ஒரே மலையில் அருகருகே கிடந்த பாறாங்கற்கள்தானே!. நம்மை வந்து பார்த்த சிற்பியும் கொத்தனாரும் நம்மை இப்படிப் பிரித்துத் தூணாகவும் சாமிசிலையாகவும், படிக்கட்டாகவும் மாற்றி இந்தக் கோவிலில் நம்மை அமைத்து விட்டார்கள். ஆனால் எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி தாங்கமுடியாத துன்பம்?. கோவிலுக்கு வருவோர் போவோர் என்று ஒவ்வொருவரும் மிதித்து மிதித்து நான் படும் வேதனைக்கு அளவே கிடையாது!".

    உடனே தூண் பேசியது, " உனக்காவது ஆட்கள் வந்து போய் மிதித்தால் மட்டுமே வேதனை! மற்ற நேரத்தில் நீ மிதிபடாமல் இன்பமாக இருக்கலாம்; ஆனால் நான் அப்படியா?. என்னைத் தூணாக நிறுத்தி, என்மீது இந்தக் கோவிலையே தூக்கி நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இரவு பகல் எந்நேரமும் இறக்கி வைக்க முடியாத சுமையைச் சுமந்த வண்ணமே இருக்கும் என் துன்பத்தை நான் எங்குபோய்ச் சொல்வேன்?".

    "ஆமாம்! ஆமாம்! உன் துன்பமும் பெருந்துன்பம்தான். நம்மில் துன்பம் எதுவுமில்லாமல் ஜாலியாக இருப்பது சாமிசிலை மட்டும்தான்" என்றது படிக்கல். உடனே கருவறையிலிருந்து ஒரு விசும்பல் ஒலி கேட்டது; இலேசான வெளிச்சத்தில் வியாபாரி உற்றுக் கவனித்தார்; சாமி சிலை அழுது கொண்டிருந்தது. "உனக்கென்ன கஷ்டம்?. அன்றாடம் பாலபிஷேகம், பன்னீர் அபிஷேகம், நெய் அபிஷேகம் என்று விதம் விதமான அபிஷேகங்களில் உன்னைக் குளிப்பாட்டி வணங்குகிறார்களே! உனக்கென்ன துன்பம்?" தூண் கேட்டது. "எல்லாரும் என்னைக் குளிப்பாட்டுகிறார்கள்!, குளிர்விக்கிறார்கள்!, கும்பிடுகிறார்கள்! உண்மை. ஆனால் என் சிலை முன்னால் நின்றுகொண்டு ஒவ்வொரு பக்தரும் அவர்கள் படுகிற துன்பங்களை அடுக்கடுக்காய்ச் சொல்லி அழும்போது, ஒவ்வொரு துன்பத்தையும் நானே அனுபவிப்பதுபோல் உணர்கிறேன். ஒரு நாளைக்குப் பத்தாயிரம்பேர் வந்து என்னை வழிபட்டாலும், எந்தக் குறையும் சொல்லாமல் மகிழ்ச்சியோடு வந்து என்னை எந்தத் தொந்தரவும் செய்யாமல் வழிபட்டுச் செல்பவர்கள் பத்துப்பேர்கூடத் தேற மாட்டார்கள்; அடுத்தவர் படும் துன்பப் பட்டியல்களிலிருந்து மீண்டு வந்து நான் எப்போது நிம்மதியாக இருக்கப்போகிறேன்? என்று நினைத்துப் பார்க்கிறேன்; அதற்கு வாய்ப்பே இல்லை!; துன்பத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வதிலும் ஒரு இன்பம் இருக்கும்; ஏற்றுக்கொள்வோம்!" என்றது சாமி சிலை. சாமியைத் தனிப்படப் பார்த்துத், துன்பப்பட்டியல் வழங்க வந்திருந்த வணிகருக்குக், கோவிலுக்குள்ளேயே இவ்வளவு புலம்பல்களா? என்று ஆகிப்போனது.

    துன்பம் இருக்கும் வரைதான் நிவர்த்திக்கான தேடல்களும் தீர்ப்பதற்கான வேட்டைகளும் இருந்துகொண்டே இருக்கும். மனிதனுக்கு இன்பம் வேண்டும்! ஆனால் துன்பத்தை வென்றால்தான் இன்பம் சாத்தியம். துன்பமில்லாத உலகத்தில் போட்டிகளே இல்லை; போட்டிகள் இல்லையென்றால் வெற்றி ஏது? மகிழ்ச்சி ஏது?.

    நம்மில் ஒருவருக்குத் துன்பம் என்றால் துடைக்க வரும் அத்தனை கரங்களும் அன்பின் கரங்கள்; சமூக ஒருங்கிணைவைத் துயரங்களே கயிறுகளாகச் சேர்ந்து பிணைத்து வைக்கின்றன. அடுத்தவர்க்கு உதவுவது அல்லது அடுத்தவரிடம் உதவிக்காகக் காத்து நிற்பது ஆகிய இவ்விரண்டு அன்பின் செயல்களும் துன்பத்தின் நெருக்கடிகளால் சாத்தியமாகின்றன; பிறகு உதவி என்னும் மகிழ்ச்சி மலர்ந்து மணம் பரப்புகிறது.

    • பொதுவாக சிகிச்சை என்பது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
    • மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகப்படுத்தி மூக்கையும், உடலையும் ஆரோக்கியமாக பேணி பாதுகாப்போம்.

    ஐம்புலன்கள் என்று அழைக்கப்படும் வாய், மெய், கண், காது, மூக்கு என்ற 5 உறுப்புகளும் அமைந்திருக்கும் இடம் தலை. இதில் மெய் எனப்படும் தோல் மட்டும் உடலெங்கும் பரவியிருக்கும், மீதமுள்ள 4 புலன்களும் தலையில் மட்டும் அமைந்திருக்கும். இதுவே நம் உடலின் அமைப்பு. அதன் காரணமாகவே தலை ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான உறுப்பு. அதை பேணிக்காக்கவேண்டும். எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்ற சொல்லாடல் மூலம் இதனை அறியலாம்.

    தலையில் உள்ள 5 புலன்களில் மிக முக்கியமானது கண். இரண்டாவதாக மூக்கு. ஏன் என்றால் ஒரு மனிதன் உணவில்லாமல் சில நாட்கள் வாழலாம், ஆனால் பிராணவாயு இல்லாமல் சில நிமிடங்கள் கூட வாழமுடியாது. அந்த அளவுக்கு முக்கியமான பிராணவாயு மூக்கு வழியாகத்தான் செல்ல முடியும். ஏன் வாய்வழியாக சுவாசித்தால் உடலுக்கு போகாதா என்று கேட்கலாம், ஆனால் மூக்கு வழியாக சுவாசிப்பதே சாலச் சிறந்தது. ஏன் எனில் மூக்கில் வாயுவை சுத்திகரிப்பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகிறது. மூக்கு துவாரத்தில் உள்ள முடிகள் மற்றும் கோழைப்படலம் காற்றிலுள்ள தூசிகளை சுத்தம் செய்கின்றன. இதனால் மூக்கு வழியாக சுவாசிப்பதே சாலச்சிறந்தது. அதோடு மட்டுமல்லாமல் மூக்குதான் தலையின் துவாரம் என்கிறது ஆயுர்வேதம். அதாவது வாய் என்பது உடலின் துவாரம். தலையை ஒரு மருந்து சென்றடைய வேண்டுமெனில் அதற்கு மூக்குதான் துவாரம். மூக்கு சுவாசிப்பதற்கு மட்டுமா, மணத்தை அறிய முக்கிய பங்கு ஆற்றுகிறது அல்லவா... நுகர்தல் என்ற செயல்பாட்டிற்கு காரணமாக அமைகிறது.

    ஒரு மனிதனின் இயல்பான மூக்கின் அமைப்பை மாற்றினால் முழுவதுமாக முக அமைப்பே மாறிவிடும். ஆக இவ்வளவு சிறப்பு வாய்ந்த, மூக்கை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

    நலமாய் வாழ ஆரோக்கியத்திட்டத்தில் தினமும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளில் மூக்கும் இடம்பெறுகிறது. ஆம் மூக்கில் எண்ணையிடும்படி ஆயுர்வேதம் அறிந்திருக்கிறது. அதற்கு நஸ்யம் சிகிச்சை என்று பெயர். ஒரு விஷயத்தை சற்று கவனித்தால் ஆரோக்கியமாக வாழ தினசரி கடைபிடிக்கவேண்டியவை என்பது முகத்திலுள்ள 5 புலன்களை கவனிப்பாகவே இருக்கின்றது. ஆம் வாயிலுள்ள பல் பராமரிப்பு, வாய் கொப்பளித்தல், மூக்கை பராமரிக்க நஸ்ய சிகிச்சை, கண்ணை பராமரிக்க கண் மை, காதுகளை பராமரிக்க காதில் எண்ணெய் தேய்த்தல், காதில் மருந்து செலுத்துதல், முகத்தில் உள்ள தோலை பராமரிக்க எண்ணெய் தேய்த்தல் என்று நீள்கிறது.

    ஏனெனில் இதன் மூலம் கிருமித்தொற்று தாக்க வழிவுள்ளது. எனவே இவற்றை ஆரோக்கியமாக பராமரிக்க அதிக அறிவுரைகளை ஆயுர்வேதம் வழங்கியுள்ளது. அவ்வாறு கூறப்பட்ட சிகிச்சை தான் நஸ்யம் என்பது.


    Dr. ரா.பாலமுருகன்

    அரசு ஆயுர்வேத மருத்துவர்

    90257 44149

    பொதுவாக சிகிச்சை என்பது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று அதிகரித்துயிருக்கின்ற வாத, பித்த, கப தோஷங்களை சமப்படுத்துதல், மற்றொன்று அதிகரித்துயிருக்கின்ற தோஷங்களை உடலிலிருந்து வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துதல். ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையானது உடலை சுத்தப்படுத்தவே அதிக கவனம் செலுத்துகிறது. அவ்வாறு உடலை சுத்தப்படுத்த 5 வகை சிகிச்சைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் நஸ்யம் என்ற சிகிச்சையும் ஒன்று, இந்த சிகிச்சை தான் மிக எளிதானது. அதிக செலவில்லாதது. வீட்டிலேயே அனைவரும் செய்து கொள்ளலாம்.

    இந்த சிகிச்சை உடலை சுத்தம் செய்வதோடு மட்டும் இல்லை. நோய் வராமல் தடுக்க தினமும் அனைவரும் செய்துகொள்ளலாம். அதுவே இந்த சிகிச்சையின் விசேஷம்.

    சரி இந்த சிகிச்சையை தினமும் எடுத்துக்கொண்டால் அப்படி என்ன விசேஷம் நிகழப்போகிறது என்றுக் கேட்டால், அதற்கு மிக நீண்ட பதிலுரையை ஆயுர்வேதம் வழங்குகிறது. அது யாதெனில் கண், காது, மூக்கு போன்ற புலன்களில் கேடு வருவதில்லை. முடி தாடி மீசைகளில் எந்த தொந்தரவும் ஏற்படுவதில்லை. முடி உதிராது. நன்றாக வளரும். கழுத்து, தோள் பட்டை வலி ஏற்படாது. முக வாதம் ஏற்படாது. சைனஸ், ஜலதோஷம், தலைவலி, ஒன்றை தலை வலி ஏற்படாது. தலையிலுள்ள நரம்புகள், தமனிகள், சிரைகள் சந்திகள் நன்றாக இயங்கும். பல், தாடை தொண்டை போன்ற இடங்களில் அவ்வளவு எளிதாக நோய் உண்டாகாது, முக வசீகரம் ஏற்படும், நல்ல தூக்கம் ஏற்படும், கழுத்துக்கு மேலே உள்ள உறுப்புகளில் வயது முதிர்வு தென்படாது. சில வியாதிகளில் கழுத்து கீழே உள்ள உறுப்புகளில் கூட நஸ்யம் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்.

    சரி இதனை எவ்வாறு மேற்கொள்ளுவது. இவற்றிக்கென ஒரு வரையறை ஆயுர்வேதம் மிக தெளிவாக வழங்குகிறது. அதாவது நஸ்யம் செய்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து எல்லாம் ஓர் ஆயுர்வேத மருத்துவர் நன்கு அறிவுறுத்துவார். எனவே அருகிலுள்ள ஆயுர்வேத மருத்துவரை அணுகினாலே போதும். நஸ்ய சிகிச்சை குறித்து விவரிப்பார்.

    இந்த சிகிச்சைக்கு அனு தைலம் என்ற மருத்து பயன்படுத்தப்படுகிறது. இதனை மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகப்படுத்தி மூக்கையும், உடலையும் ஆரோக்கியமாக பேணி பாதுகாப்போம்.

    • கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடுகளை கண்டறிவதற்கு பலவிதமான பரிசோதனை முறைகள் உள்ளன.
    • கடந்த 30 வருட காலத்தை எடுத்துக்கொண்டால், ஆரம்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்கிற ஒரே ஒரு பரிசோதனை முறை இருந்தது.

    குழந்தைபேறு சிகிச்சையில் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்றால், அவரது கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தான், எல்லா தம்பதியினரும் முதலில் தெரிந்து கொள்வதற்கான ஆர்வமான விஷயமாக இருக்கும். அவர்களது குடும்பத்தினரும் அதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.

    கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஸ்கேன் உள்ளிட்ட ஒவ்வொரு பரிசோதனைகளையும் மருத்துவர்கள் செய்யும் போது, டாக்டர் குழந்தை நன்றாக இருக்கிறதா, ஆரோக்கியமாக இருக்கிறதா என்று எல்லா தம்பதிகளுமே கேட்பது வழக்கமான விஷயமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

    ஆரோக்கியமான குழந்தை பெற விரும்பும் பெண்கள்:

    கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும், உருவ அமைப்புகளில் நன்றாக இருக்க வேண்டும், மரபணு சார்ந்த குறைபாடுகள் எதுவும் இருக்கக்கூடாது, குரோமோசோம் குறைபாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற வகையில், எல்லா வழிகளிலும் ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்வதைத்தான் எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள்.

    கருவில் இருக்கும் குறைபாடுகளை நாம் கண்டுபிடிக்க முடியுமா? இதை கண்டுபிடித்தால் நிறைய நேரங்களில் தேவையில்லாத, குறைபாடுகள் கொண்ட குழந்தை பிறப்பை தவிர்க்க முடியுமே என்பது தான் பலரது கேள்வியாக இருக்கும். அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இன்றைய நவீன மருத்துவத்தில் பரிசோதனை முறைகள் உள்ளன.


    டாக்டர் ஜெயராணி காமராஜ்

    குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்

    செல்: 72999 74701

    இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் ப்ரீநேட்டல் டெஸ்ட் எனப்படும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை என்பது பெண்களின் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை கண்டறிவதற்கான வழிமுறைகளை கொடுத்து இருக்கிறது. மகப்பேறுக்கு முந்தைய இந்த பரிசோதனையானது கர்ப்பகாலத்தின் போது தாயின் ஆரோக்கியத்தையும், கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் அறிந்து கொள்வதற்காக செய்யப்படுகிறது.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த பரிசோதனை மூலம் குழந்தைக்கு மரபணு ரீதியான குறைபாடு இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது பாதிப்புகள் இருந்தாலோ அதை எளிதில் கண்டறிய முடியும். மேலும் அதை ஆரம்பத்திலேயே சரி செய்யவும் முடியும்.

    குறைபாடு உள்ள குழந்தை பிறப்பு அரிது:

    கடந்த 30 வருடங்களாக நான் குழந்தையின்மைக்கான சிகிச்சைகளை அளித்துக்கொண்டு இருக்கிறேன். ஏராளமான விஷயங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஒரு குறைபாடு உள்ள குழந்தை பிறப்பு என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. அதாவது எனக்கு தெரிந்து கடந்த 15 வருடங்களாக பிரசவத்தின் போது குழந்தைகளுக்கு பெரிய அளவிலான குறைபாடுகள் வருவது இல்லை.

    இன்னும் சொல்லப்போனால் இப்போதைய காலகட்டத்தில் குழந்தை கருவில் இருக்கும் போதே அதற்கு ஏதாவது குறைபாடுகள் இருக்கிறதா என்று முன்கூட்டியே கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிப்பதால் தான் இந்த வகையிலாக சாதனையை நிகழ்த்த முடிகிறது.

    கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடுகளை கண்டறிவதற்கு பலவிதமான பரிசோதனை முறைகள் உள்ளன. கடந்த 30 வருட காலத்தை எடுத்துக்கொண்டால், ஆரம்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்கிற ஒரே ஒரு பரிசோதனை முறை இருந்தது.

    ஆனால் இன்றைக்கு நவீன வளர்ச்சி காரணமாக, பலவிதமான பரிசோதனைகள் மூலமாக, கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா என்பதை கண்டறிய முடியும். இதில் பரிசோதனை முறைகளில் ஏராளமான முன்னேற்றங்களும் வந்துள்ளது.

    பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்:

    30 வருடங்களுக்கு முன்பு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிய மார்க்கர்ஸ் எனப்படும் சில அறிகுறிகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள். அந்த அறிகுறிகளை பார்த்து இது பாதிக்கப்பட்ட குழந்தை என்பதை உறுதி செய்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த மார்க்கர்ஸ் என்பது மிகவும் இயல்பானது.

    நான் சிகிச்சையளிக்க தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில், 8 வருடம் குழந்தை இல்லை என்று ஒரு தம்பதி என்னிடம் சிகிச்சைக்காக வந்தனர். அவர்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தது. மறுபடியும் இரண்டாவது குழந்தை கருத்தரிக்கும் போது, அந்த குழந்தைக்கு அல்ட்ரா சவுண்ட் செய்து பார்த்தபோது, இருதயத்தில் ஒரு எக்கோஜெனிக் போக்கஸ் இருந்தது.

    இந்த எக்கோஜெனிக் போக்கஸ் இருந்தால் குழந்தைக்கு இருதயத்தில் ஏதாவது குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. எனவே அந்த குழந்தையின் இருதயத்தில் ஏதாவது குறைபாடு இருக்குமோ என்று பயந்து 14 வாரத்தில் அந்த கருவை வேண்டாம் என்று கருக்கலைப்பு செய்தனர். இது கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு முன்பு நடந்தது.

    ஏனென்றால் அந்த குழந்தைக்கு இருதயத்தில் குறைபாடு வரலாம். இதயத்துடிப்பை உருவாக்குவதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம்.

    அதனால் அந்த குழந்தைக்கு இதயத்துடிப்புகளில் மாறுபாடு ஏற்பட்டு உயிர்வாழ முடியாத நிலை வரலாம் என்று கருதி கருக்கலைப்பு செய்யப்பட்டது.



    ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதுபோன்று நிறைய குழந்தைகளுக்கு இருக்கும் பாதிப்புகளை கண்டுபிடித்து, அதனை, தொடர்ந்து கண்காணித்து, நன்றாக சிகிச்சை அளிக்கும் போது, இது பயப்படுவதற்கான பெரிய விஷயம் இல்லை என்று பார்க்கப்படுகிறது. அதனை கண்டுபிடிப்பதற்கும் அடுத்தடுத்த சில நவீன முறைகள் இருக்கிறது.

    ஏனென்றால் இந்த மாதிரி மார்க்கர்ஸ் இருந்தால், ஏதாவது மரபணு சார்ந்த குறைபாடுகள் இருக்கலாமா என்பது போன்று நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய தரவுகள் மற்றும் நிறைய ஆதாரங்களை கண்டுபிடித்ததில், பல பிரச்சனைகள் முந்தைய காலத்தில் குறை என்று நினைத்த நிலையில், இன்றைய காலத்தில் அதனுடன் வாழலாம், அதற்கு தீர்வு இருக்கிறது என்ற நிலை உருவாகி உள்ளது.

    பரிசோதனையை எப்போது தொடங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்:

    இதுதவிர குழந்தை வயிற்றில் இருக்கும் போதே சில சிகிச்சை முறைகளையும் செய்ய முடியும். உதாரணத்துக்கு சின்னச்சின்ன அறுவை சிகிச்சைகளை செய்யலாம். ரத்த மாற்றுகள் செய்யலாம். பல நேரங்களில் பல அறுவை சிகிச்சைகளையே செய்யலாம். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாமே தற்போதைய மருத்துவ வசதியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்கிற அளவுக்கு பலவித முன்னேற்றங்கள் அடைந்துள்ளது.

    அந்த வகையில் ஒரு பெண் கருவுற்றால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு என்னென்ன பரிசோதனை முறைகளை செய்ய வேண்டும், என்னென்ன பரிசோதனைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    குறிப்பாக ஒரு கருவில் குழந்தை இயல்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான பரிசோதனையை எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

    மேலும் கருத்தரிப்பதற்கு முன்பே அவர்களின் உடலில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறது என்பதை பார்த்து, அதனால் குழந்தைகளுக்கு ஏதாவது குறைபாடுகள் உண்டாகுமோ என்பதையும் கண்டுபிடிப்பது ரொம்பவும் முக்கியம்.

    உதாரணத்துக்கு ஒரு பெண்ணுக்கு ஒரு சில பால்வினை நோய்கள் இருக்கிறது என்றால், அந்த குழந்தையும் பாதிக்கப்பட்ட குழந்தையாக இருக்கும். எனவே கருத்தரிப்பதற்கு முன்பே பல பரிசோதனைகள் செய்யும் போது, குழந்தைக்கு பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதனை சரிசெய்த பிறகுதான் அந்த பெண் கருத்தரிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    எனவே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள் முதலில் கருத்தரிக்கும் பெண்ணுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்? கர்ப்பகாலத்தின் போது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிய என்னென்ன பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முன் வருகின்றனர்.
    • உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது.

    தானத்தில் சிறந்தது அன்னதானம், ரத்த தானம் என்ற நிலையெல்லாம் மாறி இன்று உடல் உறுப்பு தானம் மிகவும் உயரிய தானம் என்ற நிலையை எட்டியிருக்கிறது.

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்காக 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

    இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முன் வருகின்றனர். இதனால் போதிய அளவு உடல் உறுப்புகள் கிடைக்காமல் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது.

    உடல் உறுப்பு தானத்தில் 2 விதமான தானம் உள்ளது. ஒன்று உயிரோடு இருக்கும் போது, மற்றொன்று இறந்த பிறகு. புற்றுநோய், ஹெபடிடிஸ், எச்.ஐ.வி. போன்ற நோய் அல்லாதவர்கள் வாழும்போதே உறுப்பு தானம் செய்ய முன் வரலாம். தானம் செய்யும் முன்பு ஏதேனும் நோய் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    தானம் செய்வது மிகவும் எளிது. அரசு தலைமை ஆஸ்பத்திரியை அணுகி உறுப்பு தானத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவர்கள் தரும் அட்டையை எப்போதும் உடன் இருக்குமாறு பர்சிலோ அல்லது சட்டை பையிலோ வைத்துக் கொள்ள வேண்டும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் உறுப்பு தான அட்டை பற்றி தகவல் தெரிவித்துக் கொள்வது அவசியம். உங்களின் ஆசையை அவர்கள் பூர்த்தி செய்ய இது உதவும்.

    இயற்கை மரணத்தின் போது கருவிழி, தோல், தசை நாண்கள் மற்றும் எலும்புகள் ஆகிய சில உறுப்புகள் மட்டுமே தானம் செய்ய முடியும். மற்ற உயிர்காக்கும் உறுப்புகள் பெரும்பாலும் ரத்த உறைதலால் அதிவேகமாக கெடக்கூடும் என்பதால் இவற்றை தானம் செய்வதில் சவால்கள் உள்ளன. மேலும் உறுப்புகள் 6 மணி நேரத்திற்குள் தானம் செய்யப்பட வேண்டும். கருவிழிகளை ஈரத்துணியால் பாதுகாக்க வேண்டும்.

    உயிரோடு இருந்தாலும், மூளை முற்றிலும் செயல்படாத நிலையில் இருந்தால் அது மூளைச்சாவு எனப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட நரம்பியல் நிபுணர், மருத்துவமனையின் தலைவர், நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் இதில் சம்பந்தப்படாத மற்றொரு டாக்டர் என 4 டாக்டர்கள் கொண்ட குழு தீவிர பரிசோதனை மேற்கொண்டே குறிப்பிட்ட நபர் மூளைச்சாவு அடைந்துள்ளார் என்பதை உறுதி செய்வர். அதன்பின்னரே உறுப்பு தானம் பற்றி குடும்பத்தினரிடம் டாக்டர்கள் ஆலோசிப்பர். குடும்பத்தினர் சம்மதம் கொடுக்கும்பட்சத்தில் தான் உடல் உறுப்பு தானம் ஏற்றுக் கொள்ளப்படும்.

    மூளைச்சாவு அடைந்தவரை வென்டிலேட்டரில் வைப்பதால் உறுப்புகளுக்கு சேதம் உருவாகுவதில்லை. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து கண், இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு, தோல் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக பெறலாம். இதன் மூலம் குறைந்தபட்சம் 8 பேர் முதல் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.

    மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குள்ளாக பிறருக்கு பொருத்தப்பட வேண்டியது அவசியம். இதயம் என்றால் 6 மணி வரையிலும், நுரையீரல் என்றால் 4-6 மணி நேரம் வரையிலும், சிறுநீரகம் என்றால் 72 மணி நேரம் வரையிலும், கல்லீரல் என்றால் 24 மணி நேரம் வரையிலும் பாதுகாப்பாக வைத்திருந்து மற்றவர்களுக்கு பயன்படுத்த முடியும்.

    மூளைச்சாவு என்றால் என்ன?

    மனித உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் மையப்புள்ளி மூளையில் உள்ளது. கையை நன்றாக ஆட்டுகிறோம், காலால் வேகமாக ஓடுகிறோம் என்றால் அந்த சக்தியை கொடுக்க கூடியது மூளை.

    விபத்தின் போது ஒருவருக்கு மூளையில் அடிபட்டு மூளை வேலை செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பார்கள். அங்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படும். அப்போது இதயம் இயங்கிக் கொண்டு இருக்கும்.

    மூளைக்கு ரத்த ஓட்டம் போகாது. கழுத்துக்கு கீழே அனைத்து உறுப்புகளும் வேலை செய்யும். அந்த நபரை கிள்ளி பார்த்தால் அவரால் உணர முடியாது. குண்டூசியை வைத்து குத்தினாலும் தெரியாது. ஆனால் இதயம் மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும். இது தான் மூளைச்சாவு அடைந்தவரின் நிலையாக இருக்கும்.

    மூளைக்கு சரியாக ரத்த ஓட்டம் செல்லவில்லை என்றால் மூளை கெட்டு விடும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் ஒரு நிமிடம் தடைபட்டால் மயக்கம் வந்து விடும். இரண்டு நிமிடம், 3 நிமிடம் தடைபட்டால் மூளை செயல்படாமல் போகும். 4 நிமிடத்துக்கு மேல் ரத்த ஓட்டம் போகவில்லை என்றால் மூளை செயல்படாமல் போய் விடும். அது எப்படி என்றால் கெட்டியாக இருக்கும் மூளை ஜெல் போல் மாறி விடும். மூளை கெட்டுப் போய் விட்டால் அதனை திரும்ப மீட்க முடியாது.

    இதேபோல ஏதோ ஒரு காரணத்தால் இதயம் நின்று விடுகிறது. அவ்வாறு இதயம் நின்று விடுவதற்கு பெயர் கார்டியாக் அரெஸ்ட். மசாஜ் கொடுத்து இதயத்தை பழைய படி துடிக்க வைத்துவிட்டால் மூளை தப்பித்து விடும். அதற்கு நேரம் 3-ல் இருந்து 4 நிமிடம் தான். 5 நிமிடம் ஆகிவிட்டால் இதயம் செயல்படத் தொடங்கி விடும். ஆனால் மூளை வேலை செய்யாது. மூளைச்சாவு ஏற்படும் இளைஞரின் இதயம் நன்றாக இருக்கும். அதனை வேறு யாருக்காவது தானம் செய்யலாம். ஆனால் மூளையை மாற்றும் சிகிச்சை இதுவரை வரவில்லை.

    வழக்கமாக இறந்து போகிறவர்களுக்கு இதயம் நின்று விடும். வீட்டில் ஒருவருக்கு மாரடைப்பு வருகிறது. உடனே டாக்டரை கூப்பிடுகிறோம். அவர் நாடித்துடிப்பு பார்க்கிறார். ஸ்டெதஸ்கோப் வைத்து மூச்சு வருகிறதா, வயிறு மேலே, கீழே போகிறதா என்று பார்க்கிறார். வயிறு மேல், கீழ் ஏறி இறங்கவில்லை என்றால் மூச்சு இல்லை என்று அர்த்தம். தட்டி, தட்டி எழுப்புகிறார் எழுந்திருக்கவில்லை. மூளை வேலை செய்யவில்லை. சுய நினைவு இல்லை. முழுமையாக இறந்து விட்டார் என்று அர்த்தம். முழுமையாக இறந்து போனவரின் இதயத்தை மாற்ற முடியாது. உயிர்போன நபர், மூளைச்சாவு அடைந்த நபர் இது தான் வித்தியாசம்.

    விபத்தில் சிக்கிய நபர் என்ன தட்டினாலும் எழுந்திருக்க மறுக்கிறார். ஆனால் இதயத்துடிப்பு மட்டும் இருக்கிறது. மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞருக்கு 30 நிமிடத்துக்கு கூட இதயம் துடிக்கும். அதற்குள் ஆஸ்பத்திரிக்கு வந்து வென்டிலேட்டர் பொருத்தி செயற்கை சுவாசம் கொடுத்தால் இதயம் தொடர்ந்து துடிக்க ஆரம்பித்து விடும். ஒரு நாள், 3 நாளைக்கு கூட இதய துடிப்பு இருக்கும். ஆனால் மூளையை இழுத்து பிடிக்க முடியாது. அவ்வாறு மூளைச்சாவு அடைந்த ஒரு இளைஞனின் இதயத்தை எடுத்து மற்றொருவருக்கு தானமாக கொடுக்கலாம். அவ்வாறு தானம் செய்யப்படும் உடல் உறுப்புகள் யார், யாருக்கு என்பதை அரசு தான் முடிவு செய்யும். எனவே முடிந்தவரை உடல் உறுப்புகளை மண்ணுக்கு கொடுக்காமல், மனிதர்கள் உயிர் வாழ கொடுப்போம். மற்றவர்கள் உடலில் சேரும்போது அவர்களுக்கு மறு உயிர் கொடுக்கிறார்கள்.

    இறந்த பிறகும் உறுப்பு தானம் செய்யும் நபர்கள் வாழ்கிறார்கள். விபத்தினால் இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 20 ஆயிரம் பேர் இதயத்தை தானமாக கொடுக்க தகுதியான நிலையிலேயே இருந்து மரணிப்பார்கள். எனவே உடல் தானம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

    இதேபோல ரத்த தானம் செய்வது மிகவும் எளிமையானது. நீங்கள் கொடுக்கும் 200 மில்லி ரத்தத்தை பிரித்து 4 பேருக்கு கொடுப்பார்கள். இப்படி 4 பேரை காப்பாற்றக்கூடிய சக்தி உங்களிடம் உள்ளது.

    ஆண்டுக்கு ஒருமுறை ரத்த தானம் கொடுங்கள். ரத்த தானம் கொடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

    ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல... நாமும்தான். உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும். உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும்.

    45 கிலோவுக்கு மேல், 18 முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். ஏதேனும் தொற்றுநோய் உள்ளவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள் என நோய்வாய்ப்பட்டவர்கள் செய்யக் கூடாது.18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், 45-க்கும் கீழ் எடை உள்ளவர்கள், ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் செய்யக் கூடாது. ரத்தம் கொடுத்த பின்னர், பழச்சாறு, ஆரோக்கியமான பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். ரத்தம் கொடுத்த அடுத்த 24 மணி நேரத்துக்கு கடினமான செயல்கள் எதுவும் செய்யக்கூடாது. வியர்வையை உண்டாக்கும் செயல்கள், விளையாட்டு, பணி போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

    தொடர்புக்கு:

    info@kghospital.com, 98422 66630

    • தை முதல் நாள் இந்தத் திருவிழா நிறைவடைந்த பின்னர், தை இரண்டாம் நாள் திருவூடல் திருவிழா நடைபெறும்.
    • அர்த்தநாரீஸ்வரர் என்று சிவனாருக்குப் பெருமை சேர்த்தாலும், அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்திற்கு அம்பிகையே காரணம்.

    ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலைத் திருத்தலத்தில் அம்பாள் எழுந்தருளித் திருக்கோலம் காட்டுகிறாள். இவளுக்கு உண்ணாமுலை அம்மன் என்றே திருநாமம்.

    அம்பாள் இத்தலத்தில் எழுந்தருளியதே வெகு சிறப்பானதாகும். திருக்கைலாயத்தில் ஐயனும் அம்பிகையும் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, விளையாட்டாக ஐயனின் திருக்கண்களைத் தன்னுடைய கைகளால் அம்பிகை பொத்திவிட்டாள். விளையாட்டு என்றாலும் எந்தச் செயலுக்கும் எதிர்வினை உண்டல்லவா! அதன்படி, உலகம் இருண்டது. உயிர்களெல்லாம் நடுங்கின. பிரளயம் சூழ்ந்தது. தன்னுடைய செயலால், அகாலத்தில் பிரளயம் வந்ததை உணர்ந்த அம்மை, தன் செயலுக்குப் பரிகாரம் தேட விழைந்தாள். பூவுலகம் அடைந்து காஞ்சிபுரத்தில் மணலால் சிவலிங்கம் அமைத்து தவம் செய்து இறைவனை வழிபட்டாள். இறைவனும் காட்சி கொடுத்து அம்பிகையை ஏற்றார்.

    இந்நிலையில், சில காலம் முன்னர், பிருங்கி முனிவர் செய்ததொன்று அம்பிகையின் நினைவில் ஊசலாடியது. சிவனை மட்டுமே பிருங்கி வணங்குவார். அம்பிகை அருகில் இருந்தாலும் ஒதுக்கிவிட்டுச் சிவனை மட்டுமே சுற்றிவருவார். ஒருமுறை, பிருங்கி திருக்கைலாயம் வந்தபோது, வேண்டுமென்றே சிவனாரின் அருகில் அன்னை நின்றுகொண்டாள். ஐயனோடு ஒட்டி நின்றுவிட்டால், 'வலம் வரும்போது தன்னையும் சேர்த்துத்தானே வலம் வரவேண்டும்; பிருங்கி என்ன செய்கிறார் பார்க்கலாம்' என்று அம்பிகை எண்ண, பிருங்கியோ இன்னும் வேறு விதமாக எண்ணினார். மானுட உருவில் இருந்தால்தானே, அருகருகே நிற்கும் ஐயனுக்கும் அம்பிகைக்கும் இடையில் நுழையமுடியாது? என்று வண்டு வடிவம் எடுத்தார். இடையில் புகுந்தார். சிவனாரை மட்டுமே வலம் வந்தார்.

    இப்போது அம்பிகைக்கு இந்நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. என்னதான் ஐயனுக்கு அருகில் நின்றாலும், தனியாக இருந்ததால்தானே பிருங்கியால் இடைபுக முடிந்தது? ஐயனிடமிருந்து பிரிக்கமுடியாத நிலையை அடைந்துவிட்டால்......? சிவனாரிடமே இதைக் கேட்க...... திருவண்ணாமலை சென்று தவம் செய்யச் சொன்னார் அவர். ஆமாம், திருவண்ணாமலையில் தவம் செய்தால், தாம் எழுந்தருளி இடப்பாகத்தில் அம்மையை அரவணைப்பதாகவும் கூறினார்.

    இதன்படியே அம்பிகையும் செய்ய, தம்முடைய வாம பாகத்தில் அம்பிகையை ஏற்றுக்கொண்டு, மாதொரு பாதியனாக, அர்த்தநாரீஸ்வரர் என்னும் புதிய திருநாமம் கொண்டார்.

    அண்ணாமலையாரின் திருவாட்டியாக, உண்ணாமுலை என்னும் திருநாமத்தோடு அம்பிகையும் இங்கே நிலைகொண்டாள்.

    வாமபாகத்துக்குரியவள் என்னும் பெருமையை அம்பிகையின் கோவில் அமைப்பிலும் காணலாம். திருவண்ணாமலைத் கோவிலில், ஐயன் சந்நிதிக்கு இடது பக்கத்தில், மூன்றாம் பிராகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இருக்கிறது உண்ணாமுலையம்மன் சந்நிதி.

    அம்பிகைக்கு அபீதகுசாம்பாள், திருக்காமகோட்டமுடைய தம்பிராட்டி, உலகுடைப்பெருமான் நம்பிராட்டி, காமகோட்டமுடைய உண்ணாமுலையாள் என்னும் திருநாமங்களும் உண்டு.

    அம்பாள், நின்ற கோல நாயகி. திருக்கரங்களில் தாமரை மலர் ஏந்தி நிற்கிறாள். சின்னஞ்சிறு பெண்போல திருப்பாதங்களைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறாள். சாந்தம் நிறைந்த முகம், எல்லையற்ற கருணையைக் கொட்டும் விழிகள்:

    சித்தாந்தத்தெருளே வருக சிவஞானத் தேனே வருக திருவாளர்

    தேடி வைத்தப் பேரின்பத் திரளே வருக சன்மார்க்க

    அருளே வருக திருவருணை அருந்தாமுலையாய் வருக

    அலகில் விளையாட்டு அயரும் எங்கள் அம்மே வருக வருகவே என்று அம்மையைப் போற்றுகிறது உண்ணாமுலையம்மன் பிள்ளைத் தமிழ்.

    பிள்ளைகளான விநாயகரும் முருகரும், சாதாரண மானுடப் பிள்ளைகளைப் போல் பாலருந்தா முலைகளைக் கொண்டவள் என்பதாலேயே உண்ணாமுலை என்று அம்பாளுக்குத் திருநாமம். இந்தத் திருநாமத்திற்கு சித்தாந்த ரீதியாகவும் வேதாந்த ரீதியாகவும் வேறு சில விளக்கங்களும் உள்ளன.

    அர்த்தநாரீஸ்வரர் என்று சிவனாருக்குப் பெருமை சேர்த்தாலும், அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்திற்கு அம்பிகையே காரணம். சிவந்த செஞ்சடைக் கற்றை – கருங்கூந்தல் அலை; கொன்றை மாலை – மல்லிகைப் பூமாலை; திரிசூலம் – நீலோற்பல மலர்; பவள நிறம் – பச்சை நிறம்; தண்டை – சிலம்பு; அகன்ற மார்பு – கச்சணிந்த மார்பு; இவ்வாறாக, ஆணும் பெண்ணுமாக, ஐயனும் அம்மையும் காட்சி கொடுத்தார்கள்.

    ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் எதிரிகளல்ல, போட்டியாளர்களல்ல, ஆயின் சமமானவர்கள், இணையானவர்கள், இணைந்து செயல்படவேண்டியவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தினார்கள். இவ்வாறு ஐயனுக்குப் புது பெருமையை அம்பிகை சேர்த்த அந்தத் திருநாள், கார்த்திகை மாதத்துப் பவுர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருநாள். இந்த நாளே திருவண்ணாமலையில் தீபத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

    அண்ணாமலை என்னும் பெயருக்கு 'அணுக முடியாத' என்று பொருள். உண்ணாமுலை என்னும் பெயருக்கு 'உண்ணாத' என்று பொருள். ஆனால், ஐயனும் அம்மையும் அன்பினால் அணுகக்கூடியவர்களாக, ஞானம் ஊட்டுகிறவர்களாக இங்கே எழுந்தருளியிருக்கிறார்கள். மார்கழி மாதக் கடைசியில் கோவிலில் பத்து நாள் திருவிழா நடைபெறும். தை முதல் நாள் இந்தத் திருவிழா நிறைவடைந்த பின்னர், தை இரண்டாம் நாள் திருவூடல் திருவிழா நடைபெறும்.

    அம்பிகையை உதாசீனம் செய்துவிட்டு ஐயனை மட்டும் வணங்கினாரில்லையா பிருங்கி முனிவர்? அவர் அவ்வாறு செய்தபோதும் அவருக்குச் சிவனார் முக்தி வழங்கினார். அர்த்தநாரீஸ்வரர் ஆனபின்னரும் உண்மை உணராத பிருங்கிக்கு முக்தியா என்று அன்னை சினந்தாள். பிருங்கி எப்படியோ போகட்டும், ஆனால், சிவனார் அவருக்கு முக்தி கொடுக்கலாமா? தன் இருப்பிடம் புகுந்து கதவடைத்துக்கொண்டாளாம் அம்பிகை. அம்பிகை சினம் கொண்டுவிட்டாள் என்பதைத் தெரிந்துகொண்ட சிவனார், சுந்தரமுர்த்தி சுவாமிகளைத் தூது அனுப்பினாராம். அம்பிகை அதற்கும் மசியவில்லை.

    சிவனார் பாவம், தடுமாறித்தான் போனார். பக்தரையும் விடமுடியவில்லை; அம்பிகையையும் ஒதுக்கமுடியவில்லை. ஆகவே, மீண்டும் அம்பிகைக்குத் தூது அனுப்பினார். அம்பிகையின் கோபம், செல்லக் கோபம்தானே! யாரிடமும் சினம் கொள்ளாத ஜகன்மாதா ஐயனிடம் மட்டும் சினம் கொள்வாளா என்ன? சினம் தணிந்து வெளிப்பட்டாள். ஐயனுக்கு அருகில் வந்து அமர்ந்தும் கொண்டாள்.

    இதைத்தான், திருவூடல் விழாவில் மீண்டும் நடித்துக் காட்டுகிறார்கள். முதல் நாள் இரவு அம்பிகை ஊடல் கொண்டுவிடுவாள். சினத்தை எப்படித் தணிப்பது என்று எண்ணித் தணிக்கும் சிவனார், அன்றிரவு குமாரக்கோவிலில் சென்று தங்கிவிடுவார். அடுத்த நாள் காலையில் கிரிவலம் செல்வார். கிரிவலத்தின்போது, பிருங்கி முனிவருக்குக் காட்சி கொடுத்து அருள்வார். பின்னர் அம்பிகைக் கோவிலை அடைந்து ஊடலுக்கு விளக்கம் தந்து அம்பிகையை சமாதானப்படுத்துவார்.

    சின்னச் சின்ன கோபதாபங்கள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் உதவி செய்தும் வாழுகிற வாழ்க்கைத் தாத்பரியத்தை எடுத்துக்கூறும் விதமாக ஐயனும் அம்பிகையும் நடித்துக் காட்டுகிற இந்நிகழ்ச்சி நடைபெறுகிற வீதிக்கே, திருவூடல் திருவீதி என்றுதான் பெயர்.

    குறையாத பொருளாம், மாற்றறியாப் பொன்னாம் உண்ணாமுலை அம்மன் அள்ள அள்ளக் குறையாது அருளக் காத்திருக்கிறாள்; பாவப்பிணிக்கு மருந்தாம் இவளை வணங்குவோம்; வழிபடுவோம்.

    தொடர்புக்கு:- sesh2525@gmail.com

    • இரவு பகலாக படப்பிடிப்பில் கஷ்டப்பட்டாலும் தனது குழந்தைகளுக்காக காலையிலே எழுந்து சமையல் செய்து கொடுக்க தவறமாட்டார்.
    • எனது வலது புறம் ஒருவரும், இடது புறம் ஒருவருமாக இருந்து கொண்டு அவர்கள் கேலி, கிண்டல் செய்வதற்கு அளவே இருக்காது.

    சினிமாவையும் தாண்டி எங்களோடு வாழ்பவர் குஷ்பு. எங்கள் வீட்டில் கடைக்குட்டி தங்கை குஷ்பு என்று சொன்னேன் அல்லவா. அப்படித்தான் எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டார்.

    என் தங்கை பிருந்தாவும், குஷ்புவும் பிரிக்க முடியாத சகோதரிகள் போன்றவர்கள். ஒன்றாக ஊர் சுற்றுவது முதல் கலாய்ப்பது வரை இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

    இருவருக்கும் பிறந்த நாள் வந்தால் போதும் நள்ளிரவு 12 மணிக்கு போன் பண்ணி கடுப்பேத்துவாங்க.

    ஏய், வாடி-போடி என்று இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். அவ்வளவு நெருக்கமாக, உரிமையுடன் பழகி வருகிறார்கள்.

    குஷ்பு எங்கள் வீட்டுக்கு வந்தால் போதும் எங்கள் அம்மாவிடம் போய் முதலில் கேட்பது 'அம்மா இன்று என்ன சமையல் என்று தான் கேட்பார். புளிச்ச கீரை சாதம் என்றால் போதும் ஒரு பிடி பிடிப்பார். எங்க அம்மா சமைத்து கொடுப்பதில் புளிச்சகீரை சாதத்துடன் அரைத்த சாம்பார். இந்த இரண்டும் கிடைத்தால் போதும் நன்றாக ருசித்து சாப்பிடுவார்.

    அது மட்டுமல்ல குஷ்புவே நன்றாக சமையல் செய்யக்கூடியவர். அவர் பிரியாணி மிக நன்றாக சமைப்பார். வீட்டில் பிரியாணி செய்தால் போதும் ஒன்றாக ஷுட்டிங் செல்வதாக இருந்தால் அங்கே பிரியாணி எடுத்து வந்துவிடுவார். இரவு பகலாக படப்பிடிப்பில் கஷ்டப்பட்டாலும் தனது குழந்தைகளுக்காக காலையிலே எழுந்து சமையல் செய்து கொடுக்க தவறமாட்டார்.

    படப்பிடிப்புகளை பொறுத்தவரை பாடலுக்கு ஏற்ற நடனங்களை காட்சிப்படுத்தியதும் நான் சென்றுவிடுவேன். ஆனால் கலை நிகழ்ச்சிகளில் தான் முழு நேரமும் நாங்கள் ஒன்றாக இருப்போம். பயங்கர ஜாலியாக இருக்கும். துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் ஒரு நாள் இரு நாள் அல்ல. தொடர்ந்து ஒரு மாதம் வரை ஷோக்கள் நடத்துவோம். மோகன்லால் உள்பட பல நட்சத்திரங்கள் அதில் பங்கேற்றிருக்கிறார்கள். மலையாளம் சேர்ந்திருப்பதால் காட்சி நடக்கும்போதே திரைக்கு பின்னால் இருந்து சிரித்து விடுவோம்.

    அதிலும் சிரிப்பது மட்டுமல்ல நீண்ட நேரம் அடக்க முடியாமல் சிரித்து விட்டு காட்சிக்கு செல்வதை கூட மறந்தது உண்டு. அப்படி தான் ஒரு நிகழ்ச்சியில் திரைக்கு பின்னால் இருந்து வாய்விட்டு நானும், குஷ்புவும் சிரித்து கொண்டு இருந்தோம். அந்த நேரத்தில் குஷ்புவின் காட்சி வந்து இருக்கிறது. அதை நாங்கள் மறந்து விட்டோம். திரைக்கு பின்னால் இருந்த குஷ்பு துள்ளி குதித்து மேடையில் போய் நின்று சமாளித்து காட்சியை பிரமாதமாக ஆடி முடித்தாள்.

    இலங்கையில் முழுக்க முழுக்க இளையராஜாவின் பாடல்களை வைத்து ஒரு ஷோ நடத்தினோம். அது பிரமாதமாக இருந்தது. அந்த ஷோவில் குஷ்பு ஆடியது மட்டுமல்ல தொகுப்பாளினி வேலையும் செய்தார். அவர் தொகுப்பாளினியாகிவிட்டால் பிரமாதமாக பண்ணுவார்.

    குஷ்பு ரொம்ப ஜாலியான பெண். அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் இவ்வளவு நேரம் தான் ஆடவேண்டும் என்றெல்லாம் நினைக்கமாட்டார். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆடுவார். குஷ்புவும், பிருந்தாவும் ஒன்று சேர்ந்துவிட்டால் அவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே கிடையாது. நான் நடன காட்சிகளுக்காக கம்போஸ் பண்ணிக்கொண்டு இருப்பேன். எனது வலது புறம் ஒருவரும், இடது புறம் ஒருவருமாக இருந்து கொண்டு அவர்கள் கேலி, கிண்டல் செய்வதற்கு அளவே இருக்காது. நான் கொஞ்சம் கோபப்பட்டு சத்தம் போட்டால் தான் இருவரும் எழுந்து செல்வார்கள்.

    குஷ்பு எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று நாங்கள் சொல்வதற்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் என் அம்மா இறந்த தருணத்தில் அந்த தகவலை கேட்டதும் உடனடியாக வீட்டிற்கு ஓடி வந்தார். சொந்த அம்மாவை இழந்த மாதிரி எங்களுடன் அழுது புரண்டார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை தேற்றிக்கொண்டு எங்களை தேற்றத் தொடங்கினார். அருகிலேயே அமர்ந்து கொண்டு அக்கா சாப்பிடுங்க, அக்கா சாப்பிடுங்க என்று சோறு கூட ஊட்டிவிட்டார். அந்த அளவுக்கு அக்கறையோடு எங்களை பார்த்துக்கொண்டவர்.

    குஷ்புவை பற்றி பேசிகிட்டே போகலாம். என்ன துணிச்சல்? என்ன தைரியம்? யாருக்கும் பயப்படமாட்டார். மனசாட்சிக்கு மட்டும்தான் பயப்படுவார்.

    தமிழே தெரியாமல் தமிழகத்துக்கு வந்த குஷ்புவை சினிமாவில் அறிமுகப்படுத்தியதையும் அவரது முயற்சியால் இன்று அடைந்திருக்கும் உயரத்தை பற்றியும் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சார் ஒரு நிகழ்ச்சியில் பெருமையாக கூறினார்.

    அதே போல் 24 வருடங்களுக்கு முன்பு கஸ்தூரிராஜா நாட்டுப்புற பாட்டு என்ற படத்தை தொடர்ந்து எடுக்க முடியாமல் சிரமப்பட்டதையும் அந்த படத்தில் 'ஒத்தை ரூபாய் தாரேன்' என்ற பாடலுக்கு இரவு, பகலாக 36 மணி நேரம் நடித்து கொடுத்ததையும் அதற்காக தலையில் ஒரு இரும்பு கிளிப்பை மாட்டிக் கொண்டு அந்த வலியையும் தாங்கி கொண்டு நடித்ததை உணர்ச்சி பூர்வமாக அவர் கூறியபோது நானும் உணர்ச்சி வயப்பட்டேன்.

    அவருக்கு இருக்கும் திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும் சினிமாவை போல் அரசியலில் நிச்சயம் சாதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    • அக்ரிமா கம்பெனியை முழுக்க முழுக்க ஊக்கு வித்தது கூகுள் தான்.
    • பால் ரவீந்திரநாத் என்னும் கூகுள் இந்தியாவின் மென்பொருள் மானேஜர் இந்த செயற்கை அறிவுத்திறன் என்பது மிகப்பெரும் வரப்பிரசாதம் என்கிறார்.

    "அட! இது என்னங்க?"

    "இது அரைச்சு வெச்ச சோளம்! படம் எடுத்து வெச்சிருக்காங்க!"

    "இத வெச்சு என்ன செய்யணும்?"

    "இந்த கம்ப்யூட்டர் மவுஸ் இருக்கு பாரு! இத அதுமேல வெச்சு அழுத்து!"

    "அப்பா! இத்தன உப யோகமா சோளத்துல!

    "சோளத்த மட்டும் பாக்காத! இந்த தொழில் நுட்பத்தப்பாரு! இதுல எந்த படத்துமேலயும் போய்த்தேடினா அந்தப்பொருளோட அத்தன உபயோகமும் ஸ்கிரீன்ல வந்துரும்!"

    "எப்படீங்க இது சாத்தியம்?"

    "எல்லாம் செயற்கை அறிவுத்திறனாம்!"

    ஆம்! செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) வேகமாக அதிகரித்துவிட்டது. மனித மூளையைப்போலவே சிந்தித்து செயல்படும் மென்பொருள் தயாரிப்பும் பயன்பாடு களும் பரவிக்கொண்டே வருகின்றன. இந்தியாவில் கூகுள் கம்பெனியே இந்த முயற்சிகளை ஊக்குவித்து வருகின்றது.

    ரெஸிப்பி புத்தகம் என்னும் சமையல் குறிப்பு செயலி ஒன்றில்கூட செயற்கை அறிவுத்திறனை உபயோகித்து தகவல் தரும் நுட்பம் இப்போது நம் நாட்டிலும் வந்துவிட்டது. கொச்சியில் உள்ள அக்ரிமா (Agrima) என்னும் கம்பெனி ஒரு மிக மேம்பட்ட படிவ உரு உணரும் மென் பொருளை (Advanced image Recognition software) உருவாக்கி அதை மேலே சொன்ன சமையல் குறிப்பு செயலியில் பதிப்பித்திருக்கிறது. இதன் மூலம் வெறும் படங்களை வைத்து அந்தப் பதார்த்தத்தைத் தயாரிக்கும் முறையை ஸ்கிரீனில் பார்த்துவிட முடியுமாம்.

    இந்த அக்ரிமா கம்பெனியை முழுக்க முழுக்க ஊக்கு வித்தது கூகுள் தான்.

    இன்னொரு சுவாரஸ்ய தகவல் தெரியுமா?

    ஒவ்வொரு நாளும் இந்தியாவில் கிட்டத்தட்ட 4கோடி பேர்வழிகள் நீண்ட தூரப்பயணம் மேற்கொள்கிறார்களாம். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சரியான தகவல்கள் கிடைக்காமல் பல மணி நேரம் விரயம் செய்கிறார்கள். பல இடங்களுக்குத் தவறாகப்போய் பின்பு மறுபடி வந்து சேருகிறார்களாம்.

    இந்தச் சங்கடத்தைத் தவிர்க்க ரெயில் யாத்ரி (Rail Yatri) என்னும் மென்பொருள் கம்பெனி, நம்ம உத்தரப்பிரதேச நொய்டாவைச்சேர்ந்த கம்பெனிதான், செயற்கை அறிவுத்திறனை செலுத்தி தயாரித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் டிக்கெட் புக் செய்வது, எந்தெந்த டிரெயின்களில் பயணம் செய்வது, எங்கெல்லாம் தத்தம் டிரெயின் தாமதமாகிக் கொண்டிருக்கின்றது, போகும் ஊரில் ஓட்டல் புக் செய்வது போன்ற சகலவித தகவல்களை தம் மொபைல் போனிலேயே பெறலாம்.

    "இந்த செயலி, தகவல் ஆராய்வு மற்றும் செயற்கைத்திறன் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகளுக்குத்தேவையான தகவல் தந்து அவர்களின் பயணத்தை இனிமையானதாகவும் சுருக்கமானதாகவும் செய்து விடுகிறது" என்று சிலாகிக்கிறார் இந்தக்கம்பெனியின் தலைவர் மணிஷ் ராத்தி.

    பால் ரவீந்திரநாத் என்னும் கூகுள் இந்தியாவின் மென்பொருள் மானேஜர் இந்த செயற்கை அறிவுத்திறன் என்பது மிகப்பெரும் வரப்பிரசாதம் என்கிறார். "சாதாரண மென்பொருளை விட இந்த செயற்கை அறிவுத்திறன் மென்பொருளானது மிகச்சுலபமாக சிக்கல் தீர்க்கும் இயலைச்செய்துவிடும். எனவே கூகுள் கம்பெனி இந்த இயலில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது" என்று சொல்கிறார்.

    Innovation என்னும் புதியதைக்கண்டு பிடிக்கும் ஆர்வமும் முயற்சியும் கொண்ட ஸ்டர்ட் அப் கம்பெனிகளுக்கு கூகுள் தன்னால் இயன்ற ஊக்கத்தைத்தவறாது கொடுத்து வருவதைப்பார்க்கிறோம்.

    இந்தியாவில் தொடங்கப்பட்ட சில ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் புதுமையான முயற்சிகளில் ஆர்வம் கண்டு அந்தக் கம்பெனிகளுக்கு முதலீடு வழங்குவதில் இருந்து அமெரிக்காவில் சென்று செயலாற்ற அவர்களுக்குத் தேவையான விசா, அனுமதி என்று பல உதவிகளை கூகுள் செய்து வருகின்றது.

    கூகுள் மட்டுமில்லை, ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற மிகப்பெரும் மென்பொருள் கம்பெனிகளும் இந்தியாவில் புதுமையான முயற்சிகளுக்கு ஆர்வமும் உதவியும் தரத்தயங்குவதில்லை. இதில் அவர்களுக்கான லாப நோக்கும் கலந்திருப்பது என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் இந்த ஊக்குவிப்பு புதுமையான் முயற்சிகளில் ஈடுபடும் இளைய சமுதாயத்துக்கு மிகப்பெரும் உதவி என்பதையும் மறுக்க இயலாது.

    "என்னடி உம்புள்ள என்ஜினீயரிங் முடிச்சுட்டு எங்க வேலைக்குப்போறானாம்? என்னால இன்னமே அவனுக்கும் சேர்த்து சம்பாதிக்கறது கஷ்டம், தெரிஞ்சுக்க!"

    "ஒண்ணும் வேண்டாம்! வேலைக்கெல்லாம் போகல.!"

    "பின்ன என்ன பண்ணப்போறாராம் தொர? இங்க என்ன பாட்டன் சொத்தா கொட்டிக்கெடக்கு?"

    "அதெல்லாம் இருக்கட்டும் இதப்பாருங்க!"

    "உம்புள்ள படிச்சுட்டு தெண்டமா சுத்திக்கினு இருக்கானேன்னு கேட்டா நீ என்னமோ அவனோட லாப்டாப்பை காட்டறே?"

    கொஞ்சம் இத்த பாருங்களேன்!"

    "இன்னாடி இது? உலக மேப்ப போட்டு வெச்சு என்னாண்ட காட்டறே?

    "த பாருங்க! இந்த மவுசை வெச்சு இதோ இந்த இடத்துல கிளிக் பண்ணினா, பாருங்க பாருங்க!

    "அட! எங்கூர் பேரு வருதே! அட! ஊரு பத்தி வெவர மெல்லாம் வருது!

    "இது மாதிரி இந்த மேப்புல எந்த எடத்துல கிளிக் பண்ணினாலும் அந்தந்த ஊர் பத்தி எல்லா வெவரமும் வரும்!"

    "சரி இப்ப எதுக்கு இத்த என்னாண்ட காட்டறே?

    "இந்த புரோகிராம எழுதினது நம்ம புள்ள!"

    இன்னாது?"

    ஆமாய்யா! என்னவோ பாட்டன் சொத்து இல்லேன்னியே! ஒரு பாட்டன் சொத்தும் தேவையில்ல! நம்ம புள்ளாண்டானே சொந்தமா கம்பெனி ஆரமிக்கப்போறான்!"

    "ஆமா பெரிய அம்பானி இவரு! போய் எதுனா நல்ல வேலையில சேரச்சொல்லுடி!"

    "அவனோட முயற்சியைப் பார்த்துட்டு அமெரிக்காவிலேர்ந்து பணம் தராங்களாம்! எம் புள்ள ஒரு நாள் அம்பானியாகப்போறான் பாருங்க!"

    நிச்சயம் நடக்கத்தான் போகிறது!

    • பல்வேறு துன்பங்களைத் தாங்கிக் கொண்ட தாயின் அருமையை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம்.
    • தன் மகனோ, மகளோ வெறுப்புக்குரியவர்களாகவே இருந்தாலும் எந்தத் தாயும் அவர்கள் பசிபொறுக்கமாட்டாள் என்பதை மட்டும் உணருங்கள்.

    இந்த உலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் உயிர் அமுதமாகிய தாய்ப்பால். நம்மிடம் கலப்படம் இல்லாமல் அன்பு செலுத்தும் ஒரே சொந்தமும், நாம் நேரில் காணும் தெய்வமும் நம் தாய்தான். பாலூட்டி, தாலாட்டி, தன்னை இழைத்து உருக்கி நம்மை வளர்த்த தாயின் அன்பிற்கும், தியாகத்திற்கும் ஈடு இணையோ, விலைமதிப்போ கிடையாது.

    உலகிற்கெல்லாம் ஒளிதந்து உயிர்களைக் காக்கின்ற கதிரவனையே "தாய்" என்று ரிக்வேதமும், இதர இலக்கியங்களும் கூறுகின்றன. கவியரசு கண்ணதாசனும் எழுகதிராய் தோன்றி விரிகதிராக ஒளியால், வாழ்வு தரும் கதிரவனை "ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி" என்று பாடுகின்றார் என்றால் அனைத்திற்கும் மேலானவள் தாய் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

    நாட்களைக் கொண்டாடுகின்ற நாம் மனிதர்களைக் கொண்டாடத் தவறிவிடுகிறோம். யாரை வேண்டுமானாலும் நாம் மறந்துவிடலாம். ஆனால், நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கி இவ்வுலகில் வாழவைத்துள்ள நம் தாய்-தந்தையை மறந்து தன்னலமாய் வாழ்கின்றோம் என்றால் நமக்கு அந்தப் பாவத்தில் இருந்து உய்வே இல்லை என்கின்றார் திருவள்ளுவர்.

    "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

    செய்ந்நன்றி கொன்ற மகற்கு''

    என்ற குறட்பாவில் நேரடியாக செய்நன்றி மறந்த பிள்ளைகளைத்தான் சொல்கின்றார். இங்கே பிள்ளைகள் என்றால் அது ஆண், பெண் இருவரையுமே குறிக்கும்.

    பத்துகிலோ அரிசியை இரண்டு பைகளில் பிரித்து அவற்றை இரண்டு கைகளில் சுமந்து கொண்டு நடந்துவர வேண்டுமென்றால் இரண்டு தெரு நடப்பதற்குள் பத்து இடத்தில் அப்பைகளை கீழே வைத்து வைத்து எடுத்து வர வேண்டியிருக்கும்.

    ஆனால் வயிற்றில் பத்துமாதம் சுமந்து, படாதபாடுபட்டு, உயிர்போய் மீண்டுவரும் வலியை அனுபவித்து, மயக்கம் தெளிந்த நொடிமுதல், தன்இறுதி மூச்சுவரைக்கும் தான்பெற்ற பிள்ளைகளின் நலன் ஒன்றையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டு வாழும் அன்னைக்கு ஈடாக ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியுமா இந்த உலகில்!

    உலகில் மிகக் கடினமான வேலை எது தெரியுமா? ஒரு குழந்தையை வளர்த்து, நல்ல பண்புகள், குணநலன்களை கற்றுத்தந்து, சோர்வடையும்போது தட்டிக்கொடுத்து, அப்பிள்ளை விரும்புகின்றதை தேடித்தந்து, கல்வியும், சுயசார்பும் கொடுத்து, நல்ல மனிதனாகவோ, நல்ல பெண்ணாகவோ உருவாக்குவதுதான்!

    இக்கடினமான பணியை மிக இயல்பாக ஏற்றுக்கொண்டு தன் பசி, தேவைகள் அனைத்தையும் துறந்து தன் பிள்ளைகளுக்காக பல்வேறு துன்பங்களைத் தாங்கிக் கொண்டு செய்கின்ற தாயின் அருமையை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம் என்று நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்!

    "மாதா உடல் சலித்தாள்" என்று பிள்ளையின் வளர்ப்பில் தாய் எத்தனை துன்பமடைகிறாள் என்பதை பட்டினத்தார் பாடுவார்.

    வரலாறு முழுக்க வெற்றி பெற்றவர்களில் பலபேர் அவர்களின் அன்னையின் தியாகத்தால் உருவானவர்கள். கணவனால் கைவிடப்பட்ட பின்னரும் தன் பிள்ளையின் நல்வாழ்விற்காக அத்தனை துயரங்களையும் தாங்கிக்கொண்டு வீரம் செறிந்த மகனாக அவனை வளர்த்து ஆளாக்கி, ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தையே தன் மகன் உருவாக்க காரணமாக இருந்தவர் மராட்டிய மாமன்னர் வீரசிவாஜியின் தாயான ஜீஜாபாய் ஆவார்.

    பெற்றெடுத்த மகன் கூட அல்ல, இறந்துபோன தன் கணவர் தத்து எடுத்த மகன் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்ததோடு, அரசனாக வேண்டிய அச்சிறுவனுக்காக ஆங்கிலேயர்களின் கொடூரமான தாக்குதல்களையும் முறியடித்து தன் மண்ணையும், மகனையும் காத்தவர் கர்நாடகாவின் கிட்டூர் ராணி சென்னம்மா.

    இப்படி வரலாற்றில் சாதனை புரிந்த தாய்மார்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அரசியல் என்றில்லை சாதாரண குடும்பத்துப் பெண்களும் தன் பிள்ளைகளுக்காக எந்த அளவிற்கு தியாகம் புரிந்தவர்கள் என்பதை அந்த பிள்ளைகள் பேரும் புகழும் பெற்ற பிறகும் கூட எப்போதும் தன் அன்னையை போற்றி வாழ்ந்தவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு முத்தமிழறிஞர் கலைஞர், மக்கள்திலகம் எம்ஜி.ஆர், நடிகர்திலகம் சிவாஜிகணேசன் என்று பட்டியல் உள்ளது.

    "அம்மா என்றழைக்காத உயிரில்லையே

    அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே"

    என்ற பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட திரைப்பாடல் காவியக்கவிஞர் வாலியின் அற்புதப்படைப்பு. கண்ணை மூடி அப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நம்முடைய தாயின் தியாகம் நினைவுக்கு வருவதை நம்மால் தடுக்க இயலுமா?

    நீங்கள் உங்களை பெற்று வளர்த்த அன்னையை மிகப் பெரிதாக கொண்டாட வேண்டும் என்றெல்லாம் அவள் எதிர்ப்பார்ப்பதில்லை. மாறாக, வளர்ந்து ஆளான பிள்ளைகள் அது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் பெற்றவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை அவர்கள் உயிருடன் இருக்கும் காலம்வரை நிறைவேற்றி வருவதும்,

    வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டு துன்பப்படும் வேளையில், "கலங்காதீர்கள் நான் இருக்கிறேன்; எதுவாக இருந்தாலும் நான் செய்கிறேன், கடைசிவரை நான் பார்த்துக்கொள்வேன்" என்று அவர்களின் கரங்கைளப் பற்றி ஆறுதல் வார்த்தைகளைத் தந்து அவர்களை மனக்காயம் ஏதுமில்லாமல் வைத்துக்கொள்வதையும்தான் எல்லாப் பெற்றோரும் எதிர்பார்க்கிறார்கள்.

    தாய்க்கும் தந்தைக்கும் செய்ய வேண்டிய வாழ்நாள் கடமைகளை நாம்தான் முன்னிருந்து, பொறுப்புகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு செய்யவேண்டுமே தவிர, நம்முடன் வாழவந்தவர்கள் அதாவது நம்முடைய வாழ்க்கைத் துணை செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. ஏனென்றால் நம் தாய்-தந்தை நமக்குத்தான் எல்லாத் தியாகங்களையும் செய்து நம்மை உருவாக்கி இருக்கிறார்கள்.

    எங்கோ பிறந்து வளர்ந்து நம்மைத் திருமணம் செய்துகொண்டு நம்முடன் வாழவந்தவர்கள் மீது நம்முடைய கடமைகளை திணிப்பது மடத்தனம். அதனால்தான் பல பிரச்சினைகள் உருவாகி முதியோர் இல்லங்கள் பெருகி வருவதும், வயதானவர்கள் பலர் தான்பெற்ற மக்களாலேயே கைவிடப்பட்டு கோயில் வாசல்களிலும், சாலைகளிலும், பேருந்து நிலையங்களிலும் மானம், சுயமரியாதையை விட்டு கைநீட்டி பிச்சைவாங்கி பிழைக்கிறார்கள். தன் வாழ்வை முடித்துக் கொள்ள தனக்கு உரிமையுண்டு என்ற சட்டமிருந்தால் பல முதியோர் இல்லங்களும், பிச்சைக்காரர்களும் இங்கே இருக்கமாட்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

    "பெற்றோரைக் கவனிப்பதற்கு எனக்கு நேரமில்லை; என்னுடைய வேலைப்பளுவால் என்னுடைய கடமையை செய்யமுடியவில்லை; என் குடும்பத்திற்கே என்னுடைய வருவாய் போதவில்லை, என் பிள்ளைகளை படிக்கவைக்க வேண்டும், என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், இதில் தாய்-தந்தையை பராமரிக்க, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளைச் செய்ய பணமோ, நேரமோ என்னால் ஒதுக்க முடியவில்லை" என்றெல்லாம் பல்வேறு காரணங்கள், சாக்குபோக்குகள் சொல்லி தாய்-தந்தையை கைவிட்டுவிடுவோர் தன் வாழ்நாளிலேயே நரகத்தை சந்திக்கவேண்டிவரும் என்பதையும், நாம் நம் சூழ்நிலையை காரணம் காட்டி பெற்றவரை நிராகரித்து விடுவதுபோல் தன் சுகத்தையும், தன் நலத்தையும் பெரிதாக நினைத்து குழந்தைப் பருவத்தில் நம்மை அவர்கள் கைவிட்டிருந்தால் நாம் என்ன ஆகியிருப்போம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    இருக்கும்போது கவனிக்காமல் விட்டுவிட்டு, இறந்தபின்னர் கலங்கி என்னசெய்வது? தற்காலத்தில் சிலர் கலங்குவதுகூட இல்லை. அப்பாடா! தொல்லைவிட்டது என்றல்லவா நினைக்கிறார்கள்!

    பிள்ளைப்பேற்றின் போது ஆண்கள் உடன்இருப்பதை நம்சமூகம் அனுமதிப்பதில்லை. காலப்போக்கில்ஆண் மருத்துவர்கள் பிரசவம் பார்ப்பதை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

    இப்போதெல்லாம் மேலைநாடுகளில் குழந்தை பிறக்கும்போது பிரசவம் நடைபெறுவதை பார்க்க வேண்டும் என்று கணவன் விரும்பி கூட இருப்பதை அனுமதிக்கிறார்கள்.

    வலியால் தாயின் உயிர்போய் மீண்டு வந்துதான் ஒரு குழந்தை இந்த மண்ணிற்கு வந்துள்ளது என்பதை உணர்கின்ற கணவன், அடுத்த பிரசவத்திற்கு தன் முதல் குழந்தையும் கூட இருந்து பார்க்கவேண்டும் என்று, தன் தாய் தன்னை எப்படிப் பெற்றெடுத்தாள் என்பதை அப்பிள்ளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் புலப்படுத்தி அழைத்து வருகின்றான். இது மேலைநாடுகளில் சாதாரண நிகழ்வாகி அதையும் சமூகவெளிகளில் காட்சிப்படுத்தி வருகிறார்கள்.

    நம் நாட்டில் எல்லா தினங்களைப் போல் "அன்னையர் தினம்" என்கின்ற அற்புதமான நாளும் அம்மாவுடன் எடுத்துக் கொள்ளும் நிழற்படம், காணொளிப் பதிவு, ஏதாவது ஒரு கதை போன்றவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் அல்லது மற்றவர்கள் பதிவிட்டதைப் பார்த்து தன் பங்குக்கு தானும் எதையாவது காப்பி எடுத்து பதிவிடுவதோடும் சரி என்றாகிவிட்டது.

    குறைந்தபட்சம் அன்னையர் தினத்திலாவது தன் அம்மாவிற்கு பிடித்தமானது எது என்பதை அறிந்து அதனை நிறைவேற்றித்தருவது, அம்மாவை வெளியில் எங்காவது அழைத்துச் சென்றுவருவது, அன்னையின் மனதில் ஏதேனும் வேதனைகள், ஏக்கங்கள், கவலைகள் இருந்தால் அவற்றை மிக மென்மையாகவும், பொறுமையாகவும் கேட்டறிந்து நம்மால் எதை தீர்க்கமுடியும் என்பதை உணர்ந்து தீர்ப்பதற்கு முயற்சி செய்வதும், அன்னையர் தினம் மட்டுமல்லாமல், அன்னையின் வாழ்நாள் இறுதிவரை அவரை மகிழ்ச்சியாக, நிம்மதியாக வைத்துக்கொள்வது என்பதையும் பின்பற்ற வேண்டும்.

    அவரவர் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து எங்கோ ஒருசிலருக்கு தன் பெற்றோரின் மீது சில கசப்பான நினைவுகள், மனவேதனைப்படும் அனுபவங்கள் வாய்த்திருக்கக் கூடும். அவற்றின் காரணமாக தாய்-தந்தையை நினைத்தாலே வெறுப்பு ஏற்படவும் கூடும். எல்லாவற்றிலும் சில விதிவிலக்குகள் இருக்கும்தான். அப்படிப்பட்டவர்களும் தன் வாழ்நாளில் ஏதேனும் நன்மை செய்து மனநிம்மதி தேட வேண்டுமென்றால் தன் பெற்றோர் மீதான வெறுப்பை தள்ளிவைத்துவிட்டு அவர்களின் இறுதிமூச்சுவரை அவர்களை கவனிக்கவேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன். தன் மகனோ, மகளோ வெறுப்புக்குரியவர்களாகவே இருந்தாலும் எந்தத் தாயும் அவர்கள் பசிபொறுக்கமாட்டாள் என்பதை மட்டும் உணருங்கள்.

    வசதியான குடும்பமாக இருந்தாலும், ஏழ்மையான குடும்பமாக இருந்தாலும் இந்த மண்ணிலே ஒவ்வொரு தாயிடமும் அவள் பிள்ளைகளை வளர்த்தெடுத்ததில் ஒரு ஆழ்ந்த, அழுத்தமான பல துன்பங்கள் நிறைந்த உண்மைக் கதை உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் தாயால் நீங்கள் வளர்க்கப்படடிருக்கிறீர்கள் என்றால் உங்களிடம் சொல்லப்படாத துன்பக் கதையும் உங்கள் தாயிடத்தில் இருக்கும் என்பதை நினைவில் கொண்டு தாயைப் போற்றுங்கள். தாய்மையைப் போற்றுங்கள். திருக்கோயில் தெய்வங்கள் எல்லாம் நம் அம்மாதான் என்பதை மனதில் இருத்தி செயல்பட்டால் எல்லா நாளும் அன்னையர் தினமே!

    தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

    • 164 கிளைகள் இந்தியா முழுவதும் ஆடிட்டர் படிப்பை சிறப்பாக நடத்துவதற்கு வசதியாக இயங்குகின்றன.
    • சார்டர்ட் அக்கவுண்டன்சி கோர்ஸ் என்பது பிளஸ் டூ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான ஆடிட்டர் படிப்பு ஆகும்.

    "தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்ட்டென்ட்ஸ் ஆப் இந்தியா

    என்னும் நிறுவனம் வழங்கும் படிப்பு தான் "ஆடிட்டர்" என சமூகத்தில் அந்தஸ்து பெற்ற பதவியை வழங்கும் ஆடிட்டர் படிப்பு ஆகும்.

    இந்த நிறுவனம் மத்திய அரசின் "மினிஸ்ட்ரி ஆப் கார்ப்பரேட் அப்பையர்ஸ்" என்னும் துறையின் கீழ் இயங்குகிறது. 1949 -ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட "தி சார்ட்டர்ட் அக்கவுண்ட்டென்ட்ஸ் ஆக்ட்" என்னும் சட்டத்தின் மூலம் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் இயங்குகிறது.

    இந்த நிறுவனத்தின் மண்டல அலுவலகங்கள் மும்பை, சென்னை, கொல்கத்தா, கான்பூர் மற்றும் புதுடெல்லி ஆகிய முக்கிய நகரங்களில் உள்ளன. இவை தவிர 164 கிளைகள் இந்தியா முழுவதும் ஆடிட்டர் படிப்பை சிறப்பாக நடத்துவதற்கு வசதியாக இயங்குகின்றன.

    அபுதாபி, மெல்போர்ன், சிட்னி, பக்ரைன், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா, தோகா, துபாய், இந்தோனேசியா, ஜெட்டா, கென்யா, குவைத், நியூசிலாந்து, நைஜீரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, உகாண்டா, லண்டன், நியூயார்க், யு .எஸ். ஏ, சாம்பியா உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் ஆடிட்டர் படிப்பை நடத்துவதற்கு உதவியாய் இயங்குகின்றன.

    இந்த நிறுவனம் மூன்று வகையான முக்கிய படிப்புகளை நடத்துகிறது.

    அவை:

    1. சார்ட்ர்ட் அக்கவுண்டன்சி கோர்ஸ்.

    2. போஸ்ட் குவாலிபிகேஷன் கோர்சஸ் பார் மெம்பர்ஸ்

    3. சர்டிபிகேட் கோர்சஸ் பார் மெம்பர்ஸ் என்பன ஆகும்.

    இவற்றுள் சார்டர்ட் அக்கவுண்டன்சி கோர்ஸ் என்பது பிளஸ் டூ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான ஆடிட்டர் படிப்பு ஆகும்.

    ஆடிட்டர் படிப்பை படிப்பவர்களுக்கு தேவையான அனுபவ அறிவும் ஆழ்ந்த நூல் அறிவும் பெறுவதற்கு வசதியாக இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சி .ஏ (ஆடிட்டர் ) படிப்பில் சேர்வது எப்படி?

    சி.ஏ படிப்பில் நேரடியாக சேர்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

    அவை,

    1. பவுண்டேஷன் கோர்ஸ் ரூட்

    2. டைரக்ட் என்ட்ரி ரூட்.

    1. பவுண்டேஷன் கோர்ஸ் ரூட் ( FOUNDATION COURSE ROUTE)

    பவுண்டேஷன் கோர்ஸ் எனப்படும் அடிப்படை படிப்பில் சேர பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.

    இருந்தபோதும், இவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்ற பொழுதே தங்களது பெயரை இந்நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதிக்கு முன்பும், ஜூலை மாதம் ஒன்றாம் தேதிக்கு முன்பும் தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.

    இப்படி பத்தாம் வகுப்பு தகுதியை வைத்து முன்கூட்டியே பெயரை பதிவு செய்தவர்கள்,பிளஸ் டூ தேர்வு முடிந்தவுடன் பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வு எழுதலாம். அதாவது, மே /ஜூன் மாதம் அல்லது நவம்பர் /டிசம்பர் மாதங்களில் இந்த தேர்வு எழுதலாம்.

    பிளஸ் டூ மற்றும் பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், அடுத்த கட்ட தேர்வான இன்டர்மீடியட் கோர்ஸ் என்னும் தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

    இருந்தபோதும், இன்டர்மீடியட் கோர்ஸ் என்னும் அடுத்த கட்ட தேர்வு எழுதுவதற்கு குறைந்தபட்சம் எட்டு மாதங்கள் அவர்கள் தங்கள் படிப்பை தொடர வேண்டும்.

    பவுண்டேஷன் மற்றும் இன்டர்மீடியட் கோர்ஸ்களில் வெற்றி பெற்றவர்கள் கண்டிப்பாக நான்கு வாரங்கள் "கிரியேடிவ் கோர்ஸ் ஆன் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சாப்ட் ஸ்கில்ஸ்" என்னும் படிப்பை முடித்து, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    ஆடிட்டர் படிப்பில் தேவையான அனுபவ அறிவு பெறுவதற்கு கண்டிப்பாக மூன்று வருடங்கள் "பிராக்டிகல் டிரெனிங்" என்னும் பயிற்சியை பெற வேண்டும். இந்த பயிற்சியை ஆடிட்டர்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    ஆடிட்டரிடம் அனுபவ பயிற்சி பெறுவதற்கு முன்பே, இந்த நான்கு வார "இன்டர்கிரேட்டட் கோர்ஸ் ஆன் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சாப்ட் ஸ்கில்ஸ்" என்னும் பயிற்சியை தனியாக பெற்று சான்றிதழ் பெறுவது நல்லது.

    ஆடிட்டரிடம் அனுபவ பயிற்சியை பெறுவதற்கு, இன்டர்மீடியட் கோர்ஸ் படிக்கும்போதே சேர்ந்து கொள்ளலாம் அல்லது இன்டர்மீடியட் கோர்ஸ் மற்றும் பைனல் கோர்ஸ் இரண்டிலும் வெற்றி பெற்ற பின்பும் சேர்ந்து கொள்ளலாம்.

    பொதுவாக, ஆடிட்டர் படிப்பில் இறுதித் தேர்வு எனப்படும் பைனல் எக்சாம் எழுதுவதற்கு முன்பே ஆடிட்டரிடம் அனுபவப் பயிற்சி பெற்றுக் கொள்வது சிறந்ததாகும்.

    போதுமான அனுபவ பயிற்சி பெற்ற பின்பு இரு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற பின்பு ஆடிட்டராக பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    2. டைரக்ட் என்ட்ரி ரூட்.

    "டைரக்ட் என்ட்ரி ரூட்"என்னும் முறையில் சி. ஏ படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் கண்டிப்பாக வணிகவியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    வணிகவியல் பாடம் அல்லாத மற்ற பாடங்களில் படிப்பை பட்டப் முடித்தவர்கள், கண்டிப்பாக பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். இதேபோல், வணிகவியல் பாடம் அல்லாத பட்டப் மேற்படிப்பை முடித்தவர்களும் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும்.

    "இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா" நடத்துகின்ற "இன்டர்மீடியட் லெவல் "தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

    தேர்வு திட்டம்.

    பவுண்டேஷன் கோர்ஸ்.

    பவுண்டேஷன் கோர்ஸ் எனப்படும் தேர்வில்,

    1. பிரின்ஸ்பில்ஸ் அண்ட் பிராக்டிஸ் ஆப் அக்கவுண்டிங்

    2. பிசினஸ் லாஸ் & கரஸ்பாண்டன்ஸ் பிசினஸ் அண்ட் ரிப்போர்ட்டிங் .

    3. பிசினஸ் மேத்தமேடிக்ஸ் & லாஜிக்கல் ரீசனிங் மற்றும் ஸ்டாடிஸ்டிக்ஸ்,

    4. பிசினஸ் எக்கனாமிக்ஸ் & பிசினஸ் அண்ட் கமர்சியல் நாலெட்ஜ் ஆகிய பாடங்களில் தேர்வு நடத்தப்படும்.

    இன்டர்மீடியட் கோர்ஸ்.

    இன்டர்மீடியட் கோர்ஸ் என்னும் தேர்வில் குரூப் 1 குரூப் 2 ஆகிய பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன

    குரூப்-1 தேர்வில்,

    1. அக்கவுண்டிங்

    2. கார்ப்பரேட் அண்ட் அதர் லாஸ்

    3. காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங்

    4. டேக்ஸ்சேசன்

    பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

    குரூப் 2 தேர்வில்,

    1. அட்வான்ஸ் அக்கவுண்டிங்

    2. ஆடிட்டிங் அண்ட் அசுரன்ஸ்

    3. என்டர்பிரைஸ் இன்பர்மேஷன் சிஸ்டம் அண்ட் ஸ்ட்ராட்டஜிக் மேனேஜ்மென்ட்,

    4. பைனான்சியல் மேனேஜ்மென்ட் அண்ட் எகனாமிக்ஸ் பார் பைனான்ஸ் ஆகிய பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

    பைனல் கோர்ஸ்

    பைனல் கோர்ஸ் எனப்படும் இறுதி தேர்வில் குரூப் -1 மற்றும் குரூப் -2 ஆகிய பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

    குரூப் -1 தேர்வில்,

    1. பைனான்சியல் ரிப்போர்ட்டிங்

    2. ஸ்ட்ராட்டஜிக் பைனான்சியல் மேனேஜ்மென்ட்

    3. அட்வான்ஸ் ஆடிட்டிங் அண்ட் புரொபஷனல் எத்திக்ஸ்,

    4. கார்ப்பரேட் அண்ட் எகனாமிக் லாஸ்

    ஆகிய பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

    குரூப் 2 பிரிவில்

    1. ஸ்ட்ராட்டஜி காஸ்ட் மேனேஜ்மென்ட் அண்ட் பெர்பார்மன்ஸ் எவாலுவேசன்,

    2. விருப்ப பாடம் (கீழே குறிப்பிட்டுள்ள பாடங்களில் ஏதேனும் ஒரு விருப்ப பாடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)

    a) ரிஸ்க் மேனேஜ்மென்ட்

    b) பைனான்சியல் சர்வீசஸ் அண்ட் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ்,

    c) இன்டர்நேஷனல் டேக்ஸ்சேசன்,

    d) எக்கனாமிக் லாஸ்

    e) குளோபல் பைனான்சியல் ரிப்போர்ட்டிங் ஸ்டாண்டர்ட்ஸ்

    f) மல்டி டிசிப்ளினரி கேஸ் ஸ்டடி

    3. டைரக்ட் டாக்ஸ் லாஸ் அண்ட் இன்டர்நேஷனல் டேக்ஸ்சேசன்

    4. இன்டைரக்ட் லாஸ்

    ஆகிய பாடங்களில் தேர்வுகள் இடம் பெறும்.

    ஏராளமான வேலை வாய்ப்புகள்

    "சார்ட்டட் அக்கவுண்டன்ட்" படிப்பை முடித்தவர்கள் மிகச்சிறந்த திறமைகளை கொண்டவர்களாக இருப்பதால், இவர்களுக்கு பைனான்சியல் ரிப்போர்ட்டிங், நேஷனல் அண்ட் இன்டர்நேஷனல் டேக்ஸ், பைனான்ஸ் அண்ட் கார்ப்பரேட் லா போன்ற துறைகளில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.

    இவர்கள் ஆடிட்டராகவும் சொந்தமாக தொழில் செய்யலாம். மேலும், அரசுத்துறை கூட்டுறவு சங்கங்கள் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் அதிக வேலை வாய்ப்புகள் இவர்களுக்கு உள்ளன.

    இந்தியாவில் ஜி.எஸ்.டி எனப்படும் "கூட்ஸ் அண்ட் சர்வீசஸ் டேக்ஸ்" அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சேவை அமைப்புகள் போன்றவற்றில் வரிகளின் தாக்கத்தை அறிந்து கொள்வதற்கு ஆடிட்டர்களின் உதவி கண்டிப்பாக தேவை.

    பல நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை சட்டபூர்வமாக செலுத்துவதற்கு, ஆடிட்டர்களின் உதவியை நாடுகிறார்கள். இவை தவிர, ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும், தொழில் முனைவோருக்கு ஆலோசனைகள் வழங்கவும், துறை தணிக்கைகளுக்கு துணை நிற்கவும் ஆடிட்டர்களின் சேவை பெருமளவில் உதவியாய் அமைகிறது.

    மேலும் விவரங்களுக்கு,

    1. தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஐ.சி.ஏ.ஐ. பவன், 29, செக்டார் 62 நொய்டா-201 309.

    இணையதள முகவரி : www.icai.org.

    2. தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்க வுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஐ.சி.ஏ.ஐ. பவன், 122 மகாத்மா காந்தி ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-600 034.

    தொடர்புக்கு: nellaikavinesan25@gmail.com

    • எனக்கு விடுதலை அளித்த வள்ளலே! உமக்கு ஒரு வரம் தந்தேன்! என்ன வேண்டும் கேளுங்கள்!
    • ரிமோட் செயலி உன்னோட மொபைல் போனிலயே வீட்ல இருக்கும் எல்லா சாதனங்களையும் தொடர்பு கொள்ளச்செய்துவிடும்.

    "தீபாவளி வருது! அந்த பழைய வெள்ளி விளக்கத்தொடச்சு வெய்ங்களேன்! நான் தான் காலையிலேர்ந்து பட்சணம் செய்திட்டு இருக்கேன்ல?"

    "அட என்னம்மா! மாலை மலரை முழுசாப்படிக்க விட மாட்டேங்கற! இரு வரேன்!"

    புகை எங்கும் புகை!

    "அய்யோ! யார் நீ? பூதமா?"

    "எனக்கு விடுதலை அளித்த வள்ளலே! உமக்கு ஒரு வரம் தந்தேன்! என்ன வேண்டும் கேளுங்கள்!"

    "நெஜம்மாவே நீ பூதமா? சரி, எனக்கு ஆபீஸ் போய் வர ஒரு கார் தாயேன்!"

    "அடசே! என்னய்யா மனுஷன் நீ? அங்க உள்ள உன் ஒய்ப் வீட்டு வேல செஞ்சு கஷ்டப்படறா! வீட்டுக்குத்தேவையான பொருளா எதுனா கேளு!"

    "அப்படி என்ன பொருள் இருக்கு ஸ்பெஷலா?"

    நானே சொல்றேன் கேட்டுட்டு முடிவு பண்ணு!"

    பாண்டல்லிஜெண்ட் (Pantelligent) ன்னு ஒரு வாணலி இருக்கு. அத அடுப்புல வெச்சு புளூ டூத்ங்கற டெக்னாலஜி கொண்டு உன் மொபைல் போனிலேர்ந்து வித விதமா சமையல் பண்ண உதவும்!"

    "என்னது புளூ டூத் வாணலியா?'

    "ஆமா! ஒரு செயலி மூலம் வேணுங்கற ரெஸிப்பிய உன் மொபைலில டவுன்லோட் பண்ணிட்டா, அத வெச்சு அந்த ரெஸிப்பி சொல்லும் ஒவ்வொரு ஸ்டெப்பையும் தானா செயல்படுத்தி உனக்கு வேணுங்கற பதார்த்தத்தை அமர்க்களமா சமைச்சுக்கொடுத்துடும்! எப்போ சூடு அதிகரிக்கணும் எப்ப குறைக்கணுமெல்லாம் அந்த செயலியே பாத்துக்கும்!"

    "அடேயப்பா!"

    "அடுத்து இன்னொரு ஐட்டம் இருக்கு! வீட்டம்மா கடுமையா வேலை செஞ்சுட்டு நிம்மதியா டீவியில் சீரியல் சினிமான்னு பாக்கறாங்க இல்ல? அந்த அனுபவத்தை அவங்களுக்கு மேம்படுத்திக்கொடுத்தா எத்தன சந்தோஷப்படுவாங்க!"

    "ஆமா கரெக்டுதான்! சொல்லு சொல்லு!"

    " சாம்சங் கம்பெனியில வளைந்த திரையுடன் ஒரு 4K Ultra HD smart LED TV கொண்டு வந்திருக்காங்க! சும்மா இல்லை, 88 இஞ்ச் ஸ்கிரீன், அப்படியே சினிமா தியேட்டர் கணக்கா இருக்கும் பார்க்கும் அனுபவம்! படம் பார்க்கும்போது ரஜினி அப்படியே நம்ம வீட்லயே வந்து வசனம் பேசறாமாதிரி நெருக்கமான எக்ஸ்பீரியன்ஸ்!" கிடைக்கும்.

    "அப்ப அது ஒண்ணு நோட் பண்ணிக்க!" வேறேன்ன?"

    "புராண்டோ (Pronto) என்னும் செயலிக்கம்பெனி Peel Smart Remote என்னும் கம்பெனியோடு ஜோடி போட்டுத்தயாரித்துள்ள ரிமோட் ஒண்ணு வந்திருக்கு."

    "ரிமோட்ட வெச்சுக்கிட்டு…?"

    "முழுசா கேளு! இந்த ரிமோட் செயலி உன்னோட மொபைல் போனிலயே வீட்ல இருக்கும் எல்லா சாதனங்களையும் தொடர்பு கொள்ளச்செய்துவிடும். அவ்வளவுதான்! உன்னோட மொபைல் ஒண்ணை வெச்சுண்டு எதையும் இயக்கலாம். அமெரிக்காவுல செய்வது போல நீயும் இதை வாங்கினதோட ஒரு ரோபோவையும் வாங்கி வெச்சுடு. மொபைல் போன் மூலமா என்ன டி.வி. புரோகிராம் இருக்குன்னு தெரிஞ்சு, அப்படியே அந்த டைமுக்கு டி.வி. ஆன் பண்றாமாதிரி செட் பண்ணிட்டு, கூடவே உனக்கு ஞாபகப்படுத்த அலாரமும் வெச்சுட்டா போதும், அந்த டைமுக்கு அலாரம் அடிக்க, நீ வந்து சோபாவுல உட்கார்ந்தா, டி.வி. தானா ஆன் ஆகி அந்த புரொகிராம் ஓட ஆரம்பிக்கும். மொபைல் அழுத்தி ரோபோவைக்கூப்பிட்டு பிரிட்ஜ்ஜிலேர்ந்து ஒரு சிப்ஸ் பாக்கெட்டும் கோலா பாட்டிலும் கொண்டு வரச்சொல்லிட்டா, நீ பாட்டுக்கு ஹாய்யா உட்கார்ந்துண்டு டி.வி. பார்க்கலாம்!"

    "அடடா கேட்கவே சொகம்மா இருக்கே! அப்புறம்?"

    "போன மாசம் ஏதோ டாகுமெண்ட்டைக்காணும்னு ஒய்ப்கிட்ட சத்தம் போட்டுண்டு இருந்தியே?"

    ஆமா! உனக்கெப்படி தெரியும்?'

    "நான் இந்த விளக்குலதானே இருந்தேன், ஏன் தெரியாம! இன்னமே அந்த கஷ்டமெல்லாம் இல்லாம இருக்க ஒரு சேப் லாக்கர் வந்திருக்கு. பூட்டு எங்க சாவி எங்கன்னு அல்லாட வேண்டாம். (Wi Fi) ஒய் பை இணையம் மூலம் தொடர்பு கொண்டு உன் குரலை வெச்சே லாக்கரைத்திறக்கலாம், மூடலாம்! First Alertன்னு ஒரு கம்பெனி இந்த மாதிரி ஒய் பை அலமாரி செய்யறாங்க!"

    "டெக்னாலஜி என்னவெல்லாம் பண்ணுது!"

    "இதையும் கேளு! நம்ம பிலிப்ஸ் கம்பெனி இருக்கு பாரு அவங்க கூட நுண்ணறிவு கொண்ட லைட்டெல்லாம் தயாரிக்க ஆரம்பிச்சாச்சு!"

    "என்னது நுண்ணறிவு கொண்ட விளக்கா?"

    "ஆமா! இந்த லைட்டை ரிமோட் வெச்சு பிரைட்டாகவோ இல்லை டிம்மாகவோ ஆக்கலாம். நீ ஆபீஸ்லேர்ந்து ஒரு ஜாலி மூடுல வரும்போது உன்னோட மொபைல் போன்லயே மூடை செட் பண்ணிட்டா, ஸ்விட்ச் போட்டவுடனே லைட் உன் மூடுக்கேத்தா மாதிரி எரியும்!"

    "இந்த ஒரு டெக்னாலஜி எனக்கு சரிப்பட்டு வராதே பூதமே!"

    "அது ஏன்?"

    "இப்படிதான் போன வாரம் வந்து ஆரஞ்சு பல்பைப்பொருத்தி ரொமாண்டிக்கான மூடுக்காக போட்டு வெச்சேன்!"

    "என்னது ஆரஞ்சு பல்பு ரொமாண்டிக்காவா? அடக்கஷ்டமே!

    "அதேதான்! என்ன அழுது வடிஞ்சுண்டுன்னு ஒரு விளக்குன்னு அவ உடனே ஆப் பண்ணிட்டா!"

    " உன்னையும் சேர்த்தா?'

    " ஏய் பூதமே! என்ன கேலியாபண்றே? இப்ப நீ சொன்ன ஐட்டம் எல்லாத்தையும் இங்க வீட்ல பொருத்து! ம் க்விக்!"

    "முடியாது எஜமானனே! நீ வெளக்கை தேய்ச்ச தேய்ப்புக்கு ஒரு வரம்தான் அனுமதி!"

    "சரி அந்த ஒரு வரத்தை தா!"

    "கொடுத்தாச்சே!

    "எப்பய்யா கொடுத்தே? அழுகுணி ஆட்டமா இருக்கே! பூதங்கள்ள கூட இந்த தப்பாட்டம் உண்டா?"

    "இல்லை எஜமான்னே! இந்த டெக்னாலஜி விஷயங்கள்ளாம் உனக்கு தெரிவித்து உன் பொது அறிவை மேம்படுத்தியதுதான் நான் அளித்த வரம்!. உங்க சான்ஸ் ஓவர்! வர்ட்டா!"

    "ஒரு வெளக்க துடைச்சு வெக்கச்சொன்னா என்ன வெட்டியா உட்கார்ந்துண்டு இருக்கீங்க?"

    "இல்ல பூதம்…?"

    "என்னது என்னைப்பார்த்தா பூதம் மாதிரி இருக்கா? இருக்காதா பின்னே? உங்க வீட்டு வேலையெல்லாம் மாஞ்சு மாஞ்சு இடுப்பொடிய செய்யறேனே! அதுக்கு எனக்கு பூதம்னு பேர் வெச்சுறதா?''

    லொட்!

    கடைசிச்செய்தியின் படி அரை மணிக்குப்பிறகு அந்த வீட்டு வாசலில் ஒரு ஆம்புலன்ஸ் வந்ததாக அறிகிறோம்!

    • காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்சி பிரிவை அறிவியல் பூர்வமாக அணுகி, பல நிறுவனங்களை திறம்பட நடத்த இந்த அமைப்பு மிகவும் உதவியாக அமைகிறது.
    • எஸ்.எஸ்.எல்.சி என அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பவுண்டேஷன் கோர்ஸில் சேர்ந்து படிக்கலாம்.

    தி இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அக்கவுண்டென்ஸ் ஆப் இந்தியா (THE INSTITUTE OF COST ACCOUNTANTS OF INDIA) என்னும் நிறுவனம் நடத்தும் படிப்புதான் சி.எம். ஏ (CMA) ஆகும்.

    இந்த நிறுவனம் முன்பு தி இன்ஸ்டியூட் ஆப் காஸ்ட் அண்ட் ஒர்க்ஸ் அக்கவுண்டென்ஸ் ஆப் இந்தியா என அழைக்கப்பட்டது.

    1944-ம் ஆண்டு கம்பனி சட்டத்தின்படி( பதிவு செய்யப்பட்ட இந்த அமைப்பு ,காஸ்ட் அக்கவுண்டன்சி (COST ACCOUNTANCY) சம்பந்தப்பட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் உருவாக்கப்பட்டதாகும்.

    உலகம் முழுவதும் இந்த அமைப்பிற்கு கிளைகள் உள்ளன.

    இதன் தலைமை அலுவலகம் கல்கத்தாவில் செயல்படுகிறது. இந்த அமைப்பிற்கு இந்தியா முழுவதும் 113 கிளைகள் உள்ளன. உலக நாடுகளில் 11 கிளைகளும் இயங்குகின்றன.

    காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்சி பிரிவை அறிவியல் பூர்வமாக அணுகி, பல நிறுவனங்களை திறம்பட நடத்த இந்த அமைப்பு மிகவும் உதவியாக அமைகிறது.

    ஏராளமான வேலை வாய்ப்புகள்:

    சி.எம்.ஏ என அழைக்கப்படும் காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் என்னும் படிப்பை முடித்தவர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன.

    குறிப்பாக, காஸ்ட் ஆடிட் (Cost Audit), மெயின்டனன்ஸ் ஆப் காஸ்ட் ரெக்கார்ட் ( Maintenance of Cost Records),

    ஜி.எஸ்.டி ஆடிட்(GST Audit),

    இன்டர்னல் ஆடிட் (Inernal Audit), ஸ்டாக் ஆடிட் பார் பேங்க்ஸ் ( Stock Audit for Banks), டேக்ஸ் கன்சல்டன்சி( Tax Consultancy), புராஜெக்ட் மேனேஜ்மென்ட் (Project Management), சர்வேயர் அண்ட் லாஸ் அஸ்ஸஸ்ஆர்- இன்சூரன்ஸ் (Surveyor and Loss Assessor- Insurance), ரிக்கவரி கன்சல்டன்ட் இன் பாங்கிங் செக்டார் (Recovery Consultant in Banking Sector), காம்ப்ளெய்ன்ஸ் ஆடிட் ஆப் ஆர்.பி.ஐ (Compliance Audit of R.B.I),

    இன்சால்வன்சி புரொபஷனல் ( Insolvency Professional), ரிஜிஸ்டர்ட் வேல்யுவர் ( Registered Valuer), இன்பர்மேஷன் சிஸ்டம் செக்யூரிட்டி ஆடிட் ( Information System Security Audit), சர்டிபிகேஷன் அண்டர் எக்ஸ்சிம் பாலிசி (Certification Under EXIM Policy)

    என ஏராளமான வேலை வாய்ப்புகள் இந்த படிப்பை வெற்றிகரமாக படித்து முடித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

    மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர்நிலை வேலை வாய்ப்புகளும் இப்படிப்பை முடித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    சி.இ.ஓ (CEO), சி.ஓ. ஓ.(COO) சி .எப். ஓ.(CFO), டைரக்டர் -(DIRECTOR-FINANCE) பிரசிடெண்ட்- பைனான்ஸ் (PRESIDENT -FINANCE), வைஸ் பிரசிடெண்ட்- பைனான்ஸ் (VICE-PRESIDENT -FINANCE), ஹெட் ஆப் பைனான்ஸ்(HEAD OF FINANCE)

    ஸ்ட்ராட்டஜிக் ஹெட் (STRATEGIC HEAD),

    காஸ்ட் அட்வைசர் (COST ADVISOR),

    பைனான்ஸ் கண்ட்ரோலர் (FINANCE CONTROLLER)

    காஸ்ட் கண்ட்ரோலர் (COST CONTROLLER), ரிஸ்க் மேனேஜர்(RISK MANAGER), பிசினஸ் அனலிஸ்ட் (BUSINESS ANALYST)

    ரிசர்ச் அனலிஸ்ட்( RESEARCH ANALYST)

    புரொபசர் ஆப் பைனான்ஸ் (PROFESSOR OF FINANCE) போன்ற பதவிகள் சி .எம். ஏ (CMA) படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்க ளுக்கு கிடைக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன.

    படிப்பில் சேர தகுதிகள்:

    எஸ்.எஸ்.எல்.சி என அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பவுண்டேஷன் கோர்ஸில் சேர்ந்து படிக்கலாம். ஆனால், இவர்கள் பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற பின்புதான், பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வு எழுத இயலும்.

    பிளஸ் டூ முடித்தவர்கள் பவுண்டேஷன் கோர்ஸ் (FOUNDATION COURSE)என அழைக்கப்படும் அடிப்படை நிலை வகுப்பில் நேரடியாகவே முதலில் சேர்ந்து கொள்ளலாம்.

    பவுண்டேஷன் கோர்ஸ் படிப்பில் வெற்றி பெற்ற பின்பு இன்டர்மீடியட் கோர்ஸ் (INTERMEDIATE COURSE)மற்றும் பைனல் கோர்ஸ் ( FINAL COURSE) ஆகிய தேர்வுகள் எழுதி சி.எம். ஏ படிப்பில் வெற்றி பெறலாம்.

    தேர்வுக்கான பாடங்கள்:

    சி.எம்.ஏ தேர்வுகளில் இடம்பெறும் பாடங்கள் விவரம்.

    பவுண்டேஷன் கோர்ஸ் (FOUNDATION COURSE).

    1. பண்டமென்டல் ஆப் பிசினஸ் லாஸ் அண்ட் பிசினஸ் கம்யூனிகேஷன்.

    2. பண்டமென்டல் ஆப் பைனான்சியல் அண்ட் காஸ்ட் அக்கவுண்டிங்.

    3. பண்டமென்டல் ஆப் பிசினஸ் மேத்தமேடிக்ஸ் அண்ட் ஸ்டேடிஸ்டிக்ஸ்

    4. பண்டமென்டல் ஆப் பிசினஸ் எக்கனாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்.

    இன்டர்மீடியட் கோர்ஸ் (INTERMEDIATE COURSE):

    குரூப் -1 (GROUP-1)

    குரூப்-1 தேர்வில்,

    1. பிசினஸ் லாஸ் அண்ட் எதிக்ஸ்

    2. பைனான்சியல் அக்கவுண்டிங்

    3. டைரக்ட் அண்ட் இன்டைரக்ட் டேக்ஸ் சேஷன்.

    4. காஸ்ட் அக்கவுண்டிங்

    -ஆகிய பாடங்கள் உள்ளன.

    குரூப் 2 (GROUP-2):

    குரூப் 2 தேர்வில்,

    1. ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட் அண்ட் ஸ்டேடர்ஜிக் மேனேஜ்மென்ட்

    2. கார்ப்பரேட் அக்கவுண்டிங் அண்ட் ஆடிட்டிங்

    3. பைனான்சியல் மேனேஜ்மென்ட் அன்ட் பிசினஸ் டேட்டா அனாலிடிக்ஸ்

    4. மேனேஜ்மென்ட் அக்கவு ண்டிங்.

    -ஆகிய பாடங்கள் இடம்பெறுகின்றன.

    பைனல் கோர்ஸ் (FINAL COURSE):

    குரூப் - (GROUP-3):

    குரூப்-3 தேர்வில்,

    1. கார்ப்பரேட் எக்கனாமிக் லாஸ்

    2. ஸ்ட்ராட்டஜிக் பைனான்சியல் மேனேஜ்மென்ட்

    3. டைரக்ட் டாக்ஸ் லாஸ் அண்ட் இன்டர்நேஷனல் டேக்ஸ்சேஷன்

    4. ஸ்ட்ராட்டஜிக் காஸ்ட் மேனேஜ்மென்ட்

    -ஆகிய பாடங்கள் இடம்பெறுகின்றன.

    குரூப் -4 (GROUP-4):

    குரூப் 4 தேர்வில்,

    1. காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் ஆடிட்

    2. கார்ப்பரேட் பைனான்சியல் ரிப்போர்ட்டிங்

    3. இன்டைரக்ட் டேக்ஸ் லாஸ் அண்ட் புராக்டீஸ் -ஆகிய பாடங்கள் இடம்பெறுகின்றன.

    மேலும் விருப்ப பாடங்களாக மூன்று பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து தேர்வு எழுத வேண்டியது அவசியம் ஆகும்.

    விருப்ப பாடங்கள் (ELECTIVE SUBJECTS):

    1.ஸ்டேட்டர்ஜிக் பெர்பார்மென்ஸ் மேனேஜ்மென்ட் அண்ட் பிசினஸ் வேல்யூவேஷன்.

    2. ரிஸ்க் மேனேஜ்மென்ட் இன் பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ்

    3. என்ட்ரபிரநியூர்ஷிப் (ENTREPRENEUR SHIP) அண்ட் ஸ்டார்ட் அப்.

    இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவதோடு சி.எம்.ஏ. படிப்பில் கீழ்கண்ட பயிற்சிகளையும் பெற வேண்டியது அவசியமாகும்.

    டிரைனிங் அண்ட் வொர்க்ஷாப்ஸ் (TRAINING AND WORKSHOP.)

    டிரைனிங் அண்ட் வொர்க் ஷாப்ஸ் பிரிவின் கீழ்,

    I. சாப்ட் அண்ட் டெக்னிக்கல் ஸ்கில் டிரைனிங்(140 மணி நேரங்கள்) (SOFT AND TECHNICAL SKILLS TRAINING ( 140 HOURS)

    இந்த பிரிவின் கீழ்,

    1. SAP Finance Power User Training

    2. Microsoft Office Training

    3. Cambridge University Press Soft Skill Training.

    4. E -Filing Training

    ஆகிய சிறப்பு பயிற்சிகள் உள்ளன.

    II. டுயூட்டோரியல் ஒர்க் ஷாப்ஸ் (44 மணி நேரங்கள்) ( Tutorial Workshops) (44 Hours)

    III. இண்டஸ்ட்ரி ஓரியண்டட் டிரைனிங் ப்ரோக்ராம்ஸ் (7 நாட்கள்) ( Industry Oriented Training Programme)( 7 Days)

    IV பிராக்டிகல் டிரைனிங் (15 மாதங்கள்) (Practical Training )(15 months)

    பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வு எழுத விரும்புபவர்கள் கவனத்திற்கு...

    ஒவ்வொரு வருடமும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வு நடத்தப்படும். ஜூன் மாதம் நடைபெறும் தேர்வு எழுத விரும்புபவர்கள் அந்த வருடத்தில் ஜனவரி 31-ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இதைப்போலவே,டிசம்பர் மாதம் நடைபெறும் பவுண்டேஷன் தேர்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் அந்த வருடத்தின் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.

    மேலும் விவரங்களுக்கு,

    Southern India Regional கவுன்சில்

    4, Montieth Lane, Egmore, Chennai - 600 008

    Ph:044-28554443/28554326/28528219

    Fax : 91- 044- 28554651 , Website: www.sircoficwai.com, Email: sirc@icmai.in

    தொடர்புக்கு: nellaikavinesan25@gmail.com

    • எண்ணத்தை நிறைவேற்ற தொலைக்காட்சிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஆடிசன் நடத்தப்பட்டது.
    • அசாருக்கு இருந்த ரசிகர் பட்டாளம் காரணமாக அவருக்கு 3-வது பரிசு கொடுக்கப்பட்டது கூட சர்ச்சையானது.

    எண்ணத்தை நிறைவேற்ற தொலைக்காட்சிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஆடிசன் நடத்தப்பட்டது.திறமை இருந்தால் நீங்களும் ஆடலாம் என்று ஆட தெரியாதவர்களையும் ஆட வைத்த மேடை மானாட... மயிலாட...

    ஏற்கனவே 2 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 3-வது சீசன் தொடங்கியது. இது புதுமைகளை புகுத்திய சீசன் என்பதை விட புதியவர்களும் புகுந்து விளையாடிய சீசன் என்பதுதான் சரியாக இருக்கும்.

    ஏற்கனவே 2-வது சீசன் பற்றி நான் தெரிவித்து இருந்தேன். அந்த சீசனில் மிகச்சிறந்த போட்டியாளர்களாக இருந்த ஐஸ்வர்யா-ரஞ்சித் ஜோடி சூழ்நிலை காரணமாக அரை இறுதிக்கு பிறகு கலந்து கொள்ள முடியாமல் போனது. எனவே அவர்களுக்கு இந்த சீசனில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    இந்த சீசனில்தான் புதிதாக எங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறோமே இதே போல் திறமையானவர்கள் வெளியிலும் இருக்கலாமே! அவர்களையும் தேடி பிடித்து ஆட வைத்தால் என்ன? என்று நினைத்தோம்.

    எங்கள் எண்ணத்தை நிறைவேற்ற தொலைக்காட்சிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஆடிசன் நடத்தப்பட்டது. பலரும் தேர்வுக்கு வந்திருந்தார்கள். அதில் இருந்து போட்டியாளர்களை தேர்வு செய்தோம்.

    அப்போது என்னிடம் கேட்டார்கள். சின்னத்திரையில் நடித்து கொண்டிருப்பவர்கள் நன்றாக நடனம் ஆட தெரிந்தவர்கள். அவர்களுக்கென்று ரசிகர் பட்டாளமும் இருக்கும். ஆனால் நீங்கள் போட்டியாளர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? அவர்களுக்கு வரவேற்பு கிடைக்குமா? என்றார்கள்.

    நான் நடனம் பயின்றவள். பயிற்சி அளித்து கொண்டிருப்பவள். எனவே ஒருவர் நடந்து வருவதை வைத்தே இவரிடம் ஆடும் திறமை இருக்கிறதா என்பதை கணிக்க முடியும். அப்படித்தான் போட்டியாளர்களை தேர்வு செய்தோம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அசார்-ரஜினி ஜோடி, தர்ஷினி-பயாஸ் ஜோடி. இவர்களுடைய நடனம் பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது. இவ்வளவு திறமை உள்ளவர்கள் வெளியிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களது திறமைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. நன்றாக ஆடினால் போதும். ரசிகர்கள் நிச்சயம் அங்கீகரிப்பார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் அசாரின் நடனத்தை பார்த்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே அவருக்கு இருந்தது. இப்போது ரஜினிக்கும் திருமணமாகிவிட்டது. அசாருக்கும் திருமணமாகிவிட்டது. இருவரும் நல்ல நிலையில் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

    அதேபோல் தர்ஷினி-பயாஸ் ஜோடியில், பயாசுக்கு மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்த்து சினிமாவிலே சில வாய்ப்புகள் கிடைத்தன.

    இந்த சீசனில் காட்சிக்காக செட்டுக்கள் அமைப்பதிலும் புதிய கற்பனையை கையாண்டோம். செட்டுக்கள் அனைத்தும் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் 3-வது தளத்தில் அமைக்கப்பட்டிருந்தது. 3-வது சீசனுக்கு 3-வது தளம்... என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்? கோயம்பேடு மார்க்கெட் போன்ற செட், வீடுகள் போன்ற செட், வரலாற்று காட்சிகளுக்காக அரன்மணை போன்ற செட் ஆகியவற்றை அமைத்து இருந்தோம்.

    வீடுகள் போன்ற செட்டுக்கு எம்.ஜி.ஆர். நடித்த நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்... என்ற பாடலுக்கு ஏற்றபடி கையில் சாட்டையை வைத்துக்கொண்டு ஆடினார்கள். நிஜமாகவே வாத்தியாரை கண்முன் கொண்டு வந்துவிட்டார்கள். பழைய பாடலுக்கு ஆடினார்கள். இந்த சீசனில்தான் இன்னொரு புதுமையையும் அரங்கேற்றினோம். கலர்ஸ் என்ற பெயரில் ஒரு சுற்று. இந்த சுற்றில் போட்டியாளர்கள் பெயர்களில் ஒரு குலுக்கள் நடத்தப்படும். அதில் அவர்கள் எடுக்கும் சீட்டில் என்ன நிறம் இருக்குமோ அந்த நிறத்திலான காஸ்டியூம்களை அணிந்து அவர்கள் ஆட வேண்டும். அவர்கள் ஆடை அணிவது மட்டுமல்ல அந்த மேடையும் முற்றிலும் அதே நிறத்தில் மாற்றப்பட்டிருக்கும். அமர்ந்திருக்கும் நடுவர்களும் அதே கலர் காஷ்டியூமில்தான் இருக்க வேண்டும்.

    இப்படி ஒரு காட்சி அமைப்பை நான் சொன்னதும், இது சிரமம். முடியாது என்றுதான் சொன்னார்கள். ஆனால் அதையும் முடித்து காட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். இதில் என்ன சிரமம் என்றால் அந்த கலருக்கு ஏற்ற வகையில் மேடையை மாற்றுவதுதான். அதற்குதான் குறைந்தபட்சம் 3 மணி நேரம் வரை ஆனது. இப்படி ஒவ்வொரு ஜோடியும் ஆடியதை காட்சிப்பதிவு செய்வதற்கு காலை முதல் சூட்டிங் முடிவதற்கு நள்ளிரவு வரை ஆகும். அப்படித்தான் காட்சிகளை எடுத்தோம். இது மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.

    சூரியகாந்தி பூக்களின் பின்னணியில் இருப்பதை போன்ற ஒரு செட் அமைத்து அதில் அந்த பூந்தோட்டத்துக்குள் ஹீரோ சுற்றி வந்து டூயட் பாடுவது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டுஇருந்தது. அந்த காட்சியும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைவிட முக்கியமாக வெளியில் இருந்து தேர்வு செய்து கொண்டு வந்த போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள் என்று சொல்வதை விட நாங்களும் நட்சத்திரங்களுக்கு ஈடு கொடுப்பவர்கள்தான் என்று சொல்லும் அளவுக்கு ஒரு போட்டியாளரான அசார், குஷ்புவுடனே ஜோடி போட்டு ஆடினார்.

    அவர் குஷ்புவுடன் ஆட தயார் என்றதும் குஷ்புவுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவரும் இணைந்து ஆடுவதற்கு சம்மதிக்கவே 'ரோமியோ ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே... அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே" என்ற பாடலுக்கு கைதேர்ந்த கலைஞரை போல அசார் ஆடியதை பார்த்து குஷ்புவும் ஆச்சரியப்பட்டார். அவரும் அசாருக்கு ஈடு கொடுத்து அந்த டூயட் பாடலில் அசத்தினார்.

    அதே போலதான் அசாருடைய ஜோடி ரஜினி ஒரு எபிசோட்டில் ஒரு விபத்து காரணமாக ஆட வர முடியவில்லை. உடனே அந்த எபிசோட்டின் தொகுப்பாளினி யாக இருந்த கீர்த்தியுடன் ஜோடி சேர்ந்து ஆட தயார் என்றதும், கீர்த்தியும் அவரோடு ஆடி அசத்தினார்.

    ஒவ்வொரு சீசனிலும் 30 முதல் 35 எபிசோடு வரை இடம் பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த 3-வது சீசனில்தான் 100-வது எபிசோட்டை நிறைவு செய்திருந்தோம். அதற்காக சிறப்பு சுற்று ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். அதல் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    அதாவது சிம்பு, தனுஷ் ஆகியோரது படப் பாடல்களை எடுத்து அதற்கு ஏற்ற வகையில் ஆட வேண்டும் என்பதுதான் அது.

    இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ புது புது நிகழ்ச்சிகள் டி.வி.க்களில் வருகின்றன. அதிலும் திறமையானவர்களை தேடி பிடித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறார்கள். அதற்கு அடிப்படையாக இருந்தது எங்களின் மானாட மயிலாட தான் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.

    3-வது சீசன் நிறைவு விழாவுக்கும், பரிசளிப்பு விழாவுக்கும் நடிகை ஸ்ரேயா வந்து சிறப்பித்தார். அவர்தான் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் அளித்தார். இந்த சீசனில் ஐஸ்வர்யா-ரஞ்சித் ஜோடி முதல் பரிசை தட்டி சென்றது. 2-வது பரிசை பயாஸ்-தர்ஷினி ஜோடியும், 3-வது பரிசை அசார்-ரஜினி ஜோடியும் பெற்றது. அசாருக்கு இருந்த ரசிகர் பட்டாளம் காரணமாக அவருக்கு 3-வது பரிசு கொடுக்கப்பட்டது கூட சர்ச்சையானது. பல ரசிகர்கள் அவருக்கு 3-வது பரிசா என்று ஆதங்கப்பட்டதும் உண்டு. அந்த அளவுக்கு சாதாரணமானவர் களையும் ஜொலிக்க வைத்த மேடை மானாட... மயிலாட... அடுத்த வாரம் இன்னும் புதிய தகவல்களுடன் 4-வது சீசனில் உங்களை சந்திக்கிறேன்.

    ×