search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special article"

    • தொள்ளாயிரத்து எண்பதுகளுக்குப் பின்னர் தொடங்கின.
    • பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்த தொழில் நுட்பம் ஒரு பெரிய வரப்பிரசாதம்.

    "எனக்கு ஒரு கார் வேணுங்க!"

    "சரி, குறிச்சிக்கிட்டேன், சொல்லுங்க எப்படியாப்பட்ட கார்?"

    " நீலக்கலர், 1.8 cc என்ஜின், நாலு கதவு, ரேடியல் டயர், பவர் ஸ்டீயரிங்….."

    "ஓ சரி சரி! பெட்ரோலா இல்ல டீசலா?"

    "பெட்ரோலா? எந்த உலகத்துல இருக்கீங்க! எலக்ட்ரிக் காருதாங்க!"

    "ஓ சரிங்க!"

    "எப்பங்க டெலிவரி ஆகும்?"

    "நாளைக்காலையில பத்து மணிக்கு போன் பண்ணிட்டு டெலிவரி பண்ணிடலாங்க!"

    " சரி, நா அப்பவே செக் குடுத்தனுபிடறேங்க!"

    "ரொம்ப தாங்க்ஸ்!"

    மேலே சொன்னது உண்மையாகிக்கொண்டிருக்கிறது!

    3டி பிரிண்டிங் தொழில் நுட்பம் என்னும் சமாச்சாரம் உற்பத்தி என்னும் சப்ஜெக்டையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் சிக்காகோவில் நடந்த சர்வதேச உற்பத்தித்தொழில்நுட்ப மாநாட்டில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ஒரு கம்பெனி 44 மணி நேரத்தில் அந்த மாநாட்டிலேயே நிஜ கார் ஒன்றை 3டி தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி தயாரித்துக் காண்பித்திருக்கிறது.

    அதை அசெம்பிள் பண்ண 2 நாட்கள்தான் பிடித்ததாம்! Acrylonitrile Butadiene Styrene (A.B.S.) என்னும் சிக்கலான ஒரு பொருளையும் வலுப்படுத்திய கார்பனையும் கொண்டு தயாரிக்கப்பட்டதாம் இந்தக்கார்.

    ஒரு சாதாரண காரில் 20,000 உதிரி பாகங்கள் இருக்குமாம். ஆனால் இந்த ஜீபூம்பா காரில் நாற்பதே உதிரி பாகங்கள் தானாம்!

    "பொருள் அறிவியலும் தொழில்நுட்பமும் பல படிகள் முன்னேறிவிட்டபடியால் எவ்வித நுட்பமான பொருளையும் பிளாஸ்டிக், உலோகம் அல்லது கலப்புப்பொருட்களால் இந்த 3டி நுட்பத்தைப்பயன் படுத்தி தயாரித்து விடமுடியும்" என்கிறார் வாகன ஆராய்ச்சி மையத்தின் இன் தலைவர் ஜே பாரன்.

    தொள்ளாயிரத்து எண்பதுகளுக்குப்பின்னர் தொடங்கின இந்த 3டி பிரிண்டிங் என்பது இப்போது பன்மடங்குப்பெருகி ஏரோப்ளேன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும் அளவுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது.

    கூட்டு உற்பத்தியின் ஆரம்பமான இந்த 3டி பிரிண்டிங் நுட்பம் முதல் முதலில் இணைக் கப்பட்ட படிம மாடலிங் என்ற சிக்கலான பெயர் கொண்ட நுட்பத்தைப்பயன்படுத்தியதாம். இன்றளவும் இதே நுட்பம்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறதாம்.


    ஸ்ட்ராடி என்றுபெயர் கொண்ட மேலே சொன்ன சிக்காகோ கார் லோகல் மோட்டார்ஸ் கம்பெனியால் 2014இல் தயாரிக்கப்பட்டது.

    அதே வருடத்தில் உர்பீ என்னும் 3டி பிரிண்ட் உதிரிகள் கொண்ட காரை ஸ்வீடன் தேசத்து Koenigsegg என்னும் கம்பெனி தயாரித்தது.

    2015-ல் ஏர்பஸ் கம்பெனி தங்களுடைய ஏ 350 பிளேனில் கிட்டதட்ட 1000 உதிரி பாகங்கள் 3டி பிரிண்டிங்கில் உருவாக்கப்பட்டதாகச்சொல்லிற்று.

    2015-ல் ராயல் ஏர்போர்ஸ் யுரோனபட்டர் டைபூன் என்னும் போர் விமானம் 3டி பிரிண்டிங்கில் தயாரித்த உதிரிகளுடன் பறந்தது.

    இப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் 3டி பிரிண்டிங்கில் போர் விமான உதிரிகள் தயாரிக்கும் வழக்கத்தை தொடங்கிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இன்றும் உலோகப்பொருள் கொண்ட தயாரிப்பில் கேஸ்டிங், பே்பரிகேஷன், ஸ்டாம்பிங், மேஷினிங் போன்ற தயாரிப்பு முறைகளே அதிகமிருந்தாலும் கூடிய சீக்கிரம் இவை குறைந்து 3டி பிரிண்டிங் தயாரிப்பு மேலோங்கும் என்பது விற்பனர்களின் கணிப்பு.

    இன்று இந்த 3டி பிரிண்டிங் இயல் மிக அதிகமாகப்பயன்படுத்தப்படுவது தொல் பொருள் ஆராய்ச்சி மற்றும் மியூசியம்களின் பராமரிப்பில் என்றே சொல்லலாம். புராதன சிற்பங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் உடைந்திருக்குமானால் இந்த 3டி பிரிண்டிங்கினால் சரியான அளவுக்கேற்ப அந்த உடைசல்களைச்செய்து ஒட்ட வைத்து தொல் பொருட்களின் பழமை அழியாதவாறு காப்பதோடு அவற்றை இன்னும் சுலபமாகப்பராமரிக்க முடியும்.

    நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்,இந்த 3டி பிரிண்டிங் நுட்பத்தால் துப்பாக்கிகளும் தயாரிக்க முடியும்!

    பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்த தொழில் நுட்பம் ஒரு பெரிய வரப்பிரசாதம். ஆகவே அமெரிக்கா முதற்கொண்டு இந்த 3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தை முறையாக க்கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள். இண்டர்நெட் மூலமாக பல துப்பாக்கி தயாரிக்கும் பிளான்கள் நடமாடி வருவதைக்கண்டு அமெரிக்கா அவற்றைத்தடுத்திருக்கிறது.

    3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தையே கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று ஒரு சாரார் வாதடி வர, மற்றொரு சாரார், அது தனிப்பட்ட உரிமையைப்பறிப்பதாய் முடியும் என்பதோடு இந்த அபார 3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தையே முடக்கிப்போட்டுவிடும் என்கிறார்கள். அதற்கு பதிலாக துப்பாக்கிக்குண்டுகளைக்கட்டுபடுத்துங்கள் என்று கேலி பேசுகிறார்கள்!

    இந்த 3டி பிரிண்டிங் மருத்துவ உலகிலும் புரட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. முக்கியமாக செயற்கை உடலுறுப்புக்கள் தயாரிப்பில் 3டி பிரிண்டிங் நுட்பம் மிக அதிகமாக பயன்பட ஆரம்பித்துவிட்டதைக்காண்கிறோம். உறுப்புகள் மட்டுமின்றி பேஷண்ட்டின் உடல் கூறுக்கேற்ப ஆபரேஷன் செய்யத்தேவையான உபகரணங்களையும் தயாரித்து அந்த பேஷண்ட்டுக்கே உரித்தான தனிப்பட்ட கூறுகளின் அளவுக்கேற்ப மிகத்துல்லியமாக ஆபரேஷன் செய்ய முடிவதை இந்த 3டி பிரிண்டிங் நுட்பம் சாத்தியமாக்கி இருக்கிறது.

    "டாக்டர்! வலிக்கிறதுரொம்ப!"

    "எது இந்த ஸ்கால்பெல் படும்போதா?"

    "ஆமாம் டாக்டர்!"

    "சரி ரெண்டு நிமிஷம் பொறுங்கள்! சிஸ்டர்! 4.3 ஸ்கால்பெல் ஒண்ணு 3டி பிரிண்ட் பண்ணிண்டு வாங்க!"

    ஆம்! ரெண்டே நிமிஷத்தில் பேஷண்ட்டுக்குத்தோதான கருவிகள் தயாரித்து ஆபரேஷனைத்தொடர முடியுமாம்!

    "ஏம்மா! ஒவ்வொரு நாளும் நீ மாஞ்சு மாஞ்சு மசாலா அரைக்கிறியே நா வேணா இந்த தீபாவளிக்கு கிரைண்டிங் மெஷீன் வாங்கித்தரட்டுமா?"

    "ஒண்ணும் வேணாம்! நீங்க பேசாம 3டி பிரிண்டிங் மெஷீன் ஒண்ணு வாங்கியாங்க! கிரைண்டரோ மிக்ஸியோ நானே தயாரிச்சுக்கறேன்!"

    நடக்கப்போகிறது!

    உங்களூக்கு ஒன்று தெரியுமா? எனது நண்பர் பிரசன்னா 3டி பிரிண்டிங்கில் செய்த அயோத்தி ராமர் கோவிலை தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

    • ஒரு வீட்டின் தெற்கு பகுதியில் அதிக காலியிடம் அல்லது பள்ளம் இருந்தால் அது அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆகாது.
    • கடையில் வியாபாரம் குறைந்து லாபம் இல்லாவிட்டால் வாஸ்து காரணம் என்று வியாபாரிகளையே ஜோதிடர்கள் நினைக்க வைத்து விடுகிறார்கள்.

    வீடு கட்டுவது என்பது எல்லோராலும் இயலாது. வீடு கட்டும் அனைவரும் வாஸ்து பார்ப்பது இல்லை. ஆனால் வாஸ்து பார்க்க வேண்டியது அவசியம்தான். ஏனெனில் ஒரு வீட்டுக்கு உயிரோட்டமாக இருப்பது வாஸ்துவின் அம்சங்கள்தான்.

    வாஸ்து என்பது நெருப்பு, நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் சரிசமமான சேர்க்கையை குறிப்பதாகும். இந்த ஐந்தும் சரியான விகிதத்தில் இருந்தால் அந்த வீட்டில் வாஸ்துவும் சரியாக இருக்கும். பஞ்ச பூதங்களில் ஏதாவது ஒன்று அதிகமாகி ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ அதுதான் வாஸ்து குறைபாடுகளாக பிரதி பலிக்கும்.

    இதில் அறிவியல் ரீதியான தொடர்பும் இருக்கிறது. அதாவது ஒரு வீடு கட்டும்போது அந்த இடத்தில் மின்காந்த அலைகளின் ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அந்த ஓட்டம் சரியாக இருந்தால் நல்ல அதிர்வலைகளை வீடு கட்டும் போதே உணர முடியும். கட்டுமானப் பணிகள் நடக்கும் போதே உள்ளே செல்லும்போது மன நிலைகள் அதற்கேற்ப அமையும். இப்படி இருந்தால் வாஸ்து குறைபாடு இல்லை என்று அர்த்தம்.

    புதிதாக வீடு கட்டும் இடத்தில் மின் காந்த அலைகளின் ஓட்டத்தை நாமே கூட உருவாக்க முடியும். வீடு கட்டும் இடத்தில் வடகிழக்கு மூலை தாழ்ந்தும், தென்மேற்கு மூலை மேடாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் வாஸ்துவுக்கான மின் காந்த ஓட்டம் சீராக அமையும். இதையும் மீறி வாஸ்து குறை பாடு இருப்பதாக இருந்தால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.



    இத்தகைய குறைகள் வராமல் இருக்க வேண்டுமானால் வாஸ்து பகவான் கண்விழிக்கும் நாளில் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். பொதுவாக ஒரு ஆண்டில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய 8 மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்ய லாம். இந்த 8 நாட்களிலும் வாஸ்து பகவான் 1½ மணி நேரம்தான் கண்விழித்து இருப்பார். அந்த நேரத்துக்குள் பூமி பூஜை செய்து விட வேண்டும்.

    வாஸ்து பூஜை செய்வதற்கு திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 கிழமைகளும் மிக மிக சிறப்பானவை. வாஸ்து பூஜை நாட்களில் ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்பம் லக்னம் அமைந்தால் மேலும் சிறப்பானதாக கருதப்படும். அதுபோல ஒவ்வொரு திசைக்கும் ஒரு பலன் உண்டு. அவற்றையும் கருத்தில் கொண்டுதான் பூமி பூஜைகளை செய்ய வேண்டும்.

    மேலும் வீடு கட்டும்போது அறைகளின் அமைப்பு, அவற்றின் அளவு, உயரம் ஆகியவையும் வாஸ்துவை நிர்ணயிக்கும். வீட்டை சுற்றி இருக்கும் காலி இடங்கள் கூட வாஸ்து பலன்களில் பார்க்கப்படும். அதாவது ஒரு வீட்டின் தெற்கு பகுதியில் அதிக காலியிடம் அல்லது பள்ளம் இருந்தால் அது அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆகாது. மேற்கு பகுதியில் காலி இடம் அமைந்தால் அது ஆண்களுக்கு உகந்த தாக இருக்காது.

    இப்படி வாஸ்து குறைபாடுகளுக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. சமீப காலமாக இதில் பல புதிய தகவல்களை இணைத்து புதிதாக வீடு கட்டுபவர்களை ஜோதிடர்கள் கடுமையாக குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். வீடு கட்டும் ஒருவர் யாராவது ஒரு ஜோதிடரிடம் வாஸ்து தொடர்பாக கருத்துக்கள் கேட்டுவிட்டால் நிம்மதி இல்லாத நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலைதான் தற்போது காணப்படுகிறது.

    எனவே வீடு கட்டும்போது தொட்டதற்கு எல்லாம் வாஸ்து பார்க்கக் கூடாது. பார்த்தால் குழப்பம்தான் மிஞ்சும். பல வீடுகள் ஜோதிடர்களின் வாஸ்து கணிப்புகளால் மீண்டும் மீண்டும் இடித்து கட்டப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே வாஸ்துகளை குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு பார்ப்பது நல்லது.

    வசித்து கொண்டிருக்கும் வீட்டில் வாஸ்து பார்க்கும் நடைமுறை சமீப காலமாக அதிகமாகி இருக்கிறது. ஏதாவது குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சினை, வியாபார பிரச்சினை, திருமண தாமதம், கணவன்-மனைவி தகராறு என்று வந்து விட்டால் உடனே ஜோதிடர்கள் வாஸ்து குறைபாடுதான் காரணமாக இருக்கும் என்று கண்மூடிக் கொண்டு சொல்லி விடுகிறார்கள்.

    கடையில் வியாபாரம் குறைந்து லாபம் இல்லாவிட்டால் வாஸ்து காரணம் என்று வியாபாரிகளையே ஜோதிடர்கள் நினைக்க வைத்து விடுகிறார்கள். இவ்வளவு நாள் நன்றாக நடந்த கடை இப்போது ஏன் நிலைதடுமாறுகிறது என்பதை வியாபாரிகள் நன்கு அலசி ஆராய்ந்து பார்த்தாலே குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அதற்கும் வாஸ்துக்கும் நிச்சயம் எந்த தொடர்பும் இல்லை.

    சில வீடுகளில் வாஸ்து குறைபாடு காரணமாக நீண்ட நாள் ஏதாவது ஒரு பிரச்சினை தொடர்கதை போல இருந்து கொண்டே இருக்கும். அத்தகைய வீடுகளில் பரிகாரங்கள் செய்வது நல்லது. குறிப்பிட்ட பரிகாரங்களை செய்தாலே வாஸ்துகள் சரியாகி விடும். வாஸ்துவை சரி செய்வதற்காக பல்லாயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவசியமே கிடையாது.

    சில ஜோதிடர்கள் தங்களது சுய லாபத்துக்காக ஒன்று வீட்டை இடிக்க வைப்பார்கள் அல்லது நிறைய பூஜை செய்ய சொல்வார்கள். இவை யெல்லாம் கண்டிப்பாக அவசியமே இல்லை. மிக மிக சாதாரண எளிய பூஜைகள் மூலம் வாஸ்து குறைபாடுகளை சரி செய்து விட முடியும். வாஸ்துதான் பிரச்சினையாக இருக்கும் என்று நினைப்பவர்கள் தினமும் வீட்டு வாசலில் நிலைப்படிக்கு அருகே தீபம் ஏற்றி வந்தாலே போதும். குடும்பத்தில் மாற்றங்கள் நிகழ்வதை பார்க்க முடியும்.

    பொதுவாக வீடுகளில் காலை-மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது. வாஸ்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வாஸ்து தீபம் ஒன்று இருக்கிறது. அதை தெரிந்து கொண்டு ஏற்றினால் கைமேல் பலன் கிடைக்கும். வாஸ்து தீபங்களை எப்போதும் வீட்டின் வாசலில் வலது பக்கத்தில் ஏற்றுவது நல்லது. முடிந்தால் காலை-மாலை இருவேளையும் ஏற்றலாம்.

    வாஸ்து தீபம் ஏற்றும்போது, "ஓம் வாஸ்து தேவதாய நமக.... ஓம் வாஸ்து புருஷாய நமக..." என்ற வாஸ்து மந்திரத்தை 3 தடவை சொல்ல வேண்டும். இது மிக மிக எளிதான உடனடியாக வாஸ்து குறைபாட்டை விரட்டும் பரிகாரம் ஆகும். அது மட்டுமின்றி வீட்டில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த தீபத்துக்கு உண்டு.

    வாஸ்து தீப பூஜைகளை செய்ய இயலாதவர்கள் வீட்டு வாசலில் உட்புறத்தில் கோலம் போட்டு அதில் அகல் தீபம் ஏற்றலாம். அந்த அகல் தீபம் வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி இருக்கும் வகையில் அமைப்பது நல்லது.

    சிலருக்கு தோஷங்கள் காரணமாக வாஸ்து பிரச்சினை ஏற்படலாம். அத்தகைய நிலை இருப்பது தெரிய வந்தால் வீட்டின் 4 மூலைகளிலும் தலா ஒரு விளக்கு ஏற்றி பைரவர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 3 மாதங்கள் இந்த வழிபாட்டை செய்தால் பிரச்சினைகள் தீரும். இந்த தீபம் ஏற்றும்போது பைரவர் கவசம் அல்லது பைரவருக்கு உரிய போற்றிகளை சொல்லிக் கொண்டே தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் பலன்களை தரும்.

    பூமிகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவானை நினைத்து வாஸ்து நாட்களில் 5 திரி போட்டு 5 அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டால் வாஸ்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இந்த 5 அகல் விளக்கு பூஜை என்பது வாஸ்து பகவானை திருப்தி செய்யும் வழிபாடு ஆகும். வீட்டில் தன்வந்திரி படம் வைத்து பூஜைகள் செய்வதும் நல்ல வாஸ்து பரிகாரம் ஆகும்.

    சிலருக்கு ேஹாமங்கள் வளர்த்து பூஜை செய்தால் வாஸ்து பிரச்சினைகளை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை இருப்பது உண்டு. அப்படிப்பட்டவர்கள் நவ கலசங்கள், நவ தானியங்கள், நவ சமித்துகள், நவ மூலிகைகள் ஆகியவற்றை பயன்படுத்தி ஹோமம் செய்வது நல்லது. இந்த ஹோமம் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை விரட்டி வெற்றிகளை தேடி தரும் ஆற்றல் கொண்டது.

    அடிக்கடி ஹோமம் செய்ய இயலாது என்று நினைத்தால் ஆண்டுக்கு ஒரு தடவை வீட்டில் கணபதி ஹோமம் நடத்துங்கள் போதும். வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்துக்கு துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கு ஏற்றுங்கள். சரியாகி விடும்.

    இத்தகைய பூஜைகள் எதையும் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா? கவலையே வேண்டாம். வீட்டில் குல தெய்வத்திற்கு பூஜைகள் செய்யும் போது ஊதுபத்தி காட்டி மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள் போதும். வாஸ்து பிரச்சினைகளை குல தெய்வம் பார்த்துக் கொள்ளும். முடிந்தால் செவ்வாய், வெள்ளிக்கிழ மைகளில் வீட்டில் சாம்பிராணி புகை போட்டு கந்தசஷ்டி கவசத்தை ஒலிக்க செய்யுங்கள். நல்ல அதிர்வுகள் உண்டாகும்.


    தினமும் அதிகாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், பிரணவ மந்திரம், கந்தசஷ்டி கவசம், சிவ புராணம் மற்றும் காயத்ரி மந்திரம் போன்றவற்றை ஒலிக்க செய்தால் நல்ல அதிர்வுகள் ஏற்பட்டு வீட்டில் எந்த குறைபாடுகள் இருந்தாலும் விரட்டி அடிக்க செய்து விடும்.

    சில பெண்களுக்கு காலையில் சமையல் செய்வதற்கு முன்பு பூஜை அறைக்கு சென்று தீபம் ஏற்றுவது வழக்கத்தில் இருக்கும். அதே போன்று மாலை நேரத்தில் வீட்டில் தண்ணீர் தொட்டிக்கு அருகே விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் அதுவும் புதுமையான பலன்களை தரும். அதாவது இந்த தீப வழிபாடு வீட்டில் யாருக்கு எந்த தோஷம் இருந்தாலும் நிவர்த்தி செய்து விடும்.

    வைணவத்தில் அதிக ஈடுபாடு இருப்பவர்கள் பெருமாளின் அணுகிரகம் பெற சங்கு பயன் படுத்துவார்கள். அத்தகைய சங்கை வீட்டின் நிலைவாசலுக்கு அடுத்து வெளியே புதைத்து வைத்தால் வாஸ்து தோஷங்கள் விலகும். வாஸ்துவை வாசலின் முன்பு புதைக்கும்போது சங்கின் நுனி பகுதி கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பார்த்தவாறு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புக ளில் இருப்பவர்கள் பூஜை அறையில் சங்கு வைத்து வழிபட்டால் இறைவன் அருளை பெற முடியும். அது தோஷங்களை விலக்குவதோடு புது தோஷங்கள் நம் அருகில் வராமலும் பார்த்துக் கொள்ளும்.

    எனவே வீட்டில் வாஸ்து குறைபாடு வராமல் இருக்க புது வீடு கட்டும் போதே கவனமாக இருங்கள். இல்லையெனில் எளிய பரிகாரங்கள் செய்யுங்கள். போதுமானது.

    • நேரம் கிடைக்கும் போது வந்தால் போதும் என்று ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டார்கள்.
    • பொதுவாக கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடித்த படங்கள் என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட்டாக இருக்கும்.

    குறும்புத்தனம்...

    என்னுடன் பிறந்தது என்று தான் சொல்ல வேண்டும். கதாநாயகி ஆன பிறகும் என்னிடம் குறும்புத் தனம் இருக்கத்தான் செய்தது.

    கன்னடத்தில் எனது முதல் படம் 'புட்ட நஞ்சா' ஹீரோ ரவிச்சந்திரன். கன்னடத்தில் அவர் பெரிய ஸ்டார்.

    எனவே அழைப்பு வந்ததும் ஒப்புக் கொள்ள ஆசை தான். ஆனால் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மிகவும் பிசியாக இருந்ததால் கால்ஷுட் கொடுப்பத்தில் சிக்கல் இருந்தது.

    ஆனாலும் அவர்கள் விடவில்லை. நேரம் கிடைக்கும் போது வந்தால் போதும் என்று 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டார்கள். எனவே நானும் ஒத்துக்கொண்டேன்.

    அந்த காலத்தில் சிவாஜி சாரும், ஜெயலலிதாம்மாவும் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' படத்தின் தழுவல்தான் அந்த படம்.

    ஹீரோவாக வரும் ரவிச்சந்திரன் கிராமத்து இளைஞன். நான் பட்டணத்தில் வளர்ந்த பெண். காதல், மோதல் என்று காட்சிகள் விறு விறுப்பாக இருந்தது.

    பொதுவாக கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடித்த படங்கள் என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட்டாக இருக்கும். ஹீரோயின்களை கிளாமராக காட்டுவார். முக்கியத்துவமும் இருக்கும்.

    அதைப்போலவே இந்த படமும் ஹிட்டாச்சு. பாடல்களும் சூப்பர் ஹிட்டாச்சு. கன்னடத்தில் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் கன்னட பட உலகிலும் புகழ் பெற தொடங்கினேன்.

    முதல் நாள் பட பூஜை பெங்களூரில் நடந்தது. பூஜை முடிந்ததும் ஷுட்டிங்கையும் தொடங்கிவிட்டார்கள். பெங்களூர் எனக்கு பிடித்தமான நகரம். பகலில் வெயில் அடிக்கும். ஆனாலும் ஜில்லென்று இருக்கும். நகரை சுற்றி வந்தாலும் தூசு நம்மை சுற்றாது. அப்படி ஒரு அழகான ஊர் பெங்களூர்.

    அங்கு என்னென்ன பொருட்கள் எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால் சாம்பார் வடை சூப்பர் டேஸ்டாக இருக்கும்.

    அது எப்படி கண்டு பிடித்தீர்கள் என்கிறீர்களா?

    அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சார் சிங்கப்பூரில் எந்தெந்த கடைகளில் என்ன உணவுகள் பிரபலம் என்று சொல்லி தந்ததை ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன்.

    அதேபோல் பெங்களூரில் எந்த கடையில் என்ன பிரபலம் என்று ரவிச்சந்திரன் தான் சொல்லி கொடுத்தார். அப்போது தான் சாம்பார் வடையை ருசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பிறகு பெங்களூர் சென்றால் சாம்பார் வடையை மிஸ் பண்ணுவதே கிடையாது.


    அதேபோல் எனது நெருங்கிய தோழி நடிகை சவுந்தர்யாவும் பெங்களூரில் தான் இருக்கிறார். அப்போது தான் அவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொள்ள முடியாததால் மாலையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றேன். எல்லோரும் ஒன்றாக இரவு விருந்தில் கலந்து கொண்டோம்.

    அப்போது தான் உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங்மால் என்று வர்ணிக்கப்பட்ட மால் ஒன்று பெங்களூரில் திறந்திருந்தார்கள்.

    ஒரு நாள் இரவு 8 மணிக்கு அங்கு சென்றேன். ஏழெட்டு புதிய ஆடைகளையும் வாங்கினேன். சிப்பியில் செய்திருந்த அலங்கார பொருட்கள் பிரமாதமாக இருந்தது. அவைகளையும் வாங்கினேன்.

    யாருக்குமே ஷுட்டிங் நடத்த அனுமதிக்காத பங்களா வீடு ஒன்றை எங்களுக்கு தந்திருந்தார்கள். சுற்றிலும் வயல் வெளிகள்.. ஓங்கி வளர்ந்த மரங்கள். கண்ணுக்கு விருந்தளித்த இயற்கை சூழல்.

    அங்கு வைத்து தான் ஷுட்டிங் நடந்தது. நாங்கள் அங்கு தான் தங்கி இருந்தோம். எனக்கு பிறந்தநாள் நடப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அதற்காக நிறைய பலூன்கள் வாங்கி கட்டியிருந்தார்கள். எனக்கு பலூன்களை பார்த்ததும் ஷுட்டிங் முடிந்து விளையாட ஆசை. ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஆசையை அடக்கி கொண்டிருந்தேன்.

    ஆனால் ரவிச்சந்திரன் என்னைவிட பெரிய விளையாட்டு பிள்ளை என்பதை தெரிந்து கொண்டேன்.

    ஷுட்டிங் முடிந்த பிறகு வீட்டில் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அவர் என்ன செய்தார் தெரியுமா?

    சில பலூன்களை அவிழ்த்து எடுத்து வருவார். அதற்குள் தண்ணீரை நிரப்பி வைத்து கொள்வார். சுற்றும் முற்றும் பார்ப்பார். யாராவது தூங்கி வழிந்தால் அவரை அழைத்து வர சொல்லி அவர் அருகே வந்ததும் அவர் முகத்துக்கு அருகில் பலூன் மீது குண்டூசியால் குத்தி விடுவார். அது வெடித்து முகத்தில் தண்ணீரை விசுறும்.

    உடனே என்ன... தூக்கம் போச்சா...? என்று கேட்டபடி சிரிப்பார். உடனே நானும் கை கொட்டி சிறுபிள்ளை போல் சிரிப்பேன்.

    அப்புறமென்ன? அவரைப் போலவே நானும் சேட்டை பண்ணுவேன். ஒரே ஜாலியாக இருக்கும். ஷுட்டிங்கில் இருப்பது போலவே இருக்காது. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது போல் இருக்கும்.

    அந்த படத்தில் தான் முகமெல்லாம் ஹோலி வண்ணம் பூசினார்கள். அதுவரை அந்த அனுபவம் கிடையாது. உடல் முழுவதும் வண்ண பொடியுடன் தான் ஷுட்டிங் முடிந்து வீட்டுக்கு செல்வேன்.

    குளித்து அந்த சாயத்தை அகற்றுவதே பெரும் பாடாக இருக்கும். தற்காலிக நீச்சல் குளம் ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது. பெங்களூர் குளிரில் காலை 6 மணிக்கு அந்த தண்ணீரில் இறங்கி நடிக்க சொன்னால் எப்படி இருக்கும்?

    ஐஸ் கட்டிக்குள் நிற்பது போல் இருக்கும். குளிரில் உடலெல்லாம் நடுங்கும். அதையெல்லாம் தாங்கி கொண்டு நடிப்போம். லைட்மேன், கேமரா மேன் என எல்லோரும் கரையில் நின்றபடி படமாக்கி கொண்டிருப்பார்கள்.

    இன்னும் கொஞ்சம் அப்படி நில்லுங்கள்... இப்படி நில்லுங்கள்.. என்று சொல்லி சொல்லியே படமாக்குவதற்கு நேரமாகும்.

    எங்களுக்கோ... டேய் நீங்களும் உள்ளே இறங்கி பார்த்தால் தெரியும். சீக்கிரம் ஷுட்டிங்கை முடிங்கப்பா.. என்று சொல்ல வேண்டும்போல் இருக்கும்.

    ஷுட்டிங் முடிந்து குளத்தில் இருந்து கரையேறியதும் ரவிச்சந்திரன் வெளியே நிற்கும் படக்குழுவினர் யாரையாவது பிடித்து குளத்தில் தள்ளி விடுவார். அவர்கள் குளிரில் நடுங்குவதை பார்த்து சிரிப்பார்.

    நானும் சிலரை பிடித்து தள்ளி விடுவேன்... அவர்கள்.. மேடம்.. மேடம்... என்றபடி உள்ளே விழுவார்கள். அதை பார்த்ததும் நாங்கள் கைகொட்டி சிரிப்போம்.

    எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறேன். பாருங்கள். அடுத்த வாரம் மேலும் சில தகவல்களுடன் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

    • “யோவ்! ஜொள்ளு விடாத! நான் அமெரிக்கப்புயல் கத்ரினாவைச்சொல்றேன்!”
    • “என்ன வாட்சன்! இவனைப்போய் செலக்ட் பண்ணியிருக்கே! இவனோட முகமே சரி இல்லியே, எப்பப்பாரு கடுகடுன்னு..?”

    "ரெண்டு நாளா தல வலிங்க!"

    "சரி வேறென்ன ..?"

    "சாப்பாடே வேண்டியதில்லீங்க!"

    "ம்..?"

    "எப்பப்பாரு கோவம் வருதுங்க!"

    "வீட்ல சாமானெல்லாம் போட்டு ஒடைக்கணும்னு தோணுதா?"

    " கரெக்டுங்க! இட்சிணி மாதிரி சொல்றீங்க!"

    "ஒண்ணும் பிராப்ளம் இல்ல. நீங்க உங்க தங்கைய ஊருக்கு அனுப்பிட்டு, உங்க புருஷன ஆஃபீஸ் லீவ கான்சல் பண்ணச்சொல்லுங்க! சரியாயிடும்!"

    ஒரு டாக்டர் இப்படி சொன்னா அவர் மேல கம்ப்ளெயிளைண்ட் பண்ணத்தோணுமா இல்லியா?

    ஆனால் இப்படிச்சொல்வது ஒரு கம்ப்யுட்டராக இருந்தால்…?

    "என்னது..? கம்ப்யூட்டரா..டாக்டருக்குப்பதிலாகவா..?"

    " பதிலாக இல்லை, டாக்டருக்குத்துணையாக!"

    ஆம், செயற்கை புத்திசாலித்தனம் (Artificial Intelligence) என்னும் இயல், படு வேகமாக முன்னேறி, இன்று மனிதர்கள் போலவே யோசித்துச்செயல்படும் திறமைகளைக்கொண்ட கம்ப்யூட்டரை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஐ பி எம் மின் "வாட்ஸன்" என்று பெயர் சூட்டப்பட்ட இந்த புத்திசாலிக்கம்ப்யூட்டர்கள் பல துறைகளில் நுழைய ஆரம்பித்துவிட்டன.

    இந்த செயற்கை புத்திசாலித்தனம் முதன் முதலில் சாதாரண, யோசனை இன்றிச்செய்யும் வேலைகளுக்காக உருவாக்கப்பட்டன. இந்த சாதாரண, தினப்படி அல்லது ரொட்டீன் வேலைகளை ரோபோக்களை வைத்துச்செய்வது பற்றி அறிந்துள்ளோம். ஆனால் யோசித்து அறிவாற்றல் கலந்த வேலைகளை (Cognitive Intelligence) செய்ய மனிதர்களால் மட்டுமே முடியும் என்னும் சித்தாந்தத்தை ஓரளவு இந்த வாட்சன் உடைத்துவிட்டது. ஆம், வாட்சனால் மனிதர்களைப்போல சிந்தித்து செயல்படவும் அனுபவங்களின் மூலம் கற்றுக்கொள்ளவும் முடியுமாம்!

    சமீபத்தில் ஜப்பானில் ஒரு பெண்ணுக்கு ரத்தப்புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு கீமோதெரபி வைத்தியம் செய்தார்கள். ஆனால் அவர் எப்படி குணமாக வேண்டுமோ அப்படி குணமாகிக்கொண்டு வரவில்லை. டாக்டர்கள் குழம்பித்தான் போனார்கள். வாட்சனிடம் தஞ்சம் அடைய, நம் வாட்சன் அந்தப்பெண்ணின் லட்சக்கணக்கான ஜீன் தகவல்களை அலசி ஆராய்ந்து அந்தப்பெண்ணுக்கு மரபணு சடுதி, அதாவது Genetic mutation ஏற்படுவதைக்கண்டுபிடித்தது. கிட்டத்தட்ட ஆயிரம் மரபணுக்களில் இந்த சடுதி ஏற்படுவதை அறிந்து, அவற்றில் பல இந்த புற்று நோய்க்கு சம்மந்தமில்லை என்பதையும் பத்தே நிமிடங்களில் வாட்சன் கண்டுபிடித்து விட்டது. இதைக்கண்டு பிடிக்க டாக்டர்களுக்கு இரண்டு வாரம் ஆகியிருக்கும்! இந்தக்கண்டுபிடிப்பை வைத்து மருந்து மாற்றப்பட்டபோது அந்தப்பெண் சீக்கிரம் குணமடைந்தாள்.

    வாட்சன் போன்ற கண்டு பிடிப்பு மிகப்புரட்சிகரமானதாகும். ஏனென்றால், சாதாரண கம்ப்யூட்டரால் சீராக கட்டமைக்கப்பட்ட (Structured) தகவல்களை மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஆனால் வாட்ஸனால் கட்டமைக்கப்படாத (Unstructured) தகவல்களையும் புரிந்துகொண்டு செயலாற்ற முடியும். வாட்சன் ஆன்காலஜி அட்வைசர் (Watson Oncology Advisor) என்னும் கம்ப்யூட்டர் கான்சர் பற்றிய ஏராளமான கட்டமைப்பற்ற தகவல்களை ஆராய்ந்து முடிவுகள் சொல்லக்கூடிய சக்தி படைத்ததாம்.


    கல்வித்துறையில் வாட்சன் சாதிக்கப்போகும் புரட்சி இன்னும் பிரமிக்க வைக்கிறது.

    "டீச்சர்! என்னோட மார்க் தப்பு!"

    "எப்படிடா சொல்றே?"

    "நான் அப்படியே ரமேஷ் பாத்து வரிக்கு வரி கப்பி அடிச்சேன்! அவனுக்கு எண்பது! எனக்கு பெயில் மார்க்கு! எப்படி டீச்சர்!"

    "அது அப்படித்தான்! நீ உன் லெவலுக்கு எழுதணும்! ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி லெவல்ல பரிட்சை, தெரியுமா!"

    ஆம், இனி பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் அவரவரின் தனித்தன்மைக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் வகுத்து சொல்லித்தர முடியும்! ஆக ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரின் திறமை விகிதங்களுக்கு ஏற்றபடி பாடங்களின் ஆழமும் விஸ்தாரமும் வடிவமைக்கப்பட்டு சொல்லித்தரலாம். இதனால் மாணவர்களில் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு, பேசுதல், திட்டுதல் போன்ற வகுப்பறைக்கலவரங்களை ஒருமிக்க தடுக்க முடியும். வாட்சன் என்லைட் (Watson Enlight) இப்போது இங்கிலாந்தில் பல கல்வி நிலையங்களில் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.

    "டீச்சர்! என் கொஸ்டின் பேப்பர் ரொம்ப கஷ்டமா இருந்தது!"

    "என்னைக்கேக்காதப்பா! ஹெட்மாஸ்டர் ரூமுல வாட்சன் இருக்கு பாரு, அதக்கேளு!!"

    அமெரிக்காவில் வேலைக்கு ஆள் எடுப்பதைக்கூட வாட்சன் செய்து விடுகிறதாம்!

    "என்ன வாட்சன்! இவனைப்போய் செலக்ட் பண்ணியிருக்கே! இவனோட முகமே சரி இல்லியே, எப்பப்பாரு கடுகடுன்னு..?"

    "அவனோட ஐக்யூ உன்னோடத விட ஜாஸ்தி! அவனுக்கு இருக்கும் அனுபவங்களப்பார்த்தா நீதான் அவனுக்கு அசிஸ்டண்டா இருக்கணும்! அடுத்த வருஷம் அதையும் ரெகமண்ட் பண்ணிடறேன்!"

    "அய்யய்யோ வாட்சன்! அப்படி எல்லாம் பண்ணிடாதப்பா! உனக்குன்னு நான் இனிமே தனியா ஸ்பெஷல் கரண்ட் வரவெச்சு தரேன்! நா புள்ள குட்டிக்காரன், என்னை போட்டுக்குடுத்துடாத! என் கண்ணில்லியா!"

    ஆனால் இந்த வேலை செலக்ஷன் விஷயத்தில் வாட்சன் இப்பொதைக்கு ஓரளவுக்குதான் செய்கிறது. முழு ரெக்ரூட்மெண்டுமே வாட்சனிடம் விட முடியாது.

    ஐ.பி.எம்.மில் இந்தியா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஸ்ரீராம் ராகவன் வாட்சனுக்கு இருக்கும் பிரகாசமான எதிர்காலம் பற்றிச்சொல்லுகிறார். "கூடவே அதில் இருக்கும் கஷ்டங்களும் மிகச்சிக்கலானவை. சூழலுக்கேற்றார்போல் புரிந்துகொள்ளும் அறிவை கம்ப்யூட்டருக்குப்புகட்டுவது மிகப்பெரிய சவால்" என்கிறார் ஸ்ரீராம் ராகவன்

    "கத்ரினாவினால் அமெரிக்காவில் அதிக சேதம்!"

    "என்னப்பா இப்படி சொல்றே! கத்ரினாவா? ஷீலா கி ஜவானி……அவங்க அமெரிக்காவுல போய் என்ன பண்ணினாங்க?"

    உடனே கேள்வி கேட்ட ஆசாமியை வாட்சன் இப்படி சவட்டக்கூடும்.

    "யோவ்! ஜொள்ளு விடாத! நான் அமெரிக்கப்புயல் கத்ரினாவைச்சொல்றேன்!"

    இனிமேல் வர்தா என்றால் "டாய்லெட் அந்தப்பக்கம்" என்றோ, மிக்ஜாம் என்றால் "அது கிசானா இல்லை வேறு ஏதாவது ஜாமா என்று கேட்டு அசடு வழியாதீர்கள்.

    வாட்சனின் பதில் மரங்களைப்போல உங்களையும் சென்னையின் புயல் சாய்த்துவிடக்கூடும்!

    • ஆண்மையும் பெண்மையுமாக இயங்கும் இருவேறு மனித அமைப்பை இயற்கையிலும் நாம் காணலாம்.
    • மனத்தின் நிறை குறைகளைப் பொறுத்து, குடும்பம், நண்பர்கள், வேலைபார்க்கும் இடம் போன்றவை உருவாகின்றன.

    உலக வாழ்வியலில் உண்மையின் தரிசனம் காணத் துடிக்கும் வாசகர்களே!

    வணக்கம்.

    செல்லிடப்பேசியில் நவீன சமூக ஊடகங்களைக் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கத் தொடங்கில் இருந்தால் ஓர் உண்மை உங்களுக்கு நிச்சயம் விளங்கி இருக்கும். முகநூல், மற்றும் யூடியூப் வரிசைகளில் நாம் எந்த மாதிரி வீடியோக்களையும் செய்திகளையும் தொடர்ந்து பார்க்கத் தொடங்குகிறோமோ, அந்த ஊடகங்களும் அதேமாதிரி வீடியோக்களையும் செய்திகளையும் தொடர்ந்து முன்னுரிமை கொடுத்துக் காட்டிக்கொண்டே இருக்கும்.

    வீடுகள் மனைகள் வாங்குவது குறித்த செய்திகளைத் தொடர்ந்து பார்த்தால், அடுத்து எப்போது செல்பேசி வலையொளியைத் திறந்தாலும் வீட்டுமனை விற்பனை வீடியோக்களும் செய்திகளுமே முந்தி முந்தி வந்து நிற்கும். ஒரு குறிப்பிட்ட பேச்சாளரின் சொற்பொழிவுகளில் ஈடுபாடு காட்டினால், அவர் தொடர்பான ஒளிக்காட்சிகளே எப்போதும் வந்து காட்சியை ஆக்கிரமிக்கும்.

    உடையவரின் ரசனைகளுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தொழில் நுட்பத்தைச் செல்பேசிகள் பெற்றிருக்கின்றன.

    இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. மனித மூளையால் திட்டமிடப்பட்ட செயற்கை அறிவு இத்தகு நுட்பங்களை உருவாக்குகின்றது. ஏனெனில் இன்று நாம் காணும் இயற்கை உலகமும், வாழும் மனிதர்களின் பிரதிபலிப்பாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்மையும் பெண்மையுமாக இயங்கும் இருவேறு மனித அமைப்பை இயற்கையிலும் நாம் காணலாம்.

    காணும் பொருள்களிலெல்லாம் பக்தன் கடவுளைக் காண்பதைப் போல, மனிதன் தன்னையும் காண்பதுதான் உண்மை வாழ்வியல்.

    ஒரு கிராமத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில், ஒரு தாத்தாவும் அவரது பத்து வயதுப் பேரனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் பெரியவரைப் பார்த்து வணக்கம் சொன்னார். பெரியவர், ஞயாருங்க? ஊருக்குப் புதியவர் போல இருக்கிறீர்கள்? எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார்.

    தன்னுடைய ஊரின் பெயரைச் சொன்ன புதியவர், ''ஐயா! நான் இந்த ஊருக்குப் புதியவன்தான். ஒரு வேலையாக இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். தாங்கள் இந்த ஊர் தானா?" என்று கேட்டார்.

    பெரியவர், "நாங்கள் இந்த ஊர் தான். இவன் என்னுடைய பேரன்" என்று பேரனை அறிமுகப்படுத்தி வைத்தார்.''ஐயா, இந்த ஊரைப்பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை!. இந்த ஊர் எப்படி? ஊர்மக்கள் எப்படி?" என்று விசாரித்தார் புதியவர்.

    பெரியவர்,''எங்கள் ஊரைப்பற்றி அப்புறம் சொல்கிறேன்! முதலில், உங்கள் ஊர் எப்படி? அங்குள்ள மக்கள் எப்படி?" என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

    "ஆஹா! அற்புதமாய்ச் சொல்கிறேன்!. எங்கள் ஊர் வளமான ஊர். மாதம் மும்மாரி மழை! முப்போக விளைச்சல்! எல்லாம் அமோகம்!.

    எங்கள் ஊரிலுள்ள மக்களோ தங்கமோ தங்கம் சொக்கத் தங்கம்! அனைவரும் அவ்வளவு நல்லவர்கள்!" ஊர்ப் பெருமையைப் புகழ்ந்து தள்ளிவிட்டார் புதியவர்.

    ''அருமையாகச் சொன்னீர்கள்!. நீங்கள் சொன்னதற்கு இம்மியளவும் குறைவில்லாதது எங்கள் ஊர். உங்கள் ஊரைப் போலவே வளம் நிறைந்த ஊர்; மக்களும் உத்தம புத்திரர்கள்!" என்று தன் ஊரைப்பற்றிச் சொன்னார் பெரியவர்.

    "மகிழ்ச்சி ஐயா! நான் ஊருக்குள் சென்று வந்த வேலையைப் பார்த்துத் திரும்புகிறேன்" என்று ஊருக்குள் சென்றார் புதியவர்.

    அவர் சென்றதும், பேரனுடன் பேச்சைத் தொடர்ந்தார் தாத்தா. சிறிது நேரத்தில் மற்றுமொரு புதியவர் அங்கு வந்து பெரியவருக்கு வணக்கம் வைத்தார்.

    பெரியவரும் வழக்கம்போல, ஊருக்குப் புதிதா? எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்? என்ன வேலை? என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வந்த புதியவரும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டு, "இந்த ஊர் எப்படி? இந்த ஊர் மக்கள் எப்படி?" என்று முந்தைய புதியவர் கேட்டது போலவே கேட்டார். பெரியவரும் வழக்கம் போல உங்கள் ஊரும் மக்களும் எப்படி? என்கிற கேள்வியை இரண்டாம் புதியவரிடம் வைத்தார்.


    "ஊராங்க அது? ஊர்ல மழை பேஞ்சாலும் விவசாயம் கிடையாது. காரணம் ஊர்ல இருக்கிறவன்லாம் காலிப் பசங்க சார். பொய், பித்தலாட்டம், வஞ்சகம், சூது, யாருமே நல்லாருக்கக் கூடாதுங்கிற கெட்ட எண்ணம் அநியாயத்தின் மொத்த உருவமே எங்க ஊர் மக்கள்தான்!" மூச்சுவிடாமல் பேசி முடித்தவர், ''இப்பச் சொல்லுங்க உங்க ஊர் எப்படி?" என்று கேட்டார்.

    ''ரொம்பச் சரியாச் சொன்னீங்க! நீங்க சொன்னதுக்கு இம்மியளவும் குறைவில்லாதது இந்த ஊர். ஒரு வளமும் கிடையாது; ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் கடைஞ்செடுத்த அயோக்கியனுங்க! போய் ஊருக்குள்ள பாருங்க! நீங்களே தெரிஞ்சுக்குவீங்க'' என்றார் பெரியவர்.

    அவ்வளவு தான். அந்தப் புதியவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தவுடன் தாத்தாவிடம் பளிச்சென்று ஒரு கேள்வியைக் கேட்டான் பேரன்; ''அது எப்படி தாத்தா ஒரே ஊர் ஒருத்தருக்கு மிக நல்ல ஊராகவும் இன்னொருத்தருக்கு மிக மோசமான ஊராகவும் இருக்கும்?.நம்ம ஊரைப் பத்தியே இப்படி ரெண்டுவிதமாச் சொல்லலாமா?"

    "அழகான கேள்விடா பேராண்டி. நல்லவங்க கண்ணுக்கு இந்த உலகம் நல்லதாவே தெரியும்! கெட்டவங்க கண்ணுக்கு உலகம் கெட்டதாவே தெரியும். உலகம் அப்படியே தான் இருக்குது. அது சிலருக்கு நல்லதாவும், சிலருக்குக் கெட்டதாவும் தெரியக் காரணம் பார்க்கிறவங்க மனோநிலையைப் பொறுத்ததேயொழிய வேறு ஒன்றுமில்லை. முதல்ல போனவன் நல்லவன்: அவனுக்கு நம்ம ஊர் நல்ல ஊராவே தெரியும்! இரண்டாவதாப் போனவன் கெட்டவன்; அவனுக்கு நம்ம ஊர் கெட்டதாத்தான் தெரியப் போகுது!. உலகம் என்பது நமது பிதிபலிப்பே தவிர வேறு ஒன்றுமில்லை" தாத்தாவின் பேச்சை கவனமாகக் கேட்டான் பேரன்.

    ஆம்! உலகம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது ஆழ்மனத்தின் பிரதிபலிப்பாகவே அமைகிறது. மனத்தின் நிறை குறைகளைப் பொறுத்து, குடும்பம், நண்பர்கள், வேலைபார்க்கும் இடம் போன்றவை உருவாகின்றன.

    "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே!" என்று குறிப்பிடும் அவ்வையார், மனிதர்கள் எங்கெல்லாம் நல்லவர்களாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் நாட்டுப் பகுதிகளும் நல்லனவாகவே அமையும் என்று தீர்க்கமாகக் கூறுகிறார்.

    ஒரு சாலையில் ஒரு மனிதர் நடந்து சென்றுகொண்டிருக்கிறார். வழிநெடுக இருபுறமும் கொடிக்கம்பங்கள் நடப்பட்டு வண்ண வண்ணக் கொடிகள் பறக்க விடப்பட்டிருக்கின்றன. அந்த மனிதர் மகிழ்ச்சியான மனநிலையில் நடந்து சென்று கொண்டிருந்தால், அந்த வண்ணக் கொடிகளின் அசைவு அவருக்கு, வருக! வருக! என வரவேற்புக் கூறுவது போலத் தோன்றும். மாறாக அவர் பெருஞ்சோகத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தால், அக்கொடிகள் வராதே! வராதே! என்று மறித்து அசைவதுபோலத் தோன்றும். மனிதர் ஒருவர்தான்!

    கொடியசைவும் ஒன்றுதான்! ஆனால் ஆழ்மனச் சிந்தைக்கு ஏற்ப அர்த்தப்பாடு மாறி விடுகிறது.

    எப்படி முயன்றாலும், முயற்சி தோல்வியிலேயே முடிந்து விடுகிறதே! என வருத்தப்படுபவரா நீங்கள்? முதலில் உங்களின் சூழலை மாற்றுவதற்குமுன் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஈரமும் இளக்கமும் உடைய மண்ணில் விழும் விதையே செழித்து வளரும்.

    மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உடைய மனத்தில் எழும் முயற்சிகளே வெற்றியை அடையும்.

    யாரைப் பார்த்தாலும் முதல் புன்னகை நம்முடையதாக இருக்கட்டும்!.எதிரில் வருபவர் எதிரியாக இருந்தாலும் அவரையும் புன்னகைக்க வைத்து அவரையும் நம் பக்கம் மாற்றிவிடும் நமது புன்னகை. நமது வாழ்க்கையின் நோக்கத்தில் நன்மையும் செயல் ஊக்கமும் கலந்திருந்தால் மகிழ்ச்சி தாமாகவே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும்.அந்த மகிழ்ச்சி, காணும் மனிதர்கள் மற்றும் செயல்களில் எல்லாம் பற்றிக் கொள்ளும்!.

    நகரத்தில் இருக்கும் ஒரு முதியோர் காப்பகத்திற்கு ஒரு நாள் இரண்டாயிரம் ரூபாய் மணி ஆர்டர் வந்தது. அடுத்து ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் இரண்டாயிரம் வீதம் பணம் வரத் தொடங்கியது; ஆறு மாதங்கள் கழிந்தவுடன், காப்பக நிர்வாகி, மணி ஆர்டரில் இருந்த முகவரியை வைத்து அனுப்பியவரைத் தேடிச் சென்றார் நகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு கிராமத்தில், பணம் அனுப்பிய நபர் ஒரு சிறிய இட்லிக்கடை நடத்தி வந்தார்.

    காணச் சென்றது காலை நேரமாகையால் வியாபாரம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. காப்பக நிர்வாகி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    அவரைத் தனியாக அழைத்துச் சென்ற இட்லிக் கடைக்காரர், " ஐயா! என் பெயர் சங்குவேல். எனக்கு 73 வயதாகிறது.அதோ அங்கே இட்லி அவித்துக் கொண்டிருக்கிறாளே அவள் என் மனைவி. அவளுக்கு வயது 62. நாங்கள் இட்லிக்கடை வைத்து சொற்ப லாபத்தில் சேவை மனப்பான்மையோடு வியாபாரம் நடத்தி வருகிறோம். காலம் இப்படியே போகாது.எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என் மனைவி தனியே கஷ்டப்பட நேரிடும்.

    உங்கள் முதியோர் இல்லம் பற்றிக் கேள்விப்பட்டேன். மாதம் இரண்டாயிரம் என் மனைவிக்குத் தெரியாமல் அனுப்புகிறேன்.ஆயிரத்தை என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்; மீதம் ஆயிரத்தை நன்கொடையாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஏதாவதொரு மாதத்தில் பணம் வரவில்லையென்றால் நான் இறந்து விட்டேன் என்று அர்த்தம். அப்போது இங்கே வந்து என் மனைவியை உங்கள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்" என்று கண்கலங்கச் சொன்னார்.

    காலம் நகர்ந்தது.இரண்டாண்டுகள் கழித்து ஒரு மாதத்தில் மணிஆர்டர் வரவில்லை. காப்பக நிர்வாகி ஒருநாள் காலை நேரத்தில் அந்த கிராமத்திற்குச் சென்றுவிட்டார். அந்த இட்லிக்கடை அதே பரபரப்போடு நடந்து கொண்டிருந்தது. முதியவரைத் தேடினார் காப்பக நிர்வாகி. காணவில்லை; கடைக்காரரின் மனைவி இவரைப் பார்த்துவிட்டார்.

    "ஐயா என்கணவர் இருபது நாள்களுக்கு முன் இறந்துவிட்டார். உங்களைப் பற்றியும் காப்பகம் பற்றியும் ஏற்கனவே என்னிடம் சொல்லி இருக்கிறார். நானும் அங்கு வந்து விடலாம் என்றுதான் முடிவெடுத்தேன். ஆனால் ஊர்க்காரர்கள் பாசம் என்னைத் தடுத்துவிட்டது.

    'ஆத்தா இங்கேயே இருந்து இட்லிக்கடை நடத்து ஆத்தா! உன்னைய நாங்க பார்த்துகிறோம்'னு சொல்லி மறிச்சுட்டாங்க. என் காலம் வரைக்கும் இங்கேயே இருந்து இவங்களுக்கு சேவை செய்யுறதுன்னு முடிவெடுத்துட்டேன். என் வீட்டுக்காரர் அனுப்பின மாதிரியே அடுத்த மாசத்திலர்ந்து உங்களுக்குப் பணம் அனுப்பி வைக்கிறேன்" என்றார். நாம் நல்ல மனத்தோடு சமூகத்திற்குச் சேவை செய்தால், அதன் பிரதிபலிப்பாய் சமூகமும் நமக்குச் சேவைசெய்யக் காத்திருக்கிறது'

    தொடர்புக்கு 9443190098

    • இயற்கைச் சூழலுக்குக் கீழ்ப்படிந்து வாழக் கற்றுக் கொள்வதில் தான் மனித இனம் வெற்றியடைந்ததாகப் போற்றப்படுகிறது.
    • சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப மக்கள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகளை அவ்வப்போது பெரியவர்கள் தீர்மானித்துச் சட்டம் ஆக்குகின்றனர்.

    கீழ்ப்படிதல் என்னும் பண்புக்குணம் நிறைந்த அன்பின் வாசகர்களே!

    வணக்கம்.

    குடும்பத்தில், வளரும் பிள்ளைகளிடத்திலும், கல்விக்கூடங்களில், பயிலும் மாணவர்களிடத்திலும், அலுவலகங்களில், பணிபுரியும் பணியாளர்களிடத்திலும் நாம் அதிகம் எதிர்பார்க்கக் கூடிய அருங்குணம் 'கீழ்ப்படிதல்' ஆகும். நாட்டில் ஆட்சியாளர்களால் வகுக்கப்பட்டுள்ள சட்ட நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டுக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது ஒவ்வொரு சமூக மனிதனின் கடமையுமாகும்.

    கீழ்ப்படிதல் என்பதே மரபைப் பேணுகிற, மரபைக் கடைப்பிடிக்கிற, மரபுவழி நடக்கின்ற நேர்மையான வழியாகும். "மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்!" என்கிற தொல்காப்பிய நூற்பா, மனிதன் மரபைப் பின்பற்றி வாழவில்லையென்றால், வாழ்க்கைமுறையே கந்தர கோலம் ஆகிப்போகும் என எச்சரிக்கிறது; மரபைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

    காட்டுமிராண்டி வாழ்வில் இருந்து மனிதன் படிப்படியாக மீளத்தொடங்கி, நாகரிக வாழ்வியலுக்குள் புகுந்து சிறப்படைந்ததற்குக் கீழ்ப்படிதலே முக்கியக் காரணம். இயற்கைக்குக் கட்டுப்பட்டு உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. உலகச் சுழற்சிக்கேற்பக் காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. பருவநிலைக்கு ஏற்றவாறு மனித வாழ்க்கைச் சூழ்நிலைகள் மாற்றம் பெறுகின்றன.

    இரவு, பகல், மழை, வெய்யில், காற்று, புயல், மேடு, பள்ளம், மலை, கடல், வயல், பாலைவனம், ஆறு-வெள்ளம் என நடைமுறை வாழ்வியலில் தாம் காணும் முரண்பட்ட தன்மைகளுக்கு ஏற்ப, இயற்கைச் சூழலுக்குக் கீழ்ப்படிந்து வாழக் கற்றுக் கொள்வதில் தான் மனித இனம் வெற்றியடைந்ததாகப் போற்றப்படுகிறது.

    காலை எழுவதில் தொடங்கி இரவு துயில்வது வரை, நேரத்திற்குக் கீழ்ப்படியக் கற்றுக் கொள்பவர்களே உழைப்பில் சிறந்த வெற்றியாளர்கள். சாலையில் வாகனம் ஓட்டிச் செல்லும்போது, போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிந்து செல்பவர்களால் மட்டுமே சரியான இலக்கைச் சரியான நேரத்தில் சென்று அடைய முடியும். அலுவலகத்திலும் அவ்வப்போது மேலதிகாரிகளும் முதலாளிகளும் விதிக்கும் விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் மட்டுமே உற்பத்தியும் பணியும் எதிர்பார்த்த சிறந்த நிலையை எட்டும்.

    கீழ்ப்படிதல் என்பது ஒருவகை ஒழுக்கம். ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு செயலின் வெற்றிக்கு நிர்வாகம் விதிக்கிற விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். ஆனாலும் அதனைக் கடைப்பிடிப்பதில் ஓர் இலகுத் தன்மை இருக்க வேண்டும்.

    ஒரு தனியார் தொழிற்சாலை. உள்ளே வாசலைத் தாண்டிக் கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் ஓர் இளைஞர் நின்று தம் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது தொழிற்சாலைக்குள் காரில் நுழைந்த ஆலையின் முதலாளி, இளைஞர் தம் அடித்துக் கொண்டிருப்பதைக் காரின் கண்ணாடிக் கதவை இறக்கிப் பார்த்தார். இளைஞர் இவரைக் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை. கடும்கோபத்தோடு தொழிற்சாலையின் தன் அறைக்குள் நுழைந்து, உள் தொலைபேசி மூலமாக மேனேஜரை அழைத்தார்.


    "கேட்டைத் தாண்டி உள்ளே வரும் வழியில் உள்ள வேப்ப மரத்தடியில் ஒருவன் தம் அடித்துக் கொண்டிருக்கிறான்.

    தொழிற்சாலை வளாகத்திற்குள் புகைபிடிக்கக் கூடாது என்று எத்தனைமுறை சொல்வது?.நம் தொழிற்சாலையில் விதியும் இருக்கிறது!. நீங்கள் நேராகச் சென்று, அவனிடம் எந்த அறிவுரையும் கூறாமல், அவனது பேரை மட்டும் கேட்டு, உடனடியாக அவனது கணக்கை முடித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு என்னை வந்து பாருங்கள்!" என்றார்.

    சரி எனச் சொல்லிவிட்டு வெளியே சென்ற மேனேஜர் அடுத்த பதினைந்து நிமிட நேரத்தில், முதலாளி அறைக்குள் வந்து, "நீங்கள் சொன்னதைச் செய்துவிட்டேன் முதலாளி!" என்று பணிவாகச் சொன்னார். "ரொம்பச் சரி!. கீழ்ப்படிதல் இல்லையென்றால் இதுதான் நடக்கும் என்று மற்ற தொழிலாளர்களுக்கு இது படிப்பினையாக இருக்க வேண்டும்!" என்றார் முதலாளி.

    ஆரம்பத்தில் நாம் பார்த்த அந்த மரத்தடி இளைஞர், இப்போது கேட்டில் இருந்த செக்யூரிட்டியிடம் பேசிக்கொண்டிருந்தார், " என்னங்க தொழிற்சாலை இது?; நான் என்னோட நண்பர் இங்க வேலை பார்க்கிறவரைப் பார்த்திட்டுப் போகலாம்னு வந்து ஒரு ஓரமா நின்னு தம் அடிச்சுட்டு இருந்தேன்.

    அப்ப, யாரோ ஒருத்தர் வந்து என்னோட பேரு என்ன?ன்னு கேட்டார். கூட வா!ன்னு கூட்டிட்டுப் போயி! ஏதோ ஒரு பெரிய நோட்டுல கணக்குப் போட்டு, அதில ஒரு கையெழுத்தையும் வாங்கிட்டுக், கையில் ஒரு கவரையும் குடுத்து அனுப்பிச்சு விட்டுட்டாரு. வெளியில் வந்து பார்த்தா கவர்ல 52 ஆயிரம் ரூபாய் பணம் இருக்குது!. எனக்கு ஒன்னும் புரியலிங்களே?" என்றார். செக்யூரிட்டியோ அவரை விடப் புரியாமல் குழம்பிப்போய் நின்றார்.

    இப்போது உங்களுக்குக் கொஞ்சம் புரிந்திருக்கும். தொழிற்சாலைக்குள் வந்து விதிமீறல் செய்திருப்பது வெளிஆள் என்பது தெரியாமல் முதலாளிக்குக் கோபம் வந்திருக்கிறது. ஆனாலும் ஆலை மேலாளரின் கண்மண்தெரியாத கீழ்ப்படிதல் தன்மை, இளைஞர் ஆலைத் தொழிலாளிதானா? என்பதைப் பரிசீலிக்காமலேயே, அந்தப்பெயரில் உள்ள யாரோ ஒருவரின் கணக்கை முடிக்க வைத்திருக்கிறது. பணத்தைப் பெற்றுக்கொண்டவர் காரணம் தெரியாமல் விழிப்பதற்கு இதுதான் காரணம்.

    கீழ்ப்படிதல் என்றால், விதி என்று இருந்தால் எந்தக்கேள்வியும் கேட்காமல் அதிகாரத்திற்குக் கட்டுப்படுவதுதான். ஆனால் அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்த முடியாமல் போகும்போது ஏற்படும் இயலாமை, சர்வாதிகார மனப்பான்மையை உருவாக்கி விடுகிறது. அதனால்தான் அந்த ஆலை முதலாளிக்குத் தொடர்பில்லாத நபர் மீது கோபம் வந்துவிட்டது. ஆனாலும், பொறுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டிய மேலாளர், இங்கு அவசரகதியான கீழ்ப்படிதலோடு நடவடிக்கை எடுத்ததற்கு முதலாளியின் கோபம் காரணமாகிவிட்டது.

    வீட்டிலோ, வெளியிலோ விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டியது அனைவருக்குமே பொருந்தும். இதில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விதிவிலக்கு என்பது கிடையவே கிடையாது. கீழ்ப்படிதலே அனைத்தையும் சுமூகமாக்கிவிடும் தாரக மந்திரம்.

    சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப மக்கள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகளை அவ்வப்போது பெரியவர்கள் தீர்மானித்துச் சட்டம் ஆக்குகின்றனர். இச்சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையுமாகும். அப்போதுதான் குடியாட்சித் தத்துவம் சிறப்பாகக் கோலோச்ச முடியும்.

    அலுவலகங்களில், ஒவ்வொருவருக்கும் அவரவரின் பணியளவைப் பொறுத்து அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பணிபுரியும் தருணங்களில் தத்தமது கடமைத் தகுதிக்கு ஏற்றவாறு விதிகளுக்குக் கட்டுப்பட்டுக் கீழ்ப்படிதலோடு நடந்துகொள்வதே பணியாளருக்கு உரிய நடத்தை விதிகளாகும்.

    நாம் ஓட்டும் வாகனங்களில், கியர், கிளட்ச், ஆக்சிலேட்டர், பிரேக், ஸ்டீயரிங் என ஐந்து வகையான அமைப்புகள் இருக்கின்றன. வண்டியை முன்னே நகர்த்தி ஓட்டுவதற்கும், பின்னே நகர்த்திச் செலுத்துவதற்கும் இந்த ஐந்தையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விதிமுறை இருக்கிறது. கீழ்ப்படிதல் உணர்வோடு, கைகளையும் கால்களையும் கொண்டு இந்த ஐந்தையும் அவ்வவற்றிற்குரிய விதிமுறைகளோடு பயன்படுத்தினால், வாகனத்தை விரும்பிய இடத்திற்கு, விரும்பிய வேகத்தில், விபத்துகள் ஏதுமின்றி கொண்டு செலுத்தலாம். இல்லையென்றால் விளைவுகள் எதிர்மறையானவையாகவே அமையும்.

    சாலைகள் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லுகின்ற சந்திப்புகளில், சிவப்பு, மஞ்சள், பச்சை எனும் குறியீடுகள் மாற்றி மாற்றி ஒளிர்கின்றன. இவற்றின் தன்மைகளுக்கேற்ப நாம் சாலைகளைக் கடந்தால் விபத்துகள் ஏற்படாது; போக்குவரத்து நெருக்கடிகளும் உண்டாகாது. எல்லாவற்றிற்கும் அடிப்படைத் தேவை கீழ்ப்படிதல்.

    வீட்டில் கணவன் மனைவி இருவரில் யார் பெரியவர்? என்கிற ஆணவம் தலைதூக்கத் தொடங்கினால் கீழ்ப்படிதல் தொலைந்துபோகும்; இல்லற நெறிமுறைகளும் காணாமல் போகும். பெற்றோர்கள் கூறுவதைப் பிள்ளைகள் கேட்க வேண்டும்; பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் முக்கியமான தருணங்களில் பிள்ளைகளின் ஆலோசனைகளைப் பெற்றோர்களும் கேட்க வேண்டும். இங்கே கீழ்ப்படிதல் என்பது, அனுபவத்திற்கும் அறிவுக்கும் ஏற்ப நடந்துகொள்வது. அதிகார மமதையோடு நடந்துகொள்ள எண்ணினால் தவறுகளே தாராளமாகிவிடும்.

    வெளிநாட்டில், ஒரு வீட்டில்,சாப்பாட்டு மேசையில் இரவு உணவு பரப்பப் பட்டிருந்தது. வீட்டில் இருந்த தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சிறுவர்களான மகன், மகள் ஆகியோர் ஆளுக்கொரு தட்டோடு மேசை அருகில் வந்தனர். உணவுக்கு முன் சூப் சாப்பிடுவதற்காக ஆளுக்கொரு கப்பை எடுத்து சூப்பை ஊற்றி நிரப்பிக்கொண்டு கரண்டி மூலம் அருந்தத் தொடங்கினர்.

    அப்பாவுக்கு 'ஹாய்!' சொல்லிக்கொண்டே அருகில் வந்த சிறுவனான மகன், "டாடி! இந்தக் கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்களது கருத்து என்ன?" என்று கேட்டான். அப்பாவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது." வாயை மூடிக்கொள்! சாப்பிட வந்தால் சாப்பிடும் வேலையை மட்டும் பார்! தேவையற்ற பேச்சுக்களைப் பேசாதே!" எச்சரித்தார் அப்பா. நமக்கேன் வம்பு எனக் கீழ்ப்படிதலோடு வாயை மூடிக்கொண்டான் மகன்.

    டின்னர் முடிந்தது. எல்லாரும் மகிழ்ச்சியாக வரவேற்பறைக்கு வந்து ஐஸ் கிரீம் சுவைத்துக் கொண்டிருந்தனர். இப்போது மகனை அன்போடு அருகில் அழைத்தார் அப்பா. " சாப்பிடும்போது அருவருப்பான கரப்பான் பூச்சி போன்ற விசயங்களைப் பேசக்கூடாது! அதனால் தான் திட்டினேன்!. சரியா?. இப்போது கேள்! கரப்பான் பூச்சி குறித்த உனது கேள்வி என்ன?".

    "அதை விடுங்கள் அப்பா! அது முடிந்துபோய் விட்டது. இப்போது வேண்டாம்!" என்றான் மகன். " சும்மா சொல்! என்ன சொல்ல வந்தாயோ சொல்!" என்று வற்புறுத்தினார் அப்பா!. " அது வேறு ஒன்றுமில்லை அப்பா! நீங்கள் சூப்பைச் சுவைத்துக் கொண்டிருந்த கப்பில் ஒரு இறந்த கரப்பான் பூச்சி மிதந்து கொண்டிருந்தது! அதைச் சாப்பிடுவதால் உடம்புக்கு நல்லதா? என்பதைத்தான் கேட்க முயற்சித்தேன்! வேறு ஒன்றுமில்லை!".

    அவ்வளவுதான் பையன் சொல்லி முடிப்பதற்குள் பாத்ரூமுக்குள் ஓடிய தந்தை சாப்பிட்ட உணவு அனைத்தையும் வாஷ்பேசினில் வாந்தியெடுத்துவிட்டார். அளவுக்கதிகமான அதிகாரத் தன்மையும், நிலைமைக்கு ஒத்துப் போகாத கீழ்ப்படிதலும் எந்த நிலைமைக்குக் கொண்டுபோய் விடும் என்பதற்கு இந்த நிகழ்வே சிறந்த உதாரணம்.

    ஒவ்வொரு கீழ்ப்படிதலிலும் ஓர் அதிகாரம் ஒளிந்திருக்கிறது. அந்த அதிகாரத்தின் நியாயத் தன்மையைப் பொறுத்தே கீழ்ப்படிதலுக்கான பலன் நமக்கு வந்து சேர்கிறது. ஆண்டவனை முழுமையாக நம்புகிறவர்கள் அவனுக்கு எதிர்ப்பில்லாத கீழ்ப்படிதலைச் செய்கிறார்கள்.

    அரசனை மக்கள் நம்புவதும், ஆசிரியரை மாணவர் நம்புவதும், நிர்வாகத்தினரைப் பணியாளர் நம்புவதும், பெற்றோரைப் பிள்ளைகள் நம்புவதும் முழுமையான கீழ்ப்படிதலுக்கு வழி வகுக்கும்.

    ஆம்!

    நாம் யாரை நம்பிக் கீழ்ப்படிகிறோமோ இல்லையோ…

    முதலில் நம்மை நம்பி நமக்கு நாமே கீழ்ப்படியக் கற்றுக் கொள்வோம்!

    தொடர்புக்கு: 9443190098.

    • இன்சுலின் தடையால் உண்டாகும் டைப்-2 நீரிழிவு தான் முதுமையில் அதிகம் பேருக்கு உண்டாகி துன்புறுத்துகிறது.
    • முதுமையில் உண்டாகும் இறப்புகளுக்கு நீரிழிவு நோயில் உண்டாகும் இதயம் சார்ந்த தொந்தரவுகள் முக்கிய காரணமாக உள்ளன.

    முதுமையில் சர்க்கரை (இனிப்பு) நோய் எனும் நீரிழிவு நோய் ஆரோக்கியத்திற்கு கசப்பை உண்டாக்கிவிடுகிறது. ஏனெனில் இரண்டு முதியவர்கள் பேசிக்கொள்ளும் போது, நலம் விசாரித்த காலங்கள் மாறி, சர்க்கரை அளவை விசாரிக்கும் காலம் வந்துவிட்டது. உலகம் முழுவதும் இந்த நிலை இருந்தாலும் நம் ஊரில் சற்று அதிகம் தான். மறந்து போன வாழ்வியல் நெறிமுறைகளும், உணவு முறைகளும், நோயினை உண்டாக்க முக்கிய காரணமாக இருப்பினும், முதுமையில் உடல் திசுக்கள் தேய்மானம் அடைவதும் காரணமாக உள்ளது.

    அத்துடன் நம் உடல் செல்களுக்குள் கொண்டு செல்ல வேண்டிய சர்க்கரையானது, இன்சுலின் தடையின் (IR) காரணமாக செல்லுக்குள் நுழைய முடியாமல், ரத்தத்தில் அதன் அளவு அதிகரித்து நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. இன்சுலின் சுரப்பு குறைவால் உண்டாகும் டைப்-1 நீரிழிவு பெரும்பாலும் இளம் வயதினருக்கே ஏற்படுகின்றது. இன்சுலின் தடையால் உண்டாகும் டைப்-2 நீரிழிவு தான் முதுமையில் அதிகம் பேருக்கு உண்டாகி துன்புறுத்துகிறது.

    முதுமையில் 65 வயதைக் கடக்கும் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமின்றி நீரிழிவு நோயின் துணை நோய்களான அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தல், உடல் பருமன் ஆகியவைகளும் ஒன்று கூடி முதுமையை வாட்டி வதைக்கும்.

    எவ்வளவு தான் அறிவியல் வளர்ச்சி அடைந்து, மருத்துவ முறைகள் மேம்பட்டாலும் நீரிழிவைக் கட்டுப்படுத்துவது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. ஆக பாரம்பரிய மருத்துவ முறைகளை நாடுவதும், பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றுவதும், முதுமையில் சர்க்கரை அளவைக் குறைத்து கட்டுக்குள் வைக்க உதவும்.


    நீரிழிவு எனும் மதுமேக நோய் பற்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவத்தில் கூறியுள்ளது சிறப்புமிக்கது. சித்த மருத்துவத்தின் அடிப்படை கூறுகளான வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் 'கபவாதம்' கூட்டணியால் மதுமேகம் எனும் நீரிழிவு உண்டாவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. அத்தகைய நீரிழிவினை 20 வகைகளாக பிரித்தும் விளக்கியுள்ளது.

    இத்தகைய கபவாதம் தணித்து, இன்சுலின் தடையை நீக்கி, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் உணவுப் பொருட்களும், மருந்துப்பொருட்களும் பயன்படுத்துவது, உடற்பயிற்சி செய்வது முதுமையில் நீரிழிவினைக் கட்டுக்குள் வைக்கும்.

    ஏன் இந்த சர்க்கரை வியாதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும்? சர்க்கரை நோய் என்ற பெயரைக் கேட்ட உடனே மனதுக்குள் அலறலும், குமுறலும் ஏன்? என்றால் இந்நோயில் உண்டாகும் பின்விளைவுகள் தான் காரணம். நீரிழிவு நோயின் பின் விளைவுகள் பற்றி நவீன மருத்துவமும், நீரிழிவு நோயால் உண்டாகும் அவஸ்த்தைகள் என்று சித்த மருத்துவமும் விளக்குகின்றன. அந்த அவஸ்த்தைகளில் மிக முக்கியமானவை இரண்டு நோய்நிலைகள். ஒன்று இதய நோய்கள், மற்றொன்று பக்கவாதம்.

    நீரிழிவு நோயால் இதய நோய்கள் உண்டாகும் வாய்ப்பு 1.8 மடங்கு அதிகம் உள்ளதாகவும், 1.5 மடங்கு பக்க வாதம் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் முதுமையில் உண்டாகும் இறப்புகளுக்கு நீரிழிவு நோயில் உண்டாகும் இதயம் சார்ந்த தொந்தரவுகள் முக்கிய காரணமாக உள்ளன.

    இவை ஒருபுறமிருக்க, நீரிழிவு நோய்நிலையில் உண்டாகும் கண்பார்வை குறைபாடு 28 சதவீதம் பேருக்கு உண்டாவதாகவும், கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதம் பேருக்கு நரம்பு சார்ந்த தொந்தரவுகளும் உண்டாவதாக உள்ளது. இவ்வாறு நீரிழிவு நோயானது பல்வேறு நோய்நிலைகளுக்கு அடித்தளம் அமைப்பதாக உள்ளது. அதிமுக்கியமாக நீரிழிவு நோயால் உண்டாகும் சிறுநீரக பாதிப்பு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது.

    ஆகவே காலத்திற்கும் மருத்துவமனை வாசலை நாட வைக்கும், பொருளாதார கொள்ளை நோயாக இருக்கும் நீரிழிவு நோய் நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவை மட்டும் கட்டுப்பாட்டில் வைப்பதோடு, உடல் உறுப்புகளை பாதுகாக்கும் மருத்துவ முறைகளையும் நாடுவது நல்லது. சித்த மருத்துவம் மேற்கூறிய இரண்டிலும் ஒரு சேர நன்மைத் தரக்கூடியது.

    சித்த மருத்துவ மூலிகைகளான சீந்தில், வேப்பிலை, நிலவேம்பு, சோற்றுக்கற்றாழை, ஆவாரை, கடலழிஞ்சில், நாவல்கொட்டை, பாகல்காய், கோவைக்காய், மருதம்பட்டை, தேற்றான்கொட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கருவேப்பிலை, வேங்கைப்பட்டை, நித்யகல்யாணி, சிறுகுறிஞ்சான், கீழாநெல்லி, துளசி, கடுகுரோகிணி ஆகிய மூலிகைகளும் மஞ்சள், லவங்கப்பட்டை, வெந்தயம், பூண்டு, வெங்காயம், கருஞ்சீரகம் ஆகிய அஞ்சறைப் பெட்டி சரக்குகளும் நீரிழிவு நோயில் பலன் தருவதாக உள்ளன. அத்துடன் உலகமே கண்டு அஞ்சும் நீரிழிவு நோயின் பின் விளைவு களை தடுக்கக்கூடிய சிறப்பு வாய்ந்தன.

    மேற்கூறிய சித்த மருத்துவ மூலிகைகள் 'மதுமேகம்' எனும் சர்க்கரை நோய்க்காக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே சித்த மருத்துவ பயன்பாட்டில் உள்ளன. சித்த மருத்துவ மூலிகைகளில் உள்ள பீனோலிக் வேதிப்பொருட்களும், இயற்கை நிறமிகளும், அல்கலாய்டுகளும் இன்னும் பல்வேறு வேதிப்பொருட்களும் சர்க்கரை நோய்க்கு சிகப்பு சிக்னல் காட்டி, நல்வாழ்விற்கு பச்சைக் கொடி காட்டும் தன்மை உடையன.

    சித்த மருத்துவ மூலிகைகள் நம் உடல் செல்களுக்குள் சர்க்கரையை உட்செலுத்தி பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும், இன்சுலின் தடையை நீக்குவதன் மூலமும் சர்க்கரை அளவு குறைய வழிவகை செய்கின்றன. அத்துடன் நம் குடலில் ஆல்பா குளுகோசிடேஸ் மற்றும் ஆல்பா அமைலேஸ் ஆகிய நொதிகளின் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கக்கூடியதாக உள்ளதை ஆய்வுத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் மூலிகைகளில் உள்ள பிளவனாய்டு வகை வேதிமூலக்கூறுகள் கணைய செல்களை புதுப்பித்து, இன்சுலின் சுரப்பை த் தூண்டக்கூடியதாகவும் உள்ளன.

    அந்த வகையில் சித்த மருத்துவத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நிலவேம்பு மூலிகையானது சர்க்கரை அளவைக் குறைப்பதில் நற்பலன் தரக்கூடியது. அதில் உள்ள 'ஆன்ரோகிராபோலெய்டு' எனும் வேதிப்பொருள் குடலில் உள்ள பல்வேறு நொதிகளின் செயல்பாட்டைத் தடுத்து சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

    சுடுகாட்டு மல்லி எனும் நித்தியகல்யாணி இலையுடன் மிளகு சேர்த்து கசாயமிட்டு குடிக்க சர்க்கரை அளவு கட்டுப்படும். அல்லது பூவுடன் மிளகு சேர்த்து கசாயமிட்டு குடிப்பதும் பலன் தரும். புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட 'வின்கிரிஸ்டின்', 'வின்பிளாஸ் டின்' வேதிக்கூறுகளுக்கு ஆதாரம் இந்த மூலிகை தான். இவை புற்றுநோயில் மட்டுமின்றி, சர்க்கரை நோயிலும் பலன் தரக்கூடியன.

    மருதம்பட்டை எனும் மூலிகை இதய நோய்நிலைகளில் பலன் தரும் என்கின்றன பல்வேறு ஆய்வுகள். இதில் உள்ள 'அர்ஜுனின்' எனும் வேதி மூலக்கூறு அதற்கு காரணமாகின்றது. மேலும் இது கல்லீரலைக் காத்து நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கும். எனவே சர்க்கரை நோயுள்ள முதியோர்கள் இதயத்தைக் காத்துக்கொள்ள 'மருதம்பட்டை சூரணம்' எனும் சித்த மருந்தை நாடுவது ஆயுளைக் கூட்ட உதவும்.

    சர்க்கரை நோயில் முக்கிய உறுப்புகளான இதயம், சிறுநீரகம், கண், நரம்பு, ரத்தக் குழாய்கள் பாதிப்பினை தடுக்க வேண்டியது மிக அவசியம். இந்நிலையில் 'திரிபலை சூரணம்' எனும் சித்த மருந்து உள் உறுப்புகளைக் காத்து நலம் பயக்கக்கூடியது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை உடையது. அதாவது உடலில் ஆக்ஸிஜன் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கூறுகளை நீக்கும் தன்மை இதற்குண்டு. எனவே நீரிழிவு நோயில் இறுதி வரை இதயம், சிறுநீரகம், கண் பார்வை செயல்பாடுகள் குறையாமல் தடுக்க திரிபலை சூரணத்தை தினசரி இரவில் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது நல்லது.

    "ஆவாரை பொழித்திருக்க சாவாரை கண்டதுண்டோ" என்ற சொலவடையை மறந்ததால் இழப்பு நம் ஆரோக்கியத்திற்குத் தான். சிறப்புமிக்க ஆவாரை பூவுடன் சிறிது லவங்கப்பட்டை, வெந்தயம், மஞ்சள் சேர்த்து தேநீராக்கி குடித்து வர சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். அல்லது ஆவாரைக் குடிநீர் எனும் சித்த மருந்தினை கசாயமாக்கி குடித்து வந்தாலும் நல்ல பலன் தரும். நம் ஊரில் வறண்ட நிலப்பகுதியில் மஞ்சள் நிறப்பூக்களுடன் பூத்து குலுங்கும் ஆவாரை நீரிழிவு நோயாளிகளுக்கு கிடைத்த வரம். எளிமையாய் வறண்ட பூமியில் கிடைப்பதால் இதன் மகத்துவம் பலருக்கு விளங்கவில்லை.

    கல்லீரல் நோய்நிலைகளில் பெரும்பயன் தரக்கூடிய கீழாநெல்லியும் சர்க்கரை அளவைக் குறைப்பதிலும், நீரிழிவு நோயில் உண்டாகும் கை, கால் எரிச்சல் ஆகிய நிலைகளிலும் பலன் தரக்கூடியது. 'மதுமேக சூரணம்' எனும் சித்த மருந்தில் வெந்தயம், கருவேப்பிலை, மஞ்சள் இவற்றுடன் கீழாநெல்லி சேருவதும் குறிப்பிடத்தக்கது.

    வெந்தயத்தை இளவறுப்பாய் வறுத்து பகல் நேரங்களில் தேக்கரண்டி அளவுக்கு எடுத்துக்கொள்ள சர்க்கரை அளவு கட்டுப்படுவதுடன், ரத்தத்தில் அதிகமான கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடலுக்கும் நன்மை பயக்கும்.

    அதிக நார்ச்சத்துள்ள உணவுப்பொருட்களும், தாவர உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ளுதலும், நீரிழிவு நோயைத் தடுப்பதோடு, சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என்கின்றன ஆய்வுகள். சித்த மருத்துவமும் "கோதையர் கலவி போதை, கொழுத்த மீன் இறைச்சி போதை, ஊதுவாய் நெய்யும் பாலும் பரிவுடனுண்பீராகில்" என்று பல்வேறு உணவு உணவுகளை அதிகம் சேர்ப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும் என்கிறது. இன்றைய ஆய்வு முடிவுகள் அறுதியிட்டு கூறுவதை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சித்த மருத்துவம் கூறி இருப்பது, நம் பாரம்பரிய அறிவின் முற்போக்குத்தனத்தைக் காட்டுகிறது.

    (தொடரும்...)

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • ரொம்ப நாள் கழித்துதான் என்னால் புரிய முடிந்தது. கதைப்படி நதியாவைத்தான் பிரபுசார் விரும்புவார்.
    • பிரபு சார் படம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சாப்பாடுதான்.

    அய்யய்ய....

    வெக்கத்த பாரு மாமாவுக்கு...

    கட்டிக்க போறவ எப்படி இருக்கணும்னு கேட்டா...

    இப்படி வெட்கப்படுறீய...

    அட சொல்லுமாமா...

    என்னன்னு சொல்ல....

    அட யோசிக்கிறீயளா

    எப்படி சொல்ல...

    -என்ற ரொமான்டிக் டயலாக்கை நானும் பிரபுசாரும் பேச...

    "என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை..." என்று பிரபுசார் பாடும் அந்த பாடல் காட்சி இடம் பெற்ற 'ராஜகுமாரனை' நினைவிருக்கிறதா?

    1994-ல் வெளிவந்த படம். பிரபுசாரின் 100-வது படம். சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பு. நானும் நதியாவும் ஹீரேயின்கள் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் சார்.

    எனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம். குறும்புத்தனம், துடுக்காக இருப்பது. படம் முழுக்க ஜாலியாகவே போகும்.

    ஹீரோ பிரபுசாரை நானும், நதியாவும் விரும்புவோம். ஆனால் பிரபு சார் விரும்புவது நதியாவைத்தான்.

    ஆனால் நான் விடாமல் துரத்தி துரத்தி காதலிப்பேன். அவரிடம் குறும்புத்தனம் செய்வேன். அப்போது அவரிடம் பேசுவதுதான் மேற்கண்ட டயலாக்குகளும், அதற்கு பதிலாக அவர் பாட்டாலேயே பதில் சொல்வார்.

    அவர் என்னை நினைத்துதான் பாடுகிறார் என்று நான் நினைப்பேன். ஆனால் அவரோ நதியா வைத்தான் வர்ணித்து பாடுவார். மஞ்சள் நிற சேலைகட்டி வரும் நதியாவை நினைத்து

    "என்னவென்று சொல்வதம்மா

    வஞ்சியவள் பேரழகை.

    அந்த மஞ்சள் நிறத்தவளை

    என் நெஞ்சில் நிலைத்தவளை......

    தெம்மாங்கு பாடிடும் சின்ன விழி

    மீன்களோ

    பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி

    கருங் கூந்தலோ.. என்று பாடுவார்.

    அந்த காட்சியில் உண்மையிலேயே நான் ஊஞ்சல்தான் ஆடிக் கொண்டிருப்பேன். அதனால் ஊஞ்சலில் இருக்கும் என்னை நினைத்துதான் பாடுகிறார் என்பது என் நினைப்பு.

    இந்த பாடலின் பின்னணியில் இன்னொரு சுவையான சம்பவமும் உண்டு. ஷூட்டிங் நடந்த போது எனக்குரிய காஸ்ட்யூமை தந்தார்கள். அது எனக்கு சரியாக இல்லை. அதனால்நான் எனது சொந்த டிரெஸ்சை போட்டு சென்றேன். அது மஞ்சள் நிற காக்ரா சோளி.

    எனது காஸ்ட்யூமை பார்த்ததும் இந்த காஸ்டியூம் கிடையாதே! வேறு டிரெஸ் கொடுத்து இருந்தோமே என்றார்கள். நான், அது சரியில்லை என்று சொன்னதும் டைரக்டரும் ஒத்துக் கொண்டார்.

    ரெடி... ஷாட்... என்றதும் அந்தி மஞ்சள் நிறத்தவளே... என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடித்தேன். அந்த பாடல் வரிகளை கேட்டதும் மனதுக்குள் அப்படி ஒரு சந்தோசம். பாட்டுக்கு தகுந்த நிறத்தில் டிரெஸ். என்னை நினைத்தே எழுதிய பாடல் எழுதியதாக நினைத்து மனதுக்குள் அப்படி ஒரு சந்தோசம்.

    ஆனால் மறுநாள் எனக்கு வேறு கலரில் காஸ்ட்யூம். எனக்கு பிடித்த மஞ்சள் நிற காஸ்ட்யூ மில் நதியா இருந்தார். அதை பார்த்ததும் என் மனதில் வருத்தம். நமக்கு பிடித்தமான கலர் அவருக்கு போய் விட்டதே என்று. அந்த வயதில் அப்படியெல்லாம் நினைத்து இருக்கிறேன். ஏன் அப்படி நினைதேன் என்றே எனக்கு புரியவில்லை.

    ரொம்ப நாள் கழித்துதான் என்னால் புரிய முடிந்தது. கதைப்படி நதியாவைத்தான் பிரபுசார் விரும்புவார். அந்த பாடலில் மஞ்சள் நிறத்தவளே என்று பாடுவார். அப்படியானால் நதியா மஞ்சள் புடவை கட்டி வருவதுதானே பொருத்தமானது என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.

    இந்த படத்தில் எத்தனையோ ஆச்சரியமான விஷயங்கள் உண்டு. உயிரே உனக்காக என்ற படத்தில் நதியா ஹீரோயின். நான் குழந்தை நட்சத்திரமாக குட்டி நதியாவாக நடித்திருந்தேன்.

    இப்போது நதியாவுடன் அவருக்கு சரி சமமாக நானும் ஹீரோயினாக நடிக்கிறேன். நினைத்தாலே ஆச்சரியம்தானே.

    நான் ஹீரோயின் அந்தஸ்துக்கு வளர்ந்து இருந்தாலும் விளையாட்டுத்தனமாகவே இருப்பேன்.

    ஷூட்டிங் நடக்கும் போதே எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடுவேன். அதற்கு இன்னொரு முக்கிய காரணம் குழந்தை பருவத்தில் இருந்தே சினிமா உலகில் எல்லோருக்கும் என்னை தெரியும். அவர்கள் பார்வையில் எப்போதும் நான் குழந்தைதான். எனக்கும் கதாநாயகி ஆன பிறகும் குழந்தை நினைப்பு மாறவில்லை.

    எனது குரலும் குழந்தை குரல் போல்தான் இருக்கும். அதனாலேயே டப்பிங் பேச நினைத்தாலும் பேச முடியாமல் போனது.

    ராஜகுமாரன் படத்தில்தான் முதல் முதலில் டப்பிங் பேச ஆரம்பித்தேன். முக்கியமாக அந்த படத்தில் எனக்கேற்ற கதாபாத்திரமாக இருந்ததால் நடிப்பதற்காக 'ரிஸ்க்' எடுக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை. சாதாரணமாக அங்கும், இங்கும் நடந்தது போலவும் விளையாடியது போலவும் இருந்து. ஆனால் காட்சிகள் பிரமாதமாக வந்திருந்தன.

    பிரபு சார் படம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சாப்பாடுதான். அவருடன் நடித்த எல்லோருமே இதை சொல்வார்கள். அவர் வீட்டு சாப்பாட்டை யாராலும் அடிச்சிக்க முடியாது. வீட்டில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு பெரிய பன் கேரியரில் சாப்பாடு வரும். அதுவும் விதவிதமாக இருக்கும்.

    நமக்கெல்லாம் மட்டன் என்றால் சுக்கா, குழம்பு பொரிப்பு அதே போல் சிக்கன் என்றாலும் ஒருசில வகைகள்தான் தெரியும்.

    ஆனால் பிரபு சார் வீட்டில் இருந்து வரும் கறிக்குழம்பை நினைத்தாலே நாவில் நீர் ஊறும். விதவிதமாக சமைத்து வைத்திருப்பார்கள்.

    நான் உணவு கட்டுப்பாட்டில் இருந்ததால் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ருசி பார்ப்பேன். அவ்வளவுதான்.

    உடனே பிரபு சார் 'அட... என்பார். நல்வாசாப்பிடும்மா..!

    நானோ 'டயட்' சார் என்பேன்.

    அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நல்லா சாப்பிடு என்று சாப்பிட வைத்து விடுவார். உணவு கட்டுப்பாடெல்லாம் தகர்ந்து விடும். இப்படி விதவிதமாக சாப்பாடு கண்முன்னே இருந்தால் எவ்வளவு நேரத்துக்குத்தான் வாயை கட்டிக் கொண்டிருக்க முடியும்?

    அப்படித்தான் ஒருநாள் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு கார் வந்தது. அதை பார்த்ததும் அப்பா வர்றார்.. என்று எல்லோரும் அருகில் ஓடினார்கள். சிவாஜி சாரை மரியாதையாக அப்பா என்று தான் அழைப்போம்.

    சிரித்து கொண்டே காரில் இருந்து இறங்கி வந்தார். சிவாஜி புரொடஷன் தயாரிப்பு என்பதால் படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வந்திருந்தார்.

    அதன் பிறகு நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்.

    (தொடரும்)

    • தூரத்தில் படகு வரும் சத்தம் கேட்டதும் அதோ வந்திட்டாங்க... நம்மை காப்பாத்திடுவாங்க... என்று மனதில் நிம்மதி பிறந்தது.
    • மிகப்பெரிய கண்டத்தில் இருந்து தப்பியது போலாகிவிட்டது. சிரமப்பட்டது சரி. ஆனால் படமாவது ‘ஹிட்’ ஆகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    மிகப்பெரிய ஏரி...

    எதிர் பாராமல் ஏரிக்குள் சிக்கி கொண்டோம். எப்படி மீளப்போகிறோம் என்ற பயம்! ஒரு பக்கம் பயமுறுத்தியது.

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர்! யார் காப்பாற்ற வருவார்கள் என்றும் தெரியவில்லை. நேரம் செல்ல செல்ல பயம் மனதை கவ்வியது. எனக்கு நீந்த தெரியும். தண்ணீரில் குதித்து நீந்தி கரை சேருவோமா என்று யோசித்தேன். ஆனால் அவ்வளவு தூரம் நீந்த முடியுமா என்ற தயக்கமும் இருந்தது.

    இருந்தாலும் வேறு வழியில்லை என்று முடிவு செய்து அஜய் என்ன செய்வது..? தண்ணீரில் குதித்து நீந்துவோமா என்றேன். அப்போது தான் தெரிந்தது அவர் என்னை விட அதிகமாக பயந்து போய் இருந்திருக்கிறார். அவருக்கு நீந்தவும் தெரியாது என்றார்.

    என்ன செய்வது...? சற்று தூரத்தில் தண்ணீருக்குள் ஒரு பாறைக்குன்று தெரிந்தது. எப்படியாவது அந்த பாறைக்கு சென்று விட்டால் போதும். தைரியமாக இருக்கலாம். எப்படியாவது படக்குழுவினர் நம்மை காப்பாற்ற ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன்.

    அதற்கு மிதவையை நகர்த்தி கொண்டு அந்த பகுதிக்கு செல்ல வேவண்டும். அது எப்படி? துடுப்பும் இல்லை. கைகளையே துடுப்பாக்கி கொள்ளலாம் என்று முடிவு செய்து மிதவையில் அமர்ந்து தண்ணீரை துளாவி விட தொடங்கினேன்.

    மறுபக்கம் அவருக்கு தண்ணீரை துளாவவும் தெரியவில்லை. அதையும் சொல்லி கொடுத்தேன். மிதவை மெல்ல மெல்ல பாறையை நோக்கி நகர்ந்தது. பத்து, பதினைந்து நிமிடங்களுக்குள் பாறையை நெருங்கி விட்டோம். அஜய் முதலில் பாறையில் குதித்து நான் ஏறுவதற்கு கை கொடுத்து உதவினார்.

    தண்ணீரைவிட்டு பாறை யில் பாதுகாப்பாக வந்து சேர்ந்து விட்டோம். இனி எப்போது மீட்க வரு வார்கள்...? எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். அந்த ஏரியில்

    அந்த ஏரியில் படகு, பரிசல் போக்குவரத்து எதுவும் கிடையாது எங்களை மீட்பதற்குத் தான் படகு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. காலையிலும் சாப்பிடாததால் பசி வயிற்றை வதைத்தது. உச்சி வெயில் வேறு தாகத்தால் நாவும் வறண்டது. சுற்றிலும் தண்ணீர் இருந்தும் குடிப்பதற்கு வாய்ப்பில்லையே! என்ன செய்வது?

    தாகத்தால் நாவும் வறண்டது பசியால் வயிறும், பயத்தால் இதயமும் தான் துடித்தது. நேரம் சென்றது தான் மிச்சம் ஆனால் யாரும் மீட்க வருவது போல் தெரியவில்லை.

    மறுபுறத்தில்.....

    கரையில் இருந்த படக்குழுவினர் எங்களை மீட்பதற்காக கயிறு தயார் செய்து இருக்கிறார்கள். அந்த கயிற்றின் ஒரு முனையை டிராலியில் கட்டி விட்டு, மறு முனையை மிதவையில் கொண்டு கட்டி இழுப்பதற்காக ஒருவர் கயிற்றை எடுத்து கொண்டு ஏரியில் குதித்து நீந்தியிருக்கிறார்.

    கொஞ்சதூரம் நீந்தியவர் நீந்த முடியாமல் திணறியிருக்கிறார். விட்டால் அவர் தண்ணீரில் மூழ்கி விடுவார் என்று எப்படியோ சிரமப்பட்டு அவரை மீட்டு இருக்கிறார்கள்.

    அந்த முயற்சியும் தோல்வி அடைந்ததால் எங்களை எப்படி மீட்பது என்று நினைத்து பதற்றத்தில் இருந்து இருக்கிறார்கள். படகுக்கு என்ன செய்வது? படகு வேண்டுமென்றால் செகந்திரபாத்துக்கு தான் செல்ல வேண்டும். என்று கூயிருக்கிறார்கள்.

    உடனடியாக செகந்திரா பாத்துக்கு ஆட்களை அனுப்பி ஒரு மோட்டார் படகை ஏற்பாடு செய்து லாரியில் ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார்கள். படகு புறப்பட்டதும் எல்லோர் பார்வையும் ஏரி மீது தான்.

    தூரத்தில் படகு வரும் சத்தம் கேட்டதும் அதோ வந்திட்டாங்க... நம்மை காப்பாத்திடுவாங்க... என்று மனதில் நிம்மதி பிறந்தது.

     

    படகு நெருங்கி வர வர மனதில் அப்படி ஒரு சந்தோசம். அப்பாடா.. இனி எப்படியாவது தப்பிவிடலாம் என்ற சந்தோசம் அது.

    படகு வந்தது. எங்களை சுமந்தபடி கரை திரும்பியது. காலை 12 மணியளவில் தண்ணீரில் சிக்கிய நாங்கள் கரை திரும்பிய போது மாலை சுமார் 4 மணி இருக்கும் எங்களை பார்த்த பிறகு தான் படக்குழுவினருக்கும் நிம்மதி. அதுவரை அவர்களும் தவித்தபடி தான் இருந்து இருக்கிறார்கள்.

    அன்றுடன் ஷூட்டிங்கை முடித்து விட வேண்டும் என்பது தான் திட்டம். ஆனால் முடியவில்லை.

    மீதி காட்சியை இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம் என்று அவசர அவசரமாக விமானத்தை பிடித்து சென்னை திரும்பினோம்.

    நடந்த சம்பவத்தை பற்றி நினைக்க கூட நேரம் இல்லை. சென்னை திரும்பியதும் உடனடியாக அடுத்த படம் ஷூட்டிங்.

    அது ஒரு இந்திப்படம். பிர்லா கோளரங்கத்தில் இரவு 9 மணிக்கு தொடங்கிய ஷூட்டிங் அதிகாலை 3 மணி வரை தொடர்ந்தது. பின்னர் வீடு திரும்பி சிறிது நேரம் தூங்கிவிட்டு மீண்டும் காலையில் எழுந்து அடுத்த ஷூட்டிங் புறப்பட்டேன். அந்த காலகட்டத்தில் அப்படித்தான். காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு ஓடுவது போல் ஓடிக்கொண்டிருந்தேன்.

    ஆனால் என்னோடு நடித்த ஹூரோ அஜய் மிகவும் பயந்துவிட்டார். காய்ச்சல், வாந்தி, பேதி என்று நான்கைந்து நாட்கள் வீட்டிலேயே முடங்கி விட்டார் என்றார்கள்.

    மிகப்பெரிய கண்டத்தில் இருந்து தப்பியது போலாகிவிட்டது. சிரமப்பட்டது சரி. ஆனால் படமாவது 'ஹிட்' ஆகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அது கூடுதலான மனச்சுமையைதான் கொடுத்தது.

    இன்னொரு விஷயம். ஆபத்தில் சிக்கி மீண்ட அந்த ஏரி பக்கம் அதன் பிறகு இதுவரை சென்றதில்லை.

    எனது சினிமா வாழ்க்கையில் இது திகில் நிறைந்த மறக்க முடியாத அனுபவம்.

    அடுத்த வாரம் ஒரு ராஜகுமாரனுடனான சந்திப்பு பற்றிய சுவையான தகவல்களுடன் சந்திக்கிறேன்...

    (தொடரும்.)

    • யாராவது தப்பு பண்ணிவிட்டாலோ, தாமதமாக வந்தாலோ... அவ்வளவுதான்... கோபத்தில் என்ன செய்வார் என்றே தெரியாது.
    • ‘சின்ன பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு’ என்று என்னைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாக கூறினார்.

    ஹீரோயின்னா ஆப்பிள் மாதிரி இருக்கணும்... பார்க்குறவங்க கண்களுக்கு அப்படி தெரியணும்!

    -இப்படி நினைப்பவர் டைரக்டர் ராகவேந்தர் ராவ். அவர் படம் என்றாலே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதனால் தெலுங்கில் அவர் படத்தில் நடிக்க எல்லா நடிகைகளும் ஆசைப்படுவார்கள்.

    ஷூட்டிங்கும் சாயங்காலம் ஆறுமணிக்கு மேல் இருக்காது. 6 மணி ஆனதும் ஷூட்டிங் ஓவர். கிளம்புங்க... போய் ரெஸ்ட் எடுங்க என்று எல்லோரையும் அனுப்பி விடுவார்.

    அவரது டைரக்ஷனில் அல்லாரி மொகுடு (குறும்புக்கார கணவன்) என்ற படத்தில் எனக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ராகவேந்தர் ராவ் டைரக்ஷன் என்றதும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

    ஆனால் ஹீரோ மோகன்பாபு. அவரைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே கேள்விப்பட்டு இருந்தேன். ரொம்ப கோபக்காரர். சில நேரங்களில் அடிக்கவும் செய்வார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்ததால் அவருடன் எப்படித்தான் நடிக்க போகிறோமோ என்ற பயமும் மனதில் இருந்தது.

    இருந்தாலும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடிக்க தொடங்கினேன். அவரை பொறுத்தவரை நேரம் தவறாமையை கடைப்பிடிப்பவர். அதில் ரொம்ப கவனமாக இருப்பார். 10 மணிக்கு ஷூட்டிங் என்றால் ஐந்து நிமிடம் முன்னதாகவே தயாராக இருப்பார்.

    யாரிடமும் அதிகமாக பேசவும் மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். யாராவது தப்பு பண்ணிவிட்டாலோ, தாமதமாக வந்தாலோ... அவ்வளவுதான்... கோபத்தில் என்ன செய்வார் என்றே தெரியாது.

    நான் அவரிடமும் நல்ல பெயர் வாங்கியே தீர வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

    முதல் நாள் ஷூட்டிங்... அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடந்தது. முதல் காட்சியே கனவு காட்சி. பாடல்தான். அதை தான் படமாக்கினார்கள்.

    பக்கத்து ஷெட்டில் வேறொரு படத்தில் வெங்கடேஷ் நடித்து கொண்டிருந்தார். எங்கள் ஷெட்டுக்கு வந்தவர் என்னை பார்த்தார். எனது மேக் அப்பையும், காட்சியையும் பார்த்து 'ஏம்மா... இப்பதான் சாண்டி படம் பண்ணியிருக்கிறாய். அந்த கேரக்டர் மிகப்பெரிய பெயர் வாங்கி தந்தது. எனவே பார்த்துக்க...' என்றார்.

    ஆனால் எனக்கோ படத்துக்கு படம் வித்தியாசமாக நடிக்கணும் என்ற ஆசை. இப்படிப்பட்ட கேரக்டர். இப்படித்தான் நடிக்கணும் என்றெல்லாம் நினைப்பது கிடையாது.

    நல்ல கதை. அதற்கேற்ற கதாபாத்திரம்... அதைத்தான் நினைப்பேன். அல்லாரி மொகுடு படத்தில் என்னோடு ரம்யா கிருஷ்ணனும் முக்கிய வேடத்தில் நடித்தார்.

    படம் வளர்ந்து கொண்டிருந்தது. நான் நேரம் தவறாமல் படப்பிடிப்புக்கு வருவது, டயலாக்குகளை மனப்பாடம் செய்து தப்பில்லாமல் பேசுவது எல்லாவற்றையும் மோகன்பாபு தினமும் கவனித்து இருக்கிறார்.

    அவர் அவ்வளவு சீக்கிரமாக யாரையும் பாராட்டமாட்டார். அவரே என்னை பாராட்டினார். 'சின்ன பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு' என்று என்னைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாக கூறினார்.

     

    அவரை போலவே நேரம் தவறாமை, தொழில் மீதான ஈடுபாடு ஆகியவற்றை பார்த்ததும் இந்த பொண்ணு நம்மை மிஞ்சி விட்டாள் என்று என்னை பார்த்து பயப்பட்டார். அவருக்கு 2 பையன், ஒரு மகள். என்னைவிட அவரது மகளுக்கு ஒரு வயது தான் அதிகம். அதனால் நாங்கள் தோழிகளாகிவிட்டோம். நேரம் கிடைக்கும் போது ஒன்றாக விளையாடுவோம்.

    ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓய்வு நேரத்தில் நாங்கள் 'மியூசிக்கல் சேர்' சுற்றி விளையாடுவோம்.

    அதை பார்த்து மோகன்பாபு 'ஏம்மா... நீ எனக்கு ஹீரோயின்தானே...?' என்பார். அதற்குள் அவரது மகள் உள்ளே புகுந்து விடுவாள். 'டாடி... எங்களை விளையாட விடுங்கள்' என்பாள்.

    அதை கேட்டு எல்லாம் உங்கள் ராஜ்யம்தான். விளையாடுங்க... விளை யாடுங்க.. என்பார்.

    இப்படி அந்த குடும்பத்துடன் ஏற்பட்ட நட்பு இன்று வரை தொடருகிறது. அவரை பார்த்து கோபக்காரர் என்று பயந்த நான் இப்போது அவரது குணத்தை பார்த்து பெருமைப்படுகிறேன்.

    கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பதை நானே அனுபவத்தில் பார்த்துவிட்டேன்.

    சுந்தரகாண்டா!

    தமிழில் பானுப்பிரியா நடித்து வெளிவந்த 'சுந்தரகாண்டம்' படத்தின் ரீமேக் தான் 'சுந்தரகாண்டா'.

    தமிழில் பானுப்பிரியா நடித்திருந்த அதே கதாபாத்திரத்தில் தெலுங்கில் நான் நடித்தேன். ஹீரோ வெங்கடேஷ்.

    கதைப்படி நான் ஆசிரமத்தில் வாழ்ந்த அனாதை பெண். அங்கு சொல்லித்தரும் தேவனே... தேவனே... என்று வெகுளித்தனமாக சொல்வதையே பாடலாக பாடி வாங்கி கட்டுவேன். படம் நகைச்சுவையான படம்.

    அதே நேரம் கதாபாத்திரம் மிகவும் கனமானது. படத்தின் கிளைமேக்சில் ஏனுங்க.. ஏனுங்க... நானும் தப்பு பண்ணிட்டேன். நாளைக்கு நான் முதுகு தேய்த்து விடுறேன் என்ற படியே எனது கணவரை தேடி வர வேண்டும். அவர் வெளியே தான் படுத்திருப்பார்.

    அவரை காணாமல் நான் தேடுவேன். அப்போது ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இதை ஒரே காட்சியாக படமாக்க டைரக்டர் முடிவு செய்து இருந்தார். அதை ஒரு சவாலாகவே நினைத்து நடித்தேன்.

    முழு சீனையும் ஒரே டேக்கில் எடுத்துவிட்டனர். அது மறக்க முடியாத அனுபவம். படத்தில் நான் தெலுங்கில் திட்ட வேண்டும். அதற்காக தெலுங்கில் கெட்ட வார்த்தைகளை சொல்லித் தந்து அதனால் நான் பட்ட அவஸ்தையும் உண்டு.

    சாண்டி படத்தை போலவே சுந்தரகாண்டா படமும் பாடல் கேசட் விற்பனையிலும் சாதனை படைத்து பிளாட்டினம் விழா எடுத்தார்கள்.

    இந்த பட ஷூட்டிங் நடந்த போது தான் ஆலங்கட்டி மழையையும் முதல் முதலாக பார்த்தேன்.

    நான் தங்கியிருந்த அறையை விட்டு வெளியே வந்த போது வானத்தில் இருந்து பனிக்கட்டி துண்டுகள் சிதறியது போல் பொல பொல வென்று விழுந்தது. அதை பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அது தான் ஆலங்கட்டி மழை என்றார்கள்.

    மீண்டும் அடுத்த வாரம் புதிய அனுபவங்களுடன் வருகிறேன்.

    (தொடரும்)

    • சூரியன், சந்திரன், பூமி, ராகு, கேது ஆகிய ஐந்தும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது கிரகணம் ஏற்படுகிறது.
    • ஆன்மா சுத்தி அடையும் போது அடைய முடியாத வெற்றியே கிடையாது.

    நவகிரகங்கள் ஒன்பது.மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள் பன்னிரண்டு. இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்கும் சொந்த வீடு உண்டு. ராகு, கேதுக்கள் நிழல் கிரகம் என்பதால் அவர்களுக்கு சொந்த வீடு கிடையாது.

    சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசையில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180வது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசை சந்திப்பு கேதுவாகும்.

    சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு-கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை. அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180 டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அதேபோல் பவுர்ணமி அன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180வது டிகிரியில் வரும்போது, சந்திர கிரகணம் ஏற்படும். அதாவது சூரியன், சந்திரன், பூமி, ராகு, கேது ஆகிய ஐந்தும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது கிரகணம் ஏற்படுகிறது.

    சந்திரகிரகணம்

    மங்களகரமான சோபகிருது வருடம் ஐப்பசி 11-ம் நாள் சனிக்கிழமை (29.10.2023) அன்று 1.03 மணி முதல் 2.24 மணி வரை அசுவினி நட்சத்திரத்தில் நிகழும் ராகு கிரகஸ்த பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள். ரேவதி, அசுவினி, பரணி, மகம், மூலம்.

    சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்து விடுவதால் ஏற்படுவதாகும்.

    சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும் அரைகுறையாக ஏற்பட்டால் பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

    கிரகண நேரத்தில் நியாயமான நீண்ட நாட்களாக நிறைவேறாத கோரிக்கை உடையவர்கள், ஜனன கால ஜாதகத்தில் கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கிரகண நேரத்தில் தியானம் , ஜபம் செய்தால் ஆன்ம பலம் கிடைக்கும். ஆன்மா சுத்தி அடையும் போது அடைய முடியாத வெற்றியே கிடையாது.

    கொடிய தீராத கடன் பிரச்சினையால் அவதிப்படு பவர்கள் கிரகணம் விடும் நேரத்தில் தங்களால் முடிந்த தொகையை ஆன்லைனில் செலுத்தினால் வாட்டி வதைத்த கடன் பிரச்சினை விரைவில் தீரும். நடு இரவில் கிரகணம் சம்பவிப்பதால் பெரும்பான்மையாக எல்லோரும் தூங்கிக் கொண்டு இருப்பதால் உணவு கட்டுபாடு அவசியமில்லை.

    கர்பிணி பெண்கள் வெளியே செல்லக் கூடாது. உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம் . மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம்.

    இயன்றவர்கள் கிரகணம் நடந்து கொண்டு இருக்கும் போது காயத்திரி மந்திர ஜபம், ராம நாமப் பாராயணம் , திருக்கோளாற்றுப் பதிகம் பாராயணம் செய்யலாம் .

    பரிகார ராசிகள்

    ரேவதி, அசுவினி, பரணி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்வது சிறப்பு.கிரகணம் முடிந்த பிறகு காலையில் நீராடிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து புதியதாக சமைத்த உணவை உண்ணலாம்.

    ஐப்பசி மாத பவுர்ணமியும் அன்னாபிசேகமும்

    ஜோதிடத்தில் சந்திரன் மனதை ஆள்பவன் சந்திரன்.

    நவகிரகத்தில் முதல் நிலை பெறுபவன் சூரியன் என்றாலும் சந்திரனை வைத்தே ராசியை குறித்தனர்.சூரியனிடமிருந்து ஒளியை கடன் வாங்கி சந்திரன் பிரகாசிக்கிறது இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. ஒளி கிரகங்களான சூரியன், சந்திரன் ஒரு ஜாதகத்தில் தந்தை, தாயை போன்றது. சூரியன் ஆத்ம பலத்தையும், சந்திரன் மனோ பலத்தையும் தருகிறார்கள்.

    இவ்வளவு சக்தி பெற்ற சூரிய, சந்திரனை வலுவிழக்க வைக்கும் ஆற்றல் ராகு, கேதுக்களுக்கு உண்டு. அமாவாசையில் பிறந்தவருக்கு சூரியன்+சந்திரன் சேர்க்கை இருக்கும். பவுர்ணமியில் பிறந்தவர்களுக்கு சூரியனுக்கு 7-ல் சந்திரன் இருக்கும். இவர்களோடு ராகு கேதுக்கள் நெருங்கி இணைந்து இருந்தால் மன சஞ்சலம் எளிதில் ஏற்படும். நிலையான முடிவெடுக்க முடியாமல் மனம் தடுமாறும்.


    இதே போல் சூரியன் நீசமாகி, ராகு, அல்லது கேது இணைந்தால் ஆன்ம பலமின்றி அடிமைதனமான வாழ்வும் அமையும். அது போல் சந்திரன் அஷ்டமாதிபதி நட்சத்திர சாரத்தில் அமர்ந்து ராகு கேதுக்கள் உடன் 8 டிகிரிக்குள் இணைவு பெற்றவர்கள் கண்டிப்பாக எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்க கடுமையாக திணறுவர். ஒளி கிரகங்களான சூரியனும், சந்திரனும் ஒரு ஜாதகத்தில் வலுவற்று இருக்கும் நிலையில் அடுத்தவரை சார்ந்தோ அல்லது அவருடைய ஆதரவிலோ வாழ்க்கை அமையப் பெறும். அன்னை தந்தையின் ஆதரவும் முழுமையாக இருக்காது. மனநலப்பாதிப்பை கண்டிப்பாக உருவாக்கும். பணம், காதல், வேலை, குடும்பம், குழந்தை என இவற்றில் ஒன்றால் மனம் நிம்மதி இல்லாமல் வாடும்.

    அமாவாசை, பவுர்ணமி காலங்களில் இதன் தாக்கம் அதிகம் இருக்கும். பூரண பவுர்ணமி காலத்தில் கடல் பொங்கும், சீற்றமாகும். இத னால்தான் மன நலம் பாதித்தோர் இந்த நாட்களில் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    சூரியன் பாதிக்கப்பபட்டோர் தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. சந்திரன் பாதிப்படைந்தோர் கிரிவலம் வர பிரச்சினை குறையும். பவுர்ணமி அன்று பூரண உபவாசம் இருந்த பின் மாலையில் சந்திர உதயத்திற்கு பின் வீட்டில் பூஜை செய்து, அபிராமி அம்மனையும், அண்ணாமலையாரையும் வழிபட்ட பின் சந்திரனுக்கு பச்சரிசி சாதம் படைத்து அதை பால் ஊற்றி சாப்பிட சந்திரதோஷம் குறையும்.

    ஐப்பசி மாதம் சிவன் கோவிலில் நடைபெறும் அன்னாபிசேக பூஜையில் கலந்து கொண்டு அங்கு வழங்கப்படும் அன்ன பிரசாதத்தை சாப்பிட்டால் சந்திர தோஷம் நீங்கும்.

    ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவாலயங்களில் உள்ள லிங்கத்திருமேனிக்கு அன்னத்தால் அபிசேகம் செய்யப்படுகிறது.

    தானங்களில் போதும் என்ற மனதி ருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவு அளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அபிசேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படும்.

    அன்னாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தால் அனைத்து பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும்.

    ஐப்பசி 11, சனிக்கிழமை (28.10.2023) அன்று ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம் சிவன் கோவிலில் நடைபெறும். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. உலகத்திற்கே படியலக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். அன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் உலகிற்கே பஞ்சம் வராது என்பது உண்மை.இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்க ளுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

    ஆலய வழிபாட்டில் பவுர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்தி ரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விசேஷமானதாகும். ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்வதால் ஐப்பசி அனனாபிசேகம் மேலும் சிறப்பு பெறுகிறது.

    அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது. அதனால் நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசியை அன்னாபிஷேகம் செய்வது வழிபடுவது சிறப்பு.இந்த அபிஷேகம் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யசூர் வேத பாராயணமும், ஸ்ரீ ருத்திரம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். இரண்டு நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.

    அன்னாபிஷேகப் பலன்கள்

    சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு பழமொழி உண்டு. அது பொதுவாக, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிட்டு வெட்டியாக காலம் கழிப்பவரைக் அவ்வாறு கூறுவார்கள். ஆனால் உண்மைப் பொருள் அதுவல்ல. சோறாகிய அன்னம் கொண்டு நடக்கும் அன்னாபிஷேகத்தைக் கண்ட வர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பதே காலப் போக்கில் இவ்வாறு மாறிவிட்டது.

    வியாபாரத்தில் பிரச்சினை இருப்பவர்களும், நஷ்டமடைந்தவர்களும் அன்னாபிஷேகத்தை தரிசித்துப் பிரசாதத்தை உண்டால் வியாபாரம் நிமிரும். மாணவர்கள் உண்டால் கல்வி ஆர்வம் கூடும்.

    வீட்டில் லிங்கம் வைத்திருந்தும் நித்ய வழிபாடுகள் செய்ய இயலாதவர்கள் வருடத்தில் ஒரு நாள் அன்னாபிஷேகம் செய்து பிரசாதம் உண்டால் சிவபூஜை செய்யாததால் ஏற்படும் தோஷம் விலகும்.

    நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் அன்னாபிஷேகத்தைக் கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பிறக்கும். இந்த அன்னத்தை உண்பவர்களுக்கு என்றைக்குமே உணவுக்கு தட்டுப்பாடு என்பதே வராது. வீட்டில் எப்போதும் தானியங்கள் மிகுந்து இருக்கும்.

    வருடம் முழுவதும் நல்ல விளைச்சல் இருக்கும், ஊர் செழிக்கும், கலைகள் வளரும், மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்பது நம்பிக்கை. மேலும் சுய ஜாதகத்தில் சந்திரன் ராகு, சந்திரன் கேது சேர்க்கையால் ஏற்படும் மன சஞ்சலம், பய உணர்வு, ஆரோக்கிய குறைபாடு சீராகும்.தோற்றப் பொலிவும், தன்னம்பிக் கையும் கூடும்.

    எனவே வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அன்னாபிசேக காட்சியை வழிபடுவதுடன் ஆலயங்களில் அன்று நடைபெறும் அன்னதானத்திற்கு உதவுவதும் நன்மையை அதிகரிக்கும். அன்று நள்ளிரவில் பவுர்ணமி முடியும் நேரத்தில் கிரகணம் சம்பவிக்க உள்ளதால் கோவிலில் அன்னாபிசேகம் நடைபெறும் நேரத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு பயன் பெறவும்.

    குடும்பத்தில் நிம்மதி இல்லாமல், திருமணம் கை கூடாமல் பரிதாப நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    செவ்வாய் தோஷம் என்றதும் எல்லோரும் அலறும் நிலைதான் உள்ளது. செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தாமதம் ஆகும் என்பது போல பலரும் பேசுவது மரபு போலவே ஆகிவிட்டது. ஆனால் செவ்வாய் கிரகம் எல்லோரும் நினைப்பது போல மோசமான கிரகம் அல்ல. அதனுடைய தோற்றத்தை தெரிந்து கொண்டாலே அது நமக்கு புரிந்து விடும்.

    சப்தரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ் முனிவர் நர்மதை ஆற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். ஒருநாள் அதிகாலையில் நர்மதை ஆற்றில் நீராட சென்றார். அப்போது அங்கு தேவலோக பெண் ஒருத்தி நீராடிக் கொண்டிருந்தாள். அவளை கண்டதும் அவளது அழகில் பரத்வாஜ் முனிவர் மயங்கினார்.

    அவளிடம் பேசி மயக்கி இரண்டற கலந்து விட்டார். இதன் காரணமாக அந்த தேவலோக பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையுடன் பரத்வாஜ் முனிவர் ஆசிரமத்துக்கு செல்ல முடியாது. அந்த பெண்ணும் அந்த குழந்தையை தேவலோகத்துக்கு கொண்டு செல்ல இயலாது. எனவே இருவரும் நர்மதை நதிக்கரையிலேயே அந்த குழந்தையை விட்டு சென்றனர்.

    இதை கண்ட பூமாதேவி அந்த குழந்தையை எடுத்து வளர்த்தாள். குறிப்பிட்ட வயது வந்ததும் அந்த குழந்தை தன் தந்தை யார் என்று கேட்டாள். பூமாதேவி நடந்தது அனைத்தையும் அந்த பையனிடம் சொல்லி அவனை பரத்வாஜ் முனிவரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தாள். பரத்வாஜ் முனிவரும் தன் மகனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். அந்த சிறுவனுக்கு செவ்வாய் என்று பெயர் சூட்டி வளர்த்தார்.

    தாய் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்ததால் செவ்வாய்க்கு குடும்பம், தாய், மனைவி போன்ற விவகாரங்களில் வெறுப்பு ஏற்பட்டு போனது. இதனால்தான் ஜாதகத்தில் செவ்வாய் நிற்கும் இடங்களில் குடும்ப ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறார் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 ஆகிய கட்டங்களில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு செவ்வாய் தோஷம் என்று சொல்லி விடுகிறார்கள்.

    இதே போல சந்திரன் நின்ற இடத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 இடங்களில் செவ்வாய் இருப்பதும் செவ்வாய் தோஷம் என்கிறார்கள். இப்படி சொல்வதால் தமிழகத்தில் லட்சக்கணக்கானவர்கள் தற்போது பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். குடும்பத்தில் நிம்மதி இல்லாமல், திருமணம் கை கூடாமல் பரிதாப நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    ஆனால் ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 இடங்களில் செவ்வாய் இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு அதை செவ்வாய் தோஷம் என்று சொல்லவே முடியாது என்பதுதான் உண்மை. ஜாதக கட்டங்களில் மற்ற கிரக அமைப்புகளுடன் செவ்வாய் இருப்பதை ஒப்பிட்டு பார்க்கும் சமயத்தில் செவ்வாய் தோஷம் இல்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.

    பொதுவாக ஜாதகத்தில் 7, 8 இடங்களில் செவ்வாய் இருந்தால் கடுமையான தோஷம் என்பார்கள். 2, 4, 12 இடங்களில் இருந்தால் தோஷம் சற்று குறைவாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் மற்ற கிரக அமைப்புகள் சரியாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய் தோஷம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே 2, 4, 7, 8, 12 கட்டங்களில் செவ்வாய் இருந்து விட்டாலே கண்ணை மூடிக்கொண்டு செவ்வாய் தோஷம் என்று சொல்லக்கூடாது.


    செவ்வாய் தோஷம் இருந்தால் அதே மாதிரி செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்பது பலமொழி போல ஆகி விட்டது. செவ்வாய் கிரகம் வெப்பம் மிகுந்த கிரகமாகும். இந்த கிரக அமைப்பில் இருப்பவர்கள் ஆர்.எச். நெகடிவ் என்ற ரத்த வகை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்ற ரத்த வகை உடையவர்களுடன் இவர்கள் திருமணம் செய்தால் அவர்களது இல்லற இன்பம் திருப்தியாக இருக்காது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

    இதை வைத்துக் கொண்டுதான் ஜோதிடர்கள் ஆண்-பெண் இருவரின் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும் என்று பொதுப்படையாக சொல்லி விட்டார்கள். செவ்வாய் பகவானை சகோதர காரகன், பூமி காரகன் என்று சொல்வார்கள். எனவே ஜாதகத்தில் செவ்வாய் அமைப்பை பொறுத்து சகோதரர்களால் நல்லது-கெட்டது தீர்மானிக்கப்படும்.

    அதுபோல பூமி, விவசாயம் போன்றவற்றில் ஏற்படும் லாப-நஷ்டங்களிலும் செவ்வாய் ஆதிக்கத்தை காண முடியும். ஜாதகத்தில் செவ்வாய் நிற்கும் இடம் மற்றும் அதன் திசை உள்ளிட்டவற்றை நுட்பமாக ஆய்வு செய்தால் மட்டுமே செவ்வாய் தோஷம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கணிக்க முடியும். எனவே வெறுமனே செவ்வாய் தோஷம் என்றால் நம்பாதீர்கள்.

    தோஷம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப உரிய தலங்களுக்கு சென்று பரிகார பூஜை செய்தால் செவ்வாய் தோஷ பாதிப்பில் இருந்து நிவர்த்தி பெற முடியும். எனவே செவ்வாய் தோஷம் என்று சொல்லப்படுவது எந்த அளவுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

    பொதுவாக விநாயகர் வழிபாடு ஒன்றே செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய போதுமானது என்று சொல்வார்கள். செவ்வாய் கிரகத்துக்கு விநாயகர் ஒரு செவ்வாய்க்கிழமை காட்சி அளித்தார். அதனால் செவ்வாய்க்கிழமை மங்களவாரம் என்று சொல்வார்கள். இதில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு மங்களன் என்ற பெயர் வந்தது.

    எனவே விநாயகரை செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தை தடுத்து நிறுத்த முடியும். செவ்வாய்க்கி ழமைகளில் சதுர்த்தி திதி வந்தால் அன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டு பாருங்கள். செவ்வாய் தோஷம் ஓடியே போய் விடும்.

    செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பதும் மற்றொரு பரிகாரம் ஆகும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து சிவப்பு நிற ஆடை அணிந்து செவ்வாய் கிரகத்துக்கு செண்பக பூ, சிவப்பு நிற அரளி பூ கொண்டு பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 5 பேருக்கு சிவப்பு வஸ்திரங்களும் உணவும் கொடுப்பது இன்னும் நல்லது.

    செவ்வாய் தோஷத்தால்தான் திருமணம் தடைப்படுகிறது என்று உறுதியாக தெரிய வந்தால் வளர்பிறை செவ்வாய்க்கிழமை வீட்டிலேயே செவ்வாய் பகவானுக்கு பூஜைகள் செய்தால் சரியாகி விடும். பூஜை செய்யும்போது செவ்வாய் கிரகத்தை மனதில் நினைத்துக் கொண்டு சூடம், சாம்பிராணி காட்டினால் நிச்சயம் பலன் உண்டு.

    செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் தெற்கு திசையில் செவ்வாய்க்குரிய கோலம் வரைந்து அதன் மீது செவ்வாய் எந்திரத்தை வைத்து 108 தடவை செவ்வாய் காயத்ரியை சொன்னால் எவ்வளவு பெரிய செவ்வாய் தோஷமும் கட்டுப்பட்டு விடும். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் இலந்துறையில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் வழிபடுவதும் செவ்வாய் தோஷத்தை போக்க உதவும்.

    பொதுவாக செவ்வாய் கிரகத்தை வழிபடும்போது, "பூமித்தாய் பெற்ற தவப்பு தல்வனே, மின்னல் போன்ற ஒளி கொண்டவனே, சக்தி ஆயுதத்தை ஏந்தி இருப்பவனே, மங்களம் என்ற பெயர் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். என்னை பாதுகாத்துக் கொள்" என்று சொன்னாலே போதும். செவ்வாய் பகவான் மனம் இறங்கி நிச்சயம் அருள்வார்.

    செவ்வாயின் அதிபதி முருகப்பெருமான். எனவே முருகன் வீற்றிருக்கும் ஆலயங்களில் வழிபடுவது நல்லது. குறிப்பாக வைத்தீஸ்வரன் ஆலயத்துக்கு செவ்வாய்க்கிழமைகளில் சென்று வழிபாடு செய்வதால் செவ்வாய் தோஷ பாதிப்பில் இருந்து விடுபட முடியும். வைத்தீஸ்வரன் கோவில் மிக சிறந்த செவ்வாய் பரிகார தலமாக அனைவராலும் போற்றப்படுகிறது.

    இந்த தலத்தில் செவ்வாய் பகவான் தெற்கு பார்த்த நிலையில் உள்ளார். செல்வமுத்துக்குமாரர் சன்னதிக்கு பின்புறம் இவரது சன்னதி அமைந்துள்ளது. நான்கு கைகள் அவற்றில் ஆயுதங்கள் ஏந்தி அபயம் தருவபராக செவ்வாய் காட்சி அளிக்கிறார். செவ்வாய்க்கிழமைகளில் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஆட்டுகிடா வாகனத்தில் செவ்வாய் வீதி உலா வருவார்.

    செவ்வாயும், முருகனும் முன்னும்பின்னு மாக உலா வருவார்கள். அப்போது வழிபட்டால் மிகவும் நல்லது. இந்த பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் தங்கள் ஊர் எல்லையில் உள்ள காவல் தெய்வங்களுக்கு செம்பருத்தி பூ அல்லது சிவப்பு நிற பூவை அணிவித்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.

    செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

    வீர துவஜாய வித்மஹே, விக்ன ஹஸ்தாய தீமஹி, தந்நோ பவும: ரசோதயாத் என்ற இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு சுத்த ஆடைகளை உடுத்தி நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து 108 முறை சொன்னால் செவ்வாய்க் கிரகத்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.

    பூந்தமல்லி, திருப்போரூரில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில்கள், வில்லிவாக்கம் அகதீஸ்வரர் கோவில், நெல்லை கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில், நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் வைத்தமாநி பெருமாள் கோவில், திண்டுக்கல் தண்டாயுதபாணி கோவில், சின்னாளபட்டி சதுர்முகன் கோவில், மதுரை மன்னாடிமங்களம் நரசிங்க பெருமாள் கோவில், சோழவந்தான் பிரளயநாதர் கோவில், தேனி கோடங்கிபட்டி ஆறுமுக நயினார் கோவில், மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில், திருப்புனவாசல் விருத்தக்கீஸ்வரர் கோவில், சென்னை அனுமந்தபுரம் வீரமந்திரர் கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசாமி கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில், திருப்பணந்தாள் அருணசடேஸ்வரர் கோவில், திருவாரூர் வீரா வாடி அகோரவீர பத்திரர் கோவில் ஆகியவையும் செவ்வாய் தோஷத்தை விரட்டும் மிக சிறந்த தலங்களாக திகழ்கின்றன. பயன்படுத்தி செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபடுங்கள்.

    ×