என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு கட்டுரை"

    • ஒருநாள் திடீரென அவரது மனதில் ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது.
    • பல சரக்கு வணிகம் செய்து வந்த அவருக்குப் போதுமான அளவுக்கு வருமானம் இருந்தது.

    வாழ்க்கையின் இன்பத் தருணங்களை எப்போதும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் இனிய வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    "எல்லாம் இன்ப மயம்!" என்கிற முழக்கம் கவிதைகளிலும் பாடல்களிலும் கதைகளிலும் மட்டுமே கேட்கிறதே, அன்றாட வாழ்வியலில் அது வந்து போவது எக்காலம்?; அப்படி அது வந்து போனாலும் ஒரு மின்னலைப் போலல்லவா தோன்றியவுடன் மறைந்து விடுகிறது?; நிரந்தர மகிழ்வாய்த் தங்கி நம்மை நிரந்தர இன்பத்தில் ஆழ்த்திடும் காலம் என்பது வாராதா? என்பதெல்லாம் நம் ஒவ்வொருவரின் ஏக்கமாகவே இருக்கிறது. துன்பமும் இன்பமும் மாறி மாறி வருமென்பது வாழ்வியல் உண்மை என்றாலும், பெரும்பாலானோர் வாழ்வில் துன்பம் மட்டுமே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதே இதற்கு மாற்றுக் காண்பது எவ்வாறு?.

    'இன்பம்' என்பதும் 'துன்பம்' என்பதும் எதிர் எதிர் உணர்வுகள்தாம். இன்பம் வந்தால் உள்ளமும் உடலும் மகிழ்ச்சியால் திளைத்திருப்பதும், உற்சாக உணர்வோட்டம் உடலெங்கும் பரவுவதும் இயல்பாக இருக்கிறது. இன்பச் சூழ்நிலையில் எதைச் செய்தாலும் சரியாகவும் திறமாகவும் இருக்கிறது; இன்பச் சூழ்நிலை பெரும்பான்மையும் வெற்றிச் சாதனைகளின் ஊற்றுக் கண்ணாகவே இருக்கிறது. ஆனால் துன்பச் சூழலோ முற்றிலும் மாறுபட்ட உணர்வுகளைக் கொண்டுவந்து சேர்க்கிறது; மனம் துயரத்தில் ஆழ்ந்து குழப்பத்தில் தடுமாறுகிறது; உடலோ சோகத்தில் தள்ளாடிச் செயலற்றுப் போகிறது. துன்பம் நமக்கு எதிர்மறைச் சிந்தனைகளைக் கொண்டுவந்து கொட்டுவதால், எல்லாச் செயல்களும் தோல்விப் பயணங்களாகவே முடிவடைகின்றன. துன்பத்தை இன்பமாக மாற்றும் மாயவித்தைதான் என்ன?.

    இராமாயணத்தில், இராமனைப் பிரிய நேருகிற தருணத்தில் குகன் கலங்கி நிற்கின்றான். பிரிவு என்பது வந்துவிட்டால் துன்பம் வந்துவிடுமே! என்பது அவனது கலக்கத்திற்கான காரணம். அந்த நேரத்தில் குகனைப் பார்த்து இராமன், "துன்புளது எனினன்றோ சுகம் உளது!" என்று கூறுகிறான். அதாவது 'எல்லா இன்பங்களும் முதலில் துன்பங்களாகவே வரும்; துன்பங்களின் நிறைவு இன்பங்களாகவே மலரும்!' என்பதை இந்தத் தொடரின் வாயிலாக இராமன் நமக்கு உணர்த்த விரும்புகிறான். பிரிவது துன்பமானால் பின்பு இணைவது இன்பம்தானே! என்று குகனிடம் உணர்த்தாமல் உணர்த்தி நிற்கிறான் இராமன். திருவள்ளுவரும்,

    "இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

    துன்பம் உறுதல் இலன்"

    என்கிறார். 'இடும்பை எனப்படும் துன்பம் என்பது, மனித வாழ்வியலின் போக்கில் அடிக்கடி ஏற்படுவதுதான்!; இயல்பானதுதான்! என்கிற உண்மையைப் புரிந்து கொள்பவன் இன்பத்தைத் தனியாகத் தேடாமல், துன்பத்தோடு வாழ்வதற்கும்கூடப் பழகிக்கொள்வான்' என்கிறார் திருவள்ளுவர். சுவைகளில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு, உறைப்பு எனப் பலவகை உண்டு என்றாலும் மனம் எப்போதும் இனிப்பை மட்டுமே நாடி நிற்பது போன்றது இன்பத்தை மட்டுமே வேண்டி நிற்பது ஆகும். எல்லாச் சுவைகளின் கூட்டுக்கலவைகளில் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்கள், ஆகச் சிறந்த சுவைப்பையும், சத்துக்களையும் தருவதைப்போல, இனிப்புத் தவிர்ந்த பல்சுவை உணர்வுகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும்.

    துக்கமோ மகிழ்ச்சியோ அதை நமது மனம் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொறுத்தே அவை தரும் விளைவுகளின் தாக்கமும் எதிர்மறையானதாகவோ நேர்முறையானதாகவோ இருக்கும். இன்பத்தை இன்பமாக எதிர்கொள்வதைப்போல, துன்பத்தையும் இன்பமாகவே எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு துன்பம் வருகிறது; அதற்கு எளிதாகத் துன்பம் கொடுத்து அதனைத் தூரத் தள்ளிவிடுவதற்கு ஓர் எளிய வழியை வள்ளுவர் கூறுகிறார்.

    "இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு

    இடும்பைப் படாதவர்"

    'துன்பத்தைக் கண்டு துவண்டுவிடாமல் துணிச்சலோடு எதிர்த்து நின்று போராடத் தெரிந்தவர்களே துன்பத்திற்குத் துன்பம் செய்து இன்பம் விளைவிப்பவர்கள் ' என்பது வள்ளுவ வாக்கு. வாழ்க்கையில் துன்பமே இயல்பானது; அதனைத் துரத்தித் துரத்திப் போரிடுவதே இன்பம் விளைவிக்கும் செயலாகும். இப்போராட்டத்தில், துன்பமும் துயரமும் சூழத் தளர்ந்து போரிடாமல், தெம்பும் நம்பிக்கையும் பெருக உத்வேகத்துடன் போரிட்டால், வெற்றி இலக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். ஓர் ஊரில் ஒரு வணிகர் இருந்தார். பலசரக்கு வணிகம் செய்து வந்த அவருக்குப் போதுமான அளவுக்கு வருமானம் இருந்தது. நாலு பெண்குழந்தைகள். தனது வருமானத்தில் நாலு பெண்குழந்தைகளுக்கும் நல்ல கல்வியை வழங்கி ஆளாக்கி வளர்த்து விட்டார். இப்போதுதான் அவரது வாழ்க்கையில் துன்பம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. நாலு பெண்களுக்கும் படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்க வேண்டும்; அதோடு அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளைகள் கிடைத்துக் கல்யாணம் வேறு நல்லபடியாகச் செய்து முடிக்க வேண்டும். பல சரக்குக் கடை வணிகமும் தற்போது சிரமதிசையில் போய்க்கொண்டிருந்தது; போட்டிக்கு நிறையக் கடைகள் வந்ததனால் நஷ்டக் கணக்கு நாள்தோறும் பெருகிக் கொண்டே இருந்தது.

    அந்த ஊரில் பெரிய கோவில் ஒன்று இருந்தது. அக்கோவிலுக்குச் சென்று அங்குள்ள கடவுளை நாள்தோறும் வழிபடும் வழக்கத்தைப் பல்லாண்டுகளாகக் கொண்டிருந்தார் வணிகர். முன்பெல்லாம் வியாபாரம் நன்றாக நடந்துகொண்டிருக்கும் போது, அவருக்கு நிதானமாக நின்று சாமி கும்பிடுவதற்கே நேரம் இருக்காது; ஆனால் இப்போதெல்லாம் கோவிலுக்கு வந்தால் மணிக்கணக்காக நேரத்தைச் செலவழிக்கிறார். தெய்வத்தின்முன் நின்று தன்னுடைய மகள்களின் வேலைவாய்ப்பு, திருமணம், மற்றும் வணிகத்தில் நேர்ந்துவரும் நஷ்டங்கள் ஆகியவை குறித்து நிறையவே புலம்பவும் தொடங்கி விட்டார்.

    ஒருநாள் திடீரென அவரது மனதில் ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது. "நாள்தோறும் கூட்டத்தோடு கூட்டமாய் வந்து சாமிமுன் நின்று நமது துன்பங்களையெல்லாம் புலம்பிவிட்டுச் செல்கிறோமே! உண்மையிலேயே சாமி அதனை முழுமையான கவனத்தோடு கேட்பாரா?. நாம் இப்படிச் செய்தால் என்ன? ஊரில் சில முக்கிய நபர்களைக் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று பார்க்காமல், தனியாகச் சென்று தனிப்பட்ட முறையில் பார்த்தால் காரியம் நடந்துவிடுகிறதே!. அதைப்போல நாமும் சாமியை யாருமில்லாத நேரம் பார்த்துச் சென்று , நமது துன்பங்களைச் சொல்லிக் கதறி அழுதால் நிச்சயம் நமது துன்பங்களைக் கடவுள் நீக்கி விடுவாரல்லவா?".


    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

    தொடர்புக்கு 9443190098

    'சரியான முடிவு!' எனத் தீர்மானித்த வணிகர் அன்று இரவே கோவிலுக்குள் சென்று நடை சாத்தும் நேரத்தில் யார் கண்ணிலும் படாமல் கோவில் மண்டபத்தில் ஒளிந்து கொண்டார். அப்படியே ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்து சிறிது நேரம் கண்ணயர்ந்து தூங்கவும் தொடங்கிவிட்டார். நள்ளிரவு நேரத்தில் யாரோ பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டு படக்கென்று விழித்துக்கொண்டார். அந்தக்கோவில் பிரகாரத்தில் இருந்த ஒரு தூணும் ஒரு படிக்கல்லும் பேசிக்கொண்டன. அவை பேசிக்கொண்டிந்ததை எந்தவித ஓசையும் எழுப்பிவிடாமல் அமைதியாகக் கேட்டார் வியாபாரி.

    படிக்கல் பேசியது, "இந்தக் கோவிலில் கருவறையில் சாமியாக இருக்கக் கூடிய சிலையும், தூணாக இருக்கக் கூடிய நீயும், படியாகக் கிடக்கக் கூடிய நானும் ஆகிய நாம் மூவரும் ஒரே மலையில் அருகருகே கிடந்த பாறாங்கற்கள்தானே!. நம்மை வந்து பார்த்த சிற்பியும் கொத்தனாரும் நம்மை இப்படிப் பிரித்துத் தூணாகவும் சாமிசிலையாகவும், படிக்கட்டாகவும் மாற்றி இந்தக் கோவிலில் நம்மை அமைத்து விட்டார்கள். ஆனால் எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி தாங்கமுடியாத துன்பம்?. கோவிலுக்கு வருவோர் போவோர் என்று ஒவ்வொருவரும் மிதித்து மிதித்து நான் படும் வேதனைக்கு அளவே கிடையாது!".

    உடனே தூண் பேசியது, " உனக்காவது ஆட்கள் வந்து போய் மிதித்தால் மட்டுமே வேதனை! மற்ற நேரத்தில் நீ மிதிபடாமல் இன்பமாக இருக்கலாம்; ஆனால் நான் அப்படியா?. என்னைத் தூணாக நிறுத்தி, என்மீது இந்தக் கோவிலையே தூக்கி நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இரவு பகல் எந்நேரமும் இறக்கி வைக்க முடியாத சுமையைச் சுமந்த வண்ணமே இருக்கும் என் துன்பத்தை நான் எங்குபோய்ச் சொல்வேன்?".

    "ஆமாம்! ஆமாம்! உன் துன்பமும் பெருந்துன்பம்தான். நம்மில் துன்பம் எதுவுமில்லாமல் ஜாலியாக இருப்பது சாமிசிலை மட்டும்தான்" என்றது படிக்கல். உடனே கருவறையிலிருந்து ஒரு விசும்பல் ஒலி கேட்டது; இலேசான வெளிச்சத்தில் வியாபாரி உற்றுக் கவனித்தார்; சாமி சிலை அழுது கொண்டிருந்தது. "உனக்கென்ன கஷ்டம்?. அன்றாடம் பாலபிஷேகம், பன்னீர் அபிஷேகம், நெய் அபிஷேகம் என்று விதம் விதமான அபிஷேகங்களில் உன்னைக் குளிப்பாட்டி வணங்குகிறார்களே! உனக்கென்ன துன்பம்?" தூண் கேட்டது. "எல்லாரும் என்னைக் குளிப்பாட்டுகிறார்கள்!, குளிர்விக்கிறார்கள்!, கும்பிடுகிறார்கள்! உண்மை. ஆனால் என் சிலை முன்னால் நின்றுகொண்டு ஒவ்வொரு பக்தரும் அவர்கள் படுகிற துன்பங்களை அடுக்கடுக்காய்ச் சொல்லி அழும்போது, ஒவ்வொரு துன்பத்தையும் நானே அனுபவிப்பதுபோல் உணர்கிறேன். ஒரு நாளைக்குப் பத்தாயிரம்பேர் வந்து என்னை வழிபட்டாலும், எந்தக் குறையும் சொல்லாமல் மகிழ்ச்சியோடு வந்து என்னை எந்தத் தொந்தரவும் செய்யாமல் வழிபட்டுச் செல்பவர்கள் பத்துப்பேர்கூடத் தேற மாட்டார்கள்; அடுத்தவர் படும் துன்பப் பட்டியல்களிலிருந்து மீண்டு வந்து நான் எப்போது நிம்மதியாக இருக்கப்போகிறேன்? என்று நினைத்துப் பார்க்கிறேன்; அதற்கு வாய்ப்பே இல்லை!; துன்பத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வதிலும் ஒரு இன்பம் இருக்கும்; ஏற்றுக்கொள்வோம்!" என்றது சாமி சிலை. சாமியைத் தனிப்படப் பார்த்துத், துன்பப்பட்டியல் வழங்க வந்திருந்த வணிகருக்குக், கோவிலுக்குள்ளேயே இவ்வளவு புலம்பல்களா? என்று ஆகிப்போனது.

    துன்பம் இருக்கும் வரைதான் நிவர்த்திக்கான தேடல்களும் தீர்ப்பதற்கான வேட்டைகளும் இருந்துகொண்டே இருக்கும். மனிதனுக்கு இன்பம் வேண்டும்! ஆனால் துன்பத்தை வென்றால்தான் இன்பம் சாத்தியம். துன்பமில்லாத உலகத்தில் போட்டிகளே இல்லை; போட்டிகள் இல்லையென்றால் வெற்றி ஏது? மகிழ்ச்சி ஏது?.

    நம்மில் ஒருவருக்குத் துன்பம் என்றால் துடைக்க வரும் அத்தனை கரங்களும் அன்பின் கரங்கள்; சமூக ஒருங்கிணைவைத் துயரங்களே கயிறுகளாகச் சேர்ந்து பிணைத்து வைக்கின்றன. அடுத்தவர்க்கு உதவுவது அல்லது அடுத்தவரிடம் உதவிக்காகக் காத்து நிற்பது ஆகிய இவ்விரண்டு அன்பின் செயல்களும் துன்பத்தின் நெருக்கடிகளால் சாத்தியமாகின்றன; பிறகு உதவி என்னும் மகிழ்ச்சி மலர்ந்து மணம் பரப்புகிறது.

    • கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடுகளை கண்டறிவதற்கு பலவிதமான பரிசோதனை முறைகள் உள்ளன.
    • கடந்த 30 வருட காலத்தை எடுத்துக்கொண்டால், ஆரம்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்கிற ஒரே ஒரு பரிசோதனை முறை இருந்தது.

    குழந்தைபேறு சிகிச்சையில் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்றால், அவரது கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தான், எல்லா தம்பதியினரும் முதலில் தெரிந்து கொள்வதற்கான ஆர்வமான விஷயமாக இருக்கும். அவர்களது குடும்பத்தினரும் அதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.

    கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஸ்கேன் உள்ளிட்ட ஒவ்வொரு பரிசோதனைகளையும் மருத்துவர்கள் செய்யும் போது, டாக்டர் குழந்தை நன்றாக இருக்கிறதா, ஆரோக்கியமாக இருக்கிறதா என்று எல்லா தம்பதிகளுமே கேட்பது வழக்கமான விஷயமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

    ஆரோக்கியமான குழந்தை பெற விரும்பும் பெண்கள்:

    கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும், உருவ அமைப்புகளில் நன்றாக இருக்க வேண்டும், மரபணு சார்ந்த குறைபாடுகள் எதுவும் இருக்கக்கூடாது, குரோமோசோம் குறைபாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற வகையில், எல்லா வழிகளிலும் ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்வதைத்தான் எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள்.

    கருவில் இருக்கும் குறைபாடுகளை நாம் கண்டுபிடிக்க முடியுமா? இதை கண்டுபிடித்தால் நிறைய நேரங்களில் தேவையில்லாத, குறைபாடுகள் கொண்ட குழந்தை பிறப்பை தவிர்க்க முடியுமே என்பது தான் பலரது கேள்வியாக இருக்கும். அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இன்றைய நவீன மருத்துவத்தில் பரிசோதனை முறைகள் உள்ளன.


    டாக்டர் ஜெயராணி காமராஜ்

    குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்

    செல்: 72999 74701

    இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் ப்ரீநேட்டல் டெஸ்ட் எனப்படும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை என்பது பெண்களின் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை கண்டறிவதற்கான வழிமுறைகளை கொடுத்து இருக்கிறது. மகப்பேறுக்கு முந்தைய இந்த பரிசோதனையானது கர்ப்பகாலத்தின் போது தாயின் ஆரோக்கியத்தையும், கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் அறிந்து கொள்வதற்காக செய்யப்படுகிறது.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த பரிசோதனை மூலம் குழந்தைக்கு மரபணு ரீதியான குறைபாடு இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது பாதிப்புகள் இருந்தாலோ அதை எளிதில் கண்டறிய முடியும். மேலும் அதை ஆரம்பத்திலேயே சரி செய்யவும் முடியும்.

    குறைபாடு உள்ள குழந்தை பிறப்பு அரிது:

    கடந்த 30 வருடங்களாக நான் குழந்தையின்மைக்கான சிகிச்சைகளை அளித்துக்கொண்டு இருக்கிறேன். ஏராளமான விஷயங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஒரு குறைபாடு உள்ள குழந்தை பிறப்பு என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. அதாவது எனக்கு தெரிந்து கடந்த 15 வருடங்களாக பிரசவத்தின் போது குழந்தைகளுக்கு பெரிய அளவிலான குறைபாடுகள் வருவது இல்லை.

    இன்னும் சொல்லப்போனால் இப்போதைய காலகட்டத்தில் குழந்தை கருவில் இருக்கும் போதே அதற்கு ஏதாவது குறைபாடுகள் இருக்கிறதா என்று முன்கூட்டியே கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிப்பதால் தான் இந்த வகையிலாக சாதனையை நிகழ்த்த முடிகிறது.

    கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடுகளை கண்டறிவதற்கு பலவிதமான பரிசோதனை முறைகள் உள்ளன. கடந்த 30 வருட காலத்தை எடுத்துக்கொண்டால், ஆரம்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்கிற ஒரே ஒரு பரிசோதனை முறை இருந்தது.

    ஆனால் இன்றைக்கு நவீன வளர்ச்சி காரணமாக, பலவிதமான பரிசோதனைகள் மூலமாக, கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா என்பதை கண்டறிய முடியும். இதில் பரிசோதனை முறைகளில் ஏராளமான முன்னேற்றங்களும் வந்துள்ளது.

    பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்:

    30 வருடங்களுக்கு முன்பு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிய மார்க்கர்ஸ் எனப்படும் சில அறிகுறிகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள். அந்த அறிகுறிகளை பார்த்து இது பாதிக்கப்பட்ட குழந்தை என்பதை உறுதி செய்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த மார்க்கர்ஸ் என்பது மிகவும் இயல்பானது.

    நான் சிகிச்சையளிக்க தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில், 8 வருடம் குழந்தை இல்லை என்று ஒரு தம்பதி என்னிடம் சிகிச்சைக்காக வந்தனர். அவர்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தது. மறுபடியும் இரண்டாவது குழந்தை கருத்தரிக்கும் போது, அந்த குழந்தைக்கு அல்ட்ரா சவுண்ட் செய்து பார்த்தபோது, இருதயத்தில் ஒரு எக்கோஜெனிக் போக்கஸ் இருந்தது.

    இந்த எக்கோஜெனிக் போக்கஸ் இருந்தால் குழந்தைக்கு இருதயத்தில் ஏதாவது குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. எனவே அந்த குழந்தையின் இருதயத்தில் ஏதாவது குறைபாடு இருக்குமோ என்று பயந்து 14 வாரத்தில் அந்த கருவை வேண்டாம் என்று கருக்கலைப்பு செய்தனர். இது கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு முன்பு நடந்தது.

    ஏனென்றால் அந்த குழந்தைக்கு இருதயத்தில் குறைபாடு வரலாம். இதயத்துடிப்பை உருவாக்குவதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம்.

    அதனால் அந்த குழந்தைக்கு இதயத்துடிப்புகளில் மாறுபாடு ஏற்பட்டு உயிர்வாழ முடியாத நிலை வரலாம் என்று கருதி கருக்கலைப்பு செய்யப்பட்டது.



    ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதுபோன்று நிறைய குழந்தைகளுக்கு இருக்கும் பாதிப்புகளை கண்டுபிடித்து, அதனை, தொடர்ந்து கண்காணித்து, நன்றாக சிகிச்சை அளிக்கும் போது, இது பயப்படுவதற்கான பெரிய விஷயம் இல்லை என்று பார்க்கப்படுகிறது. அதனை கண்டுபிடிப்பதற்கும் அடுத்தடுத்த சில நவீன முறைகள் இருக்கிறது.

    ஏனென்றால் இந்த மாதிரி மார்க்கர்ஸ் இருந்தால், ஏதாவது மரபணு சார்ந்த குறைபாடுகள் இருக்கலாமா என்பது போன்று நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய தரவுகள் மற்றும் நிறைய ஆதாரங்களை கண்டுபிடித்ததில், பல பிரச்சனைகள் முந்தைய காலத்தில் குறை என்று நினைத்த நிலையில், இன்றைய காலத்தில் அதனுடன் வாழலாம், அதற்கு தீர்வு இருக்கிறது என்ற நிலை உருவாகி உள்ளது.

    பரிசோதனையை எப்போது தொடங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்:

    இதுதவிர குழந்தை வயிற்றில் இருக்கும் போதே சில சிகிச்சை முறைகளையும் செய்ய முடியும். உதாரணத்துக்கு சின்னச்சின்ன அறுவை சிகிச்சைகளை செய்யலாம். ரத்த மாற்றுகள் செய்யலாம். பல நேரங்களில் பல அறுவை சிகிச்சைகளையே செய்யலாம். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாமே தற்போதைய மருத்துவ வசதியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்கிற அளவுக்கு பலவித முன்னேற்றங்கள் அடைந்துள்ளது.

    அந்த வகையில் ஒரு பெண் கருவுற்றால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு என்னென்ன பரிசோதனை முறைகளை செய்ய வேண்டும், என்னென்ன பரிசோதனைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    குறிப்பாக ஒரு கருவில் குழந்தை இயல்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான பரிசோதனையை எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

    மேலும் கருத்தரிப்பதற்கு முன்பே அவர்களின் உடலில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறது என்பதை பார்த்து, அதனால் குழந்தைகளுக்கு ஏதாவது குறைபாடுகள் உண்டாகுமோ என்பதையும் கண்டுபிடிப்பது ரொம்பவும் முக்கியம்.

    உதாரணத்துக்கு ஒரு பெண்ணுக்கு ஒரு சில பால்வினை நோய்கள் இருக்கிறது என்றால், அந்த குழந்தையும் பாதிக்கப்பட்ட குழந்தையாக இருக்கும். எனவே கருத்தரிப்பதற்கு முன்பே பல பரிசோதனைகள் செய்யும் போது, குழந்தைக்கு பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதனை சரிசெய்த பிறகுதான் அந்த பெண் கருத்தரிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    எனவே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள் முதலில் கருத்தரிக்கும் பெண்ணுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்? கர்ப்பகாலத்தின் போது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிய என்னென்ன பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு.
    • உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பமாகும்.

    "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாராதியார் உணவின் முக்கியத்துவத்தை பற்றி கூறியுள்ளார். மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு. இந்த உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பமாகும்.

    உணவின் பாதுகாப்பையும், பசி, பட்டினியை போக்கவும் 1945-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூரும் விதமாக 1981-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ந் தேதியை உலக உணவு நாளாக கொண்டாடப்படுகிறது.

    உணவு உற்பத்திக்கு முக்கியமான விவசாயிகள், உணவு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலாளர்கள் என இதில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    • ஆடை என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சி நிலையாகும்.
    • நாம் அணியும் ஆடைகள் இழைகளால் ஆனது.

    ஆடை என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சி நிலையாகும். நாம் அணியும் ஆடைகள் இழைகளால் ஆனது. இழைகள் என்பது மெல்லிய நூல் போன்ற அமைப்பாகும். இழைகளின் தோற்றம் மற்றும் தன்மையின் அடிப்படையில் ஆடைகள் தயாரிக்க பயன்படும் துணி இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒன்று இயற்கை துணி மற்றொன்று செயற்கை துணி.

    இயற்கை துணி வகைகள்:

    இயற்கையான மூலப்பொருட்களான பருத்தி, சணல், வாழை நார், கற்றாழை நார், பட்டுப்புழு போன்ற பொருட்களில் இருந்து இவ்வகை துணிகள் தயாரிக்கப்படுகிறது.

    பருத்தி:

    இயற்கையான முறையில் கிடைக்கும் இவ்விழைகளில் ஈரப்பதத் தன்மை உள்ளது. எனவே வெயிலில் உடலை குளுமையாக உணரச்செய்யும். மேலும் காட்டன் நூலிழைகளில் காற்று புகும் தன்மை உள்ளது. எனவே எவ்வளவு வெயிலாக இருந்தாலும் காற்றோட்டமாக இருக்கும். வியர்வையை நன்றாக உறிஞ்சும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து நம்மை பருத்தி ஆடை பாதுகாக்கும்.

    ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே தோல் நோய் உள்ளவர்கள் பருத்தி ஆடை அணிவது நன்று. சித்த மருத்துவ நூல்கள் பருத்திக்கு உள்ளழலாற்றி செய்கை இருப்பதாக கூறுகிறது. எனவே இதை அணியும்போது உடல் வெப்பம் தணியும்.

    சணல்:

    சணல் இழைகளினால் உருவாக்கப்படும் ஆடைகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடை காலங்களில் அணிவதற்கு இது ஏற்ற துணியாகும். ஏனெனில் செயற்கை துணியை போன்று வியர்வையை ஏற்படுத்தாது. வியர்வையை உறிஞ்சும் தன்மையும் இதற்கு அதிகம். மேலும் புற ஊதா கதிர்களை உறிஞ்சாது. இதிலுள்ள பைட்டோகெமிக்கல்ஸ் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடும் தன்மை பெற்றுள்ளது.

    வாழை நார்:

    மற்ற இயற்கை துணி வகைகளை போலவே இது ஈரப்பதத்தை நன்றாக உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளது. நுண்ணுயிர்களை எதிர்த்து போராடுவதோடு, சூரியனின் தீங்கான கதிர்களில் இருந்தும் நம்மை பாதுகாத்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. தோல் நோய்கள் உள்ளவர்களும், இதை பயன்படுத்தலாம்.

    வாழை நாரினால் ஆன ஆடைகளை தொடர்ந்து உடுத்தி வரும்போது மகப்பேற்றிற்கு பிறகு பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் அறுவை சிகிச்சை தழும்புகள் விரைவில் மறையும்.

    கற்றாழை நார்:

    கற்றாழையில் 96 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. எனவே இவற்றின் நாரை கொண்டு உருவாக்கப்படும் ஆடைகள் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து, சரும செல்கள் புத்துயிர் பெற உதவுகிறது. ஆண்டிபேக்சரியல், ஆன்டிவைரஸ், ஆன்டிப்ருரிடிக் போன்ற பண்புகள் உள்ளதால் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. குழந்தைகளின் ஆடைகளை தயாரிக்க இந்த வகை நார்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மூங்கில் நார்:

    மூங்கிலின் இலை மற்றும் தண்டு பகுதியில் இருந்து நார்கள் பிரிக்கப்பட்டு ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதில் நுண்ணிய இடைவெளிகள் நிறைய உள்ளதால் வியர்வையை நன்கு உறிஞ்சி காற்றோட்டத்துடன் இருக்க செய்யும். பருத்தியை விட மென்மையான இதன் இழைகள் ஆடைகள், துண்டுகள், முக மூடிகள், சானிட்டரி நாப்கின்கள் போன்றவை தயாரிக்க பயன்படுகிறது.

    மூங்கில் இழைகளில் ஆன்டிபங்கள், ஆன்டிபேக்ட்ரியல், பேக்டீரியாஸ்டிக் போன்ற பண்புகள் உள்ளதால் பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. மேலும் இவ்வகை ஆடை உடல் துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது.

    தாமரை நார்:

    தாமரை நார்களை கொண்டு தயாரிக்கப்படும் ஆடைகளை அணியும்பொழுது மன அமைதியும் நல்ல ஆரோக்கியமும் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதை தொடர்ந்து அணியும்போது தலைவலி, இருதய கோளாறுகள், நுரையீரல் பிரச்சினை குணமாவதாக கூறப்படுகிறது.

    மேலும் மற்ற இயற்கை துணி வகைகளை போன்று இதுவும் ஈரத்தை நன்றாக உறிஞ்சும். காற்றோட்டத்துடன் இருக்க செய்யும். அணிவதற்கு மிருதுவாகவும், சவுகரி யமாகவும் இருக்கும். தாமரை இழைகளினால் ஆன ஆடைகளில் கறை படியும் வாய்ப்பு மிகவும் குறைவு.

    பட்டு:

    பட்டு ஆடைகள் உடலுக்கு பலவித நன்மைகளை கொடுக்கும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை பட்டாடை தடுக்கும். தோலில் உள்ள ஈரபதத்தை தக்க வைக்கும். இதில் உள்ள ஆல்புமென் என்ற வேதிப்பொருள் சருமத்தின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.

    இதனால் இறந்த சரும செல்கள் நீங்கி புதிய செல்கள் நிறைய உற்பத்தியாகிறது. இதனால் சருமம் பொலிவு பெறுகிறது. இதனையே சித்த மருத்துவ நூல்களில் உடலுக்கு ஒளியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

    பட்டில் இயற்கையாக உள்ள ஒருவகை புரதம் (ஹைபோ அலர்ஜெனிக்) ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. எனவே இது கரப்பான் (எஜிமா), ஆஸ்துமா போன்ற நோயுள்ளவர்களுக்கு ஏற்ற உடையாகிறது.

    பட்டுத்துணியில் ஆன்டிபங்கள் பண்புள்ளதால் பூஞ்சைகளினால் ஏற்படும் நோய்தொற்றை சரி செய்ய உதவுகிறது. மேலும் சுத்தமான பட்டாடை அணியும் போது வெயில் காலத்தில் குளிர்ச்சியும், குளிர் காலத்தில் வெப்பமும் கிடைக்கும். பட்டாடைகளை தொடர்ந்து அணிந்து வரும் போது நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தி நல்ல உறக்கத்தை கொடுக்கிறது.

    சித்த மருத்துவ நூல்கள் பட்டாடை அணியும் போது மனம் தெளிவு பெறும் என்றும், கபம் நீங்கும் என்றும் கூறுகிறது. வெண் பட்டினால் ஆன ஆடையை அணியும் போது குளிர் மற்றும் காய்ச்சல் குணமாகும், வாத நோய்கள் நீங்கும்.

    கம்பளி:

    கம்பளி துணிகள் குளிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்சுலேட்டர் போன்று செயல்பட்டு உடலுக்கு வெப்பத்தை கொடுக்கும். கம்பளி ஆடையினை அணியும் போது நீரேற்றம், தலைவலி, வாத நோய்கள் நீங்கும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

     செயற்கை துணி வகைகள்:

    செயற்கை துணிகள் என்பது வேதியியல் செயல்முறைகள் மூலம் உருவாகும் துணியாகும். ரேயான், நைலான், வெல்வெட், பாலியெஸ்டர் போன்றவை செயற்கை துணி வகைகளாகும்.

    ரேயான்:

    ரேயான் துணிகளை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது இதிலுள்ள வேதிப்பொருட்கள் தோலின் மூலம் கிரகிக்கப்பட்டு நோய் நிலையை ஏற்படுத்தும். ரேயான் துணி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சல்பியூரிக் மற்றும்நிட்ரிக் ஆசிட் தோலில் அரிப்பு ஏற்படுத்தும். குமட்டல், வாந்தி, நெஞ்சு வலி மற்றும் தூக்கமின்மை போன்ற குறிகுணங்களும் ஏற்படும்.

    பாலியஸ்டர்:

    பாலியஸ்டர் துணியில் இருந்து வெளிவரும் பைடோஸ்ட்ரோஜன் உடலில் ஹார்மோன் கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை அணியும் போது ஏற்படும் அதிக உடல்சூடு மற்றும் வியர்வையால் தோலில் அரிப்பு மற்றும் படைகள் ஏற்படும். வெகு நாட்கள் இவ்வகை ஆடைகளை அணியும் போது சுவாச பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    நைலான்:

    நைலான் ஆடை அணியும்போது உடல் வெப்பம் வெளியேறாது. உடல் வெப்பத்தால் ஆடையில் இருந்து வெளியேறும் பார்மல்டெக்ஸ் தோலில் அரிப்பு, கண்ணில் நீர்வடிதல் போன்ற குறிகுணங்களை ஏற்படுத்தும்.

    நைலான் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பாரியம் சல்பேட் மற்றும் டைட்டானியம் ஆக்சைடு தோலை கருமை நிறமடையச் செய்யும். மேலும் இது நரம்பு மண்டலத்தை தாக்கி தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

    ஜீன்ஸ்:

    ஜீன்ஸ் உடை ஆரம்பத்தில் குளிர்பிரதேசங்களில் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் தற்போது அனைத்து இடங்களிலும் பெரும்பான்மையினரால் அணியப்படுகிறது. ஜீன்ஸ் பேண்ட் இறுக்கமாக அணிவதால் காற்று உள்புகாமல் உடம்பு சூடாகும். இதனால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி குறைவதற்கு வாய்ப்புள்ளது. பெண்களுக்கும் கருப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    நம் உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியாகும். எனவே நாம் உடுத்தும் உடை வியர்வையை உறிஞ்சக்கூடிய தன்மை உடையதாக இருக்க வேண்டும். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணியும்போது சுரக்கின்ற வியர்வை வெளியேறாமல் அதிலிருந்து நுண்கிருமிகள் உற்பத்தியாகி படர்தாமரை போன்ற சரும பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அதுமட்டுமல்லாமல் ஜீன்ஸ் அணிவதால் சிறுநீர்பாதை தொற்று, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    மேலும் இது அடிவயிற்றில் இருந்து தொடைப்பகுதி வழியாக செல்லும் மெல்லிய நரம்புகளை அழுத்துவதால் கடுமையான கால் வலி ஏற்படும் வாய்ப்புள்ளது.

    இயற்கை மருத்துவர்

    நந்தினி

    9500676684

    • வெளிநாடு செல்லும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
    • வெளிநாட்டு கல்லூரிகளின் கல்வி ஆண்டானது செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.

    கடந்த வாரம் நமது மாணவர்கள், வெளிநாடுகளில் சென்று மருத்துவக்கல்வி கற்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களான 18-11-2021 புதிய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள், நீட் தகுதி மதிப்பெண் மற்றும் இன்னபிற விவரங்களை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, தற்போது மேலும் சில முக்கியமான விவரங்களை தெரிந்து கொள்வோம்.

    வெளிநாடு செல்லும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

    1) புதிய தேசிய மருத்துவ ஆணையத்தின் 18-11-2021 அரசாணைக்கு பின்பாக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கான முதல் தகுதியாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு இருந்த தகுதிச் சான்றிதழ் பெறும் நடைமுறை இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது.

    2) முதலில் மாணவர்கள் இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் அவ்வப்போது தரப்படும் அறிவிப்புகள் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அதன் இணையதளமான www.nmc.org.in ல் சென்று இது குறித்து சரியான விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    3) மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரியானது உலக சுகாதார மையத்தின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளதா என்பதை அதன் இணையதளமான www.wdoms.org-ல் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    4) மேலும் மேற்சொன்ன www.wdoms.org என்ற இணையதளத்திலேயே அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் இணையதள முகவரியும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்வழியே கல்லூரிகளைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் கல்லூரிகளின் போலியான இணையதள முகவரிகளை தவிர்த்து கல்லூரிகளைப் பற்றிய சரியான விவரங்களை பெற முடியும்.

    5) முக்கியமாக இன்றைய நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் ஏராளமான போலியான விளம்பரங்களும், தவறான செய்திகளும் பல்வேறு வழிகளில் பகிரப்படுகின்றன. அதனை அப்படியே நம்பாமல், அதன் உண்மைத் தன்மையை மேற்கண்ட தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் உலக சுகாதார மையத்தின் இணையதளங்களில் சரிபார்த்து கொள்ள வேண்டும்..

    சரியான மருத்துவக் கல்வி /ஆலோசகர் நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி?

    *ஒரு மாணவர் வெளிநாடு சென்று மருத்துவக்கல்வி பயில வேண்டும் என்று முடிவெடுத்தால் முதலில் ஒரு சரியான கல்வி ஆலோசகரை / நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் எளிதாக தங்களுக்குத் தேவையான கல்லூரியை அடையாளம் காண இயலும்.

    *முதலில் அந்த நிறுவனம் முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

    *பின்னர் அவர்களுக்கு இந்த துறையில் உண்மையில் எத்தனை ஆண்டுகள் அனுபவம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    *மற்றும் மேற்படி நிறுவனத்திற்கும், வெளிநாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பதை அவர்களின் கல்லூரிகளுடனான ஒப்பந்தங்களைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    *மேலும் முக்கியமாக மேற்கண்ட நிறுவனமானது ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் மாணவர்களை அனுப்புகிறார்களா? அல்லது பல்வேறு நாடுகளுக்கும் மாணவர்களை அனுப்புகிறார்களா? எனத் தெரிந்து கொள்வது மிக அவசியம். ஏனென்றால் ஒரு நாட்டிற்கு மட்டும் மாணவர்களை அனுப்பும் நிறுவனத்தார் அந்த ஒரு நாட்டினைப் பற்றி மட்டுமே உயர்வாக சொல்லுவார்கள். இது ஒரு சரியான வழிகாட்டுதலாக அமையாது.

    *மாணவர்களின் 6 வருட கல்வி காலத்திற்கும் அந்த நிறுவனம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறதா என்பதை முறையான ஒப்பந்தம் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    *நிறுவனமானது மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் பல்வேறு கிளை அலுவலகங்களை கொண்டுள்ளதா அல்லது ஒரே இடத்தில் உள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    *மிக முக்கியமாக சரியான பதிவு செய்யப்பட்ட நிறுவனம் வழியாக மட்டுமே, மாணவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும். ஏற்கனவே அங்கு பயிலும் மாணவர்கள், தெரிந்த உறவினர் என்பது போன்ற நபர்கள் மூலம் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவ்வாறானவர்களால் ஏதேனும் அவசர காலங்களில் மாணவர்களுக்கு சரியாக உதவ இயலாது. உதாரணமாக தற்போது உக்ரைன் போர் சூழலில் அவ்வாறு சென்ற மாணவர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகினர்.

    கல்லூரி கட்டணங்கள் மற்றும் பிற செலவுகள் குறித்து:

    1)மாணவர்கள் அவர்களின் கல்லூரி கட்டணத்தை நேரடியாக கல்லூரியில் சென்றோ அல்லது வங்கி மூலமாக ஸ்விப்ட்பரிவர்த்தனை வழியாகவோ நேரடியாக கல்லூரிக்கு செலுத்த வேண்டும். தற்போது எல்லா வங்கிகளும் இது மாதிரியான ஸ்விப்ட் பரிவர்த்தனையை செய்கின்றன. அனுப்பும் நிறுவனத்திடம் கல்லூரி கட்டணத்தை செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    2)இந்தியாவில் செலுத்தும் அட்மிஷன், விசா, விமான கட்டணம் போன்ற செலவுகளுக்கு பணம் செலுத்திய பின் முறையாக ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

    3)ரஷ்யா போன்ற நாட்டில் கல்லூரி கட்டணமானது அவர்களின் கரன்சியானலும், மற்ற நாடுகளில் பெரும்பாலும் அமெரிக்க டாலரிலும், போலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் ரூபல்லிவிலும் பெறப்படுகிறது. எனவே பண பரிமாற்றம் குறித்து இணையதளத்தில் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    4)மிக முக்கியமாக வெளிநாடுகளில் எல்லாவற்றிலுமே இளங்கலை (எம்.பி.பி.எஸ், எம்.டி.) படிப்பிற்கு எந்தவிதமான ஸ்காலர் ஷிப்பும் கல்லூரிகளோ வெளிநா டுகளோ தருவதில்லை. அவ்வாறு கல்வி உதவித் தொகை தருகின்றன என பகிரப்படும் போலியான விவரங்களை மாணவர்கள் கவனமுடன் தவிர்த்து விட வேண்டும்.

    5)எல்லாவற்றையும் விட முக்கியமாக 6 வருட கல்வி கட்டணத்தையும் மொத்தமாக முதலிலேயே கட்டினால் டிஸ்கவுண்ட் தரப்படும் என்பது போன்ற போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாம். அவ்வாறு எந்த வெளிநாட்டு கல்லூரி நிர்வாகமும் எப்போதுமே தெரிவித்தது இல்லை 

    வெளிநாட்டு கல்லூரிகளில் அட்மிஷன் முதல் கல்லூரி செல்வது வரை:

    அட்மிஷன்:

    முதலில் மாணவர்கள் அவர்களுடைய 12-ம் வகுப்பு மதிப்பெண் மற்றும் நீட் மதிப்பெண் சான்றிதழை கொண்டு விரும்பும் கல்லூரியை தேர்வு செய்து அட்மிஷனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)

    அதன் பின்னர் முக்கியமான ஆவணமான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) எடுத்தல் வேண்டும். தற்போதைய நடைமுறையில்எபாஸ்போர்ட் எடுப்பது மாணவர்களுக்கு மிக எளிதானது.பாஸ்போர்ட் எடுக்கத் தேவைப்படும் ஆவணங்கள்:

    (a)மாணவனின் ஆதார் கார்டு

    (b) மாணவனின் 10-ம் வகுப்பு சான்றிதழ்

    (c)மாணவனின் பிறப்பு சான்றிதழ்

    (d)பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500- மற்றும் விண்ணப்ப முகவர் கட்டணம் அதிக பட்சமாக ரூ.500 -. நமது தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைத்து விடுவது குறிப்பிடத்தக்கது.

    (e) பாஸ்போர்ட் கிடைத்தவுடன் மாணவர்கள் அட்மிஷனுக்கு அணுகிய நிறுவனத்தினரிடம் அதன் நகலை மாணவர்கள் விசா பெறும் பொருட்டு ஒப்படைக்க வேண்டும்.

    விசா

    மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் போது கண்டிப்பாக மாணவர்கள் விசா வில் மட்டும்தான் செல்ல வேண்டும். வேறு எளிமையான வழிகளான டூரிஸ்ட் விசா போன்றவை மூலம் செல்லக்கூடாது. தற்போது என்.எம்.சி. ஆனது மாணவர்களின் பாஸ்போர்ட் – ஐயும் சரிபார்ப்பு செய்கின்றது.

    கிர்கிஸ் குடியரசு போன்ற சில நாடுகளில் மாணவர்களின் விசா ஒரே நாளில் மிக எளிமையாக கிடைக்கப் பெறுகிறது. இதன்மூலம் பாஸ்போர்ட் கிடைப்பதில் தாமதம் ஆனாலும் மாணவர்கள் அதனால் கல்லூரி செல்வது தடையாகாது.

    1.பெரும்பாலான மற்ற நாடுகளில் விசா பெறுவதற்கான மிக முக்கிய ஆவணமான வெளிநாட்டு கல்லூரி மற்றும் அரசாங்கத்தால் தரப்படும் இன்விடேஷன் எனப்படும் கடிதம் பெறுவதற்கு குறைந்தது 7 நாட்கள் முதல் 1 மாதம் வரை ஆகிறது.

    2.அதன்பின் விசா அலுவலகத்தில் தேவையான சான்றுகளுடன் சமர்ப்பித்தால் மாணவர் விசா கிடைப்பதற்கு அதிகபட்சம் 1 மாதத்திற்குள் விசா கிடைத்து விடும்.

    3.பெரும்பாலும் கிர்கிஸ் குடியரசு, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், அர்சீனியா போன்ற நாடுகளுக்கு VISA பெற தேவைப்படும் ஆவணங்கள்:

    a) கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)

    b) அட்மிஷன் லெட்டர்

    c) இன்விடேஷன் (அந்த நாட்டு அரசாங்க அனுமதிக் கடிதம்)

    d) குறிப்பிட்ட இரத்தப் பரிசோதனை

    e) இன்சூரன்ஸ்

    இதுதவிர தென் அமெரிக்கா, ஜார்ஜியா, போலந்து, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சற்று விரிவான ஆவணங்களும், மாணவர்கள் விசா அலுவலகத்திற்கு நேரில் இன்டர்வியூ செல்ல வேண்டிய நடைமுறைகளும் உள்ளன.

    சான்றிதழ் சரிபார்ப்பு:

    மாணவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக அவர்களின் பள்ளி சான்றிதழ்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் பல்வேறு சமயங்களில் போலி சான்றிதழ்கள் பற்றி செய்திகள் வந்துள்ளன. எனவே வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகள், இந்திய மாணவர்களின் சான்றிதழ்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் சரிபார்ப்பு செய்திருந்தால் மட்டுமே அதனை உண்மை என ஏற்றுக் கொள்கின்றன.

    எனவே மாணவர்கள் அட்மிஷன் பெற்ற பின்பு அந்த நிறுவனத்தார் மூலமாகவே மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

    மொத்தத்தில் மேற்சொன்ன அட்மிஷன், பாஸ்போர்ட், சான்றிதழ் சரிபார்ப்பு, விசா போன்ற நடைமுறைகளை முடிப்பதற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் முதல் அதிகபட்சம் 90 நாட்கள் வரை ஆகி விடும்.

    வெளிநாட்டில் கல்லூரிகள் திறப்பு:

    பெரும்பாலான வெளிநாட்டு கல்லூரிகளின் கல்வி ஆண்டானது செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. அக்டோபர் இறுதி வரை கல்லூரிகள், இந்திய மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு அனுமதி அளிக்கின்றன.

    கல்லூரி விடுமுறை:

    பெரும்பாலும் ஜூலை, ஆகஸ்டு என்ற இரு மாதங்கள் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் பங்களாதேஷ் போன்ற ஒரு சில நாடுகள் ஜனவரி, மற்றும் ஜூன் என இரு முறைகளில் மாணவர் சேர்க்கை செய்கின்றன.

    பல்வேறு நாடுகளின் கல்வி முறை, கல்லூரி விவரம், கல்விக் கடன், மாணவர்கள் கல்வி முடித்தபின் இந்தியாவில் பதிவு செய்வதற்கான தேர்வு முறை பற்றிய விவரங்களை வரும் வாரங்களில் பார்க்கலாம்.

    மருத்துவக்கல்வி ஆலோசகர்

    அனிதா காமராஜ்

    செல்: 94980 88890

    • நாட்டின் பிரச்சினைகள் பற்றி பொது விவாதம் நடத்த வேண்டும்.
    • வேட்பாளர்களின் கருத்துகளை தெரிந்து கொள்ள இது ஒரு அருமையான ஏற்பாடு.

    உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் மதன் லாகூர், ஏபி ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் இந்து ராம் ஆகியோர் சமீபத்தில் ஒரு அழைப்பு விடுத்தனர். பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாட்டின் பிரச்சினைகள் பற்றி பொது விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

    மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், இத்தகைய விவாதங்கள் எப்போதும் நடந்து வருகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பு ஜனாதிபதி வேட்பாளர்கள் பல்வேறு நேருக்கு நேர் விவாதங்களில் கலந்து கொள்வார்கள்.

    நாட்டின் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவற்றைப் பற்றிய வேட்பாளர்களின் கருத்துகளை வாக்காளர்கள் நேரடியாகத் தெரிந்து கொள்ள இது ஒரு அருமையான ஏற்பாடு. விவாதங்களின் சிறப்பு மற்றும் வேட்பாளர்களின் அணுகுமுறைத் தெளிவு ஆகியவற்றை வைத்து வாக்காளர்கள் முடிவுக்கு வருவார்கள்.

    சில நேரங்களில் நாடு முழுமைக்குமான ஒரே ஒரு பிரச்சினை குறித்த விவாதமும் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. "கிரேட் டிபேட்" என்று இன்றும் அழைக்கப்படும் விவாதம் கூட்டாட்சித் தத்துவத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் சார்பாக நடந்தது.

    அதன் பின்னர் தான் குடிமக்களின் உரிமைகள் குறித்த ஷரத்து அமெரிக்க அரசியலமைப்பில் இடம்பெற்றது. கூட்டாட்சித் தத்துவம் வலிமை பெற்றது.

    அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது. எனவே டிபேட்டுகள் களை கட்டத் துவங்கி விடும். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இன்றைய ஜனாதிபதி ஜோ பைடன் ஆகிய இருவருக்கும் இடையிலான விவாதம் 2020-ல் நடந்தது.

    முன்னதாக "எப்போது வேண்டுமானாலும்- எங்கு வேண்டுமானாலும்- எந்த நேரம் வேண்டுமானாலும்" விவாதத்திற்கு தயார் என்று மார்தட்டினார் டிரம்ப். ஆனால் பல டிபேட்களுக்கு அவர் டிமிக்கி கொடுத்தார். இறுதியாக பைடன் விவாதம் வாக்காளர்கள் மனங்களைக் கவர்ந்தது.

    ஜனாதிபதி வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதிக்கும் நிகழ்ச்சி 1960 முதல் நடைபெற்று வருகிறது. அப்போதெல்லாம் தொலைக்காட்சி நிறுவனங்களால் அவை நடத்தப்பட்டன. ஆனால் 1987-க்குப் பிறகு டிவிக்கள் இத்தகைய விவாதம் நடத்த அனுமதி இல்லை.

    ஜனாதிபதி வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவாதம் நடத்துவதற்கு இன்று சிபிடி என்று அழைக்கப்படும் தனியான அரசு அமைப்பு அமெரிக்காவில் உள்ளது. டிபேட் மற்றும் அவற்றின் விதிமுறைகளை அது வகுக்கிறது. உதவி ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாதங்களும் நடப்பது உண்டு.

    வாட்டர் கேட் ஊழல் காரணமாக நிக்சன் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பதவியேற்ற ஜெரால்ட் போர்ட் எதிரணி வேட்பாளரான கார்ட்டரை விவாதத்திற்கு அழைத்தார். அந்த டிபேட்டில் போர்ட் ஜொலிக்கவில்லை. பரபரப்பாக இருந்த அந்த விவாதத்தை நான் அமெரிக்க தொலைக்காட்சிகளில் நேரடியாகக் கண்டேன்.

    நேருக்கு நேர் லைவ் விவாதங்களில் உடல் மொழி மிகவும் முக்கியம். அடிக்கடி வாட்சைப் பார்த்தார் என்ற காரணத்திற்காக நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் அமெரிக்காவில் உண்டு.

    விவாதத்திற்குப் பயிற்சி கொடுப்பதற்காகவே நிபுணர்கள் இருக்கிறார்கள். வேட்பாளர்களின் அங்க அசைவுகள் மற்றும் பார்வை மூலம் நம்பகத்தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. நடுவர் உண்டு. எதிர்த்தரப்பு வைக்கிற குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வேட்பாளர் எப்படி பதில் சொல்கிறார் என்பதையும் கூர்ந்து கவனிப்பார்கள்.

    லைவ் டிபேட்டுகளுக்குப் பின் அவை பற்றிய விமர்சனங்கள் டிவிக்களில் எழுப்பப்படும். மதிப்பெண்கள் போடப்பட்டு வெற்றி-தோல்வி அலசப்படும். எனவே உலகெங்கிலும் இது பேசுபொருள்.

    ஆனால் அமெரிக்கக் கான்செப்ட் இந்தியாவுக்குப் பொருந்துமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் அங்கு இரண்டு கட்சி முறை. அதிபர் தேர்தல் என்பதால் நேரடி விவாதம் சாத்தியப்படுகிறது.

    மேலும் ஆங்கிலம் என்கிற ஒற்றை மொழி. இங்கு இந்தி பல்வேறு மாநிலங்களில் பேசப்படுகிறது. என்றாலும் பல்வேறு பழமையான மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

    இந்தியாவில் பிரதமர் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக யாரும் கிடையாது. நாம் எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கிறோம். எனவே மோடி- ராகுல் நேரடி நேருக்கு நேர் சாத்தியமில்லை.

    ஆனால் தலைவர்கள் தங்கள் கருத்துகளை முன் வைக்கிற "லீடர்ஸ் டிபேட்" சாத்தியம். நியூசிலாந்து போன்ற நாடுகளில் இத்தகைய விவாதம் நடக்கிறது.

    நேருக்கு நேர் விவாதத்தின் மூலமாக நாட்டின் பொதுப் பிரச்சினை பற்றிய தலைவர்களின் கருத்தை வாக்காளர்கள் அறிந்து கொள்ளலாம். யாருக்கு ஓட்டுப் போடுவது என்று முடிவு எடுக்க அது உதவி செய்யும்.

    தலைவர்களும் கொள்கை மற்றும் செயல்திட்டத்தைப் பற்றி மட்டும் பேசுவார்கள். வெறுப்புப் பேச்சு, மதம் மற்றும் ஜாதி ரீதியிலான பிளவுக்கு இடம் கிடைக்காது. தேர்ந்தெடுக்கப்பட்ட பின் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படும்.

    இந்தியத் தேர்தல் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஆரம்பத்தில் தலைவர்கள் பேசியதற்கும் இப்போது பேசுவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

    தேர்தல் பரப்புரைகளின் போது பிரதமர் மோடி இந்து, முஸ்லீம் என்று பேசினார். வெறுப்புப் பேச்சு என்று கண்டனங்கள் எழுந்தன. தேர்தல் ஆணையத்திற்கும் புகார்கள் சென்றன. ஆனால் இப்போது அவரே தான் அப்படிப் பேசவில்லை என்று கூறுகிறார்.

    இறுதியில் யார் எண்ண பேசினார்கள் என்று வாக்காளர்களுக்கு குழப்பம் தான் மிஞ்சுகிறது. எனவே தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி மாதிரியான அமைப்புகள் நேருக்கு நேர் விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யலாம்.

    ஆனால் உச்சகட்டத் தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்பது சந்தேகம் முன்பெல்லாம் கட்சி பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிப் பொது மேடை அமைத்து தந்து வந்தது தூர்தர்ஷன். அவற்றில் பெரிய தலைவர்கள் பேசி வந்தார்கள். கல்லூரிப் பருவத்தில் ரேடியோவில் அண்ணா, கலைஞர் பேசியதைக் கேட்ட நினைவு இருக்கிறது.

    மொத்தத்தில் பொது மேடைகள் படிப்படியாகக் குறைந்துவிட்டன. இப்போதெல்லாம் பெரும்பாலும் செய்தித் தொடர்பாளர்கள் தான் கலந்து கொள்கிறார்கள்.

    பொது மேடைகளுக்குப் பதிலாக டிவிக்களில் தினமும் இரவு விவாத அரங்கம் நடத்தப்படுகிறது. அன்றாடப் பிரச்சினைகள் குறித்த கருத்துகள் அலசப்படுகின்றன.

    அவற்றில் செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அதே நேரத்தில் மூத்த பத்திரிகையாளர்களும் தங்கள் கருத்துகளை முன் வைக்கிறார்கள்.

    தலைவர்கள் கலந்து கொள்ளும் நேரடி விவாதம் அல்ல. என்றாலும் சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் டி.வி. விவாத மேடைகளில் தலைவர்களும் தோன்றுகிறார்கள்.

    இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் சில தலைவர்கள் விவாதப் பேச்சில் வல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் வேறு சிலருக்கு செயல் திறன் மட்டுமே!

    எடுத்துக்காட்டாக 2009 பொதுத் தேர்தலில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் என்று பரவலாக வர்ணிக்கப்பட்ட அத்வானியும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொண்டிருந்தால் சரிப்பட்டிருக்குமா?

    தலைவர்கள் அனைவருக்கும் "கம்யூனிகேஷன் ஸ்கில்" ஒரே மாதிரி இருக்க வழியில்லை. செய்தித் தொடர்பாளர்கள் தான் அந்தப் பணி செய்கிறார்கள். நிதி மந்திரி நிர்மலா சீதாராமனே முன்னாள் செய்தி தொடர்பாளர் தான். அப் பணியை அவர் நேர்த்தியாகக் கையாண்ட விதமே அவருக்கு மோடியின் குட் புக்சில் இடம் பெற்றுத் தந்தது.

    பொது விவாதத்தின் தேவை பற்றி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளும் மூத்த பத்திரிகையாளரும் பின்வருமாறு விளக்கி உள்ளார்கள்.

    1. நடப்பு தேர்தலில் வெறும் குற்றச்சாட்டுகளும், பரஸ்பர சவால்களும் மட்டுமே மலிந்துள்ளன.

    2. மக்களுக்குப் பயன் தரக்கூடிய பொருள் பொதிந்த தீர்வுகள் முன் வைக்கப்படவே இல்லை.

    3. ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா மற்றும் அதை அடுத்து அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் பொது விவாதத்தில் கலந்து கொள்வது இந்திய ஜனநாயகத்தை முதிர்ச்சி அடையச் செய்யும் .

    4. எனவே பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    ராகுல்காந்தி தரப்பில் உடனடிச் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. இணங்கவில்லை. ராகுல் காந்தி வெறும் எம்பி என்றும் அதே நேரத்தில் மோடி பிரதமர் என்றும் அது கூறி விட்டது. இருவருக்கும் ஒரே அரசியல் அந்தஸ்து இல்லை என்றும் மறுத்து விட்டது.

    ஆனால் தேசிய அரசியல் பற்றிய பரப்புரைகளின்போது ராகுல்காந்தியை மட்டுமே "இளவரசர்" என்று மையப்படுத்தினார் பிரதமர். தனக்கு ராகுல் சரியான களப் போட்டியாளர் இல்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார். அதாவது களத்தை "மோடி vs ராகுல்" என்று கட்டமைத்தது அவர் தான்.

    தராசு காலகட்டத்தில் மக்கள் மேடை என்ற பதாகையின் கீழ் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களை வைத்து இத்தகைய "நேருக்கு நேர்" நிகழ்ச்சிகளை துவக்கத்தில் நடத்தினோம். ஆனால் நாளாவட்டத்தில் வேட்பாளர்கள் தயக்கம் காட்டினார்கள். எனவே அது கை விடப்பட்டது. மறைந்த எம்.எஸ்.உதயமூர்த்தி இது போன்ற விவாதங்களை நடத்தியதாக ஒரு நினைவு.

    தலைவர்கள் நேரடி விவாதங்களுக்குச் சம்மதித்தால் நமது மக்களாட்சி மேலும் கூர்மைப்படும்.

    • வைராக்கியம் என்றால் என்ன?
    • ஞான வைராக்கியம் என்பது ஆத்மா சார்ந்தது.

    அன்பார்ந்த வாசகர்களே, கடந்த வாரம், வைராக்கியம் என்றால் என்ன? நாம் எந்த வைராக்கியத்தில் இருக்கிறோம் என்பதை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய நேரம் இது என்று பார்த்தோம். நம்முடைய வேதாந்தம் சொல்வது என்னவென்றால் "கோப வைராக்கியா, துக்க வைராக்கியா, சிந்தனை வைராக்கியா, ஞான வைராக்கியா" என்கிறது.

    கோப வைராக்கியம்: என்பது நாம் ஒருவர் மீது கோபம் வந்து விட்டால், வாக்கு வாதத்தில் இனி என் முகத்தில் முழிக்காதே, உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று சொல்கிறோம்.

    ஆனால் அந்த உணர்ச்சி நிலையில் இருந்து நாம் உணர்வு நிலைக்கு திரும்பியவுடன் அந்த வைராக்கியம் நம்மை விட்டு விலகுகிறது, ஆனால் வார்த்தைகள் மட்டும் விலகுவது இல்லை. எனவே கோப வைராக்கியத்தை நாம் விட்டுவிட வேண்டும். ஏனெனில் அது நிரந்தரம் அல்ல.

    துக்க வைராக்கியம்: என்பது நம் வாழ்வில் ஏதாவது நடக்க கூடாதது நடந்து விட்டால் என் வாழ்க்கையே தொலைந்து விட்டது. இனி நான் எப்படி வாழ்வேன் என்று புலம்பி கொண்டும் அழுது கொண்டும் இருக்கிறோம்.

    உதாரணத்திற்கு நமக்கு நெருங்கிய உறவுகள் யாராவது மரணம் அடைந்து விட்டால், நம் வாழ்வே பறிபோனது போல் ஒரு உணர்வுக்கு ஆட்பட்டு விடுகிறோம். ஆனால் ஒரு சில நாட்கள் செல்ல செல்ல, நாம் இயல்பு நிலைக்கு வந்து விடுகிறோம். அன்று ஏற்பட்ட துக்கம் இன்று எங்கே போனது என்பதை பற்றி நாம் சிந்திப்பது இல்லை.

    வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். இன்பத்தை ஏற்று கொள்ளும் நாம் துன்பத்தை ஏற்று கொள்ள ஏன் மறுக்கிறோம்? எனவே துக்க வைராக்கியத்தை நாம் விட்டுவிட வேண்டும். ஏனெனில் அது நிரந்தரம் அல்ல.

    சிந்தனை வைராக்கியம்: என்பது மனம் பற்றியது. மனம் அமைதி நிலையில் இருக்கும் போது சில முடிவுகளை எடுப்போம். உதாரணத்திற்கு இந்த புத்தாண்டில் இருந்து நான் இந்த இந்த விஷயங்களில் சில விதிமுறைகளை கடைபிடிப்பேன். சில பழக்கங்களை விட்டு விடுவேன் என்று சபதம் எடுக்கிறோம்.

    ஆனால் அந்த வைராக்கியம் நிறைய மனிதர்களுக்கு நீண்ட காலம் நிலைப்பது இல்லை. வாழ்க்கை சக்கரத்தில், சுழற்சியில் மாட்டி கொண்டு, துன்பம் வரும் போது, மனம் துவண்டு விடும்போது நம் சபதம் எல்லாம் மறைந்து விடுகிறது.

    எனவே சிந்தனையில் தெளிவு வேண்டும். இல்லை என்றால் சிந்தனை வைராக்கியத்தில் வெற்றி பெற முடியாது. மனம் எப்போதும் அமைதி நிலையில் இருந்தால் தான் வெற்றி பெற முடியும்.

    ஞான வைராக்கியம்: என்பது ஒரு முடிவை எடுத்து விட்டால் அதில் வாழ்நாள் முழுவதும் என்ன துன்பங்கள் வந்தாலும் தான் எடுத்த கொள்கையில் மாறாது இருக்க வேண்டும். முதலில் சொன்னது எல்லாம் உடல், மற்றும் மனம் சார்ந்து வருவது ஆகும். ஆனால் ஞான வைராக்கியம் என்பது ஆத்மா சார்ந்தது.

    ஆத்மா என்பது அழிவு இல்லாதது. நிரந்தரம் ஆனது. மற்றது அனைத்தும் ஒரு நாள் அழியக்கூடியது. எனவே வாழும் காலத்திலேயே பிறவி பயனை அடைவதற்கு உடல், மனம், உயிர், குணம், ஆத்மா சார்ந்து, இயற்கையோடு சேர்ந்து கொண்டு வாழ்ந்தால், ஞான வைராக்கியம் கிடைக்கும்.

    வாழ்வில் எது நடந்தாலும் மனதை சமநிலையில் வைத்து பழகி கொள்ள வேண்டும். அதனால், புலன்கள் நம் கட்டுக்குள் இருக்கும். இதற்கு நாம் ஆன்மிகத்தையும் அறிவியலையும் இணைக்க வேண்டும்.

    விஞ்ஞானமும், மெய்ஞானமும் சேர்ந்தால் உலகம் அைமதியாகும். ஏனெனில் விஞ்ஞானம் என்பது விண்பற்றிய அறிவியல். மெய் ஞானம் என்பது இறைவன் மற்றும் நம்மை பற்றிய அறிவாகும். இதை உணராமல் இருப்பதால் தான் கர்ம வினை பதிவுகளில் சிக்கி, நமது ஆயுளை நாமே குறைத்து கொள்கிறோம்.

    ஒரு விஷயத்தை நாம் சிந்திக்க வேண்டும். அது என்னவென்றால், விஞ்ஞானம் என்றால் ஆராய்சி என்று பொருள். எனவே விஞ்ஞானத்திற்கு, ஒன்றை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஒரு பொருள் தேவை.

    பொருள் என்கின்ற ஒன்று இருந்தால் தான் விஞ்ஞானத்தால் ஆராய்ச்சியை தொடரமுடியும். பொருள் இல்லாமல் ஆராய்ச்சி செய்ய முடியாது. விஞ்ஞானத்தின் ஆரம்பம் ஆனது பொருளில் தொடங்கி அதன் முடிவு இருளில் முடியும். இருள் என்பது இறைவன். அந்த இடத்திலே ஒன்றும் இல்லை.

    அதனை தான் மகான்கள் பாழ், இருள், சூனியம், ஆதி, சுத்தவெளி, கடவுள், இறைவன், என்று நாம் சொல்கிறோம்.

    ஆனால் மெய்ஞானம் என்பது, விஞ்ஞானம் எதில் முடிந்ததோ (இருள்) அதில் தான் தொடங்கும். இருளில் தொடங்கும் மெய்ஞானம் நமக்கு உள்ளே முடியும். முடிவு என்பது நானாக இருக்கும் போது,அண்டத்தில் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவை அனைத்தும் இந்த பிண்டத்தில் உள்ளது என்கின்ற உண்மை விளங்கும். இது தான் ஞான வைராக்கிய நிலையாகும்.

    இந்த நிலை வந்து விட்டால் நமது எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் மூச்சின் எண்ணிக்கையும் குறையும். இதனால் மனம் அமைதி நிலை பெறும்.

    இந்த நிலையில், நம் மனதிலே உதிக்கின்ற எண்ணங்களின் வெளிப்பாடு, சொல்லாக மாறி, நல்ல செயலிலே முடியும். இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், நமது மனம் ஆனது விரிந்த நிலையில், நல்ல எண்ணங்களும், மனம் குறுகிய நிலையில் தீய எண்ணங்களும் உருவாகும் என்று குறிப்பிடுகிறார்.

    மனம் விரியும் போது, நமது எண்ணங்கள் நமக்கும் பிறருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காத எண்ணங்களாக மலர்கிறது. இது கர்ம வினை பதிவுகளில் இருந்து, நம்மை விடுவித்து கொள்ளும் வழியாகும்.

    குறுகும் மனம் ஆசை, துன்பத்தை தரக்கூடிய எண்ணங்களாக மலரும் போது, நமக்கும் பிறருக்கும், தீமையை உருவாக்குகிறது. இதனால் நமக்கு தீமை தரக்கூடிய பதிவுகள் சேருகிறது.

    எனவே எந்த ஒன்றுக்கும் ஆரம்பம் இறைவன் என்றால் அது முடியும் இடம் நம்முடைய மனம் ஆகும். அசையாமல் இருந்தால் சிவம். அது அசைந்தால் மனம். எனவே ஞான வைராக்கியத்திலே நமக்குள்ளாக அடிக்கடி நான் சிவமா? அல்லது மனமா என்ற கேள்வியை எழுப்பி கொண்டே இருக்க வேண்டும். இதை தான் அக ஆராய்ச்சி என்கிறோம்.

    உதாரணத்திற்கு நாம் உடலை அசைத்து நடந்து செல்லும் போது, நம்மோடு எந்த அசைவும் இல்லாமல், நமக்குள்ளாக ஒன்று வந்து கொண்டு இருக்கிறதே அது யார்? எனக்கு தலை வலி, உடல் வலி, காய்ச்சல் என்று சொல்கிறோமே, அது உடலுக்கா அல்லது உள்ளே உள்ள ஒன்றுக்கா?

    எனக்கு பசி எடுக்கிறது என்று சொல்கி–றோமே எனக்கா அல்லது உள்ளே உள்ள ஒன்றுக்கா? -இப்படி என்றாவது நாம், நம் சுகத்தை நோக்கி ஆராய்ச்சி செய்து இருக்கிறோமா?

    இதில் ஆச்சரியம் என்னவென்றால், மேலே நாம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும், எந்த வித தொடர்பும் இல்லாமல், எந்த கர்ம வினை பதிவுகளோடும் தொடர்பு இல்லாமல், எந்த பொருள் மற்றும் உறவுகளோடு பற்றும் இல்லாமல் உள்ளே ஒன்று இருக்கிறதே அது யார்?

    இதை அடிக்கடி நாம் நமக்குள்ளாக கேள்வியாக எழுப்பும் போது, அதுவே சர்வ வல்லமை பொருந்திய ஆத்மா என்பது தெரிய வரும்.

    ஒரு கட்டத்தில் இந்த ஞான வைராக்கியம் மலரும் போது, இந்த உடல், மனம், உயிர், பொருள் அல்ல நான், ஏகமாக எங்கும் உள்ள இறைவனின் சொரூபமான ஆத்மாமே நான் என்பது விளங்கும். அப்படி தன்னை ஆத்மாவாக உணர்ந்தவர்களை தான் 'ஆத்மஸ்வருபி' என்று அழைக்கிறோம்.

    அந்த நிலையில், நாம் காணும் காட்சிகள், பொருட்கள், நபர்கள் அனைத்தும் இறைவனின் பிம்பங்களாகவே தெரியும். இதை தான் 'சர்வம் பிரம்ம மயம்' என்று கூறுகிறோம்.

    அப்படி ஞான வைராக்கியத்திலே எல்லாம் இறை காட்சிகளாக தெரிந்தால், நம்மோடு தினமும் நம்முைடய குடும்பத்திலே உறவாடி கொண்டு இருக்கின்ற உறவுகளான கணவர், மனைவி, குழந்தைகள், தாய், தந்தை, சகோதர சகோதரிகள் இவர்கள் எல்லாம் யார்? அனைவரும் இறைவனின் பிம்பங்களே!

    இந்த நிலை வந்து விட்டால் நமக்குள்ளே எந்த பகையும், வெறுப்பும் வராது. குடும்பத்திலே சச்சரவுகள் எதுவும் வராது. இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அமைதி என்பது தனி மனிதரில் ஆரம்பித்து, குடும்ப அமைதியாக மாறி, அது சுற்றத்தை மாற்றி, சுற்றம் ஆனது ஊரையே மாற்றி, ஊர் ஆனது உலகத்தை மாற்றி உலகம் முழுவதும் அமைதியை கொடுக்கும் வல்லமை படைத்தது தான் இந்த ஞான வைராக்கியம்.

    இதை நம்மில் இருந்து தான் தொடங்க வேண்டும். தொடக்கம் என்னில் இருந்து என்றால், நான் எப்பேற்பட்டவன், எனக்குள் உள்ள பலம் என்ன என்பதை தெரிந்து கொண்டு, நமக்குள் உள்ள தெய்வீகத்தை முறையாக வெளிபடுத்த வேண்டும். அப்படி செய்தால் நான் வாழும் காலத்திலேயே ஞானம் அடைந்தவராக மாறுவோம் என்பதில் சந்தேகமே இல்லை.

    இறைவன் நம்மை பல பிறவிகள் கடக்க வைத்து, இறுதி பிறவியான மனிதனாக ஒரு தாயின் வயிற்றில் நம்மை உருவாக்கி, அதனோடு நமக்கான கர்மாவையும் கொடுத்து இருக்கிறார் என்றால், நாம் எவ்வளவு புண்ணி யம் செய்தவர்கள்.

    எனவே நான் ஏன் பிறந்தேனோ என்று சலிப்பு அடையாமல், இந்த பிறவியை கொடுத்த இறைவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இதன் மூலம் நமது வாழ்க்கை முழுமையடையும். அந்த முழுமை பேறு பற்றி ஆராய்ச்சி தொடரும்.

    மனவளக்கலை பேராசிரியர்கள்

    கி. சௌமித்ரன்,

    பொன்னி சௌமித்ரன்

    போன்: 9444234348

    • ஒப்பிட்டுப் பார்த்து வாழத்தொடங்கினால் பெரும்பாலும் துன்பமே மிஞ்சும்.
    • வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றையே மூலதனமாக்கினால் எந்நாளும் வெற்றிதான்

    ஒப்பீடு செய்வதால் உன்னதம் காணமுடியாது என்பதை நம்பும் இனிய வாசகர்களே! வணக்கம்.!.

    நம் எல்லாருக்கும் வாழ்க்கை வழங்கப்பட்டிருக்கிறது; வாழ்க்கையை வாழ்வது என்பது பள்ளிக்கூடப் பாடங்களில் பரீட்சை எழுதுவதுபோலப் பல நேரங்களில் கடினமானதாகத்தான் இருக்கிறது.

    வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் தேர்வு என்றால், அது ஒரே மாதிரியான தேர்வு அல்ல!; வழங்கப்பட்டிருக்கிற கேள்வித்தாளும் ஒரே மாதிரி கேள்வித்தாள் கிடையாது!; ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கேள்வித்தாள்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.

    எனவே நமக்கான தேர்வை நாம் மட்டுமே எழுதியாக வேண்டும். அடுத்தவரைப் பார்த்து எழுதவோ, அடுத்தவரோடு ஒப்பிட்டுப் பார்க்கவோ முடியவே முடியாத வினோதமானது நமது வாழ்க்கை.

    அவர்களது வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொள்கிறார்கள்!. நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்துவிட்டுப் போவோமே!. அவரைப் போல வாழ்!;

    இவரைப் போல வாழ்! என்று சிலரை முன்மாதிரிகளாகவோ, எடுத்துக் காட்டுகளாகவோ வைத்துக் கொள்ளலாமேயொழிய, அவரோடு நாம்!, இவரோடு நாம்! என்று ஒப்பிட்டுப் பார்த்து வாழத் தொடங்கினால் பெரும்பாலும் துன்பமே மிஞ்சும்.

    ஒப்பீடு செய்வதன்மூலம் சிறந்தவற்றைக் கண்டறிய முடியும்! என்று சிலர் கூறலாம். ஆனால் எந்த வகையிலும் சமமாகவோ பொருத்தமாகவோ இல்லாதவரோடு ஒப்பீடுகள் நிகழ்த்தி நிகழ்த்தியே உருப்படாமல் போன கதைதான் இங்கு அதிகம்.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஒப்பிடும் குணத்தை அவனது குழந்தைப் பருவத்திலேயே, பெற்றோர்கள் உசுப்பிவிட்டு விடுகிறார்கள்." அண்ணனைப் பார்! தம்பியைப் பார்! அக்காவைப் பார்! தங்கையைப் பார்!" என்று உடன்பிறந்தோரில் தொடங்கி, அண்டை வீடு, அயல் வீடு, உடன் படிப்போர், ஊடகங்களில் வரும் சாதனைகள் புரிவோர் … என எந்த அளவீடுகளும் இல்லாமல் எல்லாருடனும் ஒப்பிடத் தொடங்கி விடுவார்கள்.

    உயரமாக,குள்ளமாக, குண்டாக, ஒல்லியாக, வெள்ளையாக, கறுப்பாக, முடி அடர்த்தியாக, நீளமாக, என உருவத்தில் தொடங்கி, உண்ணுகிற உணவு, படிக்கிற படிப்பு, எடுக்கிற மதிப்பெண், விளையாடுகிற விளையாட்டு, சாதிக்கிற சாதனைகள் வரை எல்லாவற்றிலும் ஒப்பீடுகள்.

    ஒப்பீடுகள் பெரும்பாலும் திட்டல்களில் தொடங்கி, 'நீ எங்கே உருப்படப் போறே!' என்று சாபங்களிலேயே நிறைவு செய்வார்கள்!. குழந்தைப் பருவத்தில் பெற்றோரிடமிருந்து பற்றிக்கொள்ளும் ஒப்பிடும் குணம் கடைசிவரை மாற மறுக்கிறது.

    பெரும்பாலும் நமது ஒப்பிடும் குணம் நம்மில் இருந்தே தொடங்குகிறது; அடுத்தவர்கள் நம்மைவிட எவ்வளவு தூரம் நல்ல நிலையில் இருக்கிறார்கள்? என்று சிந்திக்கத் தொடங்கும் அடிப்படையிலேயே ஒருவிதப் பொறாமைகுணம் நம்மை அறியாமலேயே நம்மிடம் ஒட்டிக்கொள்ளத் தொடங்கி விடுகிறது.

    பொறாமை எனும் தீக்குணம் நம்மிடம் வந்துவிட்டால், வஞ்சனை, கோபம், சூழ்ச்சி,பொய், களவு என அத்தனை பேய்க்குணங்களும் மனித மனத்தை ஆட்டிப் படைக்க ஆரம்பித்துவிடுகின்றன.

    அடுத்தவரோடு நம்மை ஒப்பிட்டுநோக்கிப் பார்ப்பதன்மூலம், 'அவரைப்போல நாமும் உழைக்க வேண்டும்!, அவரைப்போலப் படித்து முன்னேற வேண்டும்!, அவரைப்போல நல்ல வேலையில் அமர வேண்டும்!,

    அவரைப்போல செல்வந்தர் ஆகவேண்டும், அவரைப்போல நல்ல மனிதராக வலம் வர வேண்டும்!,அவரைப்போலச் சாதனைகள் புரிய வேண்டும்!' என நமக்கு நாமே ஊக்கம் அடைந்துகொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு என்று சிலர் கருதலாம். ஆனால் பெரும்பாலான தருணங்களில் ஒப்பீடுகள் நேர்முறை விளைவுகளைவிட எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கி விடுகின்றன.

    ஒப்பிட்டுப் பார்ப்பதில் அடிப்படையில் தவறு இல்லை; ஆனால் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கும்போதே ஒருவகை எதிர்மறைகுணம் நமக்குள் வந்து அமர்ந்து கொள்வதால், எதிர்மறைச் சிந்தனையோடு, அடுத்தவர்களைப் பற்றிய தவறான கணிப்புகளையும் நாக்கூசாமல் பேசவும், விரல்கூசாமல் எழுதவும் தொடங்கி விடுகிறோம். இதுவே நம்மைத் தீயவர்களாக மாற்றி விடுகிறது.

    ஜப்பானிய சாமுராய் வீரர்கள் பெரும்பலம் பொருந்திய மகா வீரர்கள். நாட்டிற்காக உயிரையும் துச்சமென மதித்துப் போரிடுபவர்கள். அப்படிப்பட்ட சாமுராய் வீரர்களில் ஒருவன், அந்த ஊரில் இருந்த புகழ்மிக்க ஜென் மத குருவைக் காணச் சென்றிருந்தான். அதிகாலை நேரத்திலேயே மடத்திற்குச் சென்றுவிட்டான்.

    குரு ஆசுவாசமாக எழுந்து காலைப் பிரார்த்தனை, தியானம் போன்றவற்றை வரிசைக் கிரமமாகச் செய்துவிட்டு சாமுராய் வீரனை மெல்லிய புன்னகையோடு வரவேற்று வந்த காரியத்தை வினவினார்.

    கொஞ்சம் படபடப்போடு காணப்பட்ட வீரன் பேசத் தொடங்கினான், " குருவே நான் ஒரு சாமுராய் வீரன். நீங்கள் எப்படி இங்கிருந்துகொண்டு ஆன்மீக அடிப்படையில் நாட்டுமக்களின் அமைதிக்குப் பாடுபடுகிறீர்களோ, அதைப்போல நான் போர்முனையில் இருந்து கொண்டு நாட்டுமக்களின் அமைதிக்குப் பாடுபட்டு வருகிறேன்!.

    நாலைந்துமுறை சாவின் விளிம்புவரை சென்று வந்திருக்கிறேன். கோழைகளாய் இருந்து சாவைச் சந்திக்க இருந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை எனது வாள்முனையில் காப்பாற்றி இருக்கிறேன்."

    சாமுராய் வீரன் எதற்காக இந்தப் பீடிகை போடுகிறான்? என்ன கூற வருகிறான்? என்பதை முன்கூட்டியே ஊகித்தறியும் அவசரமில்லாமல் ஜென் குரு அமைதியான புன்னகையோடு செவிமடுத்துக் கொண்டிருந்தார்.

    சாமுராய் மேலும் தொடர்ந்தான்." இவற்றை யெல்லாம் நான் ஏன் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றால், அடிப்படையில் நீங்களும் நானும் ஒரே நோக்கத்திற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்! என்பதை விளங்க வைப்பதற்குத்தான். நாடும் மக்களும் அமைதியாக வாழவேண்டும் என்பதே நம் இருவரின் நோக்கமாகவும் இருக்கிறது!"

    "இதில் இங்கு நான் வந்ததற்கான காரணம் என்ன வென்றால், என் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கிற அடிப்படையான ஒரு வினாவை உங்களிடம் கேட்டுத் தெளிவுபெற்றுச் செல்ல வேண்டும் என்பதுதான். "

    "துறவியாகிய நீங்களும் போர்வீரனாகிய நானும் ஒரே நோக்கத்திற்காக வாழ்கிறோம் என்றாலும், நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுகிறீர்கள், எந்த வேலையும் செய்யாமல் தியானம் என்ற பெயரில் உட்கார்ந்தே அனுபவிக்கிறீர்கள்;

    காலத்தைக் கழிக்கிறீர்கள், காலைமுதல் மாலை வரை ஏராளமான மக்கள் வந்து உங்களுக்கு வணக்கம் சொல்கிறார்கள்; உங்களிடம் கடவுளைப்போல ஆலோசனை கேட்டுப் போகிறார்கள்;

    நீங்களும் எந்த சிரமமும்படாமல் சிரித்த முகத்தோடு ஆசீர்வாதங்களை அள்ளி வழங்குகிறீர்கள்!. நானோ அன்றாடம் வேகாத வெயிலில் போர்ப் பயிற்சியிலும், போர்முனைகளிலும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறேன்!. இது எந்த வகையில் நியாயம்?" என்று கேட்டான் சாமுராய்.

    "இப்போது என்னைச் சந்தித்து ஆலோசனையும் ஆசீர்வாதங்களும் பெறுவதற்காக நிறைய அன்பர்கள் வந்து மடத்தில் காத்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு வந்து உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்;

    மாலைவரை காத்திரு!" என்று கூறிவிட்டு ஜென்குரு அன்பர்களைக் காணச் சென்றுவிட்டார். அங்கே வந்திருந்த ஒவ்வொருவருக்கும் புன்னகை மாறாத முகத்தோடு ஆசி வழங்கினார் துறவி.

    மாலைநேரம் கடந்து இருட்டத் தொடங்கிவிட்டது. துறவியைக் காணவந்திருந்த அனைவரும் சென்று விட்டனர். இப்போது துறவி, சாமுராயை உள்ளே தன் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அமைதியான இருள்; வானத்தில் நிலவு வந்து தன் வெளிச்சக் கிரணங்களைப் பரப்பத் தொடங்கியிருந்தது.

    துறவி பேசினார்," வீரனே வா!. இந்த வானத்தை பார்! மெல்லிய வெளிச்சத்தை பூமி முழுவதும் பரப்புவதற்காக அமைதியாக வந்துகொண்டிருக்கும் நிலவைப் பார். இனி விடியும் வரை வானத்திலும் பூமியிலும் இந்த நிலவின் ஆட்சிதான். நாளை விடிந்தவுடன் சூரியன் வந்து விடும்;

    அதன் ஒளியாட்சி தொடங்கிவிடும். பகலின் சூரிய ஒளியில் இப்போது மங்கலாகத் தெரிபவை எல்லாம் துல்லியமாகக் காட்சியளிக்கும். மலை, அருவி, கடல், வயல் என அனைத்தும் இரவின் நிலவொளியில் தெரிந்ததைவிடப் பன்மடங்குத் தெளிவாகச் சூரிய ஒளியில் தெரியும்."

    `நாம் இப்போதைய இரவிலும் நிலவைப் பயன்கொள்கிறோம்; நாளைய பகலில் சூரியனையும் பயன்கொள்கிறோம். என்னுடைய பயன் குறைவு என்று நிலவோ என்னுடைய பயன் கூடுதல் என்று சூரியனோ எந்த நேரத்திலும் குறைப்பட்டுக் கொண்டதாகவோ, மார்தட்டிக் கொண்டதாகவோ இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. ஏனென்றால் அவை ஒன்றையொன்று ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை!" என்றார் துறவி.

    படைப்புகள் அனைத்தும் அவ்வவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வியல் குறிக்கோள்களோடு வாழத் தொடங்கினாலே போதும். அவற்றின் பிறவிப்பயன் அடுத்தவர்க்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

    அடுத்தவர் கட்டியிருக்கும் வீட்டையோ, வாங்கியிருக்கும் பொருள்களையோ, வாழுகின்ற வசதியான வாழ்க்கையையோ நம்முடையவற்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் தேவையற்ற பொருள் விரயத்தையும் அதனால் பெரும்பான்மை நேர விரயத்தையும் நாம் சந்திக்க நேரிடும்.

    பொறாமையில் பொசுங்கிடும் மனம் என்றுமே வளமாகச் சிந்திக்கும் திராணியற்றுப் போய்விடும். முடிவற்ற மகிழ்ச்சியின்மையைச் சந்திக்க நேரிடும். மொத்தத்தில் நம்மை அடுத்தவரோடு ஒப்பிடத்தொடங்கி விட்டால், நமக்கு நாமே பின்னோக்கி ஓடத் தொடங்கிவிட்டோம் என்று பொருள்.

    வாழ்க்கையில் வெற்றி எனும் இலக்கு நமக்கு எப்போதும் முன்னோக்கியதாகவே இருக்கிறது. ஓடுகிற குதிரையின் பார்வை முன்னோக்கியதாக இல்லாமல் பக்கவாட்டுகளைப் பார்த்துக்கொண்டே ஓடுவதாக இருந்தால், அக்குதிரை நிச்சயம் ஊர்போய்ச் சேராது. அதுபோன்றதுதான் நமது வாழ்வியல் இலக்குநோக்கிய பயணங்களும்; பக்கவாட்டுகளைப் பார்த்துக்கொண்டு ஓடாமல் தேங்கிவிடுவதுதான் ஒப்பிடுகிற வாழ்க்கை.

    அவர் வாழ்க்கையின் வடிவம் அப்படி; நம் வாழ்க்கையின் வடிவம் இப்படி என்று நமதைப் பற்றிய எண்ணங்களோடு வாழ்க்கையில் பயணப்பட்டால் நமக்குள் தாழ்வுமனப்பான்மை ஏற்படாது.

    தம்மைப் பற்றிய கழிவிரக்கம்!, அடுத்தவர் பற்றிய உயர்வு நவிற்சி! இவை இரண்டையும் கை விட்டாலே போதும்; எல்லா ஒப்பீடுகளும் தூள் தூளாகிப் போகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே கணியன் பூங்குன்றன் சொன்னான்,' மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!'

    பொதுவாக நமக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்தால் நமக்குப் பொறாமை வரும்!; நமக்குக் கீழே உள்ளவர்களைப் பார்த்தால் நாம் எவ்வளவோ பரவாயில்லையே என மகிழ்ச்சி வரும். இந்த இரண்டு உணர்ச்சிகளில் பொறாமையைப் போட்டியாக மாற்றும் உத்தியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினால், போதுமென்கிற மகிழ்ச்சியை மூலதனமாக்கி வெற்றி காணாலாம்.

    அவரவர் பாதையில் அவரவர் பயணம் என்கிறபோது, இதில் போட்டி எதற்கு? பொறாமை எதற்கு?

    வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றையே மூலதனமாக்கினால் எந்நாளும் வெற்றிதான்!

    போட்டிகள், ஒப்பீடுகள் விளையாட்டில் இருக்கலாம்!

    வாழ்க்கையில் எதற்கு?

    தொடர்புக்கு 943190098

    • இசைக்கு வசப்படாத உயிர்கள் ஏது?
    • திறமைகளுக்கு மரியாதைக் கொடுத்து பழகி வந்தவர் எம்.எஸ்.வி.

    "இசைக்கு வசப்படாத உயிர்கள் ஏது? "இசை" என்றாலே கேட்கும் அல்லது எழுப்பப்படும் ஒலி நயமாக இருந்தால் நம்மையறியாமல் நாம் அந்த ஒலியுடன் ஒன்றிவிடுகிறோம்! இசைந்து விடுகிறோம். அதனுடன் நல்லிணக்கத்துடன் ஒன்றிப்போக செய்வதால் தான் அப்படி வாசிக்கப்படும் காற்று இசைக் கருவியை "ஹார்மோனியம்" என்கிறோம்.

    மகாகவி பாரதியார் தான் பாடும் பாடல்கள் எந்த ராகத்தில் அமைந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டு விடுவாராம். 1890 முதல் 1973 வரை வாழ்ந்த இசை அறிஞர் பாபநாசம் சிவன் தான் இயற்றும் பாடல்கள் எந்த ராகங்களில் இருக்கிறது என்று குறிப்பிட்டு விடும் பழக்கம் இவருக்குமுண்டு.

    இவர் திரைப்பட பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் இருந்தார். "மன்மத லீலையை வென்றார் உண்ேடா" என்ற புகழ்ப்பெற்றப் பாடலை எழுதியவர் இவர்தான். இப்படி பாரம்பரியமாக பாடல்கள் இசையமைக்கப்பட்ட காலங்கள் அவை!

    அந்த காலத்தில் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருந்த "ஜீபிடர் பிக்சர்ஸ்" ஒரே சமயத்தில் நான்கு படங்கள் தயாரித்தார்கள். அப்படங்களுக்கு இசையமைக்க, கோயம்புத்தூ ருக்கு சென்னையில் இருந்து சி.ஆர்.சுப்பாராமன், டி.கே.ராமமூர்த்தி, டி.ஜி.லிங்கப்பா, சி.எஸ்.ெஜயராமன் ஆகியோர் போவார்கள்.

    இசையமைத்துவிட்டு சென்னை திரும்பும் வரையில் அவர்களுக்கு சுரங்கள் எழுதித்தருவது, அரங்கம் ஏற்பாடு செய்வது, பாடல் ஒத்திகைக்கு உதவுவது என்று எல்லாப் பொறுப்புகளையும் நிர்வாகித்து வந்தவர் எம்.எஸ்.வி.

    இதனால் அவர் பெற்ற இசை ஞானம், திறமை, அனுபவம் இசையமைக்கத் தேவையான எல்லா மேலாண்மையும் கைகூடி வந்தது என்றே சொல்லவேண்டும்.

    இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பாராமனிடம் உதவியாளராக சேர்ந்த எம்.எஸ்.வி. விரைவில் தனது நேர்மையான உழைப்பால், தலைமை உதவியாளரானார். இதற்கிடையே 'ெஜனோவா' என்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படத்திற்கு ஏற்கனவே ஞானமணி என்ற இசையமைப்பாளர் இருந்தாலும் எம்.எஸ்.வி. அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு தரப்பட்டது.

    பகலில் சி.ஆர்.சுப்பாராமன் படத்திற்கு இசையமைப்புக்கான உதவிகள் செய்வதும், அவரிடம் ஆசிப் பெற்று, இரவுகளில் "ஜெனோவா" படத்திற்கு இசையமைப்பதுமான அவரது உைழப்பு எல்லோரையும் வியப்புடன் எம்.எஸ்.வி. யை திரும்பி பார்க்க வைத்தது. தனது உதவியாளர், படத்திற்கு இசையமைப்பாளராக முன்னேறியதில் சுப்பாராமனுக்கு மிகவும் மகிழ்ச்சி!

    தனது குருவிற்கு தான் இசையமைத்த படத்தின் பாடல்களை நேரில் போட்டுக்காட்டி ஆசி பெறவேண்டும் என நினைத்து அதற்கென ஒரு நாளும் குறித்து அரங்கமும் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்துவிட்டார்... அப்போதுதான், சுப்பாராமன் இறந்துவிட்ட செய்தி வருகிறது. நொந்து அழுதேவிட்டார் எம்.எஸ்.வி. ஏற்கனவே, சுப்பாராமனிடம் இசையமைப்பில் எல்லா பொறுப்பிலும் இருந்து வந்த எம்.எஸ்.வி.யிடம், சுப்பாராமன் பாதியில் இசையமைத்து நின்றுவிட்ட படங்களுக்கு இசையமைத்து முடித்து வைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சொல்லி கேட்டார்கள் தயாரிப்பாளர்கள். எம்.எஸ்.வி. அவற்றை முடித்துக் கொடுத்தார்.

    சுப்பாராமன் குழுவிலிருந்த டி.கே.ராமமூர்த்தி என்பவருக்கும் வாய்ப்புகள் வந்தன. டி.கே.ராமமூர்த்தி சிறந்த வயலின் மேதை. இவர் 72 மேளகர்த்த ராகங்களையும் வாசிக்கத்தெரிந்தவராம். அதுமட்டுமல்ல, இசையமைப்பில் வயலின்கள் வாசிக்கும் போது எந்த வரிசையில் இருக்கும் என்பதையும் கலைஞர் தவறாக வாசிக்கிறார் என்பதையும் துல்லியமாக சொல்லும் அளவிற்கு நுட்பம் ெதரிந்தவர். இவருடைய இந்த திறமைகளுக்கு மரியாதைக் கொடுத்து பழகி வந்தவர் எம்.எஸ்.வி.

    "அபூர்வ ராகங்கள்" - என்றொரு திரைப்படம் 1975ல் வந்தது. இயக்குநர் சிகரம், கே. பாலசந்தர் இயக்கியிருந்தார். இந்த திரைக்கதையே ஒரு அபூர்வம். தன்னைவிட மூத்தவரான நடிகை ஸ்ரீவித்யாைவ நடிகர் கமல்ஹாசன் விரும்புவார். கமல்ஹாசன் தந்தையான மேஜர் சுந்தர ராஜனை, ஸ்ரீவித்யா மகளான நடிகை ஜெயசுதா விரும்புவார். ஒரு சிக்கலான கதை.

    இயக்குநர் கே. பாலசந்தர், கதையை சொல்லும் போது, எனக்கு ஒரு அபூர்வமான பாடல் வேண்டும். வித்தியாசமான ராகத்தில் இருக்கணும் என்றார். இதுவரை யாரும் மெட்டு போடாததாக இருந்தால் சிறப்பு என்றார்.

    எம்.எஸ்.வி. சரி என்று சொல்லிவிட்டு, சங்கீத வித்தகர் பாடகர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணவிடம் சென்று, செய்தியை சொல்லி, "அண்ணே ஒரு அபூர்வமான ராகத்தை சொல்லுங்கள் " என்று கேட்டார்.

    அவர், "மஹதி" என்றொரு ராகம், இருக்கிறது. அது நான்கே சுரங்கள் கொண்டது. அதில் மெட்டமைத்துப் பாருங்கள்" என்று சொல்லி விட்டார்.

    'மஹதி ராகம்' - ச,க,ப,நி, என்ற நான்கே சுரங்கள் கொண்டது. நான்கு சுரங்களுக்குள் இசை அமைப்பது கடினம்.

    கமல்ஹாசன் விரும்பும் ஸ்ரீவித்யாவின் பெயர் "பைரவி" .அது ஒரு ராகத்தின் பெயர்! இதனால் ஸ்ரீவித்யாவின் பெயரை பாடலில் நடுவில் வைத்து "அவளொரு பைரவி" - என்று எழுதியிருப்பார் கவியரசர்.

    ஆனால், பாடல் கே.பி.சார். கேட்டபடி மஹதியில் தரவேண்டும். அவ்வாறே செய்து நடுவில் அவள் பெயரை பைரவி என்று குறிப்பிடும் இடத்தில் 'பைரவி' ராகத்தையும் காட்டியிருப்பார்.

    திரைப்படங்களில் காட்சிகளை சொல்ல ஒரு சில உவமைகளை காட்டி குறிப்பால் உணர்த்துவார்கள். அதைப் போல அந்தப் பாடலின் சுட்டிக்காட்டும் வகையில் சிம்பாலிக் சுரம் கொண்டு வந்திருப்பார் எம்.எஸ்.வி. ஒரு புதிய உத்தி அது! இந்த இரண்டு ராகங்களை இணைத்திருப்பது என்பது எம்.எஸ்.வி. யின் படைப்புத்திறனுக்கு ஒரு மைல் கல்!

    "நீ காதலிக்கும் பெண் யார்" என்று கமலிடம் ஸ்ரீவித்யா கேட்கிறார். கமல்ஹாசன் இசையிலே புதிர் போடுகிறார். தான் காதலிக்கும் பெண்ணின் சிறப்புகளை அதிசய ராகமான மஹதியில் வர்ணித்துக் கொண்டே வருகிறார்.

    அதிசய ராகம்....

    ஆனந்த ராகம்....

    அழகிய ராகம்ம்ம்...

    அபூர்வ ராகம்.... என்று பல்லவி பாடுகிறார்.

    பல்லவி என்றால் பாடலின் முதல் 2 அல்லது 4 வரிகள். அனுபல்லவி என்றால் பல்லவி அடுத்து வரும் 2 வரிகள். அதற்கு பின் வரும் பத்திகளுக்கு சங்கீதத்தில் சரணம் என்று பெயர்.

    அடுத்து வரும் சரணத்திலும் காதலியைப் பற்றிய புகழ்ச்சி தான். இரண்டாம் சரணம் முடிந்தவுடன் வரும் இசையிலே ஒரு மாற்றம் தருகிறார். இங்குதான் மெட்டும் மாறுகிறது.

    "ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி!

    மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி"

    இந்த இருவரிகளையும் "பைரவி" ராகத்தில் அமைத்திருப்பார். எம்.எஸ்.வி.

    கமல்ஹாசன், "நான் காதலிக்கும் பெண் 'பைரவி' யாகிய நீ தான் என்பதை புரிந்துக் கொள்ளேன் என்று சொல்லாமல் சொல்லும் விதமாக இசை ரீதியான துப்பு ஒன்று கொடுக்கிறார்.

    ஸ்ரீவித்யாவிற்கு, திடீரென ஏன் பைரவி ராகத்தில் பாடுகிறார்? 'பைரவி' என்ற பெயரில் தன் மாணவிகளில் யாருமில்லையே என்ற சிந்தனையிலேயே இருப்பார், யோசிக்கையில் புருவம் சுருக்குவதை கூட காட்டுவார் கே.பி.

    "இன்னுமா புரியலை" என்ற வசனம் பாடலின் நடுவில் கமல்ஹாசன் சொல்லிவிட்டு மறுபடியும் பாடுவார்.

    "முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி:

    முழுவதும் பார்த்தால், அவளொரு பைரவி,

    அவளொரு பைரவி, அவளொரு பைரவி"என்று பைரவி ராகத்தில் பாடுவது மட்டுமில்லாமல் பெயரையும் அழுத்தந்திருத்தமாக மூன்று முறை சொல்வார்!

    ஸ்ரீவித்யா விக்கித்து நிற்கிறார். தன்னைவிட இளையவரான கமல்ஹாசன் தன்னை காதலிக்கிறாரா என்ற சந்தேகம் கூட அதுவரை அவருக்கு வந்ததில்லை.

    காதலிப்பதாக இவ்வளவு நேரம் பாடியது, இசை மூலமாக சொன்னது தன்னைத்தான் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

    இப்போது கமல்ஹாசன் மீண்டும் பழைய பல்லவியே பாடுகிறார் (மஹதி). "அதிசய ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகம், அபூர்வ ராகம்..."

    இந்த வரிகளைப் பாடும்போது முடிவில் சரசரமாக வாசிக்கப்படும் வயலின்களில் அதிகமாகிக் கொண்டே போகும், ஒரு பரபரப்பு தொனிப்பதை உணரலாம்.

    இந்தப் பாடலில் நான்கு சுரங்களுக்கு ஏற்றபடி முதல் நான்கு வரிகளில் நான்கு எழுத்து சொற்கள் ' அதிசய, ஆனந்த, அழகிய, அபூர்வ" என்றும்,

    'இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்' என்ற வரியில் 72 ராகங்களில் அவள் பெயரும் ஒரு பாகம் என்பதையும்,

    இணையில்லாமல் இருக்கும் நாயகிக்கு ஏற்றவாறு 'சக்கரவாகம்' என்ற சொல்லாடல் பயன்படுத்தியிருப்பதுவும் (சக்கரவாகம் பறவை இணை இழந்தால் சோகமாக பாடும்) என்று கவிதையில் சிலம்பம் ஆடியிருப்பார், கவியரசர் கண்ணதாசன்.

    பாடலுக்கு சாஸ்திரிய சங்கீதமாக மட்டுமே மஹதியிலும், பைரவியிலும் அமைத்து, பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களை பாடவைத்ததில், கேட்கிற, நாம் மெய்மறக்கிறோம்!

    பெண்களுக்குத் தெரியும் பார்ட்டி சேரிஸ் என்று ஒரு டிசைன் புடவை, புடவையின் துவக்கத்தில் ஒரு டிசைன், நடுவில் வேறு டிசைன், மீண்டும் முதலில் வந்த டிசைன் கலந்து முந்தாணை முடியும். அதுபோன்ற ஒரு டிசைன் பாடல் தான் இது! என்று சொன்னால் மிகையில்லை. 50 வருடங்களாக கோலோச்சி கொண்டிருக்கும் பாடல் இது!!!

    கே.பாலசந்தரின் திரைப்படம் இயக்கும் திறன் எல்லோருக்கும் தெரிந்தது தானே? இப்படி சவாலாக திருப்பங்கள் அமைந்த தினால் தான் இந்தப் பாட்டில் இருவேறு ராகங்கள் எம்.எஸ்.வி. இசையமைத்தாரா என்றால்... அதுதானில்லை, இருவேறு ராகங்கள் மட்டுமல்ல. இருவேறு எதிரான இசை வகைகளையும் உள்ளடக்கியப் பாடல்களையும் நிறைய தந்திருக்கிறார்!!

    "பதிபக்தி" என்று ஒரு திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்ரி, நடித்தது. அதில் ஒரு பாடல் காட்சியில் நாட்டியக் கலைஞராக ஜே.பி.சந்திரபாபு, தனது குழுவினரோடு "ராக் ராக் ராக்" என்று ராக் அண்ட் ரோல் பாணி நடனத்தை ஆடுவார். அதற்கு போட்டியாக இரு பெண்கள் பரத நாட்டியம் ஆடுவார்கள். இந்த பாடலை மேற்கத்திய இசையிலும் 'அடாணா' ராகத்தில் கர்நாடக இசையிலும் ஜமாய்த்திருப்பார்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி இருவரும்.

    ஒரே பாடலில் இரு வகை இசை வந்தால் அதை இணைவு இசை என்பார்கள். 1958 லேயே இந்த உத்தியை மெல்லிசை மன்னர்கள் கையாண்டது புதுமை!!

    தொடர்ந்து புதையல் எடுப்போம்...

    இணைய முகவரி: banumathykrishnakumar6@gmail.com

    • உருவமில்லாத உயிர் மட்டுமே நமக்குடையது.
    • உலகத்தை இரவலாக வழங்கி ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கிறான்.

    இரவல் குறித்த செய்திகளை இனிமையுடன் வாசிக்கக் காத்திருக்கும் வாசகர்களே! வணக்கம்.

    மனிதராகப் பிறந்துள்ள நம் ஒவ்வொருவருக்கும் இந்த வாழ்க்கை இரவலாக வழங்கப்பட்டுள்ளது எனத் தத்துவவாதிகள் கூறுகின்றனர். உருவமில்லாத உயிர் மட்டுமே நமக்குடையது. அதற்குத் தகுந்தாற்போல உடம்பையும், வாழ்விட வசதிகளாகிய உலகத்தையும் இரவலாக வழங்கி ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கிறான்.

    இரவலாகப் பெற்ற உடம்பை வைத்துக்கொண்டு, வாய்க்கின்ற வாழ்க்கை இன்பமோ? துன்பமோ? முடியும் வரை வாழ்ந்துவிட்டு, இரவலாகப் பெற்ற உடம்பை இறைவனிடமோ இயற்கையிடமோ திரும்ப வழங்கிவிட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்கின்றனர்.

    'இரவல் தந்தவன் கேட்கின்றான்! அதை இல்லையென்றால் அவன் விடுவானா?' எனும் அர்த்தப் பொதிவுள்ள கவியரசர் கண்ணதாசனின் பாட்டு இரவல் எனும் பொருண்மையின் ஆழத்தை நமக்கு எடுத்துரைக்கிறது. நம்முடைய பிறப்பு என்பது எந்த விதக் கட்டணமுமின்றி இயற்கையாகவே நிகழுகிறது. மருத்துவக் கட்டணம் மனிதர்க்கானது; ஆயினும் மனிதப் பிறப்பின் நிகழ்விற்காக எந்தக் கட்டணத்தையும் நாம் இயற்கையிடம் செலுத்துவதில்லை.

    உடல், கண், காது, மூக்கு, வாய் ஆகிய பொறிபுலன்கள், கை, கால்கள் முதலிய அங்கங்கள், மூளை, மனம் முதலிய அறிவின் செயலாக்கங்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் முதலிய உள்ளுறுப்புகள், உதவிக்கென நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் ஐம்பூதங்கள் கொண்ட இயற்கையின் தொகுதி இவற்றையெல்லாம் இறைவன் நமக்கு இரவலாகவே வழங்கியிருக்கிறான்.

    அது என்ன இரவல்?

    ஒருவரிடமிருந்து ஒரு பொருளை அல்லது ஒரு சேவையைப் பெறுகிறோம் என்றால் அதனை நான்கு வகையில் பெறலாம்.

    பணம் கொடுத்துப் பெறுவது முதல் வகை. இவ்வகையில் பொருளுக்கான அல்லது சேவைக்கான பணமதிப்பைத் தருபவர் தீர்மானிப்பார்.

    பெறுபவர் அதனை ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்த விலை கொடுத்துப் பெற்றுக் கொள்வார்; அல்லது தனக்கு உகந்த குறைந்த ஒரு விலையைக் கூறி, விற்பவர் அந்த விலைக்கு ஒத்துவரும் பட்சத்தில் அதைக் கொடுத்துப் பெற்றுக் கொள்வார். பொருளை விலைகொடுத்து வாங்குவது முதல் வகை.

    ஒரு பொருளை இலவசமாகப் பெறுவது அல்லது பண்டமாற்று எதுவுமின்றி வாங்குவது இரண்டாவது வகை. இதில் கொடுப்பவர் முழுமனத்தோடு பொருளை அடுத்தவருக்குக் கொடுப்பார்; பெறுபவர் மனமகிழ்ச்சியோடு அதனைப் பெற்றுக்கொள்வார். யாசகமாகப், பிச்சையாகப் பெறுவதையும் ஒருவகையில் இதனோடு சேர்த்துக் கொள்ளலாம். இலவசமாகப் பொருளை வாங்குவது இரண்டாவது வகை.

    ஒரு பொருளை விலைக்கும் கொடுக்காமல். இலவசமாகவும் வழங்காமல் கடனுக்குக் கொடுப்பது மூன்றாவது வகை. இவ்வகையில் பெரும்பாலும் பணமே கடனாக வழங்கப்படும். வாங்குகிற பணத்தைத் திருப்பிக் கட்டவேண்டும் என்கிற கடப்பாடோடு இது பெறப்படுவதால் இதற்குக் 'கடன்' என்று பெயர். 'கடன்' என்றால் தமிழில் கடமை என்கிற பொருளும் உண்டு.

    பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையென்பதால் அப்பெயர். பெற்றவனுடைய பற்றாக்குறைத் தேவையை நிவர்த்தி செய்ய அக்கடன்தொகை உதவியதால் கடனைத் திருப்பியளிக்கும்போது வட்டியாகச் சிறிது கூடுதல் தொகையும் வழங்கியாக வேண்டும். நிதிமேலாண்மையில் பெறப்படுகிற கடனுக்கேற்ற வட்டிவிகிதங்களும் தற்போது வரையறுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொருளைக் கடனாக வாங்குவது மூன்றாவது வகை.

    விலைக்கும் வாங்காமல், இலவசமாகவும் பெறாமல், கடனாகவும் பெற்றுக்கொள்ளாமல், ஒரு பொருளை வாடகைக்கு வாங்குவது நான்காவது முறை. குறுகிய காலத் தேவைக்கு மட்டுமே பயன்படுகிற சிலபொருள்களை விலைகொடுத்து வாங்குவது பண விரயம் என்று எண்ணுபவர்கள் அவற்றைத் தேவைப்படும்போது மட்டும் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திவிட்டுத் திருப்பித் தந்துவிடுவது இவ்வகை.

    நிரந்தரமாக இல்லாமல் சில ஊர்களில் தற்காலிகமாகப் பணியாற்றுபவர்கள் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கிப், பிறகு பணிமாறுதல் பெற்றவுடன் அடுத்த ஊரில் வாடகைக்கு வீடு தேடுவர். இவர்கள் ஊர்கள்தோறும் சொந்த வீடுகள் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு வசதிகள் அற்றவர்கள் அல்லது தேவையுமற்றவர்கள்.

    அந்தக் காலங்களில் சொந்தமாகச் சைக்கிள்கூட வைத்துக்கொள்ளும் வசதியற்றவர்களாய் மக்கள் இருந்தனர். அதனால் கிராமங்கள்தோறும் வாடகைக்குச் சைக்கிள்கள் விடும் கடைகள் இருந்தன. அன்றாடக் குறுகிய தூரப் பயணங்களுக்கு மக்கள் வாடகைச் சைக்கிள்களைப் பயன்படுத்தினர். சொற்ப வாடகைச் செலவில் குறிப்பிட்ட காலத்திற்குப் பொருளின் முழுப் பயனையும் இவர்கள் பெற்று விடுவர். ஒத்திக்கு வாங்குவது, குத்தகைக்கு எடுப்பது போன்றவையும் இதில் அடங்கும்.

    இரவல் என்பது இவை அத்தனையையும் தாண்டியது. இரவலாக வாங்கப் படும் பொருள் எந்தப் பணப்பலனையும் சாராதது; அதே நேரத்தில் இலவசமானதும் கிடையாது. இரவலாக ஒரு பொருளை ஒருவரிடமிருந்து ஒருவர் பெறுகிறார் என்றால், அதற்கு விலையாகவோ, கடனாகவோ, வாடகையாகவோ அல்லது பிணையாகவோ எந்தப் பொருளையும், பணத்தையும் தரவேண்டியது இல்லை.

    எனவே இரவலாகப் பெறப்படும் பொருள் முழுக்க முழுக்கத் தருபவருக்கு உரிமையான சொந்தப் பொருளாகவே இருக்கும். வாங்கியவர் பொருளின் பயனை அனுபவித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் இரவல் வாங்கிய பொருளைத் தந்தவருக்கு உரிய நன்றியுடன் திருப்பித் தந்துவிட வேண்டும்.

    அந்தக் காலங்களில் தங்கநகை முதலிய அணிகலன்கள் வசதிபடைத்தவர்கள் வீடுகளில் மட்டுமே இருக்கும். திருமணம் மற்றும் மங்கல விழாக்கள் வரும்போது வசதியற்ற உறவினர்கள், வசதியுள்ளோரிடம் இரவலாக அணிக்கலன்களை வாங்கி அணிந்துகொள்வது வழக்கம். விசேஷம் முடிந்ததும் திருப்பிக்கொடுத்து விடுவர். இன்று எல்லார் வீடுகளிலும் தங்க ஆபரணங்கள் இருந்தாலும், திருட்டுபயத்திற்கு அஞ்சி, நகைகளை வங்கி லாக்கரில் தான் வைத்துவிடுகிறோம்; விசேஷங்களுக்குத் தேவையென்றால் வங்கிக்குச் சென்று இரவல்நகை பெற்று வருவதுபோலப் பத்திரமாக எடுத்து, விழா முடிந்ததும் பத்திரமாகத் திருப்பி வைத்து விடுகிறோம்.

    அதுபோல ஆடைகளையும் இரவல்வாங்கி அணிந்துகொண்ட காலம் ஒன்று இருந்தது." மாப்ள அவருதான் ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது!" என்பதுபோன்ற திரைப்படக் காமெடிகள் இதை விளக்கும்." பட்டுப் புடவைய இரவல் குடுத்துட்டுப் பின்னாடியே பாயை எடுத்திட்டுப்போய் அவ உட்கார்ற இடமெல்லாம் விரித்துப் பட்டுப் புடவையை அழுக்காகாமல் பார்த்துக்கொண்ட பெண்மணி" கதைகளும் பழமொழிகளில் உண்டு.

    சைக்கிள், இருசக்கர வாகனங்கள், கார் முதலான வாகனங்களையும் இரவல் வாங்கிப் பயன்படுத்துகிற பழக்கம் இன்றும் இருக்கிறது. சில பொருள்கள் இரவல் வாங்குவதற்கென்றே படைக்கப்பட்டவை போல இருக்கும். வீடுகளில் பால், சீனி, காபிப் பொடி போன்றவை அடிக்கடி இரவலாகப் பெறப்படுபவை. அதே போல ஆணி அடிக்கப் பயன்படும் சுத்தியல், திருப்புளி, மின்சார டெஸ்டர், ஏணி,அயர்ன்பாக்ஸ், குடை போன்றவையும் இரவல் பட்டியலில் இடம்பெறுபவை.

    வங்கிகளுக்குச் சென்றால், அங்கே படிவங்களை நிரப்பப், பேனாவிற்காக, வந்திருப்பவர்களின் சட்டைப் பைகளையும் கைகளையும் நோட்டமிடுபவர்களைப் பரவலாகப் பார்க்கலாம். சிலர், படிவம் நிரப்பிக் கொண்டிருப்பவரின் அருகில் வந்து நின்றுகொண்டு, கொஞ்சம் எழுதி முடிச்சிட்டுப் பேனாவை எனக்குத் தருவீர்களா? எனச் சொந்தப் பேனாவைக் கேட்பதைப்போலக் கேட்பர்.

    இதற்கும் மேலே சிலர், சார் உங்களோடதை நிரப்பிட்டு எனக்கும் கொஞ்சம் நிரப்பித் தருவீங்களா? என்று படுத்துவார்கள். பெருவாரியான மக்கள் பேனாவை இரவல் கேட்கும் இடம் வங்கிதான். அதிலும் பலர் இரவல் வாங்கிய பேனாவைத் திருப்பித் தராமலேயே சென்றுவிடுவதும் உண்டு.

    இரவல் கொடுக்கிற பொருள்களிலேயே பெரும்பாலும் திரும்பி வராத பொருள் புத்தகம் தான். நிறையப் புத்தகங்களைத் தன் வீட்டில் வைத்திருக்கும் ஒரு எழுத்தாளர் சொன்னார்," கேட்பது யாராக இருந்தாலும் புத்தகங்களை மட்டும் இரவலாகக் கொடுக்காதீர்கள்; அவை எக்காலத்திலும் திரும்ப வரப்போவதேயில்லை. என்னிடம் இருக்கிற பல புத்தகங்கள் நான் இரவலாகப் பெற்றுத் திரும்பக் கொடுக்காதவைதாம்".

    மார்க் ட்வைன் பிரபலமான மேனாட்டு எழுத்தாளர். அவர் எங்கு சென்றாலும், எப்போது சென்றாலும் கையில் ஒரு குடையோடு செல்வது வழக்கம். அந்த நகரில் மார்க் ட்வைன் என்றாலே கையில் குடையோடு இருப்பவர் என்பதே அடையாளமாகிப் போனது.

    அவர் ஒருநாள் தனது கையிலிருந்த குடை மிகவும் பழையதாகவும் பழுதாகவும் போய்விட்டதால் அதைக் குப்பையில் எறிந்து விட்டுப் புதிதாகஒரு குடை வாங்கிக்கொள்ள முடிவு செய்தார். தனது பழைய குடையை அன்று மாலை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார். மறுநாள் காலை விடிந்ததும் வீட்டு வாசலில் அழைப்புமணி ஒலித்தது. தூக்கக் கலக்கத்தோடு கதவைத் திறந்து பார்த்தார் மார்க் ட்வைன்.

    அந்தப் பகுதியைத் துப்புரவு செய்யும் தொழிலாளி, மார்க் ட்வைன் குப்பைத் தொட்டியில் போட்ட குடையுடன் நின்றிருந்தார். " இது உங்கள் குடை தானே!; இந்தக் குடையோடு அடிக்கடி உங்களை இந்தத் தெருவில் பார்த்திருக்கிறேன்; குப்பைத் தொட்டிக்குள் யாரோ தெரியாமல் போட்டிருக்கிறார்கள்! இதோ பெற்றுக் கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்.

    அடுத்து என்ன செய்வது? என யோசித்த மார்க் ட்வைன் அந்தக் குடையோடு அந்தப் பகுதியிலிருந்த குளக்கரைக்குச் சென்று குளத்திற்குள் குடையை வீசியெறிந்து விட்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டார். அந்தோ பரிதாபம்! அன்று மாலையே இவருடைய நண்பரொருவர், குடையை குளக்கரையில் கண்டெடுத்ததாகச் சொல்லி, மார்க் ட்வைனிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

    நிரந்தரமாக அந்தக் குடையிடமிருந்து பிரிவது எப்படி?. மார்க் ட்வைன் பக்கத்து வீட்டு நண்பரின் கதவைத் தட்டினார்; குடையை இரவலாகத் தருகிறேன்; வைத்திரு; நான் கேட்கும்போது திருப்பித்தா! எனத் தந்துவிட்டு வந்தார். அந்தக் குடை திரும்ப வரவேயில்லை. இரவலுக்கு அவ்வளவு சக்தி.

    இரவல் என்பது அவசர ஆத்திரத்திற்குக் கருணையோடு கிடைக்கிற உதவி; அதுவும் நூல்களாக இருந்தால் பேரறிவு. பெற்றதைத் திரும்ப அளிக்கும் குணம் இரவல் பெறுவதில் இனிமையோடு இருக்க வேண்டும்.

    யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்! தாம் இன்புறுவது உலகு இன்புறக் காணும் பரோபகாரம் இரவல் தருவதில் உண்டு. நாம் தொடக்கத்தில் கண்டதைப்போல இந்த வாழ்வே நமக்கு இரவல் வாழ்க்கைதான். நன்றாக வாழ்ந்துவிட்டு எதிர்காலச் சமூகத்திற்காக இந்த பூமியின் செல்வ வளத்தை, அறிவு வளத்தை மேலும் செழுமையாக்கித் திருப்பித் தந்துவிட்டுச் செல்வதே இரவல் வாழ்வியலின் லட்சியமாக இருக்கட்டும்.

    தொடர்புக்கு 9443190098

    • பனிரெண்டு லக்னத்திற்கும் குரு தோஷம் நீக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
    • மனித வாழ்வின் வெற்றிக்கு குரு பலம் மிக அவசியம்.

    மனித வாழ்வின் வெற்றிக்கு குரு பலம் மிக அவசியம். அதனால் தான் குரு பார்க்க கோடி குற்ற நிவர்த்தி என்ற பழமொழியை கூறினார்கள். குரு எந்த ஒரு ஜாதகதாரரையும் கெட்டு போக விடாது. அதே போல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்திற்கு சுப பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது. இனி பனிரெண்டு லக்னத்திற்கும் குரு தோஷம் நீக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

    மேஷம்

    மேஷ ராசிக்கு குரு 9, 12-ம் அதிபதி, பாக்கிய அதிபதி மற்றும் விரய அதிபதி. சுய ஜாதகத்தில் குருவும் பலம் பெற்றால் சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து கவுரவத்துடன் வாழ்வார்கள். தந்தை வழிப் பூர்வீகச் சொத்து கிடைக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தர்ம காரியங்கள் செய்து மகிழும் பாக்கியம் பெற்றவர்கள். தாயும், தந்தையும் பாக்கியவான்கள். உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.தாய், தந்தை வழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள்.

    சுய ஜாதகத்தில் குரு பலம் குறைந்து பனிரெண்டாமிடமும் வலுத்தால் இவர்கள் பெரும்பாலும் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள். இவர்களுடைய சொத்துக்கள் உறவுகளுக்கே பயன்படுகிறது. அல்லது குடும்ப சொத்துக்களை தந்தைக்காக அல்லது தந்தையால் இழக்க நேரும். அல்லது பாக்கியமும் தன யோகமும் குறைவுபடும். பணக்கஷ்டம், மனக்கஷ்டம், தாங்க முடியாத வைத்தியச் செலவும் இருக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.

    ரிஷபம்

    ரிஷப ராசிக்கு குரு 8, 11-ம் அதிபதி. அஷ்டமாதிபதி மற்றும் லாப அதிபதி. அஷ்டமாதிபதியாக குரு சுப வலுப்பெற்றால் சிலருக்கு அதிர்ஷ்ட பணம், லாட்டரி, உயில் சொத்து கிடைக்கும். அஷ்டமாதிபதியாக குரு அசுப வலுப்பெற்றால் விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம், தீராத கடன் ஏற்படும். பெண்களுக்கு கடுமையான மாங்கல்ய தோஷம் உண்டாக்கும். சிலருக்கு கால தாமத திருமணத்தை தரலாம் அல்லது திருமணத்திற்குப் பிறகு வம்பு வழக்கை சந்திக்க நேரும்.

    லாப அதியாக குரு சுப வலுப்பெற்றால் எந்த தவறு செய்தாலும் தண்டணையிலிருந்து தப்பி விடுவார்கள். தொட்டது துலங்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். பங்கு வர்த்தகம், அதிர்ஷ்ட வருமானம் இருக்கும். நயா பைசா பாக்கி இல்லாமல் எல்லா கடனையும் பைசல் செய்து நாணயத்தை காப்பாற்றுவார்கள்.மத்திம வயதில் குரு தசை புத்தி வந்தால் ரகசிய இரண்டாம் திருமணம் நடக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சுக்ர ஓரையில் லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

    மிதுனம்

    மிதுன ராசிக்கு குரு 7,10ம் அதிபதி. களத்திர ஸ்தானம், மற்றும் தொழில் ஸ்தானம் என்ற இரு கேந்திரங்களுக்கு அதிபதி என்பதால் கேந்திரா திபத்திய தோஷம் உண்டு. உபய லக்னம் என்பதால் பாதகா திபத்திய தோஷமும் ஏற்படும்.7ம் அதிபதியாகிய குரு சுப பலம் பெற்றால் வாழ்க்கைத் துணை யால் நண்பர்களால், தொழில் கூட்டாளியால், வாடிக்யா ளர்களால் சகாயமான பலன் உண்டு.

    10-ம் அதிபதியாக குரு பலம் பெற்றால் தொழில் மூலம் ஒரு உயர்வு உண்டு. வருமானம் அதிகமாக இருக்கும். அசுப பலம் பெற்ற குரு தசை புத்தி காலங்களில் மாரகம், பாதகம் மிகைப்படுத்தலாக இருக்கும். கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் விவாகரத்து பெறுவது, நண்பர்கள் மூலம் வம்பு, வழக்கு உருவாகுவது போன்றவற்றால் நிம்மதி குறையும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை ஸ்ரீ ராமானுஜரை வழிபட நன்மைகள் நடக்கும்.

    கடகம்

    கடக ராசிக்கு குரு 6, 9-ம் அதிபதி. ருண ரோக சத்ரு ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தான அதிபதி.லக்னத்தில் குரு உச்சம் பெற்றாலும் தனுசில் ஆட்சி பெற்றாலும் கடன் கதவை தட்டும். குருவிற்கு சனி, கேது சம்பந்தம் இருந்தால் கடன் தீராது. தனித்த குருவாக இருந்தல் கடனைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

    ஏதாவது ஒரு வழியில் ரொட்டேஷன் செய்து தங்களை காப்பாற்றிக் கொள்வார்கள். குருவிற்கு சனி,கேது சம்பந்தம் இருப்பவர்களின் கடன் ஜாதகரை உறுத் தெரியாமல் ஆக்கி விடும். குரு மற்றும் கேது தசை காலங்களில் மிகுந்த கவனம் தேவை. குருவே பாக்கிய அதிபதி என்பதால் முன்னோர்களின் நல்லாசியும் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு பிறவிக் கடனும், பொருள் கடனும் தொடர் கதையாக இருக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாசலபதியை வணங்க வேண்டும்.

    சிம்மம்

    சிம்ம ராசிக்கு குரு 5, 8-ம் அதிபதி. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. குருவும் 5,8-மிடமும் பலம் பெற்றால் பிள்ளைகளால் பெருமை, பாராட்டு உண்டு. மந்திர உபதேசம், குருவின் நல்லாசிகள் கிடைக்கும். நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். பங்குச் சந்தை, உயில் சொத்து, லாட்டரி போன்ற அதிர்ஷ்ட வருமானம் உண்டு. குருவும் 5,8மிடம் பலம் குறைந்தால் கற்ற வித்தை பலன் தராது.பங்குச்சந்தை வணிகத்தில் அதிக இழப்பை சந்திப்பார்கள். சிலருக்கு வம்பும் வழக்கும் நிறைந்த காதல் திருமணம் நடக்கும். பெண்கள் கணவருடன் தீராத வம்பு வழக்கு, கடன் தொல்லை தாங்க முடியாமல் தாலியை கழட்டி வீசுகிறார்கள் அல்லது தாலியை அடமானம் வைக்கிறார்கள்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    கன்னி

    கன்னி ராசிக்கு குரு 4,7-ம் அதிபதி. சுக ஸ்தானம், களத்திர ஸ்தான அதிபதி. பாதகாதிபதி, மாரகா திபதி. சுய ஜாதகத்தில் குருவும் 4,7-மிடமும் பலம் பெறும்போது அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை நல்ல நிலையில் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். தாய், தாய் வழி உறவுகளின் அன்பும், ஆதரவும் நிறைந்து இருக்கும். சகல வசதிகளும் நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும்.

    கணவன் மனைவிக்குள் அன்யோன்யமும், நல்லுறவும் நிறைந்தி ருக்கும். குருவும் 4,7-மிடமும் அசுப வலுப்பெற்றால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வாழ்க்கையைத் தருகிறது. திருமண வாழ்க்கையில் பாதகத்தையும் மாரகத்தையும் செய்யத் தவறுவது இல்லை. பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியாக வரும் கிரகங்கள் தசாபுத்தி காலங்களில் எதிர்பாராத தண்டனையைக் கொடுத்து விடும். உபயம லக்னம் என்பதால் பிரச்சினையின் தீவீரத்தை உணரும் முன்பு தண்டனையே கிடைத்துவிடும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை புதன் ஓரையில் சக்ரத்தாழ்வாரை வழிபட வேண்டும்.

    துலாம்

    துலாம் ராசிக்கு குரு 3,6-ம் அதிபதி. சகாய ஸ்தானம் மற்றும் ருண, ரோக, சத்ரு ஸ்தான அதிபதி.

    சுய ஜாதகத்தில் 3ம்மிடமும் குருவும் பலம் பெற்றால் ஆன்லைன் வர்த்தகம் நல்ல பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். அதே போல் ஊடகம், தகவல் தொடர்பு துறையில் பணி புரிபவர்களின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். 6-ம்மிடமும் குருவும் பலம் பெற்றால் அடிமைத் தொழிலில் இருப்பவர்களும், முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படைத் தொழில் செய்யும் போதும் பெரும் வாழ்வியல் மாற்றமும் சுப யோகமும் உண்டாகிறது. அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்யும் துலா லக்னத்தினர் தொழிலால் கடனாளி யாகிறார்கள். உடன் பிறந்த இளைய சகோதரத்தால் தாய்மாமாவால் வஞ்சிக்கப்படுகி றார்கள். சிலர் ஜாமீன் பிரச்சினையில் மாட்டுகிறார்கள்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசிக்கு குரு 2, 5-ம் அதிபதி தனா திபதி, பஞ்சமாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால். மாபெரும் புண்ணியம். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் ஒருங்கே இணையப் பெற்றவர்கள். குல தெய்வ அனுகிரகம் உண்டு. பிள்ளைகளால் பெற்றோருக்கும், பெற்றோர்க ளால் பிள்ளைகளுக்கும் பயன் உண்டு.

    உயர் கல்வி யோகம் உண்டு. வக்கீல்கள், ஜோதிடர்கள், நிதித்துறை, நீதித்துறை,ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, போன்றவற்றில் இருப்ப வர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும்.குரு பலம் குறைந்தால் நிலையான வருமானம் இருக்காது. பிள்ளைகளால் மனக் கஷ்டம் உண்டாகும். அதிர்ஷ்டம் குறைவுபடும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை நவகிரக குருபகவானை வழிபட வேண்டும்.

    தனுசு

    தனுசு ராசிக்கு குரு 1, 4-ம் அதிபதி. லக்னா அதிபதி, கேந்திராதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் நிச்சயம் வீடு மனை யோகம் சித்திக்கும். நல்ல ஆடம்பரமான வசதியான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள். பொன்னும் பொரு ளும் சேரும். 16 வகைச் செல்வங்களும் நிறைந்து இருக்கும். இவர்கள் பண்ணை யாளர்களாக, விவசாயிகளாக இருப்பார்கள். தாய்வழி பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்து வார்கள். தாயார் உயர்ந்த குடும்பத்தில் பிறந்த வர்களாக இருப்பார்கள். உற்றார், உறவினர்கள் ஆதரவு, அனுசரனை உண்டு.

    குரு பலம் குறைந்தால் சொத்துக்களால் பயன் இருக்காது. பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் உடல் நல பாதிப்பு இருக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் அனுசரனை இருக்காது. தாய் அடிக்கடி நோய் வாய்ப்படுவார். குரு கேந்திராதிபதி என்பதால் தசை புத்தி காலங்களில் தாய்வழி உறவுகளுடன் தேவையற்ற மனக் கசப்பு உண்டாகும். சுக போகங்களையும், யோகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் குறைவுபடும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை குரு ஓரையில் பஞ்சமுக கணப தியை வழிபட வேண்டும்.

    மகரம்

    மகர ராசிக்கு குரு 3,12-ம் அதிபதி. சகாய ஸ்தான அதிபதி விரய அதிபதி. மூன்றாம் அதிபதியாகி குரு பலம் பெறும் போது லட்சியங்கள் நிறைந்தவர்கள். திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவர்கள். உடன் பிறந்தவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். 12ம்மிடம் வலுப்பெற்றால் வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுக்காக சொத்து, சுகத்தை விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். செவித் திறன் குறையும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை இருக்கும். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு இருக்கும். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக ஏமாற்றத்தை சந்திபார்கள். வேலையாட்களால் இழப்பு இருக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சனி ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    கும்பம்

    கும்ப ராசிக்கு 2,11-ம் அதிபதி. குரு தன, லாப அதிபதி. இவர்களுக்கு குரு அதிகப்படியான யோகத்தை வழங்குவார். சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் செல்வாக்கு, சொல்வாக்கு நிறைந்தவர்கள். தனது வாக்கு திறமையை வைத்தே குடும்பத்தை காப்பாற்று வதில் வல்லவர். லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர்.

    ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குபவர்கள். வீடு, வாகனம் என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு. இரண்டு குடும்பம் உண்டு. இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு உயர்வு உண்டு. வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் லாபம் பெறுவார்கள். மூத்த சகோதர ஆதாயமும் உண்டு. குரு பலம் குறைந்தால் ஆடம்பர பொருட்களின் சேர்க்கை குறையும். புகழ், அந்தஸ்து, கவுரவம் மட்டுபடும். தனக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் தவறிப் போகும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை கோவில் யானைக்கு கரும்பு, பழங்கள் இயன்ற உணவு தானம் வழங்க மகத்தான வாழ்வு உண்டு.

    மீனம்

    மீன ராசிக்கு குரு 1, 10-ம் அதிபதி. லக்னாதிபதி, பத்தாம் அதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் அற்புதமான உன்னத பலன்களை அனுபவிக்கிறார்கள் இவர்கள் ஆசிரியராகவோ, காலேஜ் புரபசராகவோ, அல்லது யாரேனும் ஒருவருக்கு ஆலோசனை வழங்கு பவராகவோ இருப்பார்கள். நிலையான நிரந்தரமான தொழில், அரசு உத்தியோகம், அரசியல் பதவி, அரசு வகை ஆதாயம் உண்டு. புகழ், அந்தஸ்து, கவுரவம் என ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுப பலன்களும் தேடி வரும்.

    குரு பலம் குறைந்தால் லக்னாதிபதி என்பதால் எளிதில் கண் திருஷ்டி தோஷம், அவமானம் போன்றவை தொடர்கதையாக இருக்கும். குரு கேந்திராதிபதி என்பதால் வருமான வரி துறையிடம் சிக்குவது, கொடுக்கல் வாங்கலில் நட்டம், தொழில் இழப்பு போன்ற அசவுகரியங்கள் உண்டாகும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை குபேர லட்சு பூஜை செய்ய வேண்டும். ஒரு ஜாதகத்தின் பலமே குரு பலம் தான். எனவே குரு பலத்தை அதிகரிக்க உரிய பரிகாரத்தை பயன்படுத்தி பயன் பெற நல் வாழ்த்துக்கள்.

    பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • புது பாடலாசிரியராக வந்த இளைஞர் தான் கவியரசு கண்ணதாசன்.
    • அந்த கால கட்டத்தில் நாடகங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தார்கள்.

    "இசை!

    இசை எப்போது உருவாகியிருக்கும்?

    குகைகளில், மரக்கிளைகளில் மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகளிடம் இருந்தும், ஊர்வன விஷப்பூச்சிகளிம் இமிருந்தும் தங்களை காத்துக் கொள்ள, இரவின் இருள் பயத்தால் ஒருவருக்கொருவர் தங்கள் இருப்பை தெரிவித்துக் கொள்ள ஏதோ ஓசை, சத்தம், சீழ்க்கை ஒலி (விசில்) போன்ற ஒலிகளை எழுப்பியிருக்கக்கூடும்.

    தாங்கள் வேட்டையாடிக் கொன்ற விலங்குகளின் தோல்களை குளிருக்கும் வெயிலுக்கும் போர்த்திக் கொண்டு உடையாய் மாற்றியதைப் போல, தோலை மரக்கட்டைகளில் சேர்த்துக்கட்டி, குச்சிகளால் ஒலி எழுப்பி விலங்குகளை விரட்டியிருப்பார்கள். இவையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேம்பட்டு, பக்குவப்பட்டு இசைக் கருவிகளாக தோன்றியிருக்கும்!

    வாங்க, கொஞ்சம் கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி போகலாம்.

    1918-ல் தென்னிந்தியாவின் முதல் அசையும் திரைப்படம், ஆனால் மவுன திரைப்படம் "கீசகவதம்". 14.3.1931-ல் இந்தியாவின் முதல் பேசும்படம் "ஆலம் ஆரா" திரையிடப்பட்டதாம். தமிழகத்தில் 1931ல் வெளிவந்த முதல் பேசும் படம் "காளிதாஸ்".

    அப்போதைய கட்டுப்பெட்டியான காலக்கட்டத்தில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு வீடுகளில் ஏகப்பட்ட கெடுபிடி, தடை. அதனால் பக்தி படங்கள், புராணக் கதைகளை சொல்லும் திரைப்படங்கள் மட்டுமே தயாரிக் கப்பட்டது. சுதந்திரம் அடையாத காலம். அதனால் ஆங்கிலேய அரசுக்கு எதிரான படங்கள் எதுவும் எடுத்துவிட முடியாது. அரசின் தணிக்கைக் கட்டுப்பாடும் இருந்தது.

    அதன் பிறகு அரசர்கள் கால கதைகளைக் கொண்ட திரைப் படங்கள் வந்தன. பெண்கள் யாரும் நடிக்க முன் வராத அந்த காலக்கட்டத்தில் நாடகங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தார்கள். திரைப்படங்கள் பக்திப் படங்களாக இருக்கவே கொஞ்சமாக பெண்களும் திரைத்துறைக்கு வந்தனர்.

    இன்னொரு புறம், அப்போது பின்னணி பாடல்கள் ஒலிப்பதிவு செய்யும் தொழில் நுட்ப வளர்ச்சி இல்லை. நடிகர்கள், நடிகைகள் நடிக்கும் போதே காமிராவுக்கு தெரியாதவாறு கூடவே ஹார்மோனியம் போன்ற குறைந்த இசைக் கருவிகள் மட்டுமே வைத்துக் கொண்டு, பேசியும் பாடியும் நடிப்பதை படமாக்குவார்கள். அதனால், பாடத்தெரிந்த ஆண், பெண்கள் மட்டுமே நடிக்க முடியும்.

    இந்த காலக் கட்டத்தில் தான் எம்.கே. தியாகராஜ பாகவதர் 1934ல், எம்.கே.ராதா -1936ல், பி.யு.சின்னப்பா 1938ல், டி.ஆர்.மகாலிங்கம் 1937ல் நடிக்க வருகிறார்கள். இவர்களின் பாடல்களுக்காகவே ஓடியத் திரைப்படங்கள் உண்டு.

    நடிகைகளில் டி.பி.ராஜலட்சுமி 1931ம் ஆண்டில் முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் நடித்தவர். அந்த காலத்திலேயே அஷ்டாவதானி என புகழப்பட்டவர். முதல் பெண் இயக்குநர்! கண்ணாம்பா 1938ல் நடிக்க வருகிறார். கே.பி.சுந்தராம்பாள் 1935ல் பக்த நந்தனார் பேன்ற திரைப்படத்தில் நந்தனாராக நடித்தார். அந்த நாளிலேயே தனது பாடல்களுக்காகவே பிரபலமானவர்.

    திராவிட இயக்கத்தை சேர்ந்த பலர் நாடகங்கள் நடத்தி வந்தனர். நாடகங்களின் மூலம் சுதந்திரக்கால வரலாறு, மற்றும் தேசத் தலைவர்கள் போராடியக் கதைகள் எல்லாம் பொதுமக்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று நேரடியாக சேர்த்தது. திரையரங்குகளை விட நாடங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால் மெல்ல மெல்ல சமூகக் கதைகளும் வர ஆரம்பித்தன.

    கால இயந்திரத்தை விட்டு இறங்கி விடுவோம். திரும்ப அடுத்த தொடரில் தொடரலாம்!

    "இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனிடம் உதவியாளராகயிருந்த எம்.எஸ்.வி.

    பாடலாசிரியர்களிடம் மெட்டுக் கேற்ற பாடல் எழுதி வாங்குவார் என்று பார்த்தோமில்லையா?

    "கன்னியின் காதலி" என்றொரு திரைப்படம் 1949ல் வந்தது. அப்படத்திற்கு பாடல் எழுத ஒரு புதிய இளைஞன் தேர்வானார். அவரிடம் "தத்தகாரம்" சொல்லி பாடலுக்கு காத்திருந்தார் எம்.எஸ்.வி.

    (இசை அமைக்க வேண்டிய மெட்டுக்கு தானா, தன்னன்னா, தையன்னா, தத்தத்னா" என்று சொற்கள் இல்லாத ஓசையை மட்டும் பாடிக்காட்டவேண்டும். அந்த ஓசைக்கு பொருத்தமான சொற்களை பாடலாசிரியர்கள் எழுதுவார்கள்.

    "வறுமையின் நிறம் சிவப்பு" படத்தில் "முத்து இருக்குது சிப்பி இருக்குது"? என்ற பாட்டில் வருமே, அதுபோல் தானே என்று கேட்கறீங்க? அதுதான்! அதுவேதான்!)

    புதுக் கவிஞரும் பாட்டு எழுதி தந்துவிட்டார். வாங்கிப் படித்துப் பார்த்த எம்.எஸ்.வி. "இதென்ன களி, கூத்து"ன்னு எழுதியி ருக்கீங்க? என்கிறார். அந்த இளைஞனோ, "ஏன் பாட்டு மெட்டில பொருந்துகிறதே" என்கிறார்.

    "மெட்டுக்கு சரியா பொருந்துது, ஆனா... இந்த களி,கூத்து இதெல்லாம் சரியில்லை. மாத்திடுங்க", என்கிறார் எம்.எஸ்வி.

    "அவைதான் சரியான சொற்கள், அதையேன் மாத்தணும்?"

    அப்போதெல்லாம் வடமொழி சொற்கள் கலந்தும் பாடல்கள் இருக்கும்! இவர்களின் முதல் சந்திப்பே வாக்குவாதம்! அப்போது ஜூபிடர் பிக்சர்சல் நிறுவன கவிஞராக இருந்த "உடுமலை நாராயண கவி" அந்த வழியாக வந்தார், புதுக்கவிஞரின் வரிகளை வாங்கிப் படித்துப் பார்க்கிறார். 'அட, சரியான தமிழ் வார்த்தைகள் தான் எழுதியிருக்கீங்க" என்று பாராட்டிவிட்டு, தம்பி இந்த களி, கூத்து இதெல்லாம் இவங்களுக்கு வித்தியாசமாக தெரியுது. அதற்கு பதில் "காரணம்தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே'ன்னு போட்டு பாருங்க" என்கிறார்.

    இது மெட்டுக்கு சரியாப் பொருந்துதுண்ணே என உற்சாகமாகிறார் எம்.எஸ்.வி. எல்லாருக்கும் புரிகிற மாதிரி இருக்கட்டுமேன்னு தான்... சொன்னேன்.

    திரைப்படங்களில் காட்டப்படும் எழுதப்படாத சட்டம் போல "மோதலில் உருவான இவர்களது அன்பு" இறுதிக் காலம் வரை, "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்று இரட்டையர்களாகவே திரையுலகில் கொடிக் கட்டிப் பறந்தார்கள். அந்த புது பாடலாசிரியராக வந்த இளைஞர் தான் கவியரசு கண்ணதாசன்.

    உடுமலை நாராயண கவிப் பற்றி பார்த்தோமில்லையா? அவரின் வரிகளுக்கு சி.ஆர்.சுப்பராமன் பாடி, இசையமைத்த ஒரு பாடல்! "மருமகள்"என்றத் திரைப்படத்தில் இடம் பெற்ற "லாலி சுபலாலி, காதலர் ஜாலி வெகு ஜாலி".

    கல்லூரி மாணவர்களில் ஒருஜோடி பதிவுத் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். மீதி தோழி, தோழர்கள் அவர்களை வாழ்த்திப் பாடுகிறார்கள். வழக்கமாக சம்பிரதாயமானப் பாடல்கள் என்றால் திருமணம் முடிந்தவுடன் வரும் நலுங்குப் பாடலை "ஆனந்த பைரவி" ராகத்தில் அமைப்பார்கள். இது கல்லூரி மாணவர்கள் பாடுவது இல்லையா? அதனால் ராக் அண்ட் ரோல், கைத்தட்டல் என்று ஜமாய்த்திருப்பார்கள்.

    இதில் இன்னொரு புதுமையாக பாடலின் ஆரம்பத்திலும், கடைசி யிலும் "லாலி", "காதலர் வெகு ஜாலி" என்றவரிகள் வரும் போது பாடகர்கள் ஒரு மெட்டிலும், குழுவினர் லல்லல்லல்ல லல்லல்ல லா என்று வேறு ஒரு மெட்டிலும் பாடியிருப்பார்கள்.

    இந்த பாடல் சி.ஆர்.சுப்பராமன் இசையமைத் திருந்தாலும், அவருக்கு உதவியாளராக எம்.எஸ்.வி. இருந்தார் என்பதும் பாட்டுப் புத்தகம் வழியே தெரிகிறது.

    மேலே சொன்ன இசை வகை, "கவுண்டர் பாயிண்ட்" என்கிற மேற்கத்திய இசை முறையாகும். ஒருவர், பாடலில் ஒரு மெட்டில் பாடும்போது, இன்னொருவர் அதே நேரத்தில் அதே பாடலில் வேறு மெட்டில் பாடுவது. அந்தக் காலக் கட்டத்தில் இந்த இசையமைப்பு புதிது.

    இந்த இசை முறை மிக மிக முன்னோடியாக சி.ஆர்.சுப்பராமன் அவர்களால் கையாளப் பட்டிருப்பது 1953-ல் வந்த 'மருமகள்' படத்தில் வந்த 'லாலி சுபலாலி' பாடலில் என்பது ஒருபுறம் இருந்தாலும், 1952ல் வெளிவந்த 'பணம்' என்றத் திரைப்படத்திலும் கூட 'ஏழை நின் கோவிலை நாடினேன், எழில் மின்னும் சிலை வண்ண தேவியே' என்றப் பாடலில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி தங்களின் முதல் படத்திலேயே இந்த நுட்பத்தை கையாண்டு இருக்கிறார்கள்.

    இந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கிலேயும், கடைசியிலும் கவுண்டர் பாயிண்ட் பாடல் வகையை பயன்படுத்தியிருப்பது மட்டுமில்லை, இந்த பாடலில் Over lapping என்ற முறை அதாவது ஒருவர் பாடும்போதே அந்த குரலின் கூடவே இன்னொரு குரலையும் பாட வைப்பது.

    இரு குரலும் ஒரே மெட்டில் ஒரே நேரத்தில் பாடினால் அது ஓவர் லாப்பிங் இரு குரலும் வேறு வேறு மெட்டில் ஒன்றாக ஒரே நேரத்தில் பாடுவது கவுண்டர் பாயிண்ட். இந்த இரண்டு நுட்பமுமே தங்களது முதல் படத்திலேயே கொண்டு வந்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல, "ஏழை நின் கோவிலை" பாடல் வால்ட்ஸ் என்ற மேற்கத்திய வகைப்பாடல்.

    24 வயது இளம் முதல் பட இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன், அப்போதைய மிகப் புகழ்பெற்ற, கர்நாடக சங்கீதத்தில் பெயர் பெற்ற எம்.எல்.வசந்தகுமாரி (நடிகை ஸ்ரீவித்தியாவின் அம்மா) அவர்களை முற்றிலும் புதிய மேற்கத்தியம் பாடவைத்தது புதுமை, புரட்சி எனலாம்.

    'குலேபகாவலி' என்றவொரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த போது அதைக் கேட்ட ஜே.பி.சந்திரபாபு "இந்த மாதிரி இசைக்கு எப்படி ஆடமுடியும்? என்னால் ஆட முடியாது" என்று சொன்னதற்கு "நான் ஆடிக்காட்டுகிறேன் பாருங்கள்" என்று சொல்லி ஆடியும் காட்டினாராம் எம்.எஸ்.வி. அவர் சிறு வயதில் முறையாக நடனம் கற்றவராம். நடனத்தால் சந்திரபாபு அசந்துவிட்டாராம்.

    முன்பு ஒரு முறை செண்ட்ரல் ஸ்டுடியோவில் எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடுவிடம் பாட வாய்ப்பு கேட்டு சந்திரபாபு போனபோது, "பாடவில்லை, முனகுகிறார்"என்று சந்திரபாபுவை மறுத்தவர் தான் உதவியாளராக இருந்த எம்.எஸ்.வி. பின்னாட்களில் இருவரும் உயிருக்கு உயிரான நண்பராகி விட்டார்கள்.

    இரவில் பதினோரு மணிக்கு கூட எம்.எஸ்.வி.யின் தாயார் நாராயணிக்குட்டி அம்மாவை தோசை சுட்டுத் தர சொல்லி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமான சந்திரபாபுவின் கடைசி காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து கவனித்துக் கொண்டார்.

    எம்.எஸ்.வி. "நான் இறந்துவிட்டால் எனது உடலை கொஞ்ச நேரம் விஸ்வநாதனின் வீட்டில் கிடத்தி விட்டு பிறகு மயானத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்" என்று ஜே.பி.சந்திரபாபு சொல்லியிருந்தாராம். அப்படியே நடந்ததாம். மோதலில் பூத்த இன்னொரு அழகான நட்பு இது!

    தொடர்ந்து புதையல் எடுப்போம்...

    கவிஞர்

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    இணைய முகவரி:banumathykrishnakumar6@gmail.com

    ×