search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தர்"

    குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்குச் செல்லும் வழியில், இருக்கிறது சங்கராஸ்ரமம். இங்குதான் ‘ஐந்தருவி சித்தர்’ என்றழைக்கப்படும் சங்கரானந்தர் சுவாமி அடங்கியுள்ளார்.
    திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்குச் செல்லும் வழியில், அருவிக்கரைக்கு சற்று முன் திருப்பத்தில் வலதுப்புறத்தில் இருக்கிறது சங்கராஸ்ரமம். இங்குதான் ‘ஐந்தருவி சித்தர்’ என்றழைக்கப்படும் சங்கரானந்தர் சுவாமி அடங்கியுள்ளார். இந்த ஆசிரமத்தில் தியான மண்டபம், கலந்துரையாடல் கூடம் ஆகியவை உள்ளன.

    முன்னுள்ள கட்டிடத்தின் நடு வழியே சென்றால் சங்கரானந்தரின் சமாதி காணப்படுகிறது. கண்ணாடி அறைக்குள், நவீனமான முறையில் அமைந்துள்ளது சமாதி. அதில் சிவலிங்கமோ அல்லது வேறு சின்னங்களோ ஏதுமில்லை. இங்கு சிவலிங்க வழிபாடோ, மணி அடித்து, தூப தீபம் காட்டி வழிபடுவதோ கிடையாது. சமாதி பின்புறம் சலசலவென ஓடும் ஐந்தருவித் தண்ணீர் கூட, ஏதோ ஆன்மிக மந்திரத்தை நமக்கு போதிப்பது போலவே ஒலிக்கிறது.

    ஐந்தருவி சித்தர் வாழ்ந்து அருளாசி வழங்கிய குடிலும், அமர்ந்து தவம் செய்த திண்ணையும் பக்தர்கள் வணங்க ஏதுவாக அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சரி.. யார் இந்த ஐந்தருவி சித்தர்?

    எடுப்பான தோற்றம்! உயரமும் கனமும் ஒரே சீராக அமைந்த தேகம். நரைத்த தலை முடியைப் பின்னால் கோதி விட்டுக்கொண்டு தாடியைத் தடவிக் கொண்டே நடந்து வருகிற அழகு. நீளமாக வெள்ளை வேட்டியை உடுத்திக் கொண்டு அதிலேயே ஒரு பகுதியை மாராப்புப் போலப் போட்டுக் கொள்ளும் யுக்தி. கையில் ‘டாணா’ கம்புடன் உலாத்திக்கொண்டே இருப்பார். நடந்து வருகிறவர்களுக்கும் போகிறவர்களுக்கும் ‘சித்த மார்க்கத்’தைப் போதித்துக் கொண்டிருப்பார் என்கிறார்கள் அவரை சந்தித்தவர்கள். ஐந்தருவி சித்தருக்கு மலையாளம், ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகள் தெரியுமாம்.

    ஆசிரமத்தில் விபூதி இல்லை; குங்குமம் இல்லை; தேங்காய் உடைப்பது இல்லை; ஊதுபத்தி இல்லை; உருவ வழிபாடு இல்லை; சாதிப் பிரிவு இல்லை; ஏழை பணக்காரர் இல்லை; ஆண் பெண் வேறுபாடும் இல்லை; இங்கு உபதேசம் பெற்ற எல்லாரும் சித்தர்கள்; ஒரே குலம்; ஒரே குடும்பம்; ஒரே உணர்வு, இதுதான் இந்த ஆசிரமத்தின் அடிப்படை சித்தாந்தம்.

    ஐந்தருவி ஆசிரமத்திற்குச் செல்பவர்கள், சித்தரிடம் என்ன கேட்பார்கள்? அவர் தன்னை நாடி வந்தவர்களுக்கு என்ன கொடுப்பார்? எதிர்காலம் பற்றிச் சொல்வாரோ? சித்திகள் ஏதாவது உண்டா? என்று கேட்டால், அதற்கு கிடைக்கும் பதில் ‘எதுவுமே இல்லை’ என்பது தான்.

    அதே நேரத்தில் அவரோடு பேசுவதில் ஒரு இன்பம்; அவரோடு இருப்பதில் ஒரு மகிழ்ச்சி; ஐந்தருவி ரோட்டில் அவரோடு நடந்து போவதில் ஒரு திருப்தி; ஆசிரமத்திலுள்ள மரங்களையெல்லாம் வந்தவர்களுக்குச் சுற்றிக் காட்டுவதில் சித்தருக்கு ஒரு ஆனந்தம். எங்கெங்கு தேடியும் கிடைக்காத மகிழ்ச்சியும் திருப்தியும் இந்த ஆசிரமத்தில் கிடைக்கும். சித்தர் சமாதி அடைந்த பிறகும் கூட இங்கு வரும் அடியவர்களின் கூட்டத்திற்கு அதுவே காரணம் என்கிறார்கள்.

    இவ்வளவு ரம்மியமான ஐந்தருவி இடத்துக்கு சங்கரானந்தர் வந்த வரலாறு தான் என்ன?

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப் படித்துறை. சித்த சமாஜத்தை நிறுவிய சிவானந்த பரமஹம்ஸர் தனக்கான சீடனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அதே நேரம், வடக்கே தோன்றி ஞானத்தேடலுடன் தனக்கான குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன். பவானிக் கரையில் குருவும் சீடரும் சந்தித்தனர். குரு சிவானந்த பரமஹம்ஸர் தான், அந்த இளைஞனுக்கு சங்கரானந்தர் என பெயர் சூட்டினார். பின், ‘சிறிது காலம் வடதேச யாத்திரை போய் வா’ என்று ஆசி வழங்கி சீடனை வழியனுப்பினார்.

    சங்கரானந்தரும் இமயத்தை நோக்கிச் சென்று, சாரலில் நனைந்தார். காசியின் வீதிகளில் அலைந்தார். அவருக்கு ஞான அனுபவம் கைகூடியது. மீண்டும் குருவின் ஆசிரமத்தில் சிலகாலம் தங்கினார். பின் தென்னகத்தை நோக்கி யாத்திரை கிளம்பினார்.

    பல இடங்களில் சுற்றிவிட்டு, குற்றாலம் அருகில் உள்ள வல்லம் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். இளவயதில் வெள்ளாடையோடு வந்த சங்கரானந்தரை, சிறுவன் ஒருவன் கல்லால் தாக்கினான். இதில் காயமடைந்த சங்கரானந்தரை, அங்குவந்த சிவசுப்பிரமணிய மூப்பனார் தனது வீட்டுக்கு அழைத்து சென்று மருந்திட்டார். பிறகு சங்கரானந்தரின் ஞான மார்க்கத்தைப் புரிந்து, அவரோடு சுற்றித் திரிய ஆரம்பித்தார். தொடர்ந்து பலரும் இவரை காணவந்தனர்.


    ஐந்தருவி சித்தர், ஐந்தருவி சித்தரின் சமாதி

    ஆனால் தனிமையை விரும்பிய சங்கரானந்தர், ஐந்தருவி காட்டில் தவ வாழ்க்கை மேற்கொண்டார். பின்னர் மீண்டும் இமயமலை சென்று தங்கினார். அங்கே அவருக்கு பிரபுக்களுடனும், மன்னர்களுடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. சில வருடங்களுக்குப் பின் தன் குருவைத் தேடி வந்தார். அப்போது சிவானந்த பரமஹம்ஸர், ‘வடநாட்டில் பிரபுக்களிடமும் மன்னர்களிடமும் சித்த நெறியைப் பரப்புவதில் பலன் இல்லை. தென்னாட்டுக்குப் போ. ஆன்மிக நெறி வளர்வதற்கேற்ற உரம், ஏழைகளிடமும் தான் உள்ளது. அவர்களுக்கும் ஞானம் கிடைத்தாக வேண்டும்’ என்றார்.

    குருவின் சொல்படி மீண்டும் தென்னகம் வந்தார், சங்கரானந்தர். அன்பர்கள் உதவியுடன் ஐந்தருவிக் கரையில் தற்போதுள்ள இடத்தை வாங்கி ஆசிரமம் அமைத்தார். இவ்விடத்தில் அமர்ந்து மக்களுக்கு அருள் வழங்கிய காரணத்தினால் ‘ஐந்தருவி சுவாமி' என்று அழைக்கப்பட்டார்.

    அற்புதங்கள் பலவற்றை ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்தவர் சங்கரானந்தர். பழம்பெரும் திரைப்பட இயக்குனரான பீம்சிங், ஒரு முறை பக்கவாத நோயால் அவதிப்பட்டார். அப்போது ஐந்தருவி சித்தரின் ஆற்றலாலும், மருந்தாலும் ஆச்சரியப்படும் விதத்தில் பீம்சிங் குணமடைந்தார். மகிழ்ச்சியடைந்த அவர், ஒரு பெருந்தொகையைக் கொடுத்து ஐந்தருவி ஆசிரமத்தில் தியான மண்டபம் கட்ட ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

    ஐந்தருவிச் சித்தர் சிறந்த மருத்துவர். பாம்புக் கடிக்கு உடனடி வைத்தியம் செய்வார். மூலிகை கொடுப்பார், நோய்கள் சரியாகிவிடும். இங்கு வருபவர்களுக்கு மூலிகை கஷாயம் கொடுப்பது ஐந்தருவி சித்தரின் வழக்கம். அதனால் வந்தவர்களுக்கு புத்துணர்ச்சி பொங்கி விடும். சித்தருக்கு புத்தகங்கள் படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். அவர் சொல்லச்சொல்ல நிறைய தத்துவ விளக்கங்களை தமிழ்நடையில் வி. ஜனார்த்தனம் என்பவர் தொகுத்துள்ளார்.

    30.8.1974 அன்று ஐந்தருவி சித்தர் சமாதி நிலை அடைந்தார். இதையறிந்ததும் குற்றாலம் மட்டுமல்ல இந்தியாவில் பல்வேறு பகுதியில் உள்ள அவரது அடியவர்கள் ஐந்தருவி ஆசிரமத்தில் குவிந்தனர். ஆனால் சித்தரின் இறப்பை எண்ணி யாரும் கதறவில்லை. முகத்தில் தெரிந்த வருத்தம், வெடித்து வாய்வழியாக வெளியேறவில்லை. அது தான் இருக்கும் காலத்தில் ஐந்தருவி சித்தர், தன் அடியவர்களுக்கு சொல்லித்தந்த பாடம். அனைவரும் கூடி நிற்க சித்தரை சமாதி வைத்தனர். தற்போதும் கூட இவ்விடத்தில் சித்தரின் அருள் உள்ளது. இங்கு சென்றாலே நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது. இழந்ததை பெற்றது போல தோன்றுகிறது.

    சங்கரானந்தர் தங்கியிருந்த அறையில் அவர் பயன்படுத்திய கட்டில் உள்ளது. கட்டிலுக்குக் கீழே ஒரு பாதாள அறை. அதற்குள் சென்றுதான் அவர் தியானம் புரிவாராம்.

    சித்த வித்தை பயில தன்னை நாடி வருபவர்களுக்கு சங்கரானந்தர் மூன்று நிபந்தனைகளை மட்டுமே முன் வைத்துள்ளார்.

    * மீன், முட்டை, இறைச்சி போன்ற புலால் உணவுகள் உண்ணக்கூடாது.

    * பீடி, சிகரெட், கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை உபயோகிக்கக் கூடாது.

    * மது, கள், சாராயம் போன்ற பானங்களை அருந்தக் கூடாது.

    இதைக் கடைப்பிடிப்பவரே சித்தவித்யார்த்தி என்பது ஐந்தருவி சித்தரின் கண்டிப்பான கட்டளை. அதை அவரது சிஷ்யர்கள் தற்போதும் கூட கடைப்பிடித்து வருகிறார்கள்.

    அமைவிடம்

    தென்காசி அல்லது செங்கோட்டைக்கு பேருந்துகள், ரெயில்கள் உண்டு. இங்கிருந்து பேருந்தில் குற்றாலம் சென்று ஐந்தருவிக்குச் செல்லலாம். சீசன் இருக்கும் மாதங்களில் மட்டுமே நகரப் பேருந்துகள் இருக்கும். மற்ற நாட்களில் ஆட்டோ மூலமே செல்ல முடியும். 
    அமாவாசை சித்தரால் தான் நெல்லையப்பர் கோவிலில் மூடிக்கிடந்த ஆறுமுக நயினார் சன்னிதி திறக்கப்பட்டது என்பது ஆன்மிக வரலாற்றில் மறக்க முடியாத உண்மை.
    நெல்லை மாநகரில் மிகவும் அற்புதமான தெய்வக் காரியத்தைக் குளத்தூர் ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் திறம்படச் செய்துள்ளார். இவர் நெல்லைக்கு அழைத்து வந்த சித்தரால் தான் நெல்லையப்பர் கோவிலில் மூடிக்கிடந்த ஆறுமுக நயினார் சன்னிதி திறக்கப்பட்டது என்பது ஆன்மிக வரலாற்றில் மறக்க முடியாத உண்மை.

    குளத்தூர் ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் நெல்லை நகரத்தில் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவில் அரண்மனைக் கட்டி வசித்து வந்தவர். தற்போதும் அவர் வழி வந்த வாரிசுகள் அங்கு வசித்து வருகிறார்கள். தில்லைத் தாண்டவராயர், ஆன்மிகத்தில் மிகச்சிறந்தவராக விளங்கினார். இவர் தெய்வங்களை வித்தியாசமாக வணங்குவார்.

    தல யாத்திரை செல்லும் போது ஆங்காங்கே தெய்வங்களை வணங்க வேண்டுமே.. அதற்காக வித்தியாசமானக் கைத்தடிகளை உருவாக்கி எடுத்துச்செல்வார். அந்தக் கைத்தடியில் தலைப்பகுதியைத் திறந்தால் அங்கே விநாயகர், லட்சுமி உள்பட பல தெய்வங்கள் காட்சியளிப்பார்கள். இவர் ஸ்நானம் செய்யும் இடத்தில் கைத்தடி தெய்வங்களை வைத்து பூஜை செய்து வணங்கி வந்தார். அடிக்கடி காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    ஒரு முறை காசி சென்றபோதுதான் அமாவாசை சித்தரைச் சந்தித்தார். நாகர்கோவிலைச் சேர்ந்த சித்தர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு, பிறகு துறவு வாழ்க்கைக்கு வந்தவர். தன் கால் போனப் போக்கில் நடந்து பல தலங்களுக்கு யாத்திரை செய்து இறுதியில் காசியை அடைந்திருந்தார்.

    இவரது ஆன்மிக வாழ்க்கைத் தில்லைத் தாண்டவராயரை மிகவும் கவர்ந்து விட்டது. எனவே அவரைக் காசியில் இருந்து நெல்லைக்கு அழைத்து வந்தார். அமாவாசை சித்தர் நெல்லை டவுனில் வெட்ட வெளியில் வெயிலில் சுருண்டுக் கிடப்பாராம். இரவில் நிலா ஒளி விழும் விதத்தில் திறந்த மார்புடன் கட்டாந்தரையில் படுத்துக் கிடப்பாராம். இது ஒரு வகையானத் தியானம் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. இவருடைய செய்கை எல்லோருக்கும் வித்தியாசமாகத் தெரிந்துள்ளது.

    ஆனாலும் அமாவாசை சித்தரை எல்லோரும் மதித்து வந்துள்ளனர். இவர் பகல் வேளையில் கடை வெளியில் சுற்றி வருவார். வியாபாரிகள் தரும் உணவைச் சாப்பிடுவார். அமாவாசையில் மட்டும் தான் இவர் குளிப்பார். மற்ற நாட்களில் சூரியக் குளியலும், நிலாக் குளியலும் தான். எனவே தான் இவருக்கு ‘அமாவாசை சாமியார்’ எனப் பெயர்.

    அமாவாசை சாமியாரும், தில்லைத் தாண்டவராயரும் ஒரு நாள் நெல்லையப்பர் கோவிலுக்குள் சென்றனர். முழுவதும் கண்ட ராம பாண்டியன் பிரதிஷ்டை செய்த நெல்லையப்பரை மனமுருக வேண்டி நின்றனர். பின் பிரகாரம் சுற்றி வந்தனர். அப்போது பிரகாரத்தில் உள்ள ஆறுமுகநயினார் கோவில் பூட்டிக் கிடந்தது. இதைக் கண்டு மனம் நொந்து போனார்கள். ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் வீட்டுக்கு வந்த பின்பும் உணவு உண்ண முடியாமல் தவித்தார். எப்போதும் ஆறுமுகநயினார் கோவில் நினைவாகவே இருந்தார். தில்லைத் தாண்டவராயர் மனமுடைந்து இருப்பதை அறிந்த அமாவாசை சாமியார், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என நினைத்தார்.

    திருநெல்வேலியில் தாமிரபரணி கரையில் உள்ள கருப்பந்துறையில் ஒரு நந்தவனம் இருந்தது. கருப்பந்துறைக்கு பெயர் காரணமே ஆன்மிகம் சார்ந்தது தான். சிவனுக்கு மிகவும் பிடித்த மலர் குவளை. இந்தக் குவளைப் பூக்கள் கருநீல நிறமாகக் காட்சித் தரும். எனவே கருப்பு+பூ+துறை = கருப்பூந்துறை என்றானது. அதுவே காலப்போகில் ‘கருப்பந்துறை’யாக மாறிவிட்டது.


    அமாவாசை சித்தர் சமாதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம்

    கருப்பந்துறை நந்தவனத்துக்கு அடிக்கடி அமாவாசை சித்தர் வந்து செல்வது வழக்கம். காரணம் அங்குள்ள ஆசிரம நந்த வனத்தில் போகர் மாயாசித்தரும், வல்லநாட்டு சாது சிதம்பர சித்தரும் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் இருவரும் அமாவாசை சித்தரிடம் ஆன்மிகக் கருத்துகளைப் பேசி மகிழ்வார்கள்.

    இவர்கள் இருவர் இருக்கும் இடத்தில்தான், அமாவாசை சித்தரும் வந்து அமர்ந்திருப்பார். எனவே தான் ஆறுமுக நயினார் சன்னிதியைத் திறக்கக் குளத்தூர் ஜமீன்தார் நினைத்தவுடன், இவர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கருப்பந்துறை நந்தவனத்துக்கு ஓடோடி வந்தார் அமாவாசை சித்தர்.

    ஆறுமுகநயினார் சக்தி மிக்கவர். அவர் சிலையே அபூர்வமானது. ஆறுமுகம் கொண்ட அவர் முகத்தை எட்டு திசையில் எங்கிருந்து பார்த்தாலும் ஆறு முகத்தையும் தரிசிக்கலாம். அப்படியொரு வடிவமைப்பு, வேறு எந்தக் கோவிலிலும் யாரும் கண்டதில்லை. அண்டிவரும் பக்தர் களைக் காப்பாற்ற வல்லவர். அப்படிப்பட்ட சுவாமி சன்னிதி, சிலரது சதியால் பூட்டப்பட்டு விட்டது. இதுபற்றிதான் மற்ற இரு சித்தர்களுடனும், அமாவாசை சித்தர் ஆலோசித்தார்.

    ‘இதற்காக எவ்வளவு பெரிய யாகம் வேண்டுமானாலும் செய்யுங்கள். இதற்கு ஆகும் செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என குளத்தூர் ஜமீன்தார் உறுதி அளித்தார். சித்தர் பெருமக்கள் கூடினர். போகர் மாயா சித்தர் ஆசிரமத்தில் வைத்து ஸ்ரீசக்கரத்தை உருவாக்கினர். இச் சக்கரம் அன்னையின் அம்சம் கொண்டது. சக்கரம் இருக்கும் இடத்தில் எந்த வித தீயச் சக்தியும் ஒழிந்து போகும். குறிப்பிட்ட நாளில் ஸ்ரீசக்கரத்தை ஆறுமுகநயினார் சன்னிதியில் பிரதிஷ்டை செய்தார் அமாவாசை சித்தர்.

    தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. என்ன ஆச்சரியம். நம்பூதிரிகளால் ஏற்படுத்தப்பட்ட தடைகள் உடைத்தெறியப்பட்டது. கோவில் சன்னிதி திறக்கப்பட்டது. அதன்பின் ஆறுமுக நயினாருக்கு அபிஷேகம், ஆராதனை எல்லாமே மிகச்சிறப்பாக நடந்தது. பக்தர்கள் வர ஆரம்பித்தனர். இந்நாள் வரை இங்கு வந்து நன்மை அடைந்தப் பக்தர்கள் எண்ணிக்கை ஏராளம்.

    காலங்கள் கடந்தது. தினமும் ஆறுமுகநயினார் சன்னிதியே கதி என கிடந்தார் அமாவாசை சித்தர். அவர் கூறும் வாக்குகள் பலித்தன. எனவே இவரைத் தேடிப் பக்தர்கள் அதிகம் கூட ஆரம்பித்தனர். இது சிலருக்குப் பிடிக்காமல் போனது. இதனால் அமாவாசை சித்தரை வெளியேற்ற முயற்சி செய்தனர்.

    ‘கோவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. இனி நான் எங்கிருந்தால் என்ன?' என்று கோவிலை விட்டு வெளியே வந்து விட்டார் அமாவாசை சித்தர். சித்தன் போக்கே சிவன்போக்கு என்று கடைக் கடையாக அலைந்தார். அவர்கள் தரும் உணவை உண்டார். சில நேரம் ஜமீன்தார் வீட்டுக்கு வருவார். அங்கு அவருக்கு உணவு படைக்கப்படும். ஜமீன்தாரோடு யாத்திரைச் செல்வார். கருப்பந்துறை ஆசிரமத்திலும் வந்து நாள் கணக்கில் தவமேற்றுவார்.

    ஒருநாள், நந்தவன ஆசிரமத்துக்கு சென்று போகர் மாயா சித்தரிடம், ‘எனக்கு இந்த இடத்தைத் தாருங்கள்' என ஒரு குறிப்பிட்ட இடத்தில் கோடு போட்டு காண்பித்தார் அமாவாசை சித்தர். முக்காலும் உணர்ந்தப் போகர் மாயா சித்தரும் ‘சரி’ என்று கூறி விட்டார்.

    போகர் மாயா சித்தர், மகேந்திரகிரி மலைக்கு சென்று அடர்ந்தக் காட்டுக்குள் தியானம் செய்துக் கொண்டிருந்தார். அவர் மனதுக்குள் செய்தி ஒன்று கிடைத்தது. உடனே அவர் அவசரம் அவசரமாக மலையை விட்டுக் கிளம்பினார். வல்லநாட்டில் தியானம் மேற்கொண்டிருந்த வல்லநாட்டுச் சித்தருக்கும் அந்தச் செய்தி கிடைத்தது. அவரும் நெல்லை நோக்கிக் கிளம்பினார்.

    அமாவாசை சித்தர் ஜீவ சமாதி அடையப்போகிறார் என்பதே அவர்களின் மனதில் தோன்றியச் செய்தி.

    அவர்களின் மனம் சொன்னது போலவே அமாவாசை சித்தர் சமாதி அடைந்தார். அமாவாசை சித்தர் கேட்டுக்கொண்டபடி, போகர் மாயா சித்தர் தன்னிடம் அவர் காட்டிய இடத்தில் சமாதி அமைத்தார்.


    வல்லநாட்டு சித்தர், மாயா சித்தர், அமாவாசை சித்தர்,

    அவரது சமாதி மீது ஆறுமுக நயினார் சன்னிதியைத் திறக்க பயன்படுத்திய ஸ்ரீசக்கரத்தை, வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகளும், ஸ்ரீபோகர் மாயா சித்தரும் பிரதிஷ்டை செய்தனர்.

    சித்தர் ஒருவர் அடங்கி இருக்கும் இடமே சிறப்பு. அதிலும் அவருக்கு இரண்டு சித்தர்கள் சமாதி வைத்திருக்கிறார்கள் என்பது அதை விடச் சிறப்பு. சமாதி மேலே ஆறுமுகநயினாரின் ஆலயத்தைத் திறக்க உதவிய சக்கரமும் பொருத்தப்பட்டிருப்பது மேலும் சிறப்பு. அதனால் தான் பக்தர்கள் இங்கு வந்து வணங்குவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள்.

    இரண்டு சித்தர்கள்

    மாயா சித்தர், மிகவும் விசேஷமானவர். இவரது காலடிப் படாத இடமே மகேந்திர கிரி மலையில் இல்லை எனக் கூறலாம். இந்த மலையில் சிவன் பாதம், தாயார் பாதம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளது. மனிதர்கள் செல்ல முடியாத, தேவர்கள் மட்டுமே வாழும் தேவபூமியும் இங்குண்டு. அவ்விடங்களில் எல்லாம் அமர்ந்து தியானம் செய்வார், மாயா சித்தர்.

    மகேந்திரகிரி மலையில் தியானம் செய்வது சாதாரணமான விஷயம் அல்ல. அங்கு செல்ல வேண்டும் என்றால், 41 நாள் விரதம் இருக்க வேண்டும். இதை மிகச் சுலபமாகக் கையாளுபவர் மாயா சித்தர்.

    அதுபோலவே வல்லநாடு சித்தரும். தனது உடலை எட்டு துண்டாகப் பிரித்து நவக் கண்ட யோகம் செய்யக் கூடியவர். ஒரே நேரத்தில் பல இடத்தில் இருப்பவர். இவர் வெண்குஷ்டம் போன்றத் தீராத நோய்களைத் தீர்க்க வல்லவர். பொதிகை மலையில் வெள்ளை யானையை வரவழைத்து பக்தர்களுக்கு காட்டியவர். செண்பகாதேவி அருவி அருகே உள்ள கசாயக் குகையில் அமர்ந்து தவம் புரிபவர். ஒருசமயம் சதுரகிரி மலையில் ஒற்றைக் கொம்பன் என்னும் மதம் பிடித்த யானையைத் தனது கண்ணசைவால் கட்டுக்குள் கொண்டு வந்தவர்.

    இவரது சித்தர் பீடம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள பாறைக்காட்டில் உள்ளது. அங்குள்ளத் தியான மடத்தில் ஒற்றைக் கொம்பன் யானை சிரசு பத்திரமாக வைத்து விளக்கு போட்டு வணங்கப்பட்டு வருகிறது. இவரை வள்ளலாரின் வழித்தோன்றல் எனவும் கூறுவர். இவர் பீடத்துக்கு வந்து சென்றாலே நமது முன்வினை, பாவம் எல்லாம் தொலைந்து விடும் என்பது ஐதீகம்.

    அமைவிடம்

    நெல்லை டவுணில் இருந்து மேலப்பாளையம் செல்லும் சாலையில், கருப்பந்துறையில் உள்ள நந்த வனத்தில் அமாவாசை சித்தரைத் தரிசனம் செய்யலாம். இங்கு வரும் பக்தர்களுக்கு புற்று நோய் உள்படத் தீராத நோய்கள் தீருகிறது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட அமாவாசை சித்தரை வணங்குவதால் பில்லி சூனியம் நீங்கும். திருமணத் தடை அகலும். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். 
    ×