search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddhar"

    • சுந்தரானந்த சித்தர் அவதார தின திருவிழா நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தமிழக சட்டமன்றத்தில் 2022-23ம் ஆண்டுக்கான நிதி நிலை தாக்கல் செய்தபோது இந்து சமய அறநிலையத்துறைக்கான மானிய கோரிக்கையில் தமிழகத்தில் உள்ள பதினெண் சித்தர்களோடு தொடர்புடைய கோவில் களில் ஆண்டுதோறும் சித்தர்களுக்கு விழா எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    முதற்கட்டமாக திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் கமலமுனி சித்தருக்கும், சங்கரன்கோவில் உள்ள சங்கர நாராயணன் சுவாமி கோவிலில் பாம்பாட்டி சித்தருக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரானந்தா சித்தருக்கும் கோவில்கள் சார்பில் விழா எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 3-ந்தேதி(ஞாயிற்றுக் கிழமை) கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரானந்த சித்தர் அவதார தின பெருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு மங்கள இசையும், 8 மணிக்கு திருமுறை பாராயணமும், 10 மணிக்கு புஷ்பாஞ்சலியும் நடக்கிறது. 11 மணிக்கு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், சமய சான்றோா ர்கள் முன்னிலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து "சித்தர்களின் பெருமை" என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சிவபெருமானாலேயே பெயர் சூட்டப்பட்ட சித்தர், மச்சேந்திர நாதர்.
    • கோரக்கர் வரலாறு விரிவானது

    சிவபெருமானாலேயே பெயர் சூட்டப்பட்ட சித்தர், மச்சேந்திர நாதர். அந்த சித்தர் ஒரு வீட்டு வாசலில் நின்று, உணவு கேட்டார். உணவு கொண்டு வந்த பெண், சித்தரை வணங்கி, "சுவாமி! எனக்குப் பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டும். ஆசி கூறுங்கள்!" என வேண்டி, பிட்சை இட்டாள். "உன் ஆசை நிறைவேறும்" என்ற சித்தர், விபூதியை மந்திரித்துப் பிரசாதமாக அளித்தார். "இதைச் சாப்பிடம்மா! உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்" எனக்கூறிச் சென்றார்.

    அதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரி, "இந்த மாதிரி ஆளுங்க, மயக்கி இழுத்துக்கிட்டுப் போயிடுவாங்க. பேசாம அந்த விபூதிய அடுப்புல போட்டுடு!" என்றாள். அதை நம்பிய பெண், சித்தர் மந்திரித்துத் தந்த விபூதியை அடுப்புச் சாம்பலுடன் கலந்து, கொல்லைப்பக்கம் குப்பை மேட்டில் கொட்டி விட்டாள்.

    ஒன்பது வருடங்கள் ஆயின. சித்தர் மறுபடியும் வந்தார். தான் ஏற்கனவே விபூதி தந்த பெண் வீட்டிற்குப் சென்று, "பெண்ணே! எங்கே உன் மகன்? நான் அவனைப் பார்க்க வேண்டும்" என்றார்.

    அவர் காலில் விழுந்து வணங்கிய பெண், "சுவாமி! மன்னியுங்கள்! பக்கத்து வீட்டுக்காரியின் பேச்சைக் கேட்டு, தாங்கள் தந்த விபூதிப் பிரசாதத்தைக் குப்பைமேட்டில் போட்டு விட்டேன்" என்றாள்.

    "சரிம்மா! அந்தக் குப்பைமேடு எங்கே இருக்கிறது?" எனக் கேட்டார் சித்தர். அவரை அழைத்துப்போய் குப்பை மேட்டைக் காட்டினாள் அந்தப் பெண். அங்கு போன சித்தர், "கோரக்கா!" என்றார்.

    "என்ன?" எனக்குரல் வந்தது, குப்பை மேட்டில் இருந்து. சித்தர் உத்தரவின் பேரில் குப்பை மேட்டை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றினார்கள். அங்கே குப்பை மேட்டின் அடியில், ஒன்பது வயதான ஆண் குழந்தை ஒன்று, தவம் செய்யும் நிலையில் இருந்தது.

    அந்தக் குழந்தைதான், கோரக்கர். இந்தக் கோரக்கரால் உருவானது தான் `கோரக்கர் மூலிகை'. இதன் மகிமையை 'அருளைக் கலம்பகம்' எனும் பழைமையான தமிழ்நூல் கூறுகிறது. கோரக்கர் வரலாறு விரிவானது.

    • மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி எற்பாட்டினை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
    • கும்பகோணத்தை சேர்ந்த சிவாச்சாரியார் ரமேஷ், தமிழ் முறைப்படி வேள்வி செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் குயவர் மேட்டு தெருவில் உள்ள காங்கேயர் மடத்தில் உள்ள காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் ஆடி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. தமிழ் புலவர் காங்கேய சித்தருக்கு கும்பகோணத்தை சேர்ந்த சிவாச்சாரியார் ரமேஷ் தமிழ் முறைப்படி வேள்விசெய்தார்.

    தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உபயத்தை பெருங்கடம்பனூரை சேர்ந்த நித்தியானந்தம், ஜெயகுமார் குடும்பத்தினர் செய்தனர்.

    மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி எற்பாட்டினை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    சித்தர் அடிமை கோணி பாபா நேற்று (செவ்வாய்க் கிழமை) மதியம் 12 மணியளவில் முக்தி அடைந்தார்.

    காஞ்சிபுரம்:

    சித்தர் அடிமை கோணி பாபா நேற்று (செவ்வாய்க் கிழமை) மதியம் 12 மணியளவில் முக்தி அடைந்தார். அவரது உடல் இன்று காலை 9 மணியளவில் பூந்தமல்லியில் உள்ள சித்தர் அடிமை கோணி பாபாவின் உலக மகா ஜோதி தவப்பீடமான அவரது ஆன்மீக தலத்தில் இருந்து புறப்பட்டு அவரது சொந்த ஊரான சுங்குவார்சத்திரம் அடுத்த கீரநல்லூரில் சமாதி செய்யப்பட்டு யோக நிறைவு விழா நடைபெறும்.

    • ஒரு மண்டலம் அதாவது 48 நாள் உரு ஜெபிப்பவர்களுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கும்.
    • தாங்கள் விரும்பிய சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கான உச்சாடன வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.

    சித்தர்கள் நமக்கு தந்த அற்புதமான பாடல்கள், மந்திரங்கள் போன்றவை அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத பரிபாசை பாடல்களாகவே இருக்கின்றன. சித்தர்கள் மீது தணியாத ஆர்வமும், அவர்களின் தரிசனம் பெறவும் பக்தர்கள் பலவாறான ஆன்மீக வழிகளில் முயற்சிகளை மேற்கொள்கிறார். சித்தர்களின் தரிசனம் மட்டும் கிடைத்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்கின்ற மனோபாவம் கொண்ட உயரிய மனிதர்களும் நமது நாட்டில் இருக்கவே செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தாங்கள் விரும்பிய சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கான ஒரு மந்திரம் உச்சாடன வழிமுறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    உதாரணமாக நீங்கள் தரிசிக்க விரும்புகின்ற சித்தர் அகத்திய சித்தர் என்றால் "ஓம் சிங் ரங் அங் சிங் அகத்தியர் மசி வசி" என்கின்ற மந்திரத்தை தினமும் அதிகாலை வேளையில் 108 முறை உரு ஜெபித்தல் வேண்டும் இப்படி மேற்கண்ட மந்திரத்தில், நீங்கள் காண விரும்பும் என்ற சித்தர்களின் பெயரை சேர்த்து உச்சாடனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறாக ஒரு மண்டலம் அதாவது 48 நாள் உரு ஜெபிப்பவர்களுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கும். இந்த 48 நாட்களும் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் தூய்மை கடைபிடித்து, திரிகரண சுத்தியோடு இந்த மந்திர உச்சாடனம் செய்தல் வேண்டும். புலால் உணவு, போதைப் பொருட்கள் உபயோகிப்பு, காம சிந்தனை மற்றும் செயல்கள் போன்றவற்றை அறவே நீக்கியவர்களுக்கு 48 நாட்களுக்கு முன்பாகவே சித்தர்களின் தரிசனம் பெறும் பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் சித்தர்களின் தரிசனம் கிடைக்க பெற்றவர்கள், அந்த சித்தர்களிடமே தீட்சை பெறும் பாக்கியமும், மெய்ஞானம் அடைவதற்கான வழியும் கிடைக்க பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

    • சித்தர்களில், 18 பேர் முக்கியமானவர்கள்.
    • அவர்கள் வாழ்ந்த கால அளவைப் பற்றி இங்கே அறியலாம்.

    அகத்தியர் - 5 யுகம் 7 நாட்கள்

    பதஞ்சலி -4 யுகம் 48 நாட்கள்

    கமலமுனி - 4 ஆயிரம் வருடம் 48 நாட்கள்

    திருமூலர் - 3 ஆயிரம் வருடம் 13 நாட்கள்

    குதம்பை முனிவர் - 1,800 வருடம் 16 நாட்கள்

    கோரக்கர் - 880 வருடம் 11 நாட்கள்

    தன்வந்திரி - 800 வருடம் 32 நாட்கள்

    சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாட்கள்

    கொங்கணர் - 800 வருடம் 16 நாட்கள்

    சட்டமுனி - 800 வருடம் 14 நாட்கள்

    வான்மீகர் - 700 வருடம் 32 நாட்கள்

    ராமதேவர் -700 வருடம் 6 நாட்கள்

    நந்தீஸ்வரர் -700 வருடம் 3 நாட்கள்

    இடைக்காடர் - 600 வருடம் 18 நாட்கள்

    மச்சமுனி - 300 வருடம் 62 நாட்கள்

    கருவூரார் - 300 வருடம் 42 நாட்கள்

    போகர் - 300 வருடம் 18 நாட்கள்

    பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாட்கள்

    வேட்டையன்பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது.
    சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று 16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் முருகப்பெருமான் அவதாரத்தில் சித்தர் மலர் மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதேபோல் வேட்டையன்பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர் மாலையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
    இந்த பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, வேண்டும் வரம் கிடைக்கிறது என்பதால், தள்ளாத வயதானவர்களும், தவழும் குழந்தைகளும் இந்த பயணத்தில் பங்கேற்கிறார்கள்.
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில், மக்களை தாகத்தில் வாட்டி வதைக்கிறது. அணைகளும், நதிகளும் வறண்டு போய்விட்டன. பயிர்கள் வாடுகின்றன. வருண பகவான் கருணை காட்ட மாட்டாரா? என பல இடங்களில், இறைவனை நோக்கி வேண்டி நிற்கிறார்கள், விவசாய பெருமக்கள்.

    மக்களுக்கு மட்டும்தானா தாகம். உலகில் வாழும் ஜீவராசிகளுக்கெல்லாம் தாகம்தான். அந்த தாகம் தீருமா? மழை வருமா? என இறைவனை வழிபடும் ஆன்மிக அன்பர்களும் ஏராளம். இப்படி மழைக்காக நம் நாட்டில் பல வகையான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் கொஞ்சம் வித்தியாசமானது, குற்றால மலை உச்சியில், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு செய்யும் பூஜை. இந்த பூஜையில் சப்த ரிஷிகளில் தலைமை ரிஷியான அத்ரி மகரிஷிக்கும், பதினெட்டு தவ முனிவர்களில் தலைமை முனிவரான அகத்தியர், அவரது சீடர் தேரையர் ஆகியோருக்கு வழிபாடு நடைபெறுகிறது.

    தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலையில் தோன்றும் ஒவ்வொரு நதியும் தமிழக மக்கள் வளத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் வானம் பொய்த்து விட்டால், பூமி வறண்டு விடும். அந்த வேளையில் நமக்கு ஒரே நம்பிக்கை இறைவழிபாடுதான். அப்படி ஆண்டு தோறும் மழைக்காக நடத்தப்படும் வழிபாடுகளில் ஒன்றுதான் இது.

    குற்றால மலை அடிவாரத்தில் உள்ள கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பழங்கள் உள்பட பூஜை பொருட்களை சேகரித்துக்கொண்டு கடுமையான மலை பயணத்துக்கு தயாராகி விடுவார்கள். இந்த பயணம் குற்றாலம் மலையின் உச்சியில் உள்ள தெற்கு மலை எஸ்டேட் ஆன்மிக பயணம் என அழைக்கப்படுகிறது. நினைத்தநேரத்தில் இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது. வருடத்துக்கு ஒரு நாள் வனத்துறை அனுமதி கொடுத்தால் மட்டுமே இந்த பயணத்தை தொடர முடியும். இதனால் மழை வேண்டி பூஜை செய்ய வனத்துறை அனுமதி பெற்று கிராம மக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள்.

    சிற்றாறு, மலை முகட்டில் ஓடி வரும் கரை வழியேதான் இந்த பயணம் செல்கிறது. பல இடங்களில் இந்த நதியில் இறங்கி, ஏறி மறுகரை சென்று, வளைந்து நெளிந்து பள்ளதாக்கில் ஏறி சென்றுதான் பூஜை செய்கிறார்கள்.

    குற்றாலம் மெயின் அருவியும், அருகில் உள்ள சிற்றருவியும், புலியருவியும் பலரும் அறிந்த அருவிகள். ஆனால் அதைத் தாண்டி மலை பயணத்தைத் தொடர்ந்து, செண்பகாதேவி அம்மன் கோவிலும், அதன் அருகே ஒய்யாரமாய் விழும் செண்பகாதேவி அருவியும் இன்னும் கூட சிலர் அறியாத இடமாக உள்ளது. இவ்விடங்கள் எல்லாமே தவசித்தர்கள் வாழும் பகுதி என்று சொல்கிறார்கள். அகத்தியர், குற்றாலத்தில் பெருமாளை, சிவலிங்கமாக மாற்றிவிட்டு, செண்பகாதேவி காட்டு வழியாக அத்ரிமலை மற்றும் பொதிகை மலைக்கு சென்ற வழித்தடம்தான் இது.

    இவ்விடத்தில் அபூர்வக் குகைகள் பல உள்ளன. இங்கு தட்சிணாமூர்த்தி குகை, வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தவமேற்றிய கசாய குகை, செண்பகாதேவி அருகில் உள்ள அகத்தியர் குகை உள்பட பல குகைகள் தவத்திற்கு ஏற்றது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு 18 சித்தர்கள் உள்பட பல சித்தர்களும் சப்த ரிஷிகள் உள்பட பல ரிஷிகளும் தவமிருந்த இடம். சித்திரா பவுர்ணமி அன்று இந்த செண்பகாதேவி அருவியில் அம்மன் நீராட சப்பரத்தில் வருவது கண்கொள்ளா காட்சியாகும்.

    தட்சிணாமூர்த்தி குகையில் அமர்ந்திருந்தால், அருவியே நமது மேல் கொட்டுவது போன்ற அற்புதத்தை உணரலாம். தொடர்ந்து கரை வழியே சென்றால் கசாய குகை. அதில் சித்தர்கள் நீராடும் தடாகம் இருக்கிறது. மீண்டும் நதியில் பயணத்தை மேற்கொண்டால், அற்புதமான தேனருவி காட்டுக்குள் நுழையலாம். தேனருவி என்பது ‘சிவமதுகங்கை’ என்று அழைக்கப்படுகிறது.

    இங்கு சித்ரா பவுர்ணமி தோறும் ஈசனை, அம்பாள் உள்பட தேவர்கள் அனைவரும் தேனால் அபிஷேகம் செய்வதாக நம்பிக்கை. எனவேதான் இங்குச் சித்ரா பவுர்ணமி தோறும் மஞ்சள் மழை பொழிகிறது. இந்த மஞ்சள் மழை துளிகளை, அங்குள்ள பாறைகளில் காணலாம். இப்போதும் கூட வெள்ளை வேஷ்டியை முதல் நாள் விரித்து வைத்து விட்டு, மறுநாள் போய் பார்த்தால் அந்த வேஷ்டி மஞ்சளாக இருப்பது அதிசயம்தான். இதுபோன்ற அபூர்வ இடங்களை கொண்டது தான் சித்தாற்றங்கரை. தற்போது தேனருவி செல்ல வனத்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது.


    தண்டத்திற்கு நடைபெறும் பழ அபிஷேகம்

    இந்த நதிக்கரையில்தான் மழை வேண்டி நடைபெறும் அபூர்வ பூஜை நடக்கிறது. இதற்காக காலை 7 மணிக்கு ஊர்மக்கள் குற்றாலம் சிற்றருவி அருகே ஒன்று கூடுவார்கள். பூஜை பொருட்களை எல்லாம் டிராக்டரில் ஏற்றி கொண்டு செல்வார்கள். ஓரளவு வயதானவர்கள் இந்த டிராக்டரில் ஏறி கொள்வார்கள். மற்றவர்கள் நடைபயணம்தான். முதலில் நாம் செல்வது, ‘பிரிஞ்சு பார்த்தான் பாறை' (இந்த பாறையில் இருந்து குற்றாலம் அழகை ரசிக்கலாம்). தொடர்ந்து மூலிகை தோட்டம் அதைத் தாண்டி மேலே செல்லவேண்டும்.

    டிராக்டர் வழித்தடத்தில் சென்றால் நேரம் பிடிக்கும். ஆகவே குறுக்கு வழியாக உள்ள ஏற்றம் வழியாக ஏறி காத்தாடி மொட்டை என்ற பகுதிக்கு வந்து, மேலே ஏறிச்செல்லும் போது புங்கன்சோலை வருகிறது. அடர்ந்த காடு. எங்கும் வித்தியாசமான பறவைகளின் இன்னிசை. சோர்வு தெரியாமல் இருக்க நமது முகத்தில் அடிக்கும் தென்றல், புது உற்சாகத்தைத் தரும். இந்தச் சோலையை அடுத்து மேலே ஏறினால் ‘நெல் தீ மொட்டை' என்ற பகுதி வருகிறது. அங்கு உள்ள மஞ்சள் மாரியம்மனை வணங்கி மீண்டும் பயணத்தைத் தொடர்கிறோம்.

    தெற்கு மலை எஸ்டேட்டுக்குள் நுழைகிறோம். இது தனியாருக்கு சொந்தமான எஸ்டேட். இங்கு மங்குஸ்தான் பழங்கள் பயிரிடப்பட்டுள்ளது. சரியாக சொல்லப்போனால் தேனருவிக்கு மேல்தளத்தில் தான் இவ்விடம் உள்ளது. உள்ளே நுழைந்து சிற்றாற்றை கடக்கிறோம். அங்கு நிறைய நறுவளி செடிகள் ஆற்றோடு பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. இவ்விடத்தில் காலை வைத்தால் ஆன்மிக அதிர்வை உணரலாம். இந்த அதிர்வுதான் குற்றாலத்தில் குளித்தால் மனநோய் தீருகிறது என்பதைச் சொல்லும் அறிவியல் உண்மை.

    அடுத்து தபால்காரன் பாறை. அந்த காலத்தில் குற்றால மலைக்கு மேலே கண்ணாடி பங்களாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களுக்கு, தபால் வந்தால் இந்த பாறையில் தான் உள்ளூர் தபால்காரர்கள் கொண்டு வந்து வைப்பார்களாம். ஆங்கிலேயர்கள் குதிரையில் வந்து தபாலை எடுத்து செல்வார்களாம். தபால்காரன் பாறையை அடுத்து, பரதேசி புடை உள்ளது. இதை அடைவதற்கு மீண்டும் சிற்றாற்றின் எதிர்கரைக்கு வரவேண்டும். இந்த புடையானது அகத்தியர் தவம் இருந்த பகுதி.

    தொடர்ந்து பயணித்தால், ‘யானை உச்சான் பாறை' வரும். யானைகள் கூட்டம் கூட்டமாக நின்று இந்த பாறைகளில் உரசிக்கொண்டு நிற்பதால் இந்த பெயர் ஏற்பட்டுள்ளது. அடுத்து யானை ஓய்வெடுக்கும் ‘யானை அசண்டி.' அதைத் தாண்டினால், ‘சென்ற ராமன் கல்' என்ற இடம் உள்ளது. இவ்விடம் ராமன் சீதாபிராட்டியுடன் கடந்து சென்ற இடமாக கருதப்படுகிறது. தொடர்ந்து அகத்தியர், ராவணன் இசைப் போட்டியின்போது உருகிய மலை இருக்கிறது. அதன் அடிவாரத்தில் சிற்றாற்றங்கரை நடுவில் அகத்தியர் பாதம் உள்ளது. இங்கு சென்று அகத்தியர் பாதத்தினை வணங்கி விட்டு மீண்டும் பயணிக்கிறோம்.

    குற்றால மலையில் 2,500 மூலிகை செடிகள் உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். அதன் வாசம் இவ்விடத்தில வீசுகின்றன. இந்த வழியாக நாம் கடந்து சென்றாலே போதும், நமது உடலில் உள்ள நாள்பட்ட நோய் தீர்ந்து விடும். தொடர்ந்து ‘அரிசிப்பட்டிப் பாறை.’ அதைத் தாண்டி கடினமானப் பயணம். இரண்டு முறை ஆற்றைக் கடந்து சென்றால் ஒரு பாறையில் போய் நிற்கிறோம். அந்தப் பாறையில் 2 அடியில் தண்டம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் தற்போதும் அகத்தியர், அத்ரி, தேரையர் ஆகிய மகா முனிவர்கள் தவம் செய்வதாக நம்பப்படுகிறது.

    தண்டமானது, பாறை குழியில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிற்றாற்றில் அடித்து செல்லும் வெள்ளம் இந்த தண்டத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பது மிகப்பெரிய அதிசயம்தான். அங்கு தான் மழை வேண்டி சிறப்பான பூஜை நடைபெறுகிறது. இந்தபூஜையில் ரசமும், ரொட்டியும்தான் சிறப்பு பிரசாதம். இந்த பிரசாதத்தை தயார் செய்யும், பூசாரி வாயை கட்டிக்கொண்டு செய்கிறார்.

    அதன் பின் தண்டத்துக்கு சிறப்பு பூஜை அலங்காரம், ஆராதனை நடைபெறும். கூடி நின்ற மக்கள் எல்லோரும் அந்த தண்டத்தின் முன்ப விழுந்து நெடுஞ்சாண் கிடையாய் கிடந்து மழை வேண்டி பூஜை செய்வார்கள். அதில் சிலர் இறைவனின் அருள் வந்து, அருள்வாக்கும் கூறுவார்கள். மதிய வேளைக்குள் இந்த வழிபாடுகள் முடிவடைந்து விடும். அதன்பின் அனைவரும் மலையில் இருந்து கீழே இறங்குவார்கள். அவர்கள் கீழே வருவதற்குள் மழை பெய்யும் என்பது ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் கண்கூடாக காணும் உண்மை.

    இந்த பூஜைக்கு பின்னர் தான், விவசாய பெருங்குடி மக்கள் தொடர்ந்து அந்த ஆண்டுக்கான விவசாய வேலையை ஆரம்பிக்கிறார்கள். ஆச்சரியமான இந்த பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, வேண்டும் வரம் கிடைக்கிறது என்பதால், தள்ளாத வயதானவர்களும், தவழும் குழந்தைகளும் இந்த பயணத்தில் பங்கேற்கிறார்கள்.

    திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து குற்றாலம் வந்து, காலை 7 மணிக்கு தங்களது ஆதார் அட்டையை வனத்துறையிடம் காண்பித்து, இந்த பூஜையில் கலந்துகொள்ளலாம்.
    பாவ வினையால் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும்.
    மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

    வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

    மேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும் திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

    சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.

    அசுவினி: நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து

    பரணி: நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது.

    கிருத்திகை: நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து

    ரோகிணி: நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

    மிருகசீரிடம்: நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர்.

    திருவாதிரை : நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை.

    புனர்பூச: நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

    பூசம்: நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.

    ஆயில்யம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது.

    மகம்: நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும்.

    பூரம்: நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.

    உத்திரம்: நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது.

    அஸ்தம்: நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.

    சித்திரை: நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.

    சுவாதி: நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

    விசாகம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது.

    அனுஷம்: நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

    கேட்டை: நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.

    மூலம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.

    பூராடம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.

    உத்திராடம்: நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

    திருவோணம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

    அவிட்டம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது.

    சதயம்: நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.

    பூராட்டாதி: நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை.

    உத்திரட்டாதி: நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.

    ரேவதி: நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது,

    மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள்.

    ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்
    ஒரு மனிதன் சித்த நிலை அடைவது, பல பிறவிகளாக அவன் செய்த தியானம், தவம், நற்செயல், தானதர்மம் போன்றவையே அவனை இறைநிலையான சித்த நிலைக்கு அழைத்து செல்லும்.
    ஒரு மனிதன் சித்த நிலை அடைவது, ஒரே பிறவியில் கிடைக்கும் பொக்கிஷம் இல்லை. பல பிறவிகளாக அவன் செய்த தியானம், தவம், நற்செயல், தானதர்மம் போன்றவையே அவனை இறைநிலையான சித்த நிலைக்கு அழைத்து செல்லும்.

    உதாரணமாக புத்தர் ஞானம் பெறுவதற்கு முன்பாக, அவர் அதற்கு முன்பு எடுத்த முன்னூறு பிறவிகள் அவருக்கு புலப்பட்டதாம்.

    அதேபோல தான் பல பிறவிகளில் பெற்ற ஞானம், தவவலிமை ஆகியவற்றுடன் தான் ஒருவன் பிறப்பான். ஆனால் அவை அனைத்தும் பல பூட்டுகளால், அவனுள்ளேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கும்.

    உதாரணமாக பண ஆசை, பெண் ஆசை, பொருள் ஆசை போன்ற எல்லா ஆசைகளும் அவனுக்குள் எழும். அவையெல்லாம் அவன் அனுபவித்து வெறுத்து வர வேண்டும் என்பதற்காக தரப்படுபவையே.

    அருணகிரிநாதர் முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு முன்பாக, பெண் பித்தனாக இருந்தார். அவர் சகோதரி கூறிய ஒரு வார்த்தை, அவர் பெண் ஆசையை வெறுக்க காரணமாக அமைந்தது. பின் மகானாக மாறி பல சித்துகளையும் முருகப்பெருமானிடம் பெற்றார். அதனால் தான் ‘நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதே’ என்றார்கள். முன்கால கர்மவினையானது, நம்மை பக்குவ நிலைக்கு அழைத்துச் செல்வதற்காக கடுமையானதாகவும், மோசமானதாகவும் இருக்கலாம் அதை நாம் பார்ப்பதில் பலனில்லை. சமைத்த உணவே நாவிற்கு ருசியை கொடுக்கும். சமைக்கும் முன் அதன் ருசியை அறிய இயலாது.

    அதுபோல ஒவ்வொறு ஆசையையும் வெறுக்க வெறுக்க ஒவ்வொறு பூட்டாக உடைபடும். அனைத்து பூட்டுகளும் உடைபடும் போது, மனம் உடலோடு அலையும்.

    ஆமாம்.. அனைத்தையும் வெறுத்து, துறந்த மனிதன் ஏதோ ஒன்றைத் தேடி அலைந்து திரிவான். அவன் ஓடி, ஓடி ஒடுங்கும் நிலையில், குரு தன் கருணையால் அதை திறந்து விடுவார். அக்கணம் முதல் காற்றாட்டு வெள்ளம் போல் ஞானம் பெருக்கெடுத்து ஓடும். பலரின் ஆன்ம தாகங்களையும் கூட அவன் தீர்த்துவைப்பான். சிலரை தன்னோடு ஞான ஆற்றில் அடித்தும் செல்வான். அவனே சித்தன் என்று அழைக்கப்படுவான்.
    சித்தர்களுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். சித்தர்களின் காயத்ரி மந்திரங்களை பார்க்கலாம்.
    அகஸ்தியர் (ஞானம் உண்டாக)

    ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
    பொதிகை சஞ்சராய தீமஹி
    தன்னோ ஞானகுரு ப்ரசோதயாத்

    கருவூரார் (ஆயுள் தீர்க்கம் பெற)


    ஓம் ராஜமூர்த்யா வித்மஹே
    சௌபாக்ய ரத்நாய தீமஹி
    தன்னோ வாதகாயை கருவூர்சித்த ப்ரசோதயாத்

    காலங்கிநாதர்

    ஓம் வாலை உபாசாய வித்மஹே
    புவனேஸ்வரி சிஷ்யா தீமஹி
    தன்னோ காலங்கிநாத ப்ரசோதயாத்

    திருமூலர் (தியான யோகம் பெற)

    ஓம் ககன சித்ராய வித்மஹே
    பிரம்மசொரூபிணே தீமஹி
    தன்னோ திருமூலராய ப்ரசோதயாத்

    பதஞ்சலி (யோகங்கள் சித்தி அடைய)

    ஓம் சிவதத்வாய வித்மஹே
    யோகாந்தராய தீமஹி
    தன்னோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்

    புண்ணாக்கீசர்


    ஓம் ஈசத்வாய ச வித்மஹே
    ரணனாவாய தீமஹி
    தன்னோ முக்தி புண்ணாகீ ப்ரசோதயாத்

    சுந்தரானந்தர் (சகல காரியங்களும் சித்தி பெற)

    ஓம் ஸ்ரீ வல்லபாய வித்மஹே
    ஸ்ரீ மீனாக்ஷி பதிவால் தீமஹி
    தன்னோ சுந்தரானந்த ப்ரசோதயாத்

    போகர்

    ஓம் நவபாஷாவைகராய வித்மஹே
    மன்மதரூபாய தீமஹி
    தன்னோ பிரபஞ்ச சஞ்சார
    சீனபதிர்ஷி ப்ரசோதயாத்

    பைரவர் (அஷ்ட சித்திகளை பெற)

    ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே
    க்ஷத்ர பாலாய தீமஹி
    தன்னோ பைரவ ப்ரசோதயாத்

    ஓம் திகம்பராய வித்மஹே
    தீர்கசிச்நாய தீமஹி
    தன்னோ பைரவ ப்ரசோதயாத்

    ஓம் ஸ்வாநத்வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பைரவஹ் ப்ரசோதயாத்
    நம் வாழ்க்கையில் உடலும், உள்ளமும் சீராக இருக்க, சித்தர்கள் பலரும் பல்வேறு வாழ்வியல் ரகசியங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அதனை இங்கே பார்க்கலாம்.
    காலையில் படுக்கையில் விட்டு எழும் போது, ஆண்கள் வலது கால் பெருவிரல் பூமியில் படும்படி அழுந்தி எழ வேண்டும். அதே போல் பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும். காலையில் எழுந்தவுடன், இரு கைகளையும் உரசி கண்களில் ஒற்றிக்கொள்வது நல்லது. ஏனெனில் கண்கள் நம்முடைய மனதின் வாசல். நம் எண்ணங்கள் கண்களின் வழியாகவே வெளிப்படும். கண்கள் நெருப்பை தரும் சக்தி கொண்டவை.

    நாம் உறங்கும் பொழுது, மனம் மற்றும் எண்ணம் அமைதியடையும். இதுதான் இயற்கை. அப்படி நாம் உறங்கும் வேளையில் நெருப்பு சக்தி, கண்கள் வழியாக வெளியே செல்லாது. ஆகையால் உறங்கி எழுந்ததும் கைகளை உரசும் பொழுது சூடு உண்டாகி, கண்களைத் தொடும் பொழுது, அவை கண் களின் நெருப்பை கிரகித்து நமக்குள்ளேயே வைக்கும். இந்த கண் நெருப்பு மனிதனுக்கு மிகவும் அவசியம். இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு அளிப்பதாக சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    உணவுகளைப் பார்த்துக் கொண்டே சாப்பிடும் பொழுது, கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும். அதனால்தான் சாப்பிடும் வேளையில் புத்தகம் படிப்பது, மற்ற காட்சிகளைப் பார்ப்பது, பேசிக்கொண்டு கவனத்தை சிதறவிடக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். உணவில் இருந்து கவனத்தைச் சிதற விடுவதால், வயிற்றில் செரிமானம் நடப்பதில் பிரச்சினை உண்டாகும்.

    கண்களில் உள்ள நெருப்பின் சக்தி பற்றி, மகாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்வைப் பார்க்கலாம்.

    குருசேத்திரப் போர் நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் துரியோதனன். போர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக துரியோதனனை அழைத்தாள், அவனது தாய் காந்தாரி.

    ‘நாளை நீ, போருக்குப் புறப்படுவதற்கு முன், காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னைப் பார்க்க வா’ என்று கூறினாள்.

    ஆனால் துரியோதனன் தாயின் முன்பு நிர்வாணமாக எப்படிச் செல்வது என்று நினைத்துக் கொண்டு, இடையில் ஒரு துணியை மட்டும் கட்டிக்கொண்டுச் சென்றான். துரியோதனன் தன் முன்பாக வந்திருப்பதை அறிந்த காந்தாரி பல ஆண்டுகளாக கட்டப்பட்டிருந்த தன் கண் கட்டுகளை அவிழ்த்தாள். அதுவரை தேக்கி வைத்திருந்த கண் நெருப்புகள், துரியோதனனின் இடையில் இருந்த துணிப்பகுதியைத் தவிர அனைத்துப் பகுதியிலும் பட்டது. இதனால் அவனது உடல் முழுவதும் இரும்பு போல் ஆகிவிட்டது.

    போருக்கு சென்ற துரியோதனனுடன், பீமன் கதாயுதம் கொண்டு சண்டையிட்டான். பீமன் அடித்த ஒவ்வொரு அடியும், துரியோதனன் மீது விழும் பொழுது, ஏதோ இரும்பு துண்டில் சம்மட்டியால் அடிப்பது போல ‘டங்’ என்ற ஒலி மட்டுமே கேட்டது. குழப்பம் அடைந்த பீமன், இதுபற்றி கிருஷ்ணரிடம் கேட்டான்.

    அதற்கு கிருஷ்ணர், ‘பல வருடம் கண்களைக் கட்டி யிருந்த காந்தாரி, கண்களைத் திறந்து துரியோதனனைப் பார்த்திருக்கிறாள். அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு தான், கவசமாக அவனை காவல் காக்கிறது’ என்றார். கண்களில் இருந்து வெளிப்படும் நெருப்புக்கு அவ்வளவு சக்தியிருக்கிறது என்பதைச் சொல்லும் ஒரு உதாரணக் கதை இது.

    இந்த முறையைத் தான் சித்தர்கள் கொஞ்சம் மாற்றாக சொல்லியிருக்கிறார்கள். ‘உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ண வேண்டும், உணவை பார்த்து உண்ண வேண்டும்.’ கோவில்களில் தரப்படும் பிரசாதங்களை சிலர், கண்களில் ஒற்றி விட்டு சாப்பிடுவதை நாம் பார்த்திருக்கலாம். அது பக்தி மட்டுமல்ல. கண்களின் நெருப்பை கிரகித்துக் கொள்ள முன்னோர்கள் சொன்ன வழிமுறையும் தான்.

    காலைக்கடனை முடித்தவுடன் குளித்து விட வேண்டும். காலை எழுந்தவுடன் குளிப்பதனால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது. வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து, பசியைத் தூண்டுகிறது. பசிக்காமல் உண்பது, நேரம் தவறி உண்பது, அடிக்கடி இறைச்சி உணவுகளை உண்பது, துரித உணவுகளை உண்பது போன்றவை தான், நோய்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன. காலை எழுந்தவுடன் ஆறு, குளங்களில் நீராட வேண்டும் என்று சித்தர்கள் சொல்கிறார்கள். அப்போது மந்திரங்களைச் சொல்லியபடி தண்ணீரில் மூழ்க வேண்டுமாம். ஆறு அல்லது குளங்களில் தொப்புள் பகுதி மூழ்கும் வகையில் நின்று கொண்டு குளிக்க வேண்டும் என்று சித்தர்கள் வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் தொப்புள் பகுதி மூழ்கும்படி நின்று மந்திரங்களை உச்சரித்தால், அது பலிக்கும் என்று சொல்லி வைத்துள்ளனர்.

    இன்றைய வாழ்க்கை முறையில் நாம் ஆறு, குளங்களைத் தேடிச் செல்ல வழியில்லை. அதனால் உணவு முறைகளையாவது அவர்கள் சொல்லி வைத்தபடி பின்பற்றலாம்.

    உணவு சாப்பிடுவதற்கு முன்பாக கை, கால்களை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் கால்களை மடக்கி தரையில் அமர வேண்டும். கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல் மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும். சர்க்கரை நோய் வருவது தவிர்க்கப்படும்.

    பிறகு வலது கையில் நீர் ஊற்றி மூன்று முறை உறிஞ்சி குடிக்க வேண்டும். உள்ளங்கையில் நீர் ஊற்றி உறிஞ்சிக்குடிப்பதால், நம் உடலில் பல அற்புதங்கள் நிகழ்வதாக சித்தர் பெருமக்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.

    அதற்கு கைகளைப் பற்றி நாம் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை, தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்தவுடன், முதன் முதலாக சாப்பிடும் பால் வயிற்றில் பட்டவுடன், வயிறு தன்னுடைய செயலைத் தொடங்குகிறது என்பதை நாம் அறிவோம். பிறந்த குழந்தை கைகளை மூடியபடியே இருக்கும். இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது. மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை என்றும் சொல்கிறது.

    இதனால் தான் அகத்தியர் சொல்லும் போது, ‘எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் ஊற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு, கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடுங்கள்’ என்கிறார்.

    வயிற்று நோய்களைத் தீர்க்க மருந்து சொல்லிய கோரக்கர் போன்ற சித்தர்கள் கூட, உள்ளங்கைகளில் தான் தேன் ஊற்றி, அதில் மருந்துகளை குழைத்து உண்ண சொல்லி இருக்கிறார்கள். கைகளுக்கும் வயிற்றுக்கும் உள்ள பந்தம் அப்படிப்பட்டது.

    நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடையே நீர் அருந்தக்கூடாது. உள்ளங்கையில் நீர் வைத்து உறிஞ்சிக் குடிக்கும் பொழுது, தொண்டை நனையும். பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது. சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது. உணவு அருந்திய அரைமணி நேரம் கழித்த பிறகு தான் நீர் அருந்த வேண்டும். இதனால் நாம் அடையும் பலன், நோய்களைத் தவிர்க்கலாம் என்பது மட்டுமே. அதுதானே இன்றைய வாழ்க்கைக்கு அவசியம்.
    ×