search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை ரவுடி கொலை"

    கோவையில் இன்று காலை பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை காட்டூர் பட்டேல் ரோடு பகுதியை சேர்ந்தவர் காட்டூர் சரவணன் (வயது 42). கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.

    பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளது.

    காட்டூர் சரவணன் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சோமசுந்தரம் மில் ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்தனர். திடீரென அந்த கும்பல் காட்டூர் சரவணனை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

    அந்த கும்பலிடம் இருந்து காட்டூர் சரவணன் தப்பித்து ஓட முயன்றார். ஆனால் அவர்கள் விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே காட்டூர் சரவணன் ரத்த வெள்ளத்தில் பலியானார். இதைபார்த்த கும்பல் மின்னல்வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதுபற்றி தெரியவந்ததும் காட்டூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட காட்டூர் சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் முன்விரோத தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவந்தது. இந்த கொலை குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலை கும்பலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    சரவணனுக்கு 2 அண்ணன்கள் உள்ளனர். அவர்களை பழையூரை சேர்ந்த 2 பேர் மிரட்டியுள்ளனர். இந்த தகவல் சரவணனுக்கு தெரியவந்ததும் அவர் பழையூரை சேர்ந்த 2 பேரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    இந்த வழக்கில் கைதான சரவணன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது மற்ற கைதிகளுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சரவணன் வெளியே வந்தார். கோவை சிவானந்தா காலனியில் தனியார் வங்கிக்கு சொந்தமான வேனை வழிமறித்து அதில் இருந்த ஊழியர்கள் மீது மிளகாய் பொடியை தூவி ரூ.17 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் சரவணனுக்கு தொடர்பு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கோவை பீளமேட்டில் பிரபல நகைக்கடைக்கு சொந்தமான தொழிற்சாலையில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதிலும் சரவணனுக்கு தொடர்பு உள்ளது. கோவை ரேஸ்கோர்சில் சரவணன் நடத்தி வரும் டீக்கடை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளது என கூறி அதனை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வந்துள்ளனர். அவர்களை மிரட்டிய வழக்கும் சரவணனின் மீது உள்ளது. சரவணனை போலீசில் சிக்க வைக்க அவரது உறவினர் முயன்றுள்ளார். அவரை காரை ஏற்றி கொலை செய்து விட்டு விபத்து என சரவணன் நாடகம் ஆடியுள்ளார்.

    வங்கிக்கு பணம் எடுக்க வருபவர்கள் முகத்தில் மிளகாய் பொடியை தூவி பணம் பறிப்பதிலும் சரணவன் கில்லாடி எனவும் தன்னை யாராவது போலீசில் சிக்க வைக்க நினைத்தால் அவர்களை கொன்று விடுவதாகவும் சரவணன் மிரட்டி வந்துள்ளார்.

    இவர் மீது கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட பீளமேடு, ரேஸ் கோர்ஸ், ராமநாதபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை வழிப்பறி, ஆள் கடத்தில் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. ஆள் கடத்தல் வழக்கில் கைதான சரவணன் கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    இந்த நிலையில் தான் இன்று காலை அவர் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
    ×