search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் புதைப்பு"

    • மானாமதுரையில் பழமையான சிவலிங்கம் கோவில் புதையுண்டு உள்ளதாக கூறப்படுகிறது.
    • சிவவழிபாடு செய்யபட்டதற்கான சுவாமி சிலைகள் இருக்குமா? என ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்வை விடுத்துள்ளனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலபசலை அரசுபள்ளி அருகே மதுரை- ராமேசுவரம் 4 வழிசாலை அருகில் பழமையான சிவலிங்கம் பக்தர்களால் கண்டுபிடிக்கபட்டு பூஜை செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது.

    கிழக்கு திசைநோக்கி சிவலிங்கம் பெரிய வடிவில் உள்ளது. அதன் அருகில் கருங்கல் பீடமும், அதில் சிவபெருமானின் வாகனமான காளை உருவமும் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சில ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து காடுபோல இருந்தது. தற்போது கருவேல மரங்கள் அகற்றப்பட்டதால் சிவலிங்க சிலை திருமேனி சாலையில் நின்று பார்த்தாலே தெரிகிறது. இந்த வழியே செல்லும் சிவனடியார்கள் சிவலிங்க சிலைக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, விளக்கு ஏற்றி வழிபாடு செய்து செல்கின்றனர்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் காசி-ராமேசுவரம் பாதயாத்திரையாக செல்லும் போது சிவவழிபாடு செய்வதற்கு மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் வரை வழிநெடுகிலும் சிறிய அளவில் சிவாலயங்கள், மடங்கள், சத்திரங்களை அப்போதைய மன்னர்கள் கட்டியுள்ளனர். இப்போது மதுரை-ராமேசுவரம் சாலையில் பீசர்பட்டினம் என்ற இடத்தில் சிவலிங்கத்துடன் மடம் உள்ளது. அதேபோல் மேல பசலை பகுதியில் சிவாலயம் இருந்தது. காலமாற்றத்தால் அது இடிந்து தற்போது சிவலிங்கம் திருமேனி மற்றும் காளைஉருவத்துடன் கருங்கல் பீடம் மட்டுமே தென்படுகிறது. இதே போல் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சின்னகண்ணூர் பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விநாயகர் சிலை, அம்மன் சிலைகள், தமிழ் கல்வெட்டுகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இதேபோல் இந்த பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தால் பழமையான கோவில் புதைந்து உள்ளதா? மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிவவழிபாடு செய்யபட்டதற்கான சுவாமி சிலைகள் இருக்குமா? என ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

    இதுகுறித்து மானாமதுரையை சேர்ந்த சிவபக்தர் ஆனந்த பாண்டியன் கூறுகையில், பழமையான சிவலிங்கத்திற்கு பூஜை பொருட்களை கொண்டு வந்து அபிஷேகம், அலங்காரம் செய்து சங்குநாதம் மற்றும் சிவவாத்தியங்களை வாசித்து வழிபாடு செய்து செல்கிறேன். என்னை போன்று ஏராளமான பக்தர்கள் இதுபோன்று வழிபாடு செய்து செல்கின்றனர்.

    இந்த பகுதி கிராம மக்கள், ராமேசுவரம் யாத்திரை செல்லும் பக்தர்கள் வழிபாடு செய்யும் வகையில் இந்துசமய அறநிலையதுறை நிர்வாகம் கோவில் அமைக்க வேண்டும்.

    தற்காலிகமாக சிவலிங்க சிலைக்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என்றார்.

    ×